> குருத்து

January 19, 2009

அன்பார்ந்த பதிவர்களே!



சென்னை, அம்பத்தூரில் நடக்க இருக்கும் “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு"க்காக “புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி” தோழர்கள் தமிழகம் முழுவதும் சுவரெழுத்து, பேனர்கள் மூலமாகவும், பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியில், சென்னையிலும் கடந்த ஞாயிறன்று சென்னை மெட்ரோ ரயில்களில் தோழர்கள் செய்த பிரச்சாரம் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

அன்பார்ந்த பெரியோர்களே!

“புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி” என்னும் அமைப்பிலிருந்து வருகிறோம். கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வருகிறோம். எங்கள் அமைப்பின் சார்பாக வருகிற 25ந் தேதியன்று “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்த இருக்கிறோம். இன்றைக்கு இந்த மாநாட்டின் அவசியம் என்ன?

கடந்த இரண்டு மாதங்களாக பல தொழிற்சாலைகளிலிருந்தும், தொழிலாளர்கள் 50யும், நூறுமாக லட்சகணக்கில் லே ஆப், வேலை இல்லை என்று சொல்லி, எந்தவித இழப்பீடும் இன்றி வேலையிலிருந்து துரத்தப்படுகிறார்கள். ஏன் இந்த நிலை?

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பொருளாதார சீரழிவால், உற்பத்திக்காக அவர்களை நம்பி இருந்த இந்தியாவிலும் உற்பத்தி முடக்கம், பொருளாதார மந்தத்தால் இந்த நிலை.

நேற்றைக்கு வரைக்கும் குழந்தைக்கு, அம்மாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என, அரை நாள் லீவு கேட்டால் கூட சலித்து, கோபப்பட்ட முதலாளிகள், இன்றைக்கு உற்பத்தியில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டதும், ஈவிரக்கம் இல்லாமல் வெளியே தள்ளுகிறார்கள்.

முதலாளிகளால் இடத்து வாடகையை குறைக்க முடியவில்லை: அவர்கள் அனுபவிக்கும் கார், ஏசி போன்ற வசதிகளை குறைக்க முடியவில்லை. ஆனால், தொழிலாளர்களை கறிவேப்பிலை போல தூக்கி போடுகிறார்கள்.

முதலாளிகள் கொடுக்கும் சம்பளத்தைக் கொண்டு... அரிசி, பருப்பு, எண்ணெய் தொடங்கி, வீட்டு வாடகை வரை எல்லாம் எகிறி விழி பிதுங்கி சென்னை மாதிரி பெருநகரங்களில் வாழ்வதே பெரிய கொடுமையாய் இருக்கிறது. இப்பொழுது வேலையும் இல்லையென்றால்....? தற்கொலைகள் தான் பெருகும்.

நமக்கு ஏன் இந்த இழிநிலை?

தொழிலாளர்கள் நாம் “சங்கமாய்” இணைந்து இல்லாதிருப்பது தான் பிரச்சனை. தொழிற்சங்கத்தில் இருந்திருந்தால், இப்படி நம்மை துரத்தமுடியமா முதலாளிகளால்?

தொழிற்சங்கம் அமைத்தால், முதலாளிகளுக்கு கசக்கிறது. ஆனால், அவர்கள் அசோசியேசன் வைத்து இருக்கிறார்கள். அமைச்சர்களை சந்திக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் சிறு இழப்புக்கு கூட இழப்பீடு பெற்றுகொள்கிறார்கள்.

ஹெல்பராக வேலை செய்யும் தொழிலாளியிருந்து, ஐ.டி. துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை லட்சகணக்கில் வேலையிலிருந்து துரத்தப்பட்டு நிர்க்கதியாய் இருக்கிறார்கள்.

நாட்டில் இது குறித்து ஏதும் பேசப்படாமல், மும்பையில் மூன்று ஏழு நட்சத்திர விடுதிகளுக்குள் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சில பணக்காரர்களைச் சுட்டதும் ஊடகங்கள் கதறுகிறது. பத்திரிக்கைகள் “தீவிரவாதம், பயங்கரவாதம்” என அலறுகின்றன. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எல்லா கட்சிகளும் துடி, துடித்துப் போகிறார்கள். பாராளுமன்றத்தில் ஏகமனதாக சட்டங்கள் போடப்படுகின்றன. எல்லா பகுதிகளிலும் செக்யூரிட்டி பலமாக்கப்படுகிறது.

இசுலாமிய பயங்கரவாதத்தை விட, இப்படி பல லட்சகணக்கான தொழிலாளர்களை பட்டினிச் சாவில் தள்ளும் முதலாளித்துவமே ஆகப்பெரிய பயங்கரவாதம். இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்காமல் பெரும்பான்மையோர் வாழ்வில் விடிவு இல்லை.

மாநாட்டுக்கு வாருங்கள்! கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெறச் செய்யுங்கள்! உங்களால் இயன்ற அளவு நிதி தாருங்கள்!

***

பேசும் பொழுதே மக்களில் சிலர் பிரசுரத்தை அவர்களே கேட்டு வாங்கினார்கள்.

பெண்கள் கவனத்துடன் கேட்டார்கள்.

சில தொழிலாளர்கள் ஆர்வத்துடன் முகவரி கேட்டு குறித்து கொண்டார்கள். மாநாட்டுக்கு வருவதாக சொன்னார்கள். பலர் நிதி உதவியும் அளித்தார்கள்.

உண்ணாவிரதம் இருந்த திருமாவளவன் அவர்களை பார்க்க சென்று கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் அவர்களாக தங்களுக்குள் வசூலித்து நிதி தந்தனர்.

****

பின்குறிப்பு : இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.

தொடர்புக்கு :

தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.
: 94448 34519, 94444 42374

தோழர் பாண்டியன்: 99411 75876

January 18, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!



முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!
****************
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு!
************************
கருத்தரங்கம்
பொதுக்கூட்டம்
கலைநிகழ்ச்சி
****************
ஜனவரி 25, 2009
அம்பத்தூர்
சென்னை
****

ஒரு தொழிலாளி என்று நம்மால் நெஞ்சு நிமிர்த்தி சொல்லிக் கொள்ள முடிகிறதா?

வேலைக்கும், சம்பளத்துக்கும், வாழ்க்கைக்கும் முதலாளிகளின் தயவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடிமைகளாகத்தான் நாம் வாழ்கிறோம். இந்த உலகத்தையே தன்னுடைய வியர்வையால் படைத்த, தன்னுடைய உழைப்பால் இயக்குகின்ற தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை இப்படித்தான் உள்ளது.

தொழிலாளி வர்க்கம் இதுவரை போராடிப் பெற்ற உரிமைகள் எல்லாம் காகிதத்தில் தூங்குகின்றன. காகிதத்தில் இருப்பவையும் ஒவ்வொன்றாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. தொழிற்சங்கச் சட்டம், வேலை நிரந்தரச் சட்டம், எல்லோருக்கும் ESI, PF என்றெல்லாம் இருந்த சட்டங்கள் எங்கே? பல போராட்டங்கள், அடக்குமுறைகள், வேலை இழப்பு தியாகங்கள் செய்து பெற்ற உரிமைகள் எங்கே?

8 மணி நேர வேலை என்று சட்டம் இருக்கிறது. ஆனால் 10-12 மணி நேர வேலை என்பது கட்டாயம். இப்படி உழைத்தாலும் போதிய சம்பளம் கேட்டால் வேலையே கிடையாது என்கிறான் முதலாளி. வேலையைக் காப்பாற்ற அற்பக் கூலிக்கு பணிந்து போகிறோம். உழைப்புக்கேற்ற கூலிதானே கேட்டோம் என்று குரல் உயர்த்திப் பேச முடியவில்லை. கொத்தடிமையை விட கேவலமாக அல்லவா இருக்கிறது, நம் நிலைமை?

தினம் ஒரு ஆலையைத் திறப்பதாகவும், பல ஆயிரம் பேருக்கு வேலை தரப்படுவதாகவும் அரசாங்கம் பீற்றிக்கொள்கிறது. இதில் எத்தனைப் பேருக்கு நிரந்தர வேலை? நூற்றுக்கு 90 பேர் காண்டிரக்ட் தொழிலாளிகளாகத்தான் இருக்கின்றோம். நிரந்தர வேலை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறான், முதலாளி. எல்லா வேலைகளும் காண்டிராக்ட்மயமாகி விட்டது. 20 வயதில் உழைக்க்ட் துவங்கினால் 30-35 வயதுக்குள் சக்கையாய் பிழிந்துவிட்டு துரத்திவிடுகிறான். உடம்பில் தெம்பு போன பின்பு என்ன வேலைக்குப் போவது? கடைசியில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்து வந்தவன் – போனவனுக்கு சல்யூட் அடித்து நிற்கிறோம். நெஞ்சு வெடிக்கிறது. ஆனாலும் அடங்கிப் போகிறோம்!

480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். 480 நாள் வேலை செய்ததற்கு ஆதாரத்தைக் காட்டு என்பது சட்டத்தின் நிர்ப்பந்தம். ஆதாரத்தை தொழிலாளியால் காட்டமுடியாது என்பது சூழ்நிலை. மீறிக்காட்டினால் இருக்கின்ற வேலையும் போய்விடும் என்பது எதார்த்தம்.

ESI, PF – என்கிற சலுகைகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்றோ எதுவும் கிடையாது. வேலையில் அடிபட்டு செத்தாலும் நாதியற்ற பிணமாகத்தான் கிடக்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை 80 ஆண்டுகளுக்கு முன்பாக போராடிப் பெற்றோம். இன்று ஒரு தொழிற்சாலையில் சங்கம் அமைப்பதாகப் பேசினாலே வேலை பறிக்கப்படுகிறது. ஆலை மூடப்படுகிறது. போலீசும் வருகிறது. தொழிற்சங்கம் வைக்க முயற்சிப்பதே ஒரு கிரிமினல் குற்றமாக்கப்பட்டு விட்டது. ஆனால் முதலாளிகள் சங்கம் வைக்கிறார்கள். அவர்களது சங்கத்தில் தீர்மானம் போடுகிறார்கள். அவர்கள் காலால் இடுவதை அரசாங்கம் தலையால் செய்து முடிக்கிறது. அவர்கள் சொடக்குப் போட்டு கூப்பிட்டால் மந்திரி ஓடுகிறார்.

பட்ஜெட் போடுவதற்கு முன்பாக முதலாளிகளிடம் ஆலோசனை கேட்கிறது, அரசாங்கம். வரிச்சலுகை, மானியங்களை வாரிக் கொட்டுகின்றன, மத்திய-மாநில அரசுகள். வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகள் கேட்டதை எல்லாம் செய்கிறது, அரசு. தொழில்துறை முடக்கத்தால் லாபம் குறைந்து போனால் மானியம் தந்து ஈடுகட்டுகிறது, அரசு. மொத்தத்தில் முதலாளிகளின் சங்கம் என்ன சொல்கிறதோ அதுதான் நாட்டின் சட்டமாக ஆகிறது.

ஆனால் 30 கோடி தொழிலாளர்களை ஒரு பொருட்டாகவே அரசு மதிப்பதில்லை. தொழிலாளர்களின் பிரச்சினைக்காகக் கூட தொழிற்சங்க தலைவர்களிடம் அரசு ஆலோசித்ததாக வரலாறு இல்லை.நம்முடைய PF பணம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை HSBC, ICICI புரூடன்சியல், ரிலையன்ஸ் ஆகிய வர்த்தகச் சூதாடிகளுக்கு பங்கு போட்டுக் கொடுத்தபோது கூட நம்முடைய அனுமதியை வாங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் நமது எதிர்ப்பை மீறித்தான் செயல்பட்டது, அரசு.

இதைவிட கிள்ளுக்கீரையாகவும், கேவலமாகவும் யாரையாவது நடத்த முடியுமா? கலவரம் செய்கின்ற, அரசு பஸ்சைக் கொளுத்துகின்ற சாதித் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறது, அரசு. ஆனால் உழைப்பால் நாட்டையே இயக்குகின்ற தொழிலாளி வர்க்கத்துக்கு அரசு கொடுக்கும் மரியாதை இதுதான்!

மே தினத்தன்று ஹூண்டாய் கார் கம்பெனியின் தொழிற்சங்க கொடிக்கம்பத்தை நிர்வாகம் பிடுங்கி எறிந்தது. சாதி சங்கத்தின் கொடியையோ, ரசிகர் மன்றத்து பேனரையோ இப்படி பிடுங்கி எறிந்துவிட முடியுமா? சாலையோரத்து கோயிலை இடித்தால் கூட நாலுபேர் மறியல் செய்கிறார்கள். ஆனால், தொழிலாளர் தினத்தன்று தொழிலாளி வர்க்கத்தின் கொடியைப் பிடுங்கி எறிந்த செய்தி கேட்டு நம்மில் எத்தனை பேருக்கு ரத்தம் கொதித்தது? இங்கே தொழிற்சங்கம் துவங்கியதற்காக பழிவாங்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? வேலை இழந்தவர்கள் எத்தனை பேர்? பின்னி, டன்லப், மெட்டல் பாக்ஸ், ஸ்டாண்டர்டு போட்டார்ஸ் என்று தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்கள் எத்தனைபேர்? இவர்களெல்லாம் நம்முடைய வர்க்கம் என்று நாம் பதட்டபட்டிருக்கிறோமா? அப்படி பதறி கிளர்ந்தெழுந்திருந்தால் இத்தனை பேர் கேட்பாரின்றி மடிய நேரிட்டிருக்குமா?

ஊரப்பாக்கத்தில் சாதிப் பிரச்சனை என்றால் உசிலம்பட்டியில் பஸ்சை உடைக்கிறார்கள், சாதி சங்கத்தினர். அமர்நாத், அயோத்தி, ராமன் பாலம் என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலவரம் செய்கிறார்கள், மதவாதிகள். ஆனால் இந்த தமிழகத்தில் இந்த சென்னை நகரில் பக்கத்து கம்பெனியில் தொழிலாளிக்கு நடக்கும் அநீதியைக் கூட நாம் கண்டுகொள்வதில்லல. அவன் வேறு, நாம் வேறு என்று நினைக்கிறோம். நிரந்தரத் தொழிலாளி-காண்டிராக்ட் தொழிலாளி, அமைப்பாக்கப்பட்ட தொழிலாளி-அமைப்பு சாரா தொழிலாளி என்று தொழிலாளர்களுக்குள்ளேயே முதலாளிகள் புதுவகை பிரிவினையை ஏற்றுக்கொண்டு வர்க்கப் பாசம் இன்றி இருக்கிறோம்.

இன்று அவன் பலி என்றால் நாளை நாம். ஆனால் நாமெல்லாம் ஒரே வர்க்கம் என்று உணர்வதில்லை. நாமெல்லாம் ஒரே வர்க்கம் என்று உணர்வதில்லை. நாமெல்லாம் ஒன்று திரண்டால் எந்த முதலாளித்துவ கொம்பானாலும் நம்மை வீழ்த்தமுடியாது. அவன் அடிபணிந்தே தீர வேண்டும்.

ஓட்டுக் கட்சிகளுக்கு நாம் ஓட்டுப் போடும் எந்திரம். முதலாளிக்கோ உழைத்துப்போடும் மனித எந்திரம்! கெஞ்சிய குரலும், அஞ்சிய வர்க்கமும் உரிமையைப் பெற்றதாக வரலாறு இல்லை. ஒற்றுமை உணர்வும், ஓங்கிய கைகளும் என்றும் தோற்றதில்லை. உழைத்துக் காய்த்த நம் கைகள் ஆயிரம் ஆயிரமாக ஒன்று சேர்ந்தால் முதலாளித்துவத்தின் இரும்புக் கோட்டையும் சிதறிப் போகும். முதலாளிகள் – அரசு கூட்டணியை தூள் தூளாக்கும்! வர்க்கமாய் திரள்வோம்; வலிமையைக் காட்டுவோம்!

- புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு : அ. முகுந்தன், 110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், சென்னை – 600 024 செல் : 94448 34519

- மாநாட்டுக்காக வெளியிட்ட பிரசுரத்திலிருந்து

January 16, 2009

கார்ப்பரேட் கிரிமினல்கள்


நன்றி : லைட்ங்க்

நீங்கள் துப்பாக்கி முனையில் யாரை யாவது மிரட்டி சில ஆயிரம் ரூபாய்களை கொள்ளையடித்தீர்களானால் இந்த நாட்டில் உங்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி. ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து மற்றவர்கள் கொடுக்கிற பெருவாரியான பணத்தை வாரிச்சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டால் உங்களுக்கு அவ்வளவு பெரிய தண்டனை கிடைக்காது. ஓராண்டோ அல்லது அதிகபட்சமாக மூன்றாண்டோ சிறைவாசம் மட்டுமே.

பசியால் துடிக்கிற ஒருவர் ஒரு கடையில் உணவுபொருளை திருடிவிட்டால் அவரை பல ஆண்டுகள் சிறைக்குள் தள்ள முடியும். ஆனால் இந்திய பங்குச் சந்தை, மையம் கொண்டிருக்கிற மும்பை தலால் தெருவில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் வாழ்க்கை முழுவதும் சேமித்த பணத்தை சூறையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. இதுதான், பெரும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் செய்யும் கடும் குற்றங்கள் மீதான இந்திய சட்ட நடைமுறையின் அதிகபட்ச பிரதிபலிப்பு.

பெரும் நிறுவன கிரிமினல்கள் மீது மிகவும் சாதுவான முறையில் நடந்து கொள்ளும் விதத்திலேயே இந்திய சட்ட அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது.

கடந்த புதன்கிழமை புத்தாண்டு கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. சில மணி நேரங்களிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்களில் ஒன்றான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், தாங்கள் முதலீடு செய்திருந்த பணம் பங்குச்சந்தையில் காணாமல் போய்விட்டதை, ஆயிரக்கணக்கான இந்திய முதலீட்டாளர்கள் அறிந்து பதறினர்.
சத்யம் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்று. உலகம் முழுவதும் பெரும் நிறுவனங்கள் என்று பட்டியலிடப் பட்ட 500 கம்பெனிகளில் இதுவும் ஒன்று.

இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக பங்குதாரர்களின் பணத்தை சூறையாடிய அதன் தலைவர் ராமலிங்க ராஜூ, தற்போது சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார். நேற்றுவரைக்கும் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து எதையும் செய்யாத இந்த கார்ப்பரேட் பிசினஸ் மேக்னட், இன்று சட்டத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறுவது விந்தையானது.

ராஜூவுக்கு தெரியும், இந்திய சட்ட அமைப்புமுறை தன்னைப்போன்ற பெரும் பணக்காரர்களுக்கு உதவியாகவே இருக்கிறது என்று. தான் சிறைக்கு செல்லப் போவதில்லை என்றும் அவருக்குத் தெரியும். ஒருவேளை அப்படி நடந்தாலும், முதலீட்டாளர்களிடம் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு ஏராளமான வழக்கறிஞர்களை விலைக்கு வாங்கி ஓரிரு நாட்களிலேயே அவரால் பெயிலில் வரமுடியும்.

சத்யம் நிறுவன ஊழல் இந்த நாட்டில் நடக்கிற முதல் ஊழல் அல்ல. ஹர்சத் மேத்தாவில்
துவங்கி, கேதன் பரேக் முதல் சி.ஆர்.பன்சாலி (பார்க்க: படம்) வரை நம்மிடம் ஏராளமான மோசடிப் பேர்வழிகளின் பட்டியல் இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த 5,651 கம்பெனிகளில், 2,750 கம்பெனிகள் மாயமாய் மறைந்து போய்விட்டன; சும்மா போகவில்லை, தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்களின் பணத்தை பல நூறு கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு காணாமல் போய்விட்டன.

ஆனால் இவர்களுக்கெல்லாம் சட்ட ரீதியான தண்டனை கிடைத்ததா?

இந்த பெரும் ஊழல்களின் விளைவாக, அந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனார்கள். ஆயிரக்கணக்கானோர், தங்களது வாழ் நாள் சேமிப்பை இழந்தார்கள். ஆனால் குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப் படவில்லை.

உலகம் முழுவதும் பொதுவாக ஊழல் பேர்வழிகள் என்று வெறுப்புணர்வு உண்டாக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளை விட, இந்த கார்ப்பரேட் கிரிமினல்கள் ஆபத்தானவர்கள். ஊழல்செய்த அரசியல்வாதிகள் கூட, சில பல ஆண்டுகள் சிறையில் கழிக்கிறார்கள்.

இங்கு நடப்பதற்கு மாறாக சில வளர்ந்த நாடுகளில் கார்ப்பரேட் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படு கிறது. 2006ல் அமெரிக்காவில் நிதி நிறுவன ஊழல் செய்து மாட்டிக்கொண்ட ஜெப்ரி கே ஸ்கில்லிங்கிற்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் இருக்கிறார். மிகப்பெரும் ஊழலில் சிக்கிய என்ரான் நிறுவனத்தின் தலைவர் கென்னத் லே-க்கு
(பார்க்க: படம்) 20 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. சிறைவாசம் துவங்குவதற்கு முன்னரே அவர் இறந்துபோனார். அந்த நிறுவனத்தின் ஊழலுக்கு உதவிய தணிக்கையாளர் ஆர்தர் ஆண்டர்சனின் நிறுவனம் மூடப்பட்டது.

நிதி முறைகேடு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்ட வேர்ல்டு காம் நிறுவனர்களில் ஒருவரான பெர்னார்டு எப்பர்ஸ் 25 ஆண்டு சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்.

சத்யம் நிறுவனத்தில் ராமலிங்க ராஜூவும் அவரது கூட்டாளிகளும் நிதி கணக்குகளை கள்ளத்தனமாக மாற்றி எழுதியுள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட தண்டனைகளைப் போல இவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என்று சத்யம் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்க முடியுமா? இவர்கள் மேற்கொண்ட மோசடி கணக்குகளுக்கு சான்றிதழ் கொடுத்த ஆடிட்டர்களுக்கு சிறைவாசம் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? இதற்கு, ‘இல்லை’ என்று ஒரே பதில்தான் இருக்கிறது.

இந்திய தண்டனைச்சட்டம் 1860ல் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தை உருவாக்கிய தாமஸ்
பாபிங்டன் மெக்காலே, (பார்க்க: படம்) முற்றிலும் இன ரீதியான மற்றும் வர்க்க ரீதியான பாகுபாட்டோடுதான் இச்சட்டத்தை வடிவமைத்தார். இச்சட்டம் அப்போதைய பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும், அவர்களது இந்திய கூட்டாளிகளுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய நிதிக்குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட தண்டனை அளிக்கவில்லை.

பிரிட்டிஷ் இந்தியாவில், நிர்வாகத்திலும் வர்த்தக நடவடிக்கைகளிலும் பிரிட்டிஷ்காரர்களே உயர்அதிகாரிகளாக இருந்தனர். இவர்கள் நிதி தொடர்பான குற்றங்களில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிந்தும், அவர்களது உள்ளூர் ஏஜெண்டுகளாக செயல்பட்ட ஜமீன்தார்கள், ஏழை மக்களின் நிலங்களை மோசடி செய்து அபகரித்த போதிலும் அவர்கள் மீது எந்த நட வடிக்கையும் எடுக்காதவிதத்தில் இந்திய தண்டனைச்சட்டம் வடிவமைக்கப்பட்டது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்கு உடல் ரீதியாக போலீசாரால் தண்டனை ஏதும் தரப்படாதவிதத்தில் இந்த சட்டம் அமலாக்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டை விட்டு போனபின்னரும், இந்த சட்டங்களில் சில, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவானதாக இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய தண்டனைச்சட்டம் மட்டுமல்ல, வேறு சில நிதிச்சட்டங்களும் கூட இந்த வகைப்பட்டவையே. இப்படித்தான், பெரு மளவு வருமான வரி ஏய்ப்பு செய்தாலும் கூட வெகுசில மாதங்கள் மட்டுமே தண்டனை அளிக்கிற வருமான வரிச்சட்டத்தை நாம் பெற்றிருக்கிறோம். வருமானவரி சட்டத்தில், பெரும்பாலான குற்றங்களுக்கு அபராதம் செலுத்தினால் போதும் என்றே விதிகள் உள்ளன.

இதனால்தான் வரி ஏய்ப்பும் மோசடியும் ஊக்குவிக்கப்படுகிறது. சிறிய வணிகர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை வரி ஏய்ப்பு எளிதாக செய்ய முடிகிறது. பலவீனமான சட்டங்கள் இருப்பது அவர்களுக்கு தெரியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படித்தான் மெகா மோசடிகளை செய்ய அச்சமின்றி துணிந்துள்ளன. இவற்றை தண்டிக்க வலுவான சட்டங்கள் மட்டுமின்றி அரசியல் உறுதியும் தேவை. போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். மிகப்பெரிய பேரழிவு அது. ஆனால் இந்த நிறுவனத்தின் தலைவர் வாரன்
ஆண்டர்சன் (பார்க்க: படம்) கைது செய்யப்பட்ட அடுத்த நாளே வெளியில் வந்துவிட்டார். இந்திய தொழில் நிறுவனங்களின் வரலாற்றில் மிகப் பெரும் குற்றம் இழைத்த இந்த நிறுவனத்தின் தலைவரை, இந்த குற்றத்திற்கு எப்படி பொறுப்பாக்குவது என்று சட்டத்திற்கு தெரியவில்லை.

இந்தியாவில் புதிய பயங்கரவாத ஒழிப்பு சட்டங்கள், பழைய சட்டங்களில் திருத்தங்கள், நீதித்துறை ஆணையம் ஆகியவற்றை பற்றி தீவிரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன மோசடி வெளியாகியுள்ளது. இந்த மிகப்பெரும் கார்ப்பரேட் குற்றத்தை இந்திய சட்டம் எப்படி கையாளுகிறது என்பதை பார்ப்போம்.

நன்றி : http://lightink.wordpress.com