> குருத்து

July 30, 2014

சுவாரசியமான வாசகர் கடிதங்கள்!

படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே வாசகர் கடிதங்களும் அவ்வப்பொழுது எழுதி வந்திருக்கிறேன். பலரும் தங்கள் பெயர் பத்திரிக்கைகளில் வந்தால் போதும் என, ‘சூப்பர்’ ‘அசத்திட்டீங்க!’ என சுருக்கமாய் எழுதுகிறார்கள். அதில் என்ன பலன் இருக்கிறது? நான் எழுதிய சில வாசகர் கடிதங்களும் சில அனுபவங்களும் சுவாரசியமானவை!

ஒருமுறை திண்டுக்கல்லில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு மாலை இதழில் பல பட்டங்களை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்ட ஒரு பெண் பேராசிரியர், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் விழாவிற்கான சிறப்பிதழில் அம்மன் புகழ் பாடியிருந்தார். கோபம் வந்து, ”ஒரு பேராசிரியர் இப்படி அம்மன் புகழ் பாடலாமா?” என கடிதம் எழுதினேன். கடிதம் எழுதி 15வது நாளில் அந்த பேராசிரியர் “உங்களை மாதிரி முற்போக்கான இளைஞர்கள் தான் நாட்டுக்குத் தேவை” என்கிற சாரத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்.

சில காலம் காலை வேளையில், கோடை பண்பலை தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களின் ஒலிபரப்பின் எல்லை பெரியது என்பதால், எல்லோருரையும் பேசவைக்கவேண்டும் என்ற திட்டத்தில் இன்று இந்த மாவட்டத்துகாரர்கள் பேசவும், பெண்கள் மட்டும் பேசவும் என கோட்டா முறையை பயன்படுத்தி வந்தார்கள். அவர்கள் கேட்கும் எந்த பாடலையும் ஒலிபரப்புவார்கள். விடுமுறை என்பதால், ஞாயிறு மட்டும் குழந்தைகளுக்கு! ஆனால், அவர்கள் ஏதாவது குத்தாட்ட பாடலை கேட்டுவிட்டால், இந்த பாடலை ”குழந்தைகள் நீங்கள் இம்மாதிரி பாடலை கேட்க கூடாது” என அறிவுரை சொல்லி, பண்பலைகாரர்களே “நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே’ என்ற ரேஞ்சுக்கு ஒரு பாடலை ஒலிபரப்புவார்கள்.  வந்தது கோபம்.  வாரம் முழுவதும், அண்ணன், மாமா, சித்தி, தாத்தா எல்லோரும் குத்தாட்ட பாடல்கள், ஆபாச பாடல்கள் கேட்டால் ஒலிபரப்புவீர்கள்! குழந்தைகள் கேட்டால் போடமாட்டீர்கள்! இது என்ன நியாயம்?” என்று எழுதினேன்.  அடுத்த வாரத்திலிருந்து, எல்லோருக்கும் நல்ல பாடல் போடுவீர்கள் என்று தானே முடிவெடுத்திருப்பார்கள்! என நினைக்கிறீர்கள். ம்ஹூம்! குழந்தைகளும் எந்த பாடல் கேட்டாலும் ஒலிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்! நொந்தே போனேன்!

சொந்த ஊரில் புதிய கலாச்சார வாசகன் நான்.  அவ்வப்பொழுது கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பேன்.  அப்படியே சென்னைக்கு வந்த சமயம், வாசகர் கடிதம் ஒன்றை எழுதி போட்டேன். இதழிலிருந்து நேரே என்னைத் தேடி வந்துவிட்டார்கள். எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்த வாழ்க்கை, அப்பொழுது தான் சரியான திசையில் பயணப்பட துவங்கியது! இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறேன்!

எழுதி அனுப்பிய வாசகர் கடிதங்களை விட, எழுத நினைத்த வாசகர் கடிதங்கள் அதிகம்!  எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்களும் கூட உண்டு!

இப்படிதான் ‘ஆட்டோகிராப்’ படம் பார்த்துவிட்டு, நாயகன் தன் வாழ்வில் கடந்த வந்த பெண்களை எல்லாம் சந்திக்கும் பொழுது, தான் உயிருக்குயிராக காதலித்த பெண் விதவையாக இருப்பாள். அதையும் இரண்டு சொட்டு கண்ணீரில் கடந்துவிடுவான். வந்தது கோபம். ”அவளைத்தானடா நீ கல்யாணம் முடிக்கவேண்டும்!” என நாலுபக்கம் கடிதம் எழுதி, முகவரி இல்லாததால், அனுப்பமுடியாமல் போய்விட்டது!


கால ஓட்டத்தில் செல்பேசியால் கடிதங்கள் அரிதாகி வருகின்றன! அன்றொருநாள் என் எட்டு வயது மகளுக்கு கடிதம் பற்றி விளக்கம் கொடுத்துகொண்டிருந்தேன். என்னதான் செல்பேசியில் மணிக்கணக்கில் பேசினாலும், கடிதம் இன்னும் மனதுக்கு நெருக்கமாகத்தான் இருக்கிறது!

சமஸ்கிருத வாரம் - இந்துத்துவாவின் திணிப்பு!


July 26, 2014

மாறும் மனிதர்கள்!

பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பேசிய டேனியலின் ’எரியும் பனிக்காடு’, உப்பளக வாழ்க்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’,  திரையரங்கில் வேலை செய்யும் உதிரி பாட்டாளிகளான இளைஞர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ என தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய தமிழ் நாவல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் தொடர்ச்சியில் தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையை, இலக்கிய வரலாற்றில் ,முதன்முதலாகவும், அழுத்தமாகவும் பேசும் நாவல் செல்வராஜின் ’தோல் நாவல்’!
பர்ஸ், செருப்பு என தோலால் செய்த பொருட்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவை. காரணம் அவைகள் மிருதுவானவை. ஆனால், தோல் தொழிற்சாலையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிக மிக கடினமானவை! துயரமானவை!

நாவல் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் (1940 -1950) திண்டுக்கல்லை களமாக கொண்டு பயணிக்கிறது! தோல் தொழிற்சாலையில் தோல்களின் குடலைப் புரட்டும் நாற்றம்; சுண்ணாம்பு குழிக்குள் தோல்களை முக்கி நனைத்தெடுக்கும் பலமணி நேர வேலை; குறைவான கூலி! தொழிலாளர்கள் குறிப்பாக அருந்ததியர்களும், பறையர்களும் என தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்களுக்கு  கூடுதலாக பாலியல் தொல்லைகளும், வன்முறைகளும் என நோய்களும், சாவுகளும், ஒடுக்குமுறைகளும் மிக மலிந்த வேலை! தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் உருவாகிறது! முதலாளிகள் இன்னும் மோசமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவுகிறார்கள்.

நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகிற ஒவ்வொருவரும் வேறொரு வார்ப்பிற்கு ஆச்சர்யத்தக்க கையில் உருமாறுகிறார்கள். கந்துவட்டிக்காரனால் நடுத்தெருவில் அம்மணமாக்கப்படுகிற வீராயி, பின்னாளில் தொழிலாளிகளின் அணிக்கு தலைமை தாங்குகிறவராக மாறுகிறார். தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய அனுப்பப்படுகிற முதலாளியின் அடியாள் சந்தனத்தேவன் தொழிலாளர்களைப் பாதுகாக்கிற காவலராகிவிடுகிறார். பார்த்த பெண்களையெல்லாம் சூறையாடுகிற மேற்பார்வையாளன் முஸ்தபாவை அடித்து துவைக்கும் தொழிலாளி மாடத்தி!. தவறாக நடக்க முயன்ற முஸ்தாபாவை கொலை செய்துவிடுகிற தொழிலாளி சிட்டம்மா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். இந்த கொலையை தொழிற்சங்கவாதிகளை பழிவாங்க காவல்துறை முயலும் பொழுது, அவர்களை காப்பாற்றுவதற்காக தான் செய்த கொலையை ஒப்புக்கொள்கிற சிட்டம்மா!

மறுகாலனியாதிக்க சூழலில், மூலதனம் முன்பை விட மூர்க்கத்தனமாக தனது சுரண்டலை செய்துவருகிறது. தொழிலாளர்கள் சமரசமற்று போராடுகிற புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராடவேண்டிய நேரமிது! இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் பலன்களை நேர்மறையில் கற்றுத்தருகிறது! நம்பிக்கையை தருகிறது. நாவலில் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து ஒரு நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார். கடந்த இருபது வருடங்களில் தொழிலாளர் விரோத, சமூக விரோத தீர்ப்புகளைத் தந்து நீதிமன்றங்கள் அந்த நம்பிக்கையை களைந்திருக்கிறார்கள்!

நாவலின் வடிவத்தை பொருத்தவரையில், பொதுவுடைமை இலக்கியவாதிகளின் பிரச்சார நெடிப்பற்றிய பிற இஸத்துக்காரர்கள் ‘கவலையை’ ஆசிரியர் தனது எழுத்தாற்றலால் போக்கியிருக்கிறார். நாவல் தொடங்கும் பொழுதே எத்தனை கதாபாத்திரங்கள், என்ன பாத்திரம் என வகைப்படுத்தி தந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலில் ஓரிடத்தில் கூட புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை! நாவல் 2012ல் சாகித்திய அகாடமி விருதை வென்றிருக்கிறது! 

ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்!

695 பக்கங்கள் 

விலை ரூ. 400 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,