> குருத்து

June 28, 2025

மணமக்களுக்கு வாழ்த்துகள்!


மணமகன் ஜெயவர்தன் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர். சமூக அக்கறை கொண்டவர். கலைஞர் மீதும், பிரபாகரன் மீதும் மிகுந்த பிரியம் கொண்டவர். சமுகத்திற்கான போராட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டு வருபவர்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக மணமகளைத் தேடிக்கொண்டிருந்தார். அதில் சில கலகலப்பான அனுபவங்களையும் அவ்வப்பொழுது பகிர்ந்துகொள்வார்.

இப்பொழுது அவருக்கு பொருத்தமான மணமகள் காமாட்சி அவர்களை கண்டடைந்ததில் மகிழ்ச்சி.




நேற்று வரவேற்பு நிகழ்ச்சி. இன்று காலை திருமணம்.

தோழர் பொழிலன் தலைமை தாங்க.. திருமணத்தை முன்நின்று நடத்துகிறவர்
அற்புதம் அம்மாள்.

குடும்பத்தோடு கலந்துகொண்டு, புத்தகங்களை பரிசாக தந்து வாழ்த்தி வந்தோம்.

தம்பதிகள் தொடர்ந்து சமூகத்தின் மீது அக்கறையோடு செயல்பட வாழ்த்துவோம்!

June 26, 2025

பத்துக் கட்டளைகள்

 எனக்கு நானே விதித்துக் கொண்ட பத்துக் கட்டளைகள்! 


1) பசிக்காமல் அமிர்தமே ஆனாலும் உண்ணாதே. தினமும் பத்து நிமிடமாவது கையைக் காலை ஆட்டு. 


2) கழிப்பறையிலாவது சுவாசத்தைக் கவனி. 


3) எதிர்மறைகளில் இருந்து தப்பித்து விலகி, நெருப்பு வளையமிட்டு, அதற்கு நடுவே ஒளிந்து கொள். 


4) கேட்பது, பார்ப்பது, படிப்பது மூன்றிற்கும் சம அளவு முக்கியத்துவம் தந்து விடு. 


5) எதிலுமே மிதமான போதைக்கு உன்னைப் பழக்கு. 


6) உறவுகளிடம் காது என்கிற உறுப்பை அதிகம் பயன்படுத்து. 


7) யாராக இருப்பினும் தேவைக்கு அதிகமாக எதையும் சொல்லாதே. தேவைக்கு அதிகமான எதையும் கேட்காதே. 


8) நன்றாகப் பழக்கமான உச்சி என்றாலும் சிறு பிடிமானமாவது இல்லாமல் நிற்காதே. 


9) நீராய் உன்னைப் பாவனை செய்து கொள். வாய்க்கிற எந்தப் பாத்திரத்திலும் நிறைவாய் நிறைந்து கொள். 


10) நிதமும் இப்படி எதையாவது, மாடு எந்நேரமும், அசை போடுகிற மாதிரி எண்ணிக் கொண்டிருக்காமல், குறைந்தபட்சம் ஒரு தேநீரையாவது ரசித்துக் குடி.


- சரவணன் சந்திரன், எழுத்தாளர்

June 21, 2025

யோகா : கழுத்து வலி போயே போச்சு!


2014ல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் நாளை ஐக்கியநாடுகள் சபை சர்வதேச யோகா தினமாக கொண்டாட அறிவித்தது.  இதற்கான முன்னெடுப்புகளை இந்தியா செய்ததாக பதிவு செய்கிறார்கள்.

 

ஜூன் 21 ஏன் என்றால்… கோடை காலத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள். இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்டது. ஆகையால் இந்த நாள் நல்ல நாள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இன்று நாடு முழுவதும் யோகாவிற்கான சிறப்பு முகாம்களை அறிவிக்கப்பட்டு செய்திருக்கிறார்கள். ஆந்திராவின் ஒரு கடற்கரையில் முதல்வரும், இந்திய பிரதமரும் மூன்று லட்சம் மக்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

விவரம் தெரிந்த நாள் முதல், தினம் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்துவந்திருக்கிறேன். சில காலம் ஓடியிருக்கிறேன். சில காலம் ஜிம்முக்கு போயிருக்கிறேன்.  ஒரு கட்டத்தில் யோகாவிடம் வந்து சேர்ந்தேன்.

 

ஒவ்வாமை பிரச்சனை உடலில் சில தொந்தரவுகளை, மூச்சு பிரச்சனைகளை உருவாக்கி கொண்டு இருந்தது. அதைச் சமாளிக்கவும் யோக ஆசனங்களும், மூச்சு பயிற்சிகளும் பெரிதாய் உதவியது.

 

கொரானாவிற்கு முந்தைய காலத்தில், விடிகாலை 5.30 முதல் 6.30 வரை வாரத்தில் ஐந்து நாட்கள்  அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எங்கள் பகுதியில் யோகா மையத்திற்கு தொடர்ச்சியாய் சென்று வந்தேன்.  அந்த அறையில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 15 பேர் வரை செய்யலாம். சில மாதங்களில் இடம் இல்லாமலும் போகிற அளவுக்கு ஆட்கள் வந்துவிடுவார்கள். ஒரு சில மாதங்களில் நான் மட்டுமே சென்று வருவதும் உண்டு.

 


யோகா செய்வது நாள் முழுவதும் உடலையும் சிந்தனையையும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.  சர்க்கரை, ரத்த அழுத்தம் என சிரமப்படுவர்களுக்கு அதை கட்டுக்குள் வைக்க உதவும். யோகா தரும் பலன்களை அனுபவித்தவர்கள் தொடர்ச்சியாய் வந்து கொண்டே இருந்தார்கள்.

 

சமீபத்தில் கூட பின்னங்கழுத்தில் வலி கடுமையாக இருந்தது. வலியை கூட பொறுத்துக்கொள்ளலாம். அதோடு தலைச்சுற்றலும் சேர்ந்து கொண்டது பெரிய பிரச்சனையாகிவிட்டது. மருத்துவமனை சென்றால், தலைச்சுற்றலை கட்டுப்படுத்த ஒரு மாத்திரையும், வலியை மறக்க ஒரு மாத்திரையும் தந்து அனுப்பிவிட்டார்கள்.

 

அதன் பிற்கு, சென்னை அண்ணாநகரில் தமிழக அரசு இயக்கும் மருத்துவமனையில் ஒரு பிரிவு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு இயங்குகிறது. உடம்பில் என்ன பிரச்சனையோ, அதற்கேற்ற யோக ஆசனங்களை கற்றுத்தருவார்கள். அக்குபஞ்சர் சிகிச்சை, எண்ணைய் தடவி விடுவது என அங்கு கொடுக்கப்படும் எல்லா சிகிச்சையும் மருந்தில்லா மருத்துவமாக இருப்பது தான் அதன் சிறப்பு.  இரண்டு மாதங்கள் தொடர்ந்து போனதில் கழுத்து வலி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 

யோக ஆசனங்கள் பற்றிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். அதை இன்னும் அறிவியல்பூர்வமாக மாற்ற வேண்டும்.

 

இன்னொரு விசயம். யோக ஆசனங்கள் என்றாலே பொதுவெளியில் சிரமமான ஆசனங்களை மட்டுமே சாசகமாக செய்துகாட்டுகிறார்கள். அது அபத்தம் என்பேன். பொதுமக்களை குறிப்பாக வயதானவர்களுக்கு மனதளவில் ஒவ்வாமையை உருவாக்கிவிடும். யோகாவில் எளிய ஆசனங்கள் பல நூறு கணக்கில் உண்டு. எல்லா வயதினரும் செய்ய முடியும் என்பது முக்கியமானது.

 

இந்தியாவில் பா.ஜ.க பல ஆண்டுகளாக தன்னுடைய நிகழ்ச்சி நிரலில் யோகாவை இணைத்திருக்கிறார்கள். பல பகுதிகளில் யோகாவை இலவசமாக சொல்லித்தருகிறேன் என தங்கள் இந்துத்துவ கருத்துக்களை பரப்புவதற்காக அதை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். அதனால் பா.ஜ.க பிடிக்காத பலருக்கும் யோகா மீதான ஒருவித ஒவ்வாமையை உருவாக்கியிருக்கிறது. தினசரி நாம் செய்யும் எல்லா வித பயிற்சிகளையும் விட யோகா பல பலன்களை தரக்கூடியது. ஆகையால் அவர்களை ஒதுக்கிவிட்டு, யோகாவை கற்று பலன்களை அனுபவிப்போம். மக்கள் மத்தியில் பரப்புவோம்.