> குருத்து: ரயிலில் இனி அடையாள அட்டை அவசியம்!

December 5, 2012

ரயிலில் இனி அடையாள அட்டை அவசியம்!

இனி ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்களில் பயணிப்பவர்கள் அனைவரும் அடையாள வைத்திருக்கவேண்டும். இல்லாமல் பயணித்தால், டிக்கெட் இல்லாமல் பயணித்தவர் என முடிவு செய்து இரண்டு மடங்கு வசூலிக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து இப்பொழுது நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். - ‍ செய்தி

****


சரியான நபர்கள் தான் பயணிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த அறிவிப்பை செய்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இந்த அறிவிப்பு மூலம் அடையாள அட்டை பெரும்பாலும் வைத்திருக்காத உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பலரையும் ரயிலில் ஏறவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

என்னுடைய துணைவியார் டிகிரி முடித்தவர். சென்னையில் ஒரு நல்ல நிறுவனத்தில் பொறுப்பான வேலையில் பணிபுரிகிறார். ஸ்கூட்டி ஓட்டுகிறார்.. இப்பொழுது அவரே ரயிலில் ஏறமுடியாது.

காரணம் வாக்காளர் அட்டை ஒரிஜினல் தொலைந்து போய், ஜெராக்ஸ் வைத்திருக்கிறார். அவருடைய கொள்கை முடிவுப்படி தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை போய், பல ஆண்டுகளாக ஆனதால், வாக்களிக்கப்போவதில்லை. அதனால், தேவையில்லை என முடிவு செய்து, புதிய அட்டைக்காக விண்ணப்பிக்கவும் இல்லை.

அரசுக்கு வரி கட்டும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை. பான்கார்டையாவது (PAN Card) ஆசைக்காகவும், பயணங்களுக்கும் பயன்படும் என‌ வாங்கலாம் என்றால், அதிலும் சிக்கல். வாங்குவதற்கு ஒரு அடையாள சான்றிதழும், முகவரி சான்றிதழும் வேண்டும். இருக்கிற ஒரே அடையாள சான்றிதழ் வாக்காளர் அட்டை தான். ஒரிஜினலே தெளிவாக இருக்காது. ஜெராக்ஸ் சுத்தம். அதை வைத்து ஜெராக்ஸ் எடுத்தால், ஒரே இருட்டாக தான் இருக்கிறது. முகத்தை காணோம். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என்ற முறையில் என்னுடைய புகைப்படம் தான் இருக்கிறது.

சரி வேறு வாய்ப்பு இருக்கிறதா என தேடிப்பார்த்தால், பச்சை மையில் கையெழுத்திடுகிற ஒருவர் 'இவர் எனக்கு தெரிந்தவர்' என கையெழுத்திடவேண்டும். இதுநாள் வரை அப்படித்தான் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக பச்சை மையில் பலரும் கையெழுத்திட்டு ஏமாத்திவிட்டார்கள் போலிருக்கிறது! அதனால் கையெழுத்திடுகிறவர் அவருடைய அடையாள அட்டையை ஜெராக்ஸ் எடுத்துதரவேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டார்கள்.

வசிக்கும் பகுதியில் கையெழுத்து இடுகிற மருத்துவர் ஜெராக்ஸ் தர மறுக்கிறார். "வேணும்னா, என்னோட ஓட்டு உரிமம் ஜெராக்ஸ் தருகிறேன்" என காமெடி பண்ணுகிறார்.

வண்டி ஓட்டியாவது ஓட்டுநர் உரிமம் பெற்றுவிடலாம் என நினைத்தால், எட்டு போடும்பொழுது, ஒரே ஒருமுறை கால் கீழே வைத்ததற்காக தர மறுக்கிறார்கள்.இவரை விட‌ மோசமாக ஓட்டுகிற ஆள்களுக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் தந்துவிட்டதால், கடுப்பில் இருக்கிறார். இனி அடுத்தமுறை ஒருமுறை கால் வைக்காமல் ஓட்டவேண்டும். அப்பொழுது தான் ரயிலில் ஏற வாய்ப்பு இருக்கிறது.

ரயிலில் டிக்கெட் கிடைப்பதே அரிதாக இருக்கும் பொழுது, கிடைத்தாலும் என் துணைவியார் ரயிலில் ஏறமுடியாத நிலை தான்.

நம் நாட்டில் ஒரிஜினலை எடுத்துக்கொண்டு பயணிப்பது என்பது நிறைய ரிஸ்க். தொலைத்துவிட்டால், அதை வாங்குவதற்குள் நம் ஆயுளுக்கும் வருந்துகிற அளவுக்கு செய்துவிடுவார்கள். நிலைமை இவ்வாறு இருக்கையில் ஒரிஜினலை வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்ற அறிவிப்பு தவறு!

இந்த அறிவிப்பில் ஒரு சந்தேகம். ஒரு நபர் தனியாக போனால், அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை இருக்கும் ஒரு நபரோடு ஒரே டிக்கெட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கு அடையாள அட்டை தேவையா? இல்லையா?

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

2 பின்னூட்டங்கள்:

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

அ. வேல்முருகன் said...

தரகர்கள் அதற்கும் ஒரு வழி கண்டுபிடிப்பார்கள்.

கூடுதல் சேவை அளிக்கும் போது இது போன்ற தேவைகள் இல்லை.

அப்புறம் முதலாளி பொழைக்க முடியாது