> குருத்து

April 25, 2025

Khauf (2025) வெப் சீரிஸ்


நாயகி ஒரு இளம்பெண் குவாலியரில் இருந்து தலைநகர் தில்லி வருகிறாள். அவளுக்கு பொருளாதார நெருக்கடி. ஆகையால், தில்லியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அந்த விடுதிக்கு வந்து சேர்கிறாள்.


அந்த விடுதியில், குறிப்பாக மாடியில் உள்ள தளத்தில் பக்கத்து அறைகளில் நான்கு பெண்கள் அறைகளில் இருக்கிறார்கள். அவளின் தோழி ஒருத்தி அறையில் தங்கி இருந்தவள், ஒரு சாலை விபத்தில் இறந்து போகிறாள். ஆகையால், அந்த அறையை யாருக்கும் வாடகைக்கு விடக்கூடாது என வார்டனோடு மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சில மாதங்களாக விடுதியை விட்டு வெளியே செல்லாமல் அடைந்து கிடைக்கிறார்கள்.

நாயகிக்கு வேலை கிடைக்கிறது. அந்த அறையில் அமானுஷ்யமாக சில விசயங்கள் நடக்கின்றன. நாயகிக்கு கல்லூரியில் நடந்த பாலியல் அத்துமீறல் ஒரு கெட்ட கனவாக துரத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த அமானுஷ்யங்களும் இணைந்து அவளை வாட்டி வதைக்கின்றன.


ஒரு வயதான மருத்துவன் பெண்களை கடத்தி கொன்று தனது பலத்தை அதிகரிப்பதற்காக முயன்று கொண்டே இருக்கிறார். இதன் தொடர்ச்சியில் நாயகியை குறிவைக்கிறார்.

நடுத்தர வயது பெண் காவலர் தன் காணாமல் போன பையனைத் தேடி விசாரித்துக்கொண்டே இருக்கிறாள்.

மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளும் ஒரு முனையில் சங்கமிக்கும் பொழுது, களேபரங்கள் நடக்கின்றன.
***


பேய், அமானுஷ்யம் என்ற வகையில் இதன் கதையின் நகர்வு இருந்தாலும் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையென்றால், குழந்தையை வயிற்றிலேயே கலைத்துவிட நினைக்கும் கணவன், பெருமைக்காக தன் காதலியுடன் தனியாக இருக்கும் இடத்தை சொல்லும் காதலன், ஏன் தன் கணவனைப் பிரிந்தேன் என சொல்லும் பெண் காவலர் என பெண்களின் பிரச்சனையை எதிர்கொள்ளும் சிக்கல்களை படம் முழுவதும் சொல்லிச் சென்றது சிறப்பு.

சமீபத்தில் சோரி2 என ஒரு ஹாரர் படம் பார்த்தேன். அதிலும் குழந்தை திருமணம் தவறு என சொல்லிச் சென்றாலும், படம் பார்க்கும்படி இல்லை. ஆனால் இந்த சீரிஸ் சரியாக தொட்டு சென்றிருக்கிறது.

கதையில் வரும் சின்ன பாத்திரங்கள் கூட ஏதோ வகையில் மனதில் நிற்பது சிறப்பு. ஒளிப்பதிவு, பின்னணி இசை என எல்லாமும் துணை நின்றிருக்கின்றன. அதனால் சிறப்பா என்றால்… எட்டு அத்தியாயங்களை கொஞ்சம் கத்திரிப் போட்டு ஆறு அத்தியாயங்களாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பேய் படத்தில் லாஜிக் பார்ப்பது சிக்கல் என்றாலும், நிஜத்திலும் மிக மோசமாக நடந்துகொண்ட ஆண், செத்தப் பின்பும் உக்கிரமான ஆவியாக கொல்வது எல்லாம் ஏற்கமுடியாதது. (சீரிஸ் பாருங்கள். நான் சொல்வது புரியும். விலாவரியாக சொன்னால்… ஸ்பாய்லராகிவிடும்).

முதல் வலைத்தொடர். மொத்தம் 8 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் 45லிருந்து 50 நிமிடங்கள். பிரைமில் தமிழில் கிடைக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கலாம்.

தேங்காய் சட்னியும், ரோபா அணுகுமுறையும்!


மாலை ஏழு மணி போல அந்த கடையை கடந்த பொழுது, பசித்தது. உணவகத்தில் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.


ஒரு தோசை சொல்லி… தந்தார்கள். கொடுத்த தேங்காய் சட்னி நன்றாக புளித்தது.
பக்கத்து டேபிள்களில் எந்தவித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதெப்படி எனக்கு மட்டும்? இருந்தும் கேட்டுவிடலாம் என கிச்சனுக்கு போனேன். எல்லோருக்குமே 20 வயது தாண்டாது. இளம் பெண்கள்.

”சட்னி கெட்டு போயிருச்சுமா! புது சட்னி வேண்டும்!” என அந்த பெண்ணிடம் தெரிவித்தேன். அப்படியா! கவனிக்கவில்லையே! என சொல்லி வருத்தம் தெரிவிக்கும் என நினைத்தேன். ஒரு ரோபாவை போல ”அரைச்சிட்டு இருக்காங்க சார்!” என்றது.

அந்த பெண்ணுக்கு பின்னால், இன்னொரு பெண் வேகவேகமாக பார்சலுக்கு அந்த கெட்டுப்போன தேங்காய் சட்னியை ஒரு எந்திரம் போல பார்சல் செய்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், ஒரு மாதிரியாக இருந்தது. ”கெட்டுப்போயிருச்சுன்னு சொன்னேன். அந்த பெண் எதுவும் கேட்காத மாதிரி பார்சல் பண்ணிகிட்டு இருக்கு!” என்றேன். பதிலில்லை.

