> குருத்து

May 9, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) - ஒப்பந்த பணியாளர் அத்தியாயம் 16


ஒப்பந்த பணியாளர் (Contractor), துணை ஒப்பந்த பணியாளர் (Sub Contractor)

 

ஒப்பந்த பணிகளை நிறைவேற்றுகிறவர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்தும் நடைமுறையில் ஒரு குழப்பமான புரிதலே இருக்கிறது.  இது சம்பந்தமாக கடந்த சில வருடங்களில் நிறைய வழக்குகள் நடைபெற்று  தீர்ப்புகள் வெளியாகியிருக்கின்றன. புதிய அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன.  அதைப் பற்றியெல்லாம் விரிவாக இல்லாவிட்டாலும், அதன் அடிப்படையான அம்சங்களை மட்டும் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம்.

 


ஒரு நிறுவனத்தின் பணிகளை நிறைவேற்றுகிறவர்கள் பணியாளர்கள் தான்.  இதில் நிரந்தர பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என நடைமுறையில் வெவ்வேறு பெயர்களை வைத்துக்கொண்டாலும், பி.எப் சட்ட விதி என்பது அனைவரையுமே பணியாளர்கள் என்று தான் வகைப்படுத்துகிறது.

 

பணியாளர் என்பவர் யார்?

 

(f) “employee” means any person who is employed for wages in any kind of work, manual or otherwise, in or in connection with the work of 6 [an establishment], and who gets his wages directly or indirectly from the employer, 7 [and includes any person) 

(i) employed by or through a contractor in or in connection with the work of the establishment;

 

(f) "பணியாளர்" என்பது 6 [ஒரு நிறுவனத்தின்] வேலையில் அல்லது அது தொடர்பாக, கைமுறையாகவோ அல்லது வேறுவிதமாகவோ எந்தவொரு வேலையிலும் கூலிக்காகப் பணியமர்த்தப்பட்ட எந்தவொரு நபரையும் குறிக்கிறது, மேலும் அவர் தனது கூலியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முதலாளியிடமிருந்து பெறுகிறார், 7 [மற்றும் எந்தவொரு நபரும் இதில் அடங்குவர்)

 

(i) நிறுவனத்தின் வேலையில் அல்லது அது தொடர்பாக ஒரு ஒப்பந்ததாரரால் அல்லது அதன் மூலம் பணியமர்த்தப்பட்டவர்;இந்தப் புரிதலில் சில உதாரணங்களைப் பார்க்கலாம்

 


ஒப்பந்த பணியாளர் (Contractor), துணை ஒப்பந்த பணியாளர் (Sub Contractor)

 

நிறுவனத்தின் பணிகளை நேரடியாக செய்பவர்களைப் பற்றி மேலே விவாதித்தோம்.   நிறுவனம் தொடர்பான பணிகளை… ஒரு ஒப்பந்தக்காரர் நிறுவனத்தின் உள்ளேயே ஒரு பகுதியிலோ வெளியேயோ ஒருவர் நிறைவேற்றும் பொழுது, வேலைகளை தருபவர் முதன்மை முதலாளியாக (Principle Employer) நிறுவனம் ஆகிவிடுகிறது.

 

முதன்மை முதலாளியிடமிருந்து வேலைகளைப் பெற்றுக்கொண்ட ஒப்பந்தக்காரர் ஒப்பந்தப் பணிகளை எந்த பணியாளர்களை வைத்து நிறைவேற்றுகிறாரோ, அந்த பணியாளர்களுக்கு முதன்மை முதலாளியே பி.எப். செலுத்தவேண்டும் என பி.எப். சட்டம் வலியுறுத்துகிறது.  இப்படி செலுத்தப்பட்ட பி.எப் நிதியை ஒப்பந்தக்காரரிடம்  வசூலித்துக்கொள்ளலாம்.

 

இந்த பொறுப்பில் இருந்து விலக வேண்டுமென்றால்…. பி.எப். பதிவு எண் பெற்றிருக்கும் ஒப்பந்தக்காரரை நியமித்துக்கொள்ளவேண்டும்.  அதனால் தான் பெரிய நிறுவனங்கள் பி.எப். பதிவு பெற்ற ஒப்பந்தக்காரரைக் கொண்டு தன் பணிகளை முடித்துக்கொள்கின்றன. 

 


கண்காணிக்கும் பொறுப்பு

 

தான் வேலைக்கு நியமித்த  ஒப்பந்ததாரர் தான் தனியாக பி.எப். பதிவு எண் வைத்திருக்கிறாரே, அதனால் அந்த பதிவுச் சான்றிதழை மட்டும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். மேற்கொண்டு நமக்கு இதில் பொறுப்பில்லை என ஒதுங்கிக்கொள்ள சட்டம் அனுமதிக்கவில்லை.  பல வழக்குகளில் முதன்மை முதலாளி தான் பொறுப்பு என தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.  நடைமுறையில் இதன் பொறுப்பை பல சிறு, நடுத்தர நிறுவனங்கள் இதை உணர்ந்திருக்கவில்லை. இதில் நிறுவனத்தைப் பாதிக்க கூடிய பொறுப்புகள் அதிகம் இருக்கின்றன.

 

ஒப்பந்தக்காரர் ஒவ்வொரு மாதமும் பி.எப். பணம் சரியாக கட்டுகிறாரா என்பது மட்டுமில்லாமல் நம்முடைய இடத்தில் வேலை செய்த குறிப்பிட்ட பணியாளர்களுக்கு பி.எப் சரியாக செலுத்துகிறாரா என்பதையும் கவனமாக சரிப்பார்க்கவேண்டும்.  ஒப்பந்த பணிகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஒப்பந்தக்காரரிடம் நூறு பேருக்கும் மேலாக வேலை செய்பவர்களை வைத்திருப்பார். ஆனால், கணக்கிற்கு இருபது பேருக்கு பணம் செலுத்திவிட்டு, அந்த செலுத்திய சலானை மட்டும் பல நிறுவனங்களுக்கும் அனுப்பிவைத்துவிடுவார்.  

 

அதனால், ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் பெயர்களோடு (Electronic challan cum Return) பணியாளர்கள் எத்தனை நாட்கள் வேலை செய்தார்கள் என்கிற விவரமும், அந்த பணியாளருக்குரிய (UAN) அடையாள எண்களும் இருக்கும். அதை அத்தாட்சியாக பெற்றுக்கொள்ளவேண்டும்.

 

அதோடு ஒருங்கிணைந்த சலான் (Combined Challan) ஒன்றும் உருவாக்கப்படும். அதில் நிறுவனத்தில் எத்தனைப் பணியாளர்கள், எவ்வளவு பணம் செலுத்தியுள்ளார்கள் என்கிற விவரமும் இருக்கும்.  அந்த சலானில் கீழே இப்படி எழுதப்பட்டிருக்கும். This challan is not proof of payment. To know the payment status please use “TRRN query Search” at www.epfindia.gov.in . இது பணம் கட்டுவதற்கு முன்பாக உருவாக்கப்படும் சலான்.   ஆனால் இதையே பணம் கட்டியதற்கான ஒப்புகை ரசீதாக சிலர் ஒப்பந்ததாரர்கள் கொடுத்துவிடுவதால், எச்சரிக்கும் விதமாக இப்படி குறிப்பிடுகிறது.

 

நிறுவனம் பி.எப். பணம் செலுத்திய பிறகு ஒப்புகை ரசீது  (Temporary Return Reference Number)  என்ற பெயரில் பிஎப். உருவாக்கித்தரும்.  அதில் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளார்கள்? என்ன தேதியில் செலுத்தியுள்ளார்கள்? என்கிற விவரங்கள் அதில் காணப்படும்.   இந்த ஒப்புகை ரசீதையும் முதன்மை நிறுவனர் பெற்று பாதுகாத்து வரவேண்டும்.

 

பெரிய நிறுவனங்கள் ஒப்பந்த பணியாளர்கள் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்த பிறகு, அவர்களுக்கான உரிய தொகையை முழுமையாக கொடுக்காமல், பணியாளருக்குரிய உரிய ஆவணங்களை, பணம் செலுத்திய சலான்களை பெற்ற பிறகு தான்  முழுப் பணத்தையும் விடுவிக்கிறார்கள். பிஎப் சட்டமும் இதை அனுமதிக்கிறது. இதன் மூலம் முதன்மை முதலாளியின் பொறுப்பை உணர்ந்துகொள்ள முடியும்.

 

இதன் தொடர்ச்சியில்… ஒரு கூடுதலாக விசயம்.   ஒரு நிறுவனம் தனியாக இயங்கிவருகிறது. அதன் உரிமையாளர்கள் வேறு.   ஆனால், அவர்களுடைய சர்வீஸ் பில் வரிசையாக அனைத்து பில்களும் முதன்மை முதலாளிக்காக மட்டுமே பில் செய்து இருந்தால், பி.எப். செலுத்தவேண்டியதற்கு முதன்மை முதலாளியே பொறுப்பாகிவிடுவார்.

 

இது பற்றி ஒப்பந்ததாரர்களை  பி.எப். சட்டம் இப்படி வலியுறுத்துகிறது.

"ஒவ்வொரு ஒப்பந்ததாரரும், ஒவ்வொரு மாதமும் முடிவடைந்த ஏழு நாட்களுக்குள், தனது மூலமாகவோ அல்லது தனது மூலமாகவோ பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் பங்களிப்புகளை மீட்டெடுப்பதைக் காட்டும் அறிக்கையை முதன்மை முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் திட்டத்தின் விதிகளின் கீழ் முதன்மை முதலாளி ஆணையருக்கு வழங்க வேண்டிய தகவல்களையும் அவருக்கு வழங்க வேண்டும்."

 

பொதுவாக ஒப்பந்ததாரரைக் கொண்டு வேலையை செய்யும் நிறுவனங்கள் இத்தனை கவனத்துடன் இருப்பதில்லை. ஒருவேளை இதையெல்லாம் செய்யவில்லை என்றால்,  எதிர்காலத்தில் தணிக்கையின் பொழுது, பெரிய சுமையாக முதன்மை முதலாளிக்கு வந்து நிற்கும். ஆகையால் கவனம் கொள்ளுங்கள்.

 

இதில் கூடுதலாக கவனம் கொள்ளவேண்டியது.   ஒப்பந்ததாரரை வைத்து கட்டுமான நிறுவனங்கள் பெரும்பாலான வேலைகளை செய்கிறார்கள்.  இதில் தமது பணியார்களுக்கு மட்டும் நிறுவனங்கள் பி.எப் நிதியை செலுத்திவருகின்றன.   ஒப்பந்ததாரர் எவ்வளவு பணியாளர்களை கொண்டு வேலை செய்கிறார்களோ, அத்தனை பணியாளர்களுக்கும் பி.எப் செலுத்தவேண்டும்.  அதனை மேலே சொன்னது போல முதன்மை முதலாளி கவனிக்கவேண்டும்.

 

கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள்  தினசரி மாறுகிறார்கள். அவர்களிடம் ஆதார் இருப்பதில்லை என்ற நடைமுறையில் சில சிரமங்கள் இருந்தாலும், இந்த காரணங்களை பி.எப். அனுமதிப்பதில்லை. ஆகையால் கட்டுமான தொழிலாளர்களுக்கே பிஎப்  செலுத்தப்படவேண்டும் என்றால், இது போல இருக்கிற மற்ற துறைகளும் விடுபட சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

 

நிறுவனம் குறித்து அறிதல்

 

ஒரு நிறுவனம், ஒரு ஒப்பந்தக்காரர், துணை ஒப்பந்தக்காரர் என பி.எப்பில் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நிறுவனம் குறித்தும் அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வதற்கு  பி.எப். வசதி செய்து தந்திருக்கிறது.

 

https://unifiedportal-emp.epfindia.gov.in/publicPortal/no-auth/misReport/home/loadEstSearchHome

 

இந்த தளத்தில் போய் நிறுவனத்தின் பெயர், பதிவு எண் என்ற இரண்டு விவரங்களைக் கொடுத்தாலே, அந்த நிறுவனத்தின் விவரங்களை நாம் பார்க்க முடியும்.  இப்பொழுது  பி.எப். பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்களா, கடைசியாக எந்த மாதத்திற்கு பணம் செலுத்தினார்கள்  என்பதையும் நாம் பார்க்கமுடியும்.

 

”தற்காலிக” பணியாளர்

 

ஒரு நிறுவனத்தில்  பணிக்காக இணைபவர்களை  இரண்டு, மூன்று அல்லது ஆறு  மாதங்கள் ’தற்காலிக’ பணியாளராக வைத்திருந்து… அவர் தொடர்கிறரா, நிறுவனத்திற்கு பொருந்துகிறாரா என பார்த்து, பிறகு பி.எப். பில் இணைப்பதை வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன.   பி.எப். சட்ட விதிப்படி இந்த நடைமுறை தவறு.

 

ஒரு பணியாளர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளில் இருந்தே அவர் பணியாளர்  என்று தான் கருதவேண்டும்.  ஆகையால் முதல் நாளில் இருந்தே, அவரை பி.எப்பில் இணைக்கவேண்டும் என்பது தான் சரியானது.

 

மேலே சொன்னதுபடி, ”தற்காலிகமாக” வைத்திருந்த சில மாதங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை நிறுவனத்தில் செலவு கணக்குகளில் தான் நிறுவனங்கள் எழுதுகின்றன. பி.எப். தணிக்கையின் பொழுது, இப்படி எழுதப்படும் சம்பளத்திற்கும், பி.எப் செலுத்தவேண்டும் என அதிகாரி உத்தரவிடும் பொழுது, நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. ஆகையால் “தற்காலிக” என்ற நடைமுறையை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

 

இந்தியில் மட்டும் விளக்க காணொளிகள்

 


பி.எப். திட்டத்தில் கிட்டத்தட்ட எட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்தியா முழுவதும் இணைந்து பயன்பெற்று வருகிறார்கள். கடந்த ஜனவரி 2025ல் மட்டும் 8.25 லட்சம் பேர் இணைந்திருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.   இதிலும் குறிப்பாக… இந்தி புரியும் மாநிலங்களை தவிர்த்து   தென் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து இதில் பெரும் பங்கு என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 

பி.எப் திட்டம் குறித்தும், கடந்த பத்து ஆண்டுகளில் எல்லாவற்றையும் டிஜிட்டல் வழியாக மாற்றுவதிலும் தொடர்ந்து  புதிய புதிய அறிவிப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால்,  இது சம்பந்தமாக தேடும் பொழுது… பி.எப் அலுவல்களுக்கென இயங்கும் தளத்தில்  விளக்க காணொளிகளுக்கு லிங்க் கொடுத்திருக்கிறார்கள்.

 

அந்த தளத்தை சென்று பார்த்தால் https://www.youtube.com/@socialepfo  என்ற யூடியூப் தளத்தில் இன்றைய தேதியளவில் 669 காணொளிகள் சின்ன காணொளிகளாகவும், நீண்ட விளக்க காணொளிகளையும் பதிவேற்றியிருக்கிறார்கள்.   அதில் 16.7 லட்சம் அந்த தளத்தை பின்தொடர்பவர்களாக இருக்கிறார்கள்.  ஆனால் இந்தியில் மட்டும் அனைத்து காணொளிகளும் இருக்கின்றன.

 

இந்தி தெரியாத மாநிலங்களும், இந்தி தெரியாத தொழிலாளர்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்ற எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள்.   பி.எப் அலுவலகம் சென்று கேட்கலாம் என்றால் எப்பொழுதும் பெரும் தொழிலாளர்கள்  கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.  அரை நாளாவது விடுப்பு எடுத்தால் தான்  சந்தேகத்தை தீர்க்கமுடியும்.  ஆகையால் இந்த சிக்கலை தீர்க்க இந்தியாவின் பிற மொழிகளிலும் காணொளிகளை வெளியிடவேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறோம்.

 

தனிப்பட்டமுறையில் சில யூடியூப் சானல் நடத்துகிறவர்கள் அவர்களுக்கு தெரிந்த வரையில் தொடர்ந்து காணொளிகளைப் பகிர்ந்துவருகிறார்கள். அது ஒரு ஆறுதல்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721


குறிப்பு :   இந்தக் கட்டுரை ”தொழில் உலகம்” மே மாத இதழில்  வெளிவந்துள்ளது.

April 25, 2025

Khauf (2025) வெப் சீரிஸ்


நாயகி ஒரு இளம்பெண் குவாலியரில் இருந்து தலைநகர் தில்லி வருகிறாள். அவளுக்கு பொருளாதார நெருக்கடி. ஆகையால், தில்லியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிக்குள் ஒதுக்குப்புறமாக இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அந்த விடுதிக்கு வந்து சேர்கிறாள்.


அந்த விடுதியில், குறிப்பாக மாடியில் உள்ள தளத்தில் பக்கத்து அறைகளில் நான்கு பெண்கள் அறைகளில் இருக்கிறார்கள். அவளின் தோழி ஒருத்தி அறையில் தங்கி இருந்தவள், ஒரு சாலை விபத்தில் இறந்து போகிறாள். ஆகையால், அந்த அறையை யாருக்கும் வாடகைக்கு விடக்கூடாது என வார்டனோடு மல்லுக்கு நிற்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சில மாதங்களாக விடுதியை விட்டு வெளியே செல்லாமல் அடைந்து கிடைக்கிறார்கள்.

நாயகிக்கு வேலை கிடைக்கிறது. அந்த அறையில் அமானுஷ்யமாக சில விசயங்கள் நடக்கின்றன. நாயகிக்கு கல்லூரியில் நடந்த பாலியல் அத்துமீறல் ஒரு கெட்ட கனவாக துரத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த அமானுஷ்யங்களும் இணைந்து அவளை வாட்டி வதைக்கின்றன.


ஒரு வயதான மருத்துவன் பெண்களை கடத்தி கொன்று தனது பலத்தை அதிகரிப்பதற்காக முயன்று கொண்டே இருக்கிறார். இதன் தொடர்ச்சியில் நாயகியை குறிவைக்கிறார்.

நடுத்தர வயது பெண் காவலர் தன் காணாமல் போன பையனைத் தேடி விசாரித்துக்கொண்டே இருக்கிறாள்.

மேலே சொன்ன எல்லா நிகழ்வுகளும் ஒரு முனையில் சங்கமிக்கும் பொழுது, களேபரங்கள் நடக்கின்றன.
***


பேய், அமானுஷ்யம் என்ற வகையில் இதன் கதையின் நகர்வு இருந்தாலும் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையென்றால், குழந்தையை வயிற்றிலேயே கலைத்துவிட நினைக்கும் கணவன், பெருமைக்காக தன் காதலியுடன் தனியாக இருக்கும் இடத்தை சொல்லும் காதலன், ஏன் தன் கணவனைப் பிரிந்தேன் என சொல்லும் பெண் காவலர் என பெண்களின் பிரச்சனையை எதிர்கொள்ளும் சிக்கல்களை படம் முழுவதும் சொல்லிச் சென்றது சிறப்பு.

சமீபத்தில் சோரி2 என ஒரு ஹாரர் படம் பார்த்தேன். அதிலும் குழந்தை திருமணம் தவறு என சொல்லிச் சென்றாலும், படம் பார்க்கும்படி இல்லை. ஆனால் இந்த சீரிஸ் சரியாக தொட்டு சென்றிருக்கிறது.

கதையில் வரும் சின்ன பாத்திரங்கள் கூட ஏதோ வகையில் மனதில் நிற்பது சிறப்பு. ஒளிப்பதிவு, பின்னணி இசை என எல்லாமும் துணை நின்றிருக்கின்றன. அதனால் சிறப்பா என்றால்… எட்டு அத்தியாயங்களை கொஞ்சம் கத்திரிப் போட்டு ஆறு அத்தியாயங்களாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பேய் படத்தில் லாஜிக் பார்ப்பது சிக்கல் என்றாலும், நிஜத்திலும் மிக மோசமாக நடந்துகொண்ட ஆண், செத்தப் பின்பும் உக்கிரமான ஆவியாக கொல்வது எல்லாம் ஏற்கமுடியாதது. (சீரிஸ் பாருங்கள். நான் சொல்வது புரியும். விலாவரியாக சொன்னால்… ஸ்பாய்லராகிவிடும்).

முதல் வலைத்தொடர். மொத்தம் 8 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் 45லிருந்து 50 நிமிடங்கள். பிரைமில் தமிழில் கிடைக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கலாம்.

தேங்காய் சட்னியும், ரோபா அணுகுமுறையும்!


மாலை ஏழு மணி போல அந்த கடையை கடந்த பொழுது, பசித்தது. உணவகத்தில் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.


ஒரு தோசை சொல்லி… தந்தார்கள். கொடுத்த தேங்காய் சட்னி நன்றாக புளித்தது.
பக்கத்து டேபிள்களில் எந்தவித சலனமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதெப்படி எனக்கு மட்டும்? இருந்தும் கேட்டுவிடலாம் என கிச்சனுக்கு போனேன். எல்லோருக்குமே 20 வயது தாண்டாது. இளம் பெண்கள்.

”சட்னி கெட்டு போயிருச்சுமா! புது சட்னி வேண்டும்!” என அந்த பெண்ணிடம் தெரிவித்தேன். அப்படியா! கவனிக்கவில்லையே! என சொல்லி வருத்தம் தெரிவிக்கும் என நினைத்தேன். ஒரு ரோபாவை போல ”அரைச்சிட்டு இருக்காங்க சார்!” என்றது.

அந்த பெண்ணுக்கு பின்னால், இன்னொரு பெண் வேகவேகமாக பார்சலுக்கு அந்த கெட்டுப்போன தேங்காய் சட்னியை ஒரு எந்திரம் போல பார்சல் செய்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும், ஒரு மாதிரியாக இருந்தது. ”கெட்டுப்போயிருச்சுன்னு சொன்னேன். அந்த பெண் எதுவும் கேட்காத மாதிரி பார்சல் பண்ணிகிட்டு இருக்கு!” என்றேன். பதிலில்லை.

இந்த பெண்களிடம் பேசி பிரயோஜனமில்லை என புரிந்தது. ”இங்க யாரும்மா மேனேஜர்?” என்றேன். (போய் சொல்லிக்கங்க! என்ற மாதிரி) கை காட்டியது. அந்த இளைஞனும் 2000 கிட்ஸ் தான். “சட்னி கெட்டுப்போயிருச்சு! கெட்டுப் போன சட்னியை பார்சல் பண்ணிக்கிட்டு இருக்காங்க!” என்றேன்.

என்னுடன் கிச்சனுக்கு வந்தார். சட்னி அரைத்துக்கொண்டிருந்த தகவலைச் சொன்னதும், “சார் உங்க டேபிளுக்கு போங்க! நான் கொடுத்துவிடுகிறேன்” என்றார். கொஞ்ச நேரத்தில் ஒரு அம்மா புது சட்னியைக் கொண்டு வந்தார். இப்பொழுது தான் பக்கத்து டேபிள்களில் இருந்து கெட்டுப் போன சட்னியைப் பற்றி புகார் சொல்லிகொண்டிருந்தார்கள்.