> குருத்து: ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

February 2, 2025

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?


ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 

வணக்கம். விமர்சன உரை அல்ல! உறுப்பினர்கள் சார்பாக என் உரை.

 

தேவையில் இருந்து தான் ஒன்று உருவாகிறது.  இந்த புத்தகத்தின் தேவை?

 

நஜ்முதீன் அய்யா – ஜி.எஸ்.டி  எளிமைப்படுத்துவதற்காக வந்தது என சொல்லிக்கொண்டாலும், இடியாப்பத்தை போல சிக்கலானது.  இந்த சூழ்நிலையில் தான் இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.

 

ஒரு புத்தகத்தின் உருவாக்கத்தில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?

 


ஹாரி பார்ட்டர் எட்டு பாகங்கள். அதை படமாகவும் எடுத்தார்கள். அதில் வரும் பிரதான பாத்திரம் வோல்ட் மார்ட்.  தன் உயிரை பாதுகாக்கும் விதமாக ஆறு இடங்களில் ஒளித்து வைத்திருப்பார்.

 

ஒரு புத்தகம் என சாதாரண நிலையில் பார்க்கிறோம்.  புத்தக உருவாக்கமும் பல படிநிலைகள் கொண்டது. அது உருவாகும் பாதை கடினமானது.

 

சட்ட அறிவு அவசியம்.  அதை புரிந்துகொள்வது மிக அவசியம். ஒன்றை காட்டும் பொழுது மூன்று பேர் மூன்று விதமான கருத்துகளை மெல்லிய மாற்றத்துடன் சொல்வார்கள்.  அதனால் தான் தனது உரையில் இது என்னுடைய புரிதல் என்பதை வலியுறுத்துவார்கள்.

 

ஆங்கில அறிவு அவசியம்.   அதுவும் சட்ட வார்த்தைகளை புரிந்துகொள்வது இன்னும் சிக்கலானது.  புரிவது போல இருக்கும். குழப்பும். தெளிவுபெற கற்றல் அவசியம்.

 

தமிழ் தெரிந்திருக்கவேண்டும்.  அதுவும் எழுதுவதற்கென ஒரு தொடர் வாசிப்பு இருக்கவேண்டும்.  அது போல தமிழ் தெரிந்த எல்லோராலும் எழுதிவிடமுடியாது.   தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கும் பயிற்சி வேண்டும்.  

 

ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பதும் எளிதல்ல.  அதன் சாரம் குறையாமல், செய்வது அத்தனை எளிதல்ல.  பல பிரபலமான புத்தகங்களை தமிழில் மோசமாக மொழிபெயர்த்து அதன் சாரத்தை இழக்க வைத்திருக்கிறார்கள்.

 

ஒரு விசயம் நடைமுறையில் தான் உரசிப் பார்க்கப்படும்.  சாருக்கு பல ஆண்டுகள் ஒரு வரி ஆலோசகராய் வேலை செய்த அனுபவமும்,  பல கூட்டங்களில் ஆசிரியராய் வகுப்பு எடுத்த அனுபவமும், பலர் எழுப்புகிற கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லிய அனுபவம் உண்டு.

 

மாதம் மாதம் என்ன வேலை இருந்தாலும், குறிப்பிட்ட தேதிக்கு கட்டுரை தருவதற்கு தன்னளவில் இராணுவ ஒழுங்கு இருக்கவேண்டும். பத்திரிக்கையாளர் சமஸ் சொல்லிய அனுபவம்.


 

ஏன் எழுதவேண்டும்? என்பதற்கு ஒரு உந்துதல் அவசியம்.   முதல் பட்டதாரியாக எழுந்து நிற்கும், மொத்த குடும்பத்தையும் தாங்க தன் தொழிலை நம்பும், ஆங்கில பரிச்சயம் நிறைய இல்லாத  ஒரு தலைமுறைக்கு தமிழில் தந்து உதவவேண்டும் என்ற மன உந்துதல் வேண்டும்.

 

ஒரு புத்தக உருவாக்கத்தில் நம்முடைய பொது புரிதல் என்பது நாம் எழுதியதை கொடுத்துவிடுவோம். பதிப்பகம் அச்சிடும். விற்கும். எழுதியவருக்கு ராயல்டி  தரும்.  இந்தப் புத்தகம் அப்படியில்லை.   சார் தான் பணம் கொடுத்திருக்கிறார். அதை அச்சிட்டு, அதை மக்களிடம் புத்தக சந்தை மூலம் கொண்டு சேர்க்கும் வேலையை செய்கிறார்கள்.

 

மாறிவரும் சமூக சூழ்நிலையால், வாசிப்பது குறைந்துவிட்டது. புத்தகம் விற்பது குறைந்துவிட்டது என்ற சமூக நடைமுறை தெரிந்தாலும், கைக்காசை போட்டு புத்தகம் அடித்து தருவோம் என்ற  பெருந்தன்மை வேண்டும். 

 

ஐம்பது பக்கங்கள் கூட புதிதாய் எழுதிவிடலாம். தப்பில்லாமல் தரவேண்டும் என தப்பும், தவறுமாய் (First Copy) தட்டச்சு செய்து  தருவதை… நாட்கள் குறைவாக இருந்ததால், பல நாட்கள் இரவும், பகலும் சரிப்பார்க்கும் பொறுமையும், அதை பிழையில்லாமல்… நேர்த்தியாய் தரவேண்டும் என்ற அடம் வேண்டும்.

 


வெளியிடும் நாள் குறித்த பிறகு , புத்தகத்தை வரிக்கு வரி பொறுமையாக படித்து சேர்க்க வேண்டியதை சேர்த்து, நீக்க வேண்டியதை நீக்கி தருவதற்கு கோவை பெருமாள் அவர்களைப் போல ஒருவருடைய அருமையான நட்பு வேண்டும்.

 

அதே போல தமிழ் சூழலில் எழுதியவருக்கு பணம் எல்லாம் வராது.  அந்தப் புத்தகத்தின் அச்சுக் கூலியை தான் பணம் தருகிறோம் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

 

ஆக இப்படி  பல அம்சங்களை கடந்து தான் நம் கைக்கு ஒரு புத்தகம் வருகிறது.

 


ஆகையால், நமக்காக எழுதியவருக்கு, நமக்கு வழிகாட்டுபவருக்கு; நாளைய விழாவில் நன்றி தெரிவிப்போம். அவருக்கு நம்முடைய அன்பு வாழ்த்துக்களையும் தெரிவிப்போம். அவர் தொடர்ந்து நமக்காக எழுதவேண்டும்.  அதையும் புத்தகங்களாக நமக்கு தரவேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருப்போம்.


0 பின்னூட்டங்கள்: