> குருத்து

February 19, 2025

Mehta Boys (2025) இந்தி தந்தை மகன் - டிராமா


நாயகன் கட்டிட பொறியாளர். பள்ளி படிக்கும் பொழுதே அப்பாவோடு முரண்பட்டு மும்பைக்கு வந்துவிடுகிறார். இப்பொழுது பெரிய நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை விரும்புகிறார். அம்மா இறந்த செய்தி கேட்டு ஊருக்கு போகிறார்.


இறப்புச் சடங்கில் எல்லோரையும் வரவேற்பது போலவே, மகனையும் வரவேற்கிறார் அப்பா. இனி தனியாக இருப்பதும் சாத்தியமில்லை. மகனுடன் இருப்பதும் சாத்தியமில்லை. ஆகையால் மகள் தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்க செய்யலாம் என்ற முடிவில் கிளம்புகிறார்கள். அவருக்கு தன் சொந்த வீட்டை, ஊரை விட்டு அமெரிக்கா செல்ல விருப்பமில்லை.

ஒரு வழியாய் அவரை கிளப்பி விமான நிலையத்துக்கு வந்தால், அவருடைய பயணச் சீட்டுக்கு இடம் இல்லாமல் இரண்டு நாள் தள்ளிப்போகிறது. நெருக்கடியில் மகனுடன் தங்குகிறார். இன்னொரு சிக்கலில் கூடுதலாகவும் சில நாட்கள் தங்க நேரிடுகிறது.

இரண்டு பேருக்கும் ஒத்து வரவேயில்லை. பிறகு என்ன ஆனது என்பதை முக்கால்வாசி படத்தில் உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

தந்தை மகன் குறித்த உறவு சிக்கல் குறித்து இந்திய அளவிலேயே வந்த படங்கள் குறைவு. அதிலும் நல்ல படங்கள் இன்னும் குறைவு. கடைசியாய் பிரான்சிலிருந்து மெக்காவிற்கு தன் இளவயது மகனுடன் தரை மார்க்கமாக காரில் பயணப்படும் Le Grand Voyage படம் நினைவுக்கு வருகிறது. அதுவும் நல்ல படம்.

இந்திய படங்களுக்கான வழக்கமான கதைச் சொல்லல் முறை இல்லை. மேற்கத்திய பாணியில் இருந்தது. ஏன் இந்த முரண்பாடு என எங்கும் பிளாஷ்பேக் காட்சிகள் இல்லை. படத்தின் நிகழ்வுகளின் போக்கில் நாமாக புரிந்துகொள்ள வேண்டியது தான். படம் நெடுகிலும் வசனங்கள் குறைவு. ஆங்கிலம் தான் அதிகம்.

யார் இயக்குநர் என தேடினால், முன்னாபாய், 3 இடியட்ஸ் புகழ் Boman Irani தான் தனது முதல் படமாக இயக்கியுள்ளார். 2014ல் Bird Man என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி ஆஸ்கார் வெற்றி பெற்ற ஒருவருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். குளோசப் காட்சிகள் எல்லாம் வழக்கமான படங்களை விட இன்னும் நெருக்கமாக போயிருக்கிறார்.

ஏன் மகன்கள் அப்பாவோடு மோதல் போக்கு வருகிறது. இளவயதில் அப்பாவோடு நெருக்கமாக இருக்கிறார்கள். அதே போல குடும்பம் என ஆகி, தந்தையாக ஆன பிறகு தந்தையை பலர் புரிந்துகொள்கிறார்கள். இடைக்காலத்தில் மகனுடான விருப்பம், செயல்பாடுகளில் கொஞ்சம் ஆதிக்கத்தனத்தோடு தலையிடுவதால் முரண்பாடு வருகிறதா? ஒருவேளை நிதானமாக மதித்து நடந்தால் இந்த சிக்கல் வராதோ? இந்த நெருக்கடியான கட்டத்தில் அம்மா தான் இருவருக்கும் பாலமாக இருக்கிறார். அம்மாவும் இல்லாத குடும்பங்களில்?

Boman Irani தான் தந்தையாகவும் வருகிறார். மகனாக வரும் அவினாஷ் திவாரியும் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார். மற்றவர்கள் துணை நின்றிருக்கிறார்கள்.

பிரைமில் இருக்கிறது. தமிழிலும் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். ஆங்கிலம் தான் அதிகம். இடையிடையே தமிழ் வந்து வந்து போகிறது எனலாம்.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

February 17, 2025

Smile 2 (2024)


புன்னகையை பார்த்துவிடாதீர்கள்!

உங்களை துரத்தி பயமுறுத்தி கொல்லாமல் விடாது!

முதல் பாகம் பார்த்ததில் இருந்தே இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் என எதிர்பார்த்திருந்தேன். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் என வெளிவந்த சமயத்திலேயே தேடிப்பார்த்தால், வீட்டில் இருந்து மிக
தூரமான திரையரங்குகளில் வெளியானதில் பார்க்கமுடியாது போய்விட்டது.

***


ஸ்மைல் (புன்னகை) எப்படி வேட்டையாடும்? என முதல் பாகத்தில் தெறிக்க தெறிக்கப் பார்த்தோம். இந்த முறை இளம் வசீகரமான ஒரு பாப் பாடகி அதன் கோர கைகளில் சிக்குண்டுவிட்டாள்.

நாயகி ஒரு பாப் பாடகி இளம் வயதில் பிரபலமாகி, விருதுகள் பெற்று.. மேலே மேலே போய்க்கொண்டிருந்த பொழுது, போதைப் பழக்கத்தில் சிக்கி, தன் போதை நண்பனுடன் ஒரு மோசமான கார் விபத்தில் சிக்கி, பிழைத்து வருவதே பெரும்பாடாகிவிட்டது. இப்பொழுது இரண்டாவது வாழ்க்கை அவளுக்கு துவங்குகிறது.

அவள் பல மாகாணங்களில் தனது நிகழ்ச்சியை நடத்த ஒரு நீண்ட பயணம் செல்வதற்கான கடுமையான பயிற்சியில் இருக்கிறாள். போதை மருந்தை விட்டொழித்திருந்தாலும், விபத்தினால் அவளுக்குள் இருந்த வலி திடீர் திடீரென தாங்க முடியாததாக வெளி வருகிறது. அதற்கான விசேச மாத்திரையைத் தேடி தனது போதை நண்பனை தேடிப் போகிறாள். அங்கு ஏற்கனவே புன்னகை (Smile) அவனை வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. புன்னகைக்கு தொடர்ச்சி தருவதற்காக இவள் வந்ததும், இவள் கண் முன்னாடியே கொடூரமாக தன்னைத் தானே வதைத்து கொன்றுவிடுகிறான்.

அங்கிருந்து புன்னகை இவளைத் துரத்த துவங்குகிறது. ஏற்கனவே பழைய துயரங்களில் மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஒரு இளம் பாடகி இதனால் தவித்துப் போகிறாள். திகிலான காட்சிகள் திடீர் திடீரென வருவதும், இவளை பயமுறுத்துவதும், அதனால் வரும் குழப்பங்களும்… பாவம் துவண்டு போய்விடுகிறாள். ஆனால் புன்னகைக்கு பலவீனமான மனது தானே வேண்டும். அவளை தொடர்ந்து விரட்டுகிறது. ஒரு கட்டத்தில் தனது உயிர் போய்விடும் என தெரிந்து… எப்படி அதனிடமிருந்து தப்பிப்பது என போராடுகிறாள்.

பிறகு என்ன ஆனது என்பது புன்னகையின் கொடூரத்துடன் சொல்லிமுடிக்கிறார்கள்.
***

முதல் பாகத்துக்கு இணையாக, இரண்டாவது பாகமும் வந்திருக்கிறது. முதல் பாகம் பிடித்திருந்தால், இந்தப் பாகமும் பிடிக்கும். பிடிக்கவில்லையென்றால், இதுவும் பிடிக்காது.

இளம் பாடகியாக வரும் Naomi Scott தனது பயத்தால், மிரட்சியால், ஸ்டைலான நடனத்தால் மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார். கொஞ்சம் இந்திய சாயலும் இருப்பதால், பிடித்தமானவராகிவிட்டார். ஏற்கனவே அலாதீன் படத்திலும் வேறு சில படங்களிலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

சில காட்சிகள் பார்க்க முடியாததாக கொடூரமாக இருக்கிறது. ஆகையால் குழந்தைகளை தவிருங்கள். இப்படி படத்தில் பார்க்க காண சகிக்காத காட்சிகளை Final Destination படங்களில் உணர்ந்தேன். அதற்கு பிறகு இந்தப் படம் தான்.

முதல் படத்தை இயக்கிய Parker Finn இந்த படத்தையும் இயக்கி, தயாரித்தும் இருக்கிறார்.

மொத்தப் படமும் நம்மை எங்கும் கவனம் சிதறவிடாமல் கைக்குள்ளேயே நம்மை வைத்திருக்கிறது.

பலகீனமானவர்கள் தவிருங்கள். ஆங்கிலத்தில் பார்த்தேன். இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது. பிரைமில் வாடகைக்கு இருப்பதாக சொல்கிறார்கள். வேறு வழிகளில் முயலுங்கள்.

February 16, 2025

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!


சென்னை வந்த புதிதில் தோழர் ஜவஹர் அவர்களின் ”தோழமை” குடும்பத்தில் திருமதி சுதா அவர்களும் ஒருவர்.   சந்திப்புகளில் மிகவும் அன்பாக பேசக்கூடியவர்.  மிகவும் அமைதியானவரும் கூட.


பிறகு தோழர்கள் எங்காவது விசேசங்களில் சந்திக்கும் பொழுது, சுதா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் சந்திப்பதுண்டு.  நலம் விசாரித்துக்கொள்வதுண்டு.

 

ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளியில் பி.எப்., இ.எஸ்.ஐ குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரோ, அவர் பள்ளியில் இருந்தோ அழைத்து சந்தேகம் கேட்பார்கள். பலமுறை பதிலளித்திருக்கிறேன்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏதும் அழைப்பு இல்லை.  கடந்த ஓராண்டில் புற்று நோய் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருந்திருக்கிறது என பிறகு தான் தெரியவந்தது.


இடையில் மருத்துவமனையில்  இருக்கும் பொழுது தகவல் சொன்னார்கள்.   மீண்டுவந்துவிடுவார் என நம்பினோம்.  போய் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இன்று மதியம் இறந்துவிட்டார் என தகவல் சொன்னதும் அதிர்ந்து போனோம்.

 

கொரானா காலத்தில் நிறைய பேரை இறந்தோம். இப்பொழுது புற்று நோய், மாரடைப்பு என அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

 

53 வயது தான் என்பது மனம் ஆறமாட்டேன் என்கிறது.   அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினரான திரு. முருகன், மகள் ஜனனிக்கும் எங்களது ஆறுதல்.

 

வில்லிவாக்கத்தில் அவருடைய இல்லத்தில், இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. நானும் துணைவியாரும் அஞ்சலி செலுத்திவந்தோம்.

 

”தோழமை” குடும்ப தோழர்கள், அப்ரோச் தோழர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். அவர் துவக்க காலத்தில் அப்ரோச் மையத்தின் நிர்வாக குழுவில் அவரும் சில ஆண்டுகள் பயணித்திருக்கிறார் என இன்று தான் தெரிந்தது.


சமூகம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து இருக்கிறது.

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!

 

-         சாக்ரடீஸ்