> குருத்து

September 9, 2026

Internal Audit : இரண்டு பேரின் வேலை பறிபோனது!

 தேவக்கோட்டை மில்லில்….

 

துவக்க காலத்தில், என்னுடைய 20 களில் தணிக்கையாளர் திரு. சிதம்பரம் அவர்களிடம் மூன்று ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். மூன்று உதவியாளர்கள். பெரும்பாலும் அலுவலகம் பக்கம் தலை வைத்தே படுக்கமாட்டோம்.  நேரே நிறுவனங்களுக்கு போய், சோதனை (internal Audit) செய்வது தான் எங்களது வேலை.

 

ஒருமுறை தேவகோட்டை, காரக்குடியில் இரண்டு பஞ்சாலைகள் இருந்தன. அதில் தேவகோட்டையில் இருந்த பஞ்சாலைக்கு நானும் சக ஊழியரும் சோதிக்க போயிருந்தோம். அந்த பஞ்சாலையில் தான் துவக்க காலத்தில்  ஊழியராகவும் எங்கள் தணிக்கையாளர் வேலை செய்திருந்தார்.  தணிக்கையாளரானதும் கூடுதல் பொறுப்புகளை தந்துவிட்டனர்.

 

முதல்நாளில் 50+ வயதில் இருந்த கணக்காளரிடம்  கையிருப்பு ரொக்கத்தைப் பார்த்தால் மூன்று லட்சம் வரை இருந்தன.  எண்ணிப் பார்த்தால், 85 ஆயிரம்  குறைந்தது.   இளவயது என்பதால்… என்னை ஏற்கனவே எண்ணிவிட்டீர்கள் என ஏமாற்றப் பார்த்தார். பரவாயில்லை. வாங்க முதலில் இருந்து எண்ணுவோம் என எண்ணினால், மீண்டும் அதே தொகை குறைந்தது. அதற்கு  பிறகு அவர் அமைதியாகிவிட்டார்.

 

நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டுமே! தெரிவித்தேன்.  தணிக்கையாளரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டால்… பழுதாகி இருந்தது. நேரே வீட்டுக்கே போய்விட்டேன். என்னைப் பார்த்ததும், “காலையில் தான் தேவகோட்டை போனீங்க! இப்ப வந்து நிற்கிற!” என்றார்.   விசயத்தைச்  சொன்னதும், அந்த கணக்காளருக்கு பள்ளி முடிக்கிற காலத்தில் இரண்டு பசங்க இருக்காங்களே! இப்படி ஆகிப்போச்சா! என வருந்தினார்.  பிறகு அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக செய்தி வந்தது.

 

மதுரை மோட்டார்ஸ் நிறுவனம்

 

ஹீரோ ஹோண்டா நிறுவனம். மாதத்திற்கு ஒருமுறை தணிக்கைக்கு போவோம்.  அந்தமுறை நான் முதன் முதலாக போயிருந்தேன்.   இந்தமுறையும் கையிருப்பு ரொக்கத்தை சோதித்த பொழுது, நிறுவனத்தின் கணக்கு சரியாக இருந்தது.

 

ஆனால்,  வண்டிகள் பதிவு செய்வதற்காக,  வாடிக்கையாள்ர்கள் RTO செலுத்தவேண்டிய பணத்தை .. தனித்தனி கவர்களில் போட்டு வைத்திருந்ததில், நான்கு கவர்களில் பணம் இல்லை. பொய்க்கவர்களாக இருந்தது.  கேட்டால், ”வீட்டின் அவசர மருத்துவ தேவைக்கு அதை எடுத்துச் செலவழித்துவிட்டேன். நிர்வாகத்திடம் தெரிவித்துவிடாதீர்கள்” என பாவமாக கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.   அவருக்கும் வயது 50+ ல் இருந்தார்.

 

தணிக்கையாளருக்கு போனில் தெரியப்படுத்தினால்,  எப்பொழுதும் கொஞ்சம் கிண்டலாக பேசுகிறவர் “என்னப்பா! போகிற இடத்தில் எல்லாம், கேசியரை காலி பண்ணிடற! சரி! நிர்வாகத்திடம் முறையாக தெரிவித்துவிடு!” என்றார்.

 

-         - இரா. முனியசாமி

பத்துக் கட்டளைகள்!

 


1) உடம்பு சோர்ந்த பிறகு அதை நினைவுபடுத்திக் கொள்ளாதே. தினமும் சிறிதாவது நட. நதி போல ஓடிக்கொண்டே இரு.

 

2) நாளில் சில நிமிடங்களாவது எந்தக் குரலும் இல்லாமல் உன்னுடைய குரலைக் கேள். அதற்காகத் தனியாக எங்கும் போக வேண்டியதில்லை; அமைதியாக இருந்தால் போதும்.

 

3) எல்லாவற்றிலும் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சில விஷயங்களைப் புரிந்துகொள்வதே போதும்

 

4) தினமும் ஏதாவது ஒன்றைப் படி. படித்ததை அப்படியே நம்பாதே. பிடித்திருந்தாலும் கேள்வி கேள்; பிடிக்கவில்லை என்றாலும் புரிந்துகொள்ள முயற்சி செய்.

 

5) தொழிலில் நேர்மையாய் இரு; தெரியாததைத் தெரியாது என்று சொல்லும் நேர்மையையும் காப்பாற்று.

 

6) உறவுகளில் அறிவுரை வழங்குவதை விட, கேட்கும் காதையே அதிகமாகப் பயன்படுத்து. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல வேண்டியதில்லை; சில நேரங்களில் அருகில் இருப்பதே போதும்.

 

7. நேற்றைய உன்னோடு இன்றைய உன்னை ஒப்பிடு. மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்க்கை முழுவதும் யாரோ ஒருவரின் பின்னாலேயே ஓட வேண்டியிருக்கும்.

 

8) பணம் சம்பாதிப்பதை மட்டும் வாழ்க்கையின் அளவுகோலாக வைத்துக்கொள்ளாதே. உன்னால் யாருக்காவது ஒரு சிறிய பயனாவது ஏற்பட்டதா என்பதையும் கணக்கில் வைத்துக்கொள்.

 

9) உனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்; உனக்குத் தெரியாததைத் தேடிக் கற்றுக்கொள். வயது கூடுவதற்கும் அறிவு கூடுவதற்கும் நேரடி தொடர்பில்லை என்பதை மறந்துவிடாதே.

 

10) வாழ்க்கையை எப்போதும் திருத்திக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு வரைவாகப் பார்க்காதே. சில நேரங்களில் புத்தகத்தை மூடி வைத்து, தேநீரைக் கையில் எடுத்துக்கொண்டு, எதிரே இருப்பதை அப்படியே ரசித்துக் கொண்டிரு

 

-     - இரா. முனியசாமி

 

ஆசிரியர்களுக்கு நன்றி!

 

ஆசிரியர் என்றால் வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்தவர் மட்டுமல்ல! வாழ்க்கையில் நாம் தடுமாறியபோது கை கொடுத்தவர்கள், “இப்படிப் போங்க!” என்று ஒரு வார்த்தை சொல்லி வழி காட்டியவர்கள், நமக்குள் இருந்த திறமையை நமக்கே காட்டியவர்கள்இவர்கள் எல்லாருமே நம் ஆசிரியர்கள்தான்.

 

என் வாழ்க்கையில் எனக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் பலர். சிலர் புத்தகத்திலிருந்து கற்றுக் கொடுத்தார்கள்; சிலர் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொடுத்தார்கள். சிலர் சொல்லிக் கொடுத்தார்கள்; சிலர் தாங்கள் வாழ்ந்தே கற்றுக் கொடுத்தார்கள்!

 

இந்தக் குழுவிலும் எனக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

 

ஆசிரியர் தினமான இன்று, இவர்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால், நான் கற்றது என்னைவிட மற்றவர்களால்தான் அதிகம்!” என்ற உண்மை புரிகிறது.

 

எனக்குக் கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும், இந்நாளில் என் இதயம் நிறைந்த நன்றி!

 

-          இரா. முனியசாமி