> குருத்து: வதந்தி – வெப் சீரிஸ் (2022)

June 22, 2023

வதந்தி – வெப் சீரிஸ் (2022)


வந்த புதிதில் இதன் விமர்சனங்களை படித்துவிட்டு, பார்க்க நினைத்த தொடர். இப்பொழுது தான் பார்க்க முடிந்தது.  இடையிடையே கொஞ்சம் தொய்வு இருந்தாலும், இறுதிவரை நம்மை அழைத்து சென்றது!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கிறது கதை.  வெலோனிகா என்ற இளம்பெண் கொலை செய்யப்படுகிறார்.  விசாரணை துவங்குகிறது. பிறகு தணிந்துவிடுகிறது.  மதுரை உயர்நீதிமன்றம் இந்த கொலை வழக்கை விசாரிக்க (suo moto) உத்தரவிட, உதவி ஆய்வாளரை நியமிக்கிறார்கள்.

 

வெலோனிகா கல்லூரி படித்து வருகிறார். அவருடைய அம்மா, அங்கு ஒரு மேன்சனை நடத்தி வருகிறார்.  அப்பா சின்ன வயதிலேயே இறந்துவிடுகிறார்.  அம்மாவிற்கும், பெண்ணுக்கும் புரிதல் பிரச்சனை இருக்கிறது. ஆகையால் சின்ன சின்ன சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

 

வெலோனிகாவை மேன்சனை நடத்த உதவும் ஒரு பையனுக்கு திருமணம் முடித்துவிடவேண்டும் என அவர் அம்மா விரும்புகிறார். ஆனால், வெலோனிகாவிற்கு பிடிக்கவில்லை.

 


இந்த சமயத்தில் கிளம்பி செல்லும் வெலோனிகா கொலை செய்யப்படுகிறார்.  அவரை கொன்றது யார் என மெல்ல மெல்ல துப்பறிகிறார்கள். இறுதியில் கொலையாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதை ஒரு நல்ல செய்தியுடன் முடித்திருக்கிறார்கள்.

 

***

 

செத்தது இளம்பெண் என்றால், கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் வாயில் வந்தபடி பேசுவது, அதை பரப்புவது என்பதை அழுத்தமாக கண்டித்திருக்கிறார்கள்.

 

இதில் மக்களின் மனநிலை ஒரு சிக்கலாக இருந்தாலும்,  பத்திரிக்கைகள், ஊடகங்களுக்கு அதை மாற்றுவதற்கு பெரிய பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பை கைவிட்டு விட்டு,  ”மக்கள் விரும்புகிறார்கள்” என்ற போர்வையில் இவர்கள் கொட்டும் குப்பை பெரிது.  இவர்களை மன்னிக்கவே முடியாது. மன்னிக்கவும் கூடாது.

 

ஒரு கொலை வழக்கு. அதை இயல்பான அக்கறையுடன் விசாரிக்காதது.  அதை நீதிமன்றம் கையில் எடுத்ததும், போலீஸ் துறை எப்படியாவது வழக்கை முடித்துவிடவேண்டும் என்ற அவசரம், அதில் செத்த பெண்ணையே  களங்கப்படுத்தி முடிப்பது தான் கொடூரம்.   படத்தில் அந்த  உதவி ஆய்வாளர் விடாப்பிடியாக விசாரிப்பது எல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை.  அதனால் தான் அதை அவருடைய கடந்த கால வாழ்வோடு தொடர்புப்படுத்தி சிறப்பாக்கி  சொல்லியிருப்பார்கள்.

 


கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவின் பசுமை உள்ள இடம். அந்த பசுமையை அருமையாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.  எந்த ஊர் என்றாலும், மதுரை தமிழ் பேசுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை உடைத்து, கன்னியாகுமரி தமிழை படம் பேசுகிறது.   சில கதைகள் படிக்கும் பொழுது, வட்டார வழக்கில் பல வார்த்தைகள் புரியாது. அந்த சிக்கலும் இல்லாமலும் சரி செய்திருக்கிறார்கள்.

 

படத்தில் உதவி ஆய்வாளராக நடித்த எஸ். ஜே. சூர்யா, புதுமுக நாயகியாக சஞ்சனா, லைலா, விவேக் பிரசன்னா என பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். லீலை, கொலைகாரன் என படங்களை எடுத்த ஆண்ட்ரூ லூயிஸ் தான் சீரிசின் இயக்குநர். சிறப்பாக இயக்கியிருக்கிறார். இயக்குநர்கள் புஷ்கர்காயத்தி தயாரித்திருக்கிறார்கள்.

 

வெப் சீரிஸ் பார்ப்பதில் எப்பொழுதுமே தயக்கம் இருக்கிறது.  துவக்கத்தில் சுவாரசியப்படுத்தி, பிறகு இழு இழு என சீரியல் போல் இழுத்துவிடுகிறார்கள்.  இந்த சீரிஸ் கூட எட்டு என்பதை ஐந்து என எடுத்திருந்தால், கூர்மையாக இருந்திருக்கும்.  ஊரே இந்த வெப் சீரிஸ் நன்றாக இருக்கிறது என பார் என சொன்னால் தான் பார்ப்பது என முடிவில் இருக்கிறேன்.

 

இந்த சீரிஸ் நன்றாக இருக்கிறது. அமேசான் பிரைமில் இருக்கிறது.  பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: