> குருத்து: The Man from Nowhere (2010) தென்கொரியா

July 5, 2020

The Man from Nowhere (2010) தென்கொரியா

எங்கிருந்தோ வந்தான்

கதை. நாயகன் அந்த அபார்மென்டில் யாரிடமும் நெருக்கம் கொள்ளாமல், தனித்தே வாழ்கிறான். வீட்டிலேயே ஒரு அடகுகடை நடத்துகிறான். பக்கத்துவீட்டில் அம்மாவும், ஒரு குட்டிப்பெண்ணும் வாழ்கிறார்கள். அந்த பெண் இவனிடம் வந்து அவ்வப்பொழுது உரிமையாய் பேசுகிறது. ஆனால், இவன் சிடுசிடுவென பேசுகிறான்.

அந்த குட்டிப்பெண்ணின் அம்மா ஒரு பாரில் நடனக்காரியாக இருக்கிறார். அவளின் நண்பன் சொன்னான் என, ஒருவனிடமிருந்து போதை மருந்தை திருடுகிறாள். போதைக்கும்பலுக்கு தெரிந்துவிடுகிறது. வீட்டில் இருந்து இருவரையும் தூக்கி சென்றுவிடுகிறார்கள்.

நாயகன் சில ஆண்டுகள் ஏஜெண்டாக வேலை செய்கிறான். இவளை கொல்லும் முயற்சியில் கர்ப்பிணியாக இருக்கும் காதல் துணைவியாரை கொன்றுவிடுகிறார்கள். அதிலிருந்து தான் ஒதுங்கிவாழ்கிறான். தனக்கு ஒரு குழந்தை இருந்தால், இந்த வயதில் தானே இருக்கும் என்ற எண்ணத்தில், அந்த குட்டிப் பெண்ணுடன் பழகினாலும், வெளிக்காட்டாமல் இருந்துவருகிறான்.

இப்பொழுது கடத்தப்பட்டதும், அவளை மீட்க களத்தில் இறங்குகிறான். ஒருபக்கம் போதைக்கும்பல், இன்னொரு பக்கம் போலீசு என பர பரவென போகிறது. இறுதியில் அந்த பெண்ணை மீட்டானா என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

****
தெலுங்கில் மகேஷ்பாபு எதையாவது செய்வார் என எதிர்பார்ப்பது மாதிரியே கதையை கொண்டு செல்வார்கள். ஆனால், கடைசிவரை ஏதும் செய்யவே மாட்டார். இனிமேலாவது அவர் வேறு கதாபாத்திரங்களை ஏற்கவேண்டும் என விகடன் ஒருமுறை எழுதியிருந்தது.

இந்தப் படத்தில் அப்படி ஒரு பாத்திரம் தான் நாயகனுக்கும்! ஆனால், பார்ப்பவர்களை ஏமாற்றாமல், களத்தில் இறங்கி அடிக்கிறார். கொரியக்காரர்கள் அதிரடியான படமாக இருந்தாலும், உணர்வுபூர்வமாகவும் எடுக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான்! நாயகனும் அந்த பெண்ணும் படத்தை தாங்குகிறார்கள்.

கொரியப் படங்களில் இந்தப் படத்தை குறிப்பிட்டு ஆங்காங்கே பலரும் எழுதுகிறார்கள். செம வசூல். இன்னும் வேறு படங்கள் இதன் வசூல் ரிக்கார்டை முறியடிக்கவில்லை என்று வேறு பில்டப் ஏற்றுகிறார்கள்.

சண்டை பிரியர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும்! கரோனா காலத்தில் பார்க்கலாம்.

0 பின்னூட்டங்கள்: