> குருத்து

May 13, 2024

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்றால் என்ன?





வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 6

“UAN என்ற அடையாள எண் ஒவ்வொரு தொழிலாளிக்கு கொடுத்த பிறகும், இன்னும் பழைய முறையான உரிய விண்ணப்பத்தை பி.எப் தளத்தில் கொடுத்து பழைய கணக்குகளை புதிய/கடைசி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவேண்டும் (Transfer) என்கிற நடைமுறை தொடர்கிறது. விரைவில் பி.எப். இந்த முறையை மாற்றி எளிமைப்படுத்தும் என நம்புவோம்.”


என கடந்த மாதம், ஐந்தாவது அத்தியாயம் முடிவுரையோடு, ஏப்ரல் இதழில் 1ந் தேதி நமது கட்டுரை வெளியானது. நாம் கட்டுரையில் இறுதியில் தெரிவித்திருந்தபடி பி.எப். கணக்குகளை மாற்றும் முறையை எளிமைப்படுத்தி அமுல்படுத்துகிற செய்தி ஏப்ரல் 3ந் தேதி பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. பி.எப். சந்தாதாரர்களின் குரலை நாம் பிரதிபலிக்கிறோம் என்பது மகிழ்ச்சி.
***

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) என்றால் என்ன?


”வருங்கால வைப்பு நிதி திட்டம்” (EPF) என்பது ஒரு நிறுவனத்தில் பணி செய்யும் ஒரு பணியாளர் தான் இணைய முடியும். பல நிறுவனங்கள் குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களாக இயங்கி வரும் பொழுது, பலருக்கும் அந்த திட்டத்தில் இணைய வாய்ப்பில்லை. ஆகையால், பொதுமக்களும் வருங்காலத்திற்காக சேமிக்கவேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் 1968ம் ஆண்டிலேயே துவங்கப்பட்டது. நாம் சேமிப்பது பாதுகாப்பாக இருக்கவேண்டும். வங்கி வட்டியை விட கொஞ்சம் கூடுதலாக வட்டி கிடைக்கவேண்டும் என யோசித்தால், அவர்களுக்காகவே ”பொது வருங்கால வைப்பு நிதி” என்ற திட்டத்தை மத்திய அரசு இயக்கிவருகிறது.

எவ்வளவு சேமிக்கமுடியும்?

இந்த திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தப்பட்சமாக ரூ. 500யும், அதிகப்பட்சமாக ஒன்றரை லட்சம் வரை செலுத்தமுடியும். இதற்கு இடைப்பட்ட தொகை எவ்வளவு வேண்டுமென்றாலும் நம்மால் செலுத்த முடியும். இந்த கணக்கு என்பது மிகவும் நெகிழ்வானது (Flexible). முன்பு மாதம் ஒருமுறை தான் இந்த கணக்கில் செலுத்தமுடியும் என்ற விதி இருந்தது. இப்பொழுது அந்த விதியை மாற்றிவிட்டார்கள். ஆகையால், மாதம் மாதம் இவ்வளவு தான், இத்தனை முறை தான் செலுத்தவேண்டும் என்ற கட்டாயமில்லை. நம்மால் எவ்வளவு செலுத்தமுடியுமோ, எப்பொழுது நம்மால் முடிகிறதோ அதை செலுத்தலாம்.
ஒரு வருடத்தில் குறைந்தப்பட்சம் ரூ. 500 செலுத்துவது அவசியமானது. அப்பொழுது தான் அந்த கணக்கை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது கணக்கு செயலிழந்து போகும். மீண்டும் கணக்கை உயிர்ப்பிக்க, விடுபட்ட ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தப்பட்ச தொகையான ரூ. 500 செலுத்தி, கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 50யும் அபராதமாக செலுத்தினால் போதுமானது. கணக்கு எப்பொழுதும் போல இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

கணக்கைத் துவங்குவது எப்படி?


இந்த திட்டத்தை ”தேசிய சிறு சேமிப்பு நிதி” (NSSF) என்ற திட்டத்தின் கீழ் தான் அமுல்படுத்தி வருகிறது. இந்தக் கணக்கை அஞ்சலகங்களிலும், வங்கிகளிலும் எளிதாக துவங்க முடியும். நமது அடிப்படை ஆவணங்களான புகைப்படம், ஆதார் எண், பான் எண், மொபைல் எண், வாரிசுதாரர் விவரங்களை கொடுத்து கணக்கை துவங்கிவிடமுடியும். குறிப்பாக ஒருவருவருக்கு ஒரு கணக்கைத் தான் துவங்கி சேமிக்க முடியும். பதினெட்டு வயதுக்கு கீழே குழந்தைகள் இருந்தால், அவர்கள் பெயரில் துவங்கி, பெற்றோர்கள் அதன் பாதுகாவலராக (Guardian) போட்டு கணக்கைத் துவங்க முடியும். உதாரணமாக, குடும்ப தலைவர் தன் பெயரில் ஒரு கணக்கும், இரு குழந்தைகள் இருந்தால் அவர்கள் பெயரிலும் தனிக் கணக்காக துவங்கமுடியும். மூவர் கணக்கிலும் அதிகப்பட்சம் 1.5 லட்சம் தான் சேமிக்கமுடியும் என்பது ஒரு விதியாக இருக்கிறது.

இந்தக் கணக்கை துவங்க இந்திய குடிமகனாக இருக்கவேண்டும் என்பது அவசியமானது. ஒருவேளை இந்திய குடிமகனாக இருந்து, இந்த திட்டத்தில் இணைந்த பிறகு, வெளிநாட்டு வாழ் இந்தியராக மாறினால், திட்டம் முடியும்வரை நீடிக்கலாம். தனிநபருக்கு தான் இந்த திட்டம் என்பதால், இந்து கூட்டுக் குடும்பம் (HUF)யும் இந்த திட்டத்தில் இணையமுடியாது.

இந்தக் கணக்கில் சேமிப்பதன் மூலம் வருமான வரித் தாக்கல் செய்யும் பொழுது, பிரிவு 80 சி கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு. இந்தத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் வட்டிக்கும் வரிவிலக்கு உண்டு. (பழைய வருமான வரித் திட்டத்தை (Old Regime) தேர்ந்தெடுக்கும் பொழுது தான் இந்த சலுகை உண்டு. புதிய வருமான வரித் திட்டத்தில் (New Regime) இந்த வரி விலக்கு பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.) இந்தத் திட்டத்தின் கீழ் இறுதியாக பெறும் பொழுதும் இதற்கு வரிவிலக்கு உண்டு. ஆகையால் வரிச்சுமையில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்தத் திட்டம் என்பது 15 ஆண்டுகளுக்கானது. கூடுதலாக ஐந்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என நம் தேவைக்கேற்ப நீட்டித்துக்கொள்ள முடியும்.

வட்டி விகிதம் என்ன?


இந்தத் திட்டத்திற்கான வட்டி என்பது நிலையானது இல்லை. ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை மத்திய அரசு தீர்மானிக்கிறது. இந்த ஆண்டில் ஏப்ரல் – ஜூன் 2024 நடப்பு காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.1% என அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு மாதமும் நம்முடைய சேமிப்பிற்கான பணத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு, ஆண்டின் இறுதியில் வட்டியை நம்முடைய கணக்கில் வரவு வைப்பார்கள்.

வட்டி எவ்வாறு கணக்கிடுகிறார்கள்?

ஒவ்வொரு மாதமும் ஐந்து தேதிக்குள் கணக்கில் இருக்கும் பணம், மாத இறுதிக்குள் இருக்கும் இருக்கும் பணம் இதில் எது குறைவான தொகையோ அந்த தொகைக்கு வட்டிக் கணக்கிடப்படுகிறது. ஆகையால் பணம் செலுத்தும் பொழுது, கவனமாக ஐந்து தேதிக்குள் செலுத்தினால் நமக்கு கொஞ்சம் கூடுதலாக வட்டி கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.

15 ஆண்டுகளுக்கு பிறகு

முன்பே சொன்னது போல இந்தக் கணக்கில் 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்தலாம். கணக்கை முடித்துக்கொண்டு முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ளலாம். நீட்டிக்க விரும்பினால் அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என நீட்டித்து, தொடர்ந்து செலுத்தவும் செய்யலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பணம் கட்ட வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என நாம் அனுமதிக்கவும் செய்யலாம். எத்தனை ஆண்டுகளுக்கு அப்படி நாம் விட்டு வைக்கிறோமோ அத்தனை ஆண்டுகளுக்கும் அவர்கள் இந்தத் திட்டத்திற்கு தீர்மானிக்கிற வட்டியும் கிடைக்கும்.

பகுதியளவு பெறுதல் (Partial Withdrawal)

15 ஆண்டுகள் வரை கணக்கை நாம் பராமரிக்கவேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். நமது கணக்கில் இருந்து நமக்கு ஒரு நெருக்கடி என்றால், பகுதியளவு பெறமுடியுமா? என்றால் பெற முடியும். நாம் செலுத்திய பணத்தில் 50% பெறமுடியும். ஆனால், ஆறு வருடங்கள் கழித்து தான் பெறமுடியும். இப்படி ஒரு விதி எதற்காக இருக்கிறது என்றால், நமது வருமான வரியில் இருந்து இப்படி சேமிக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு தருகிறார்கள் அல்லவா! அதற்காக தான்.

பாதியிலேயே திட்டத்தில் இருந்து வெளியேறுதல் சாத்தியமா? (Premature closure)


நெருக்கடியான சமயங்களில் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறி, கட்டிய பணத்தை பெறமுடியுமா? என்றால் பெறமுடியும் ஆனால் அந்த நெருக்கடிக்கான ஆதாரத்தை, உதாரணமாக மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் என்பதற்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும். அதற்கும் கணக்கு துவங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தான் விண்ணப்பிக்கமுடியும்.

கடன் பெறுவது சாத்தியமா? (Loan)

முடியும். நாம் கணக்கைத் துவங்கி மூன்று வருட முடிவில் இருந்து ஆறு வருடங்கள் வரைக்குமான காலத்திற்குள் நாம் கடன் பெறமுடியும். அதுவும், நாம் செலுத்திய பணத்தில் இருந்து 25% பெறமுடியும். அதற்கான வட்டி விகிதம் என்பது 12%ஆக இருக்கும். இப்படி பெறப்பட்ட கடனையும் 36 மாதங்களுக்குள் முழுமையாக அடைத்துவிடவேண்டும். அடைக்கவில்லை என்றால், அதற்கு பிறகான வட்டி விகிதம் இன்னும் கூடுதலாக 6% செலுத்தவேண்டியிருக்கும். இதே போல இரண்டாவதாக கடன் பெற முடியுமா? என்றால் முடியும். ஆனால், முதலில் பெற்ற கடனை முழுமையாக செலுத்தியிருக்கும் பட்சத்தில் இரண்டாவது கடனை பெறமுடியும்.

பணவீக்கமும், வட்டி விகிதமும்

பணவீக்கம் என்பது பணத்தின் மதிப்பு சரிவது என்பதாக பொருள் கொள்ளலாம். இந்த ஆண்டு நீங்கள் ஒரு பொருளை ரூ.100க்கு வாங்கினால், அடுத்த ஆண்டு விலைவாசி உயர்வால், அதே பொருளை ரூ. 105க்கு வாங்க நேர்ந்தால், பணத்தின் மதிப்பு 5% என சரிந்ததாக புரிந்துகொள்ளலாம். இதைத்தான் பொருளாதாரத்தில் பணவீக்கம் என்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விலைவாசி உயர்வால் பணத்தின் மதிப்பு சரிந்துகொண்டே இருக்கிறது. 2024ல் பணவீக்கத்தின் மதிப்பை கடந்த பிப்ரவரியில் 5.09% என கணித்திருக்கிறார்கள். ஆக நம்முடைய சேமிப்புக்கு கிடைக்கும் வட்டி என்பது 5.09%க்கு மேல் இருந்தால் தான் பாதிப்பு இல்லை என புரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 24 நிலவரப்படி வங்கிகளில் நம்முடைய சேமிப்பான நிலையான வைப்புக்கே (Fixed Deposit)க்கு 7.5% வரைக்கும் வட்டி தருகிறார்கள்.

இந்த ”பொதுவருங்கால வைப்புநிதி திட்டம்” என்பது சேமிப்பதற்கு எளிமையானது. மற்ற முதலீடு திட்டங்கள் கூடுதல் சதவிகித லாபம் தந்தாலும், அதில் அபாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தத் திட்டத்தை மத்திய அரசு கையாள்வதால், பாதுகாப்பானது. இந்தத் திட்டத்தைப் போலவே மத்திய அரசு அமுல்படுத்துகிற திட்டங்களும் உண்டு. அதையும் தெரிந்துகொண்டு இந்த திட்டத்தில் உள்ள மேற்கண்ட அம்சங்களை புரிந்துகொண்டு, எது உங்களுக்கு வசதியாக இருக்கிறதோ, அந்த வழிகளில் சேமிக்கத் துவங்குங்கள்.

ஓய்வும், சேமிப்பின் அவசிய தேவையும்

சமகாலத்தில் பெரும்பாலோர் வருவாயை விட, செலவுகளை அதிகமாக எதிர்கொள்கிறோம். ஒருபக்கம் அடிப்படையான செலவுகளே விலை அதிகரித்துகொண்டே செல்வதால், பற்றாக்குறையுடனே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் சிலர் ஆடம்பரமாகவும், வீண் செலவுகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆரோக்கியமாக வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுதே சேமிப்பது என்பது அவசியமானது. முன்பெல்லாம் சமூகத்தில் ஒரு பகுதி மக்களையாவது ஓய்வூதியம் என்ற திட்டம் காப்பாற்றிக்கொண்டு இருந்தது. இப்பொழுது பெரும்பாலோருக்கு ஓய்வூதியம் திட்டம் இல்லாமல் ஒருவித பாதுகாப்பின்மை (Insecurity) உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். பணி ஓய்வு பெறும் பொழுது, எல்லாவற்றிக்கும் பிறர் கையை எதிர்பார்த்து நிற்பது என்பது பெரிய துயரமாகிவிடும். ஆகையால் இதுவரை சேமிக்காவிட்டாலும் பரவாயில்லை. இனி சேமிக்கப் பழகுங்கள். அது நம்முடைய எதிர்காலத்திற்கு, நம் குடும்ப நலனுக்கு, நம் நாட்டிற்கு எல்லாருக்குமே நல்லது.

இன்னும் வளரும்.

இரா. முனியசாமி,
பி.எப்., இ.எஸ்.ஐ, ஜி.எஸ்.டி ஆலோசகர்.

குறிப்பு : இந்த கட்டுரை "தொழில் உலகம்" என்ற வணிக மே 2024 இதழில் வெளியானது.

May 2, 2024

EPF : தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது? – அத்தியாயம் 7

 


தொழிலாளிக்கான
பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/


இதற்கு முந்தைய ஆறு அத்தியாயங்களை GSTPS தளத்தில் கீழ்க்கண்ட முகவரியில் சென்று படிக்கலாம்.

https://gstprofessionalssociety.blogspot.com/2023/10/gstps-how-to-use-employee-pf-site.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/11/epf-2.html

https://gstprofessionalssociety.blogspot.com/2023/12/epf-3.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/01/epf-4.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/02/epf-5.html

https://gstprofessionalssociety.blogspot.com/2024/03/epf-6.html

 

கடந்த ஆறாவது அத்தியாத்தில் ஓய்வூதியம் பெறுகிற தொழிலாளி உயிரோடு இருக்கிறாரா, அவர் தான் ஓய்வூதியம் தொடர்ந்து  பெற்றுக்கொண்டிருக்கிறாரா என்பதை உறுதி செய்ய ஆண்டுக்கு ஒருமுறை குறிப்பாக நவம்பர் 30க்குள் வாழ்வு சான்றிதழை (Life Certificate) தர கோருகிறது. அதைப் பற்றி பார்க்கலாம் என முடித்திருந்தோம்.

 

முன்பு இந்த வாழ்வு சான்றிதழை பதிவு செய்வதற்கு நேரடியாக பி.எப். அலுவலகம் வரவேண்டியிருக்கும்.  வழக்கமாகவே பி.எப். அலுவலகத்தில் மக்களின் வரவு அதிகமாக இருக்கும்.   ஆண்டின் இறுதி மாதத்தில் கூட்டம் அலைமோதும்.

 

இந்தப் பிரச்சனையை சமாளிக்க சில வருடங்களுக்கு முன்பு…  டிஜிட்டலாக வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க ஒரு வழி கண்டுப்பிடித்தது.  அந்த அரசு இணையத் தளத்தின் பெயர்.  https://jeevanpramaan.gov.in/

 


இந்தத் தளத்தின் வழியாக 127 லட்சம் தங்களது வாழ்வு சான்றிதழ்களை பெற்றிருக்கிறார்கள் என தளமே முதல் பக்கத்தில் தகவலாக தருகிறது.


தளத்தின் உள்ளே நுழைவதற்கு சம்பந்தப்பட்ட பணியாளின் மின்னஞ்சலை கொடுத்தால்…  நம்முடைய மின்னஞ்சலை உறுதிப்படுத்த ஒரு ஓடிபி (One Time Password) வந்து சேரும். நமது மின்னஞ்சலைத்  திறந்து, அந்த ஓடிபியை எடுத்து தளத்தில் பதியவேண்டும்.  அதற்கு பிறகு,  நமக்கு மென்பொருளை (Software) அனுப்பிவைப்பார்கள்.

 

இந்த வாழ்வு சான்றிதழை தருபவர்கள் ஓய்வுப் பெற்றவர்களாக, பெரும்பாலும், வயதானவர்களாக இருப்பதால், அவர்களாகவே தளத்தின் வழியே சான்றிதழை பெறுவதற்காக சிரமப்படுவார்கள் என்பதற்காக..  இசேவா மையம், வங்கிகள் என சில ஏற்பாடுகளை செய்து தந்திருக்கிறது. அங்கு  இந்த சேவையை பெறலாம்.  இந்த தளத்திலேயே பணியாளருடைய மாநிலம், மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் அருகில் உள்ள மையத்தை அதுவே உங்களுக்கு காட்டுகிறது. பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

சம்பந்தப்பட்ட இசேவை (E seva) மையத்துகாரர்கள் என்ன செய்கிறார்கள் என பார்த்தால், முதலில் தளம் தருகிற ஒரு மென்பொருளை கணிப்பொறியில் பொருத்திக்கொள்ளவேண்டும் (Install).  அதற்கு பிறகு, அந்த ஆபரேட்டர் தன்னுடைய ஆதார், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடியை கொடுக்கிறார். ஆதார் ஓடிபியைப் பெற்று அதைக் கொடுத்ததும், முதல் நிலையில் சரிப்பார்த்தால் முடிந்துவிடுகிறது.  அடுத்து, எந்த பணியாளருக்கு பதிவு செய்யப்போகிறாரோ, அவருடைய ஆதார், மொபைல் எண், மின்னஞ்சல் வைத்திருந்தால் மின்னஞ்சல் கொடுக்கலாம்.  

 

அடுத்து, பணியாளருடைய அடிப்படை விவரங்கள் கொடுக்கவேண்டியிருக்கும்.  பெயர், என்ன வகையான பென்சன் பெறுகிறார்? பணியாளர் பெறுகிற ஓயூதியமா? அல்லது அவர்களுடைய குடும்பத்தினர் பெறுகிற ஓய்வூதியமா?  என்கிற விவரங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டும்.  

 


அவருக்கு ஓய்வூதியம் வழங்கும் அமைப்பு எது?  (இந்த வாழ்வு சான்றிதழ் என்பது பி.எப். தளத்திற்கு மட்டுமில்லை.  பி.எப். ஓய்வூதியம் வழங்குவது போலவே, மத்திய அரசு, மாநில அரசு,  தனியார் நிறுவனங்கள் என பல அமைப்புகள் வழியாக  பென்சன் வழங்குவதற்கும் வாழ்வு சான்றிதழை இந்த தளத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.) பணியாளருக்கு எந்த வங்கி மூலம் ஓய்வூதியம் பெறுகிறார் என்பதை பதிவு செய்யவேண்டும்.  அவருடைய அடையாள எண் ஓய்வூதிய அடையாள எண் (PPO – Payment Pension order Number) எது? என்கிற அடிப்படை விவரங்களை பதியவேண்டும்.


அடுத்த நிலையில், இரண்டு கேள்விகளை எழுப்பும்.  ஒரு பணியாளர் ஓய்வுக்கு பிறகும், வேலையை தொடர வாய்ப்பிருக்கிறது.  அப்படி தொடர்கிறீர்களா? என கேட்கும். அதற்கு பொருத்தமான பதிலை தரவேண்டும்.  இரண்டாவது கேள்வி, ஒரு பணியாளர் இறந்தநிலையில் அவருடைய துணைவியார்/வாரிசுகள் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பார்கள். அவருடைய துணைவியாராக இருந்தால்… மறுமணம் புரிந்துகொண்டீர்களா? என கேட்கும். அதற்கும் பொருத்தமான பதிலை தரவேண்டியிருக்கும்.

 

அடுத்த நிலையில் பணியாளருடைய விரல் ரேகையை அவர்கள் வைத்திருக்கும் ஸ்கேனரில் வைத்து பதிவு செய்யவேண்டும்.   அது வெற்றிகரமாக நடந்தேறியதும், ஒரு சான்றிதழ் உருவாகிவிடும். அதை பிரிண்டரில் எடுத்து தந்துவிடுவார்கள். அதைப் பாதுகாப்பாக பணியாளர் வைத்துக்கொள்ளவேண்டும்.


இன்னும் வளரும்.


No tears for the dead (2014) தென்கொரியா


"பாவம் செய்வதில், ஒவ்வொரு மனிதனும் அனைவருக்கும் எதிராகப் பாவம் செய்கிறான், ஒவ்வொரு மனிதனும் மற்றொருவரின் பாவத்திற்காக குறைந்தபட்சம் ஓரளவு குற்றவாளி. தனித்த பாவம் இல்லை

-          எழுத்தாளர் தஸ்தாவெஸ்கி

 

பணத்துக்காக கொலை செய்கிற ஆள் நாயகன்.  அப்படி ஒரு ”வேலையாக” கொலைகள் செய்யும் பொழுது, தவறுதலாக ஒரு எட்டு வயது சின்னப் பெண்ணையும் தவறுதலாக சுட்டுக்கொன்றுவிடுகிறான்.

அதனால் ஏற்படுகிற குற்ற உணர்வு அவனை வாட்டுகிறது.  அதற்கு பிறகு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறான். அவனின் பாஸ் அவனை விடுவதாயில்லை. 

இவன் மறுத்தாலும், அவனை மிரட்டி இன்னொரு வேலையை கொடுக்கிறான்.   அது அவன் ”கொலை” செய்த  அந்த பெண்ணின் அம்மாவை கொலை செய்வது!

வேண்டா வெறுப்பாக போகிறான். அவளைச் சந்திக்கிறான். அங்கு ஏகப்பட்ட களேபரங்கள் நடக்கின்றன.  பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

 


கொரியப் படங்கள் எவ்வளவு பரபர சண்டைப்படமாக இருந்தாலும் சரியான விகிதத்தில் உணர்வுகளையும் கலந்துகொடுத்துவிடுகிறார்கள். அதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்.

 

மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (2013) படத்தைப் பார்த்துவிட்டு, தனது பாணியில் படம் எடுத்தது போல இருந்தது இந்தப் படம்.   இரண்டுப் படங்களின் ஒன் லைனும் ஒன்று தான்.  கதையும், காட்சிகளும் தான் வேறுவேறு.

 

தான் கொன்ற அந்த சின்ன பையனின் கண் தெரியாத குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற பரிதவிப்பையும், அந்தப் போராட்டத்தையும், மிஷ்கின் கடத்தியிருப்பார்.

 

அந்த குற்ற உணர்வுக்கு அடிப்படை என்ன என்பதையும், அவனுடைய சிறு பிராயத்து சில காட்சிகளை பொருத்தமாக வைத்திருப்பார்கள்.

 

குற்றவுணர்வில் அலையும் நாயகன், மகளின் நினைவில் வாடும் அம்மா, இரு பாத்திரங்களும் முக்கியப் பாத்திரங்கள். மற்றவை எல்லாம் அதகள காட்சிகளில் வருபவர்கள் தான். எல்லோரும் சரியாக பொருந்திருக்கிறார்கள்.

 

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும்  இல்லை. நான் முன்பு வைத்திருந்த பட்டியலில் வைத்திருந்த படம். வேறு வகைகளில் முயலுங்கள்.