> குருத்து: ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!

February 16, 2025

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!


சென்னை வந்த புதிதில் தோழர் ஜவஹர் அவர்களின் ”தோழமை” குடும்பத்தில் திருமதி சுதா அவர்களும் ஒருவர்.   சந்திப்புகளில் மிகவும் அன்பாக பேசக்கூடியவர்.  மிகவும் அமைதியானவரும் கூட.


பிறகு தோழர்கள் எங்காவது விசேசங்களில் சந்திக்கும் பொழுது, சுதா அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் சந்திப்பதுண்டு.  நலம் விசாரித்துக்கொள்வதுண்டு.

 

ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளியில் பி.எப்., இ.எஸ்.ஐ குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரோ, அவர் பள்ளியில் இருந்தோ அழைத்து சந்தேகம் கேட்பார்கள். பலமுறை பதிலளித்திருக்கிறேன்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏதும் அழைப்பு இல்லை.  கடந்த ஓராண்டில் புற்று நோய் அவரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டிருந்திருக்கிறது என பிறகு தான் தெரியவந்தது.


இடையில் மருத்துவமனையில்  இருக்கும் பொழுது தகவல் சொன்னார்கள்.   மீண்டுவந்துவிடுவார் என நம்பினோம்.  போய் பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இன்று மதியம் இறந்துவிட்டார் என தகவல் சொன்னதும் அதிர்ந்து போனோம்.

 

கொரானா காலத்தில் நிறைய பேரை இறந்தோம். இப்பொழுது புற்று நோய், மாரடைப்பு என அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

 

53 வயது தான் என்பது மனம் ஆறமாட்டேன் என்கிறது.   அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தினரான திரு. முருகன், மகள் ஜனனிக்கும் எங்களது ஆறுதல்.

 

வில்லிவாக்கத்தில் அவருடைய இல்லத்தில், இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. நானும் துணைவியாரும் அஞ்சலி செலுத்திவந்தோம்.

 

”தோழமை” குடும்ப தோழர்கள், அப்ரோச் தோழர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். அவர் துவக்க காலத்தில் அப்ரோச் மையத்தின் நிர்வாக குழுவில் அவரும் சில ஆண்டுகள் பயணித்திருக்கிறார் என இன்று தான் தெரிந்தது.


சமூகம் ஒரு நல்ல ஆசிரியரை இழந்து இருக்கிறது.

ஆசிரியர் சுதா அவர்களுக்கு அஞ்சலி!

 

-         சாக்ரடீஸ்


0 பின்னூட்டங்கள்: