> குருத்து: Munnariyippu (2014) மலையாளம்

June 11, 2023

Munnariyippu (2014) மலையாளம்


நாயகி எந்த நிறுவனத்திலும் வேலை செய்யாமல், தனிப்பட்ட முறையில் (freelancer) எழுதக்கூடியவராக இருக்கிறார் ஒரு பத்திரிக்கையாசிரியரின் மூலமாக, ஒரு சிறைக் கண்காணிப்பாளரின் சுயசரிதை எழுதும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு எழுத தெரியாது. இவர் எழுதி தரவேண்டும். இவர் எழுதினார் என குறிப்பிடமாட்டார்கள். (என்ன ஒரு அல்பத்தனம்.) அதற்கு ஒரு தொகை கொடுத்துவிடுவார்கள். இப்படி எழுதும் எழுத்தாளர்களுக்கு Ghost writer என அழைப்பார்கள்.


சிறைக் கண்காணிப்பாளரை சந்தித்து பேசுகிற பொழுது, தன் மனைவி, வீட்டில் வேலை செய்த ஒரு பெண் என இரட்டை கொலைகள் செய்து சிறைவாசம் முடிந்து, அங்கு சில எடுபிடி வேலைகள் செய்து வருகிறார் ஒருவர். ஆனால் தான் கொலை செய்யவில்லை என்கிறார்.

அவருடைய நாட்குறிப்பை வாங்கி படிக்கும் பொழுது, அவர் சுவாரசியமாக எழுதக்கூடியவராக இருக்கிறார். இதைப் பற்றி தனது துறை சார்ந்தவர்களிடம் பேசும் பொழுது, அவரை அவர் வழக்கு சேர்ந்து எழுத வைத்தால் ஒரு நல்ல பத்திரிக்கையில் வெளியிடலாம் என்கிறார்கள். இதன் வழியாக தானும் பிரபலமடையலாம் என நினைத்து, ஒரு இங்கிலீஷ் பத்திரிக்கையில், சம்பந்தபட்டவரிடம் பேசி, ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. முன்பணமும் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒரு வீடு எடுத்து தங்க வைத்து, அவருக்குத் தேவையானதை ஏற்பாடு செய்து தருகிறார். ஆனால் நாட்கள் நகர்ந்தாலும் அவரால் ஒரு வார்த்தை எழுத முடியவில்லை. சிறைக் கண்காணிப்பாளருக்கு எழுத ஒப்புக்கொண்டதையும் செய்து முடிக்காமல் இருக்கிறார். அவர் நெருக்குகிறார். நாட்கள் நெருங்க நெருங்க பத்திரிக்கை நெருக்குகிறது. யார் போனையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்.

நெருக்கடிகள் தரும் கோபத்தை எல்லாம் எழுதாமல் இருக்கிறவரிடம் அவள் காண்பிக்கிறாள். பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாக முடித்திருக்கிறார்கள்.

****

இந்தப் படம் ஒரு சிறுகதை. அவ்வளவு தான். ஆனால், முழு நீள திரைப்படமாக்கியிருக்கிறார்கள்.

எழுத்து என்பது நிறைய படிப்பது, எழுதுவது என தொடர் பயிற்சியால், ஆர்வத்தால் வருவது என்பது என் புரிதல். எல்லா நாளும் எழுதிவிட முடியாது. சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்.

அதே போல எல்லா நாளும் எழுதிவிடமுடியாது என்பதும் என் அனுபவத்தில் கண்டது. சில விசயங்கள் உலுக்கும். சர சரவென எழுதிவிடலாம். சில நாட்கள் எழுத வேண்டும் என உட்கார்ந்தால், சிக்கலாகும். எனக்கு வேறு ஒரு சிக்கலும் உண்டு. ஒரு கட்டுரை இத்தனாம் தேதிக்குள் கொடுங்கள் என்றால், எழுதுவது சிக்கலாகிவிடும். பிறகு பதட்டம் தான் வரும். ஆகையால், அந்த நேர நெருக்கடிக்குள் சிக்குவதில்லை.

மேலே சொன்னதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தில் இரண்டு கொலைகள் செய்த நபரை கொஞ்சம் கூட சந்தேகமே இல்லாமல் அந்த பெண் முழுமையாக நம்புவதும் ஒரு பிரச்சனை. அவன் நன்றாக எழுதுவதாலேயே அவன் கொலை செய்யவில்லை என்பதாகிவிடுமா என்ற சந்தேகம் வரவேயில்லை. இப்பொழுதுள்ள யூடிப்பர்கள் எதையாவது கண்டெண்டாக தேத்திவிடுகிற மனநிலை தான் அந்த பெண்ணிடத்திலும் இருக்கிறது. அது எப்பொழுதும் ஆரோக்கியற்றது தான். நிறைய சிக்கல்களை கொண்டுவந்துவிடும்.

மொத்த படத்தையும் மம்முட்டியும், அபர்ணா கோபிநாத்தும் தாங்குகிறார்கள். இவன் நல்லவனா, கெட்டவனா என்பதை கணிக்கமுடியாத தோற்றமும், நடிப்பும் நன்றாக பொருந்துகிறது. ஒளிப்பதிவாளர் வேணு கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுமிருக்கிறார்.

கதை வித்தியாசமாக இருக்கிறதே என தோன்றுபவர்கள் மட்டும் பாருங்கள். மற்றவர்களுக்கு நான் பரிந்துரைக்கவில்லை. Sun Nextல் உள்ளதாக இணையம் சொல்கிறது.

0 பின்னூட்டங்கள்: