> குருத்து: வங்கிகளின் ‘சேவை’த் தரம்?

January 2, 2009

வங்கிகளின் ‘சேவை’த் தரம்?


பாரத ஸ்டேட் பாங்கு (SBI) வங்கிக்கு நீங்கள் போயிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நிச்சயம் கோபபட்டிருப்பீர்கள் அல்லது புலம்பியாவது இருப்பீர்கள். உண்மையா? இல்லையா?

இந்தியாவின் முன்ணணி வங்கிகள் எல்லாம் வாடிக்கையாளர் சேவையில் எரிச்சல் தான் ஊட்டுகின்றன.


***

இந்த பதிவிற்கான தேவை - எஸ்.பி.ஐ. இன்றைக்கு தந்திருக்கிற நாளிதழ்களில் ஒரு விளம்பரம் தந்திருக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி தனது 11,111 வது வங்கி கிளையை அசாம் மாநிலத்தில் சோனாபூரில் துவக்கி வைக்க.. உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களை அழைத்து இருக்கிறது.

அந்த விளம்பரத்தில் “வாடிக்கையாளர்களுடன் எப்போதுமே நேசமிகு நெருக்கத்தை பராமரித்து வருகிறது” என வாசகம் வருகிறது.

எஸ்.பி.ஐ - அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் வழங்குவது என அரசினுடைய பல்வேறு தேவைகளை நிறைவேற்றுகிறது. மேலும், இந்தியாவில் நிறைய கிளைகள், நிறைய ஏடிஎம் மையங்கள் அதிகம் வைத்திருப்பது எஸ்.பி.ஐ தான். இதனால் எப்பொழுமே கூட்டம் நிரம்பி வழிகிறது.

பணம் கட்ட, டிடி எடுக்க என டோக்கன் வாங்கினால் குறைந்த பட்சம் நமக்கு முன்னால் 50
பேர் காத்திருக்கிறார்கள். விடுமுறை நாளுக்கு அடுத்த நாள் போனால்.... 100 க்கும் குறையாமல் காத்திருக்கிறார்கள். கிட்டதட்ட அந்த வேலையை முடிக்க அரை நாள் ஆகிவிடுகிறது. காத்திருக்கும் பொழுதில் அங்கு அமர்ந்திருக்கிற எல்லா வாடிக்கையாளர்களுமே புலம்பித்தள்ளுவார்கள். டென்சனுடன் அமர்ந்திருப்பார்கள்.

மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என தேவையான ஆட்களை நியமிக்காமல், வங்கிக்கு வருகிற எல்லா வாடிக்கையாளர்களையும் காக்க வைப்பது மக்களின் நேரத்தை மதிக்காத போக்குதான்.

எஸ்.பி.ஐ மட்டுமில்லை ஐ.சி.ஐசிஐ, இந்தியன் வங்கி, கனரா வங்கி என எல்லா வங்கிகளும் வாடிக்கையாளர்களை பல்வேறு வேலைகளில் அலைகழிக்கிறார்கள்.

எப்பொழுதும் கூட்டமாய் இருக்கிற எங்கள் பகுதியில் உள்ள இரண்டு இந்தியன் வங்கி-களில்
பியூனே நியமிக்காமல், வாடிக்கையாளர்களையே அங்கே போய் கையெழுத்து வாங்கி வாருங்கள் என பியூனாக பயன்படுத்திக்கொள்வார்கள். இதை அங்குள்ள வங்கி சீனியர் மேனேஜரிடமே இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறேன். நேரிடையாக பதில் சொல்லாமல், மழுப்பலாய் பதில் சொன்னார்.

இதுதவிர, வாடிக்கையாளர்களை படித்தவர்கள், படிக்காதவர்கள் என பார்த்து, இவர்கள் கையாளுகிற விதம் மக்களைவிட “தாம் மேம்பட்ட மக்கள்” என்கிற போக்கு தெரிகிறது. இதற்கு பல்வேறு உதாரணங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

சமகால நிலைமை என்னவென்றால், இந்திய அரசு பல வழிகளில் நிதிமூலதன கும்பல்களுக்காக வங்கி நடவடிக்கைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

உதாரணமாய், வருங்கால வைப்பு நிதி பணத்தை எஸ்.பி.ஐ. வங்கி தான் பாரமரித்து வந்தது. பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், அரசு அதை கண்டுகொள்ளாமல், பங்குச்சந்தை வீழ்ச்சியை சரி செய்கிறேன் என்ற பெயரில், வைப்புநிதியை கையாள ஐசிஐசிஐ, ஹச்.எஸ்.பி.சி, ரிலையன்ஸ் கேப்பிடல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் பிரித்து கொடுத்தது.

இந்த போக்கு தொடரும் பட்சத்தில்... ஒருநாள் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகள் போல தேசிய வங்கிகளும் மற்ற வங்கிகளும், திவால் நோட்டீஸ் கொடுக்கும் நிலை வந்தாலும் வரலாம்.

மக்கள் தான் மகத்தானவர்கள். மக்களோடு ஐக்கியப்பட்டு அரசு செய்யும் தில்லுமுல்லுகளை மக்களிடம் அம்பலப்படுத்தி போராட்டங்களை கட்டியமைத்தால் மட்டுமே இந்த நிலை வராமல் தடுக்க முடியும். இல்லையெனில், இந்த வங்கி ஊழியர்கள் தனிமைப்பட்டு வேலை இழந்து தெருவில் நிற்கும் காலம் வெகுதூரமில்லை.

10 பின்னூட்டங்கள்:

Advocate P.R.Jayarajan said...

சொல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துகொண்டிருந்தேன் ..... நீங்கள் பொங்கியே எழுந்து விட்டீர்கள் ......

Anonymous said...

Former P.Chidambaram also wants to privatise these banks.

நாமக்கல் சிபி said...

/இந்த வங்கி ஊழியர்கள் தனிமைப்பட்டு வேலை இழந்து தெருவில் நிற்கும் காலம் வெகுதூரமில்லை//

வங்கி ஊழியர்களுக்கு பெரிசா பாதிப்பு ஒண்ணும் ஏற்பட்டுவிடப் போவதில்லை!

அவங்களுக்குத்தான் அரசு சம்பளம், ஓய்வு பெற்ற பின்னர் ஓயூதியம் எல்லாம் இருக்கு!

ஜனங்க பாடுதான் திண்டாட்டம்!

வெங்கட்ராமன் said...

நீங்கள் சொல்லும் பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன, மறுப்பதற்கில்லை.

ஆனால், சாமான்யர்களுக்கும் வங்கிச் சேவை அளிப்பது SBI தான். 5000 ரூபாய் இருந்தால் நீங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கை உருவாக்க முடியும், ஆனால் தனியார் வங்கிகளில் 5000 முதல் 10000 வரை இருக்க வேண்டும். அதனால் அதிக வாடிக்கையாளர்களும் அதனால் பிற பிரச்சனைகளும் வருகின்றன.

Anonymous said...

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காசோலையை என்னுடைய வங்கி கணக்கில் போட எங்க ஊரில் உள்ள இந்தியன் வங்கிக்கு (Indian Bank) சென்றேன். நான் கணக்கை ஆரம்பிக்கும் பொழுது அந்த வங்கி கணினி மயம் ஆகவில்லை ஆனால் இப்பொழுது அது கணினி மயமாகி விட்டது. அதனால் என்னுடைய கணக்கு எண் மாறிவிட்டது. பழைய எண்ணை காட்டி புது எண் என்ன என்று ஒரு அதிகாரியிடம் கேட்டேன், அவர் அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவரை காட்டி அங்கே போயி கேட்கச்சொன்னார். அவரிடம் கேட்க அவர் அடுத்தவரை கை காட்ட, அவரிடம் கேட்க முதலில் நான் கேட்டவரை நோக்கி கை காட்டினார்.
எனக்கு வந்து கடுப்புக்கு ஒரு அளவே இல்லை.
நான் ஒரு NRI என்று தெரிந்த பிறகு அந்த மேனாஜர் என்னை அவரது அறைக்குள் அழைத்து சென்று பேசிய பேச்சு என்ன அழகு அட அட… அட நாயிகளா அந்த டாலர் தாள்களுக்கு இருக்கும் மரியாதை ஒரு மனிதனுக்கு கிடையாதா? படித்த மக்களிடமே இந்த அழிச்சாட்டியம் செய்யும் இவர்கள் படிக்காத மக்களை எப்பாடு படுத்துவார்கள்?

http://santhose.wordpress.com/2007/11/12/indianbank/

குருத்து said...

சோதனை

Shyam said...

தோழர் நீங்கள் இங்கு இரண்டு விடயங்களை தொட்டிருக்கிறீர்கள்.

முதல் விடயம்/பிரச்சனைகளுக்காவே நிறைய பேர் இப்போது தனியார் வங்கிகளுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். தவிர்க்க முடியாத வேலைகளுக்கு மட்டுமே தேசிய வங்கிகளுக்கு செல்கின்றனர்!
அரசு ஊழியர்களின் இந்த அலட்சிய போக்கு, நடுத்தர வர்க்க பொதுப்புத்தியின் பல தவறான முன்முடிவுகளுக்கு காரணமாகிறது. (எந்தெந்த முன்முடிவுகள் என்பதியே தனியாக விவதிக்குமளவு நீளும்!)

இரண்டாவது விடயம், (வருங்கால வைப்பு நிதி) நடுத்தர வர்க்க பொதுப்புத்திக்கு எப்போதும் எட்டுவதே இல்லை!
வருங்கால வைப்பு நிதியை இவர்களிடம் பிடித்தம் செய்து கொண்டு, அதை அந்த அமைப்பில் சரிவர கட்டாமல் இருக்கும் முதலாளித்துவ நிர்வாகங்களை/ நிர்வாகிகளை பற்றியே கவலை இல்லாமல் இருக்கும் போது.................
திவாலானால் என்ன? PF இல்லாமல் போனால் தான் என்ன?
(கவலைப்படும் சிலருக்கோ அப்படி கட்டாமல் இருந்தால் எங்கு புகார் அழிக்க வேண்டுமென்று கூட தெரியவில்லை/ அடுத்து என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை! தோழர் இங்கு அதைப்பற்றியும் பதிவிடுங்களேன்! )

நன்றி
-சியாம்.

குருத்து said...

அமைப்புச் சார்ந்த பல தொழிலாளர்களுக்கு மத்தியில் சில நிறுவனங்களில் பிடிக்கப்படும் பி.எப். தொழிலாளர்களுக்கு ஒரு நல்லத்திட்டம்.

பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு அவர்கள் தங்கள் வாழ்நாளில் சேமிக்கும் ஒரே சேமிப்பு பி.எப். மட்டுமே.

கடந்தவாரம் ஒரு நிகழ்வு. கடந்த 7 ஆண்டுகளாக ஒரு பெண் தொழிலாளி அரும்பாக்கத்தில் தோல் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்தார். பி.எப். இருந்திலிருந்து வந்த பணத்தைக் கொண்டு, அந்த பெண்ணின் திருமணத்தின் பெரும்செலவை செய்துமுடித்தார்கள்.

பி.எப். பணத்தைக் கட்டாத நிறுவனங்களிடமிருந்து பி.எப். நிர்வாகம் அந்த நிறுவனத்தின் அனுமதி இல்லாமலே வங்கியிலிருந்து பணம் பெற்று கொள்ள முடியும். பணம் இல்லையென்றால், பணம் கட்டும் வரைக்கும் வங்கியின் கணக்கு வழக்குகளை நிறுத்தி வைக்கமுடியும். அதனால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயந்து போய் கட்டிவிடுகின்றன.

சில பெரிய திமிங்கல நிறுவனங்கள் தான் டிமிக்கி கொடுக்கின்றன. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அம்பத்தூரில் இயங்கும் டன்லப் நிறுவனம் 1 கோடிக்கும் மேலே வருமான வரி பாக்கி கட்டவேண்டும்.

எங்கு போய் முறையிடுவது என்கிற பிரச்சனை படிக்காத தொழிலாளர்களுக்கு மட்டுமா என்ன! மெத்த படித்தவர்களுக்கே உள்ள பிரச்சனை தானே நம்நாட்டில்! அப்படி முறையிட்டும் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடுகிறதா என்ன?

குருத்து said...

//அம்பத்தூரில் இயங்கும் டன்லப் நிறுவனம் 1 கோடிக்கும் மேலே வருமான வரி பாக்கி கட்டவேண்டும்.//

தவறுதலாக வருமான வரி என சொல்லிவிட்டேன். பி.எப். பணம் கட்டவேண்டும். அம்பத்தூரில் இருக்கும் பி.எப். அலுவலகம் போனால், அங்கு ஒரு பெரிய வெள்ளை போர்டில் அனைவருக்கும் தெரியும் படி எழுதி வைத்திருப்பார்கள்

Anonymous said...

அட அட… அட நாயிகளா அந்த டாலர் தாள்களுக்கு இருக்கும் மரியாதை ஒரு மனிதனுக்கு கிடையாதா? படித்த மக்களிடமே இந்த அழிச்சாட்டியம் செய்யும் இவர்கள் படிக்காத மக்களை எப்பாடு படுத்துவார்கள்?
romba sari! ella edathulayum appadithaan..