இந்த பெண்களிடம் பேசி பிரயோஜனமில்லை என புரிந்தது. ”இங்க யாரும்மா மேனேஜர்?” என்றேன். (போய் சொல்லிக்கங்க! என்ற மாதிரி) கை காட்டியது. அந்த இளைஞனும் 2000 கிட்ஸ் தான். “சட்னி கெட்டுப்போயிருச்சு! கெட்டுப் போன சட்னியை பார்சல் பண்ணிக்கிட்டு இருக்காங்க!” என்றேன்.

என்னுடன் கிச்சனுக்கு வந்தார். சட்னி அரைத்துக்கொண்டிருந்த தகவலைச் சொன்னதும், “சார் உங்க டேபிளுக்கு போங்க! நான் கொடுத்துவிடுகிறேன்” என்றார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்மா புது சட்னியைக் கொண்டு வந்தார். இப்பொழுது தான் பக்கத்து டேபிள்களில் இருந்து கெட்டுப் போன சட்னியைப் பற்றி புகார் சொல்லிகொண்டிருந்தார்கள்.

இளையராஜா - ஒரு நாள் வாழ்க்கை


ஒரு நாள் வாழ்க்கை குறித்து சமீபத்திய ஒரு சமஸ் பேட்டியில் சொல்கிறார்.

திரைப்பட உலகில் பிசியாக இருந்த பொழுது, காலை 4 மணிக்கு எழுந்திருப்பேன். நான்கு மணிக்கு சமஸ்கிருத ஆசிரியர் வீட்டுக்கு வந்துவிடுவார். அரை மணி நேரம் வகுப்பு.

காரை எடுத்துக்கொண்டு பெசண்ட் நகர் கிளம்புவேன். டி.வி. கோபாலகிருஷ்ணன் காத்துக்கொண்டிருப்பார். அவரிடம் கர்நாடக சங்கீதம் பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

ஒருமணி நேரம் பூஜை செய்வேன். 6.50 க்கு ஸ்டுடியோ கிளம்புவேன். 7 மணிக்கு இசை கோர்ப்பு பணி துவங்கிவிடும். ஒரு உதவியாளர் அன்று பதிவு செய்வதற்காக காத்திருக்கும் மெட்டை இசைக் குறிப்புகளை கொண்டு நினைவூட்டுவார். டேப் ரிக்கார்டர் வந்த பிறகு அதில் உள்ள மெட்டை போட்டுக்காண்பிப்பார்.

அந்த பாடலுக்குரிய இசைக் கோர்வைகளை எழுத துவங்குவேன். எந்த பாடலுக்கும் அரை மணி நேரம் தான் எடுத்துக்கொள்வேன். (ஒரே ஒரு பாடல் மட்டும் 45 நிமிடம் ஆகியிருக்கிறது. ) நான் எழுதியதை வைத்து, இசைக் கலைஞர்களையும், பாடகர்களையும் வரச்சொல்லி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பார்கள். இந்த இடைவேளையில் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.

காலை உணவு சாப்பிட்டுவேன். இசைக்கலைஞர்கள் அவரவர்களுக்கான குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு எனக்காக காத்திருப்பார்கள். அதை எப்படி வாசிப்பது என தெரியாது. என்ன பாடலுக்கு வந்தோம் என தெரியாது. ஓவ்வொருவருக்கும் சொல்லிக்கொடுத்து, திருத்தங்கள் செய்து சொல்லிக்கொடுத்து, ரிகர்சல் துவங்கும்.

இந்த வேளையில் பாடலாசிரியர் வருவார். அவருக்கு விளக்கி, பாடலை அரை மணி நேரத்தில் பெற்று, பாடகர்கள் காத்திருப்பார்கள். அவர்களுக்கு பாடலை விளக்கி… பயிற்சி கொடுத்து…. மொத்தமாக இசைக் கலைஞர்களோடு பாடலை பாடத் துவங்கி பயிற்சி எடுப்பார்கள். இடையிடையே திருத்தங்கள் செய்வேன். எப்பொழுது பிழையில்லாமல் பாடுகிறார்களோ அப்பொழுது பாடல் பதிவு நடக்கும்.

கொஞ்சம் சிரமமான பாடலாக இருந்தால்… திரும்ப திரும்ப பாடிக்கொண்டே இருப்பார்கள். பாடல் பதிவின் வேலை (Shift) என்பது 7 முதல் 1 மணி வரை. அதற்குள் பாடலை முடிக்கவேண்டும். இல்லையெனில் அடுத்த வேலை நேரத்திற்கு போய்விடும். பெரும்பாலும் 1 மணிக்குள் பாடலை முடித்துவிடுவோம்.

அடுத்த பாடல் இதே போல 2 முதல் 9 வரை தொடரும். அதற்கு பிறகு வீட்டுக்கு போய், கிளம்பி… மீண்டும் பெசண்ட் நகர் போய் கர்நாடக சங்கீத பயிற்சி தொடரும். வீடு திரும்ப 12 மணியாகிவிடும்.

அடுத்த நாள் காலை 4 மணிக்கு மீண்டும் துவங்கும்.

சாதனைக்கு பின்பு இத்தனை உழைப்பு இருக்கிறது.

நம்ம ஒரு நாள் வாழ்க்கை வந்து வந்து போவது தான் சிரமமாக இருக்கிறது. இப்படியெல்லாம் யோசிப்பதை தடுக்க முடியாதா? 🙂