> குருத்து: I want to talk (2024) இந்தி

February 4, 2025

I want to talk (2024) இந்தி

 


நாயகன் அமெரிக்கவாழ் இந்தியர். பொருட்களை சந்தைப்படுத்தும் தொழிலில் பிசியான ஆளாக இருக்கிறார்.  துணைவியாருடன்  முரண் என்பதால், விவாகரத்து வழக்கு போய்க்கொண்டிருக்கிறது.   அவர்களுடைய குட்டிப்பெண் இருவரிடமும் மாறி மாறி இருந்துகொண்டு வளர்ந்து வருகிறாள்.

 

திடீரென குரல் வளையில் நாயகனுக்கு புற்று நோய் தாக்குகிறது.   அதைச் சோதித்தால், அது வளர்ந்து உடலின் பல பாகங்களை ஆக்கிரமித்திருக்கிறது.  மருத்துவர்கள் இன்னும் 90 நாட்கள் இருந்தால் அதிசயம் என்கிறார்கள்.  முதலில் அதிர்ந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராகிறான்.

 

ஒன்றல்ல, இரண்டல்ல அடுத்தடுத்து 20 அறுவை சிகிச்சைகள்.  குட்டிப்பெண் என்பதால், மகளிடம் மறைக்கிறான்.  பிழைத்தானா, மாண்டானா என்பதை முழு நீள படமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***

உண்மைக் கதை என்பதால், ராவாக எடுத்திருக்கிறார்கள்.  ஆவணப்படம் போல இருக்கிறது. எடுத்தவர் அமெரிக்க வாழ் இந்தியரோ என நினைத்தால், சுஜித் சர்கார்.  ஏற்கனவே விக்கி டோனர், பிங் என சில படங்கள் இயக்கியவர், தயாரித்தவரும் கூட.

 

வாழ்வில் ஒரு அறுவை சிகிச்சை என்றாலே கலகலத்துப் போகிறோம்.  உடலின் சில பாகங்கள் புற்று அரித்து தின்ன பிறகும், ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால், அதுவும் நிஜ கதை என்றால், ஆச்சர்யத்துக்கு ஆச்சர்யமாயிருக்கிறது.

 

எனக்கு அபிஷேக் பச்சன் நடிப்பு ஏனோ ஒட்டுவதில்லை. இந்தப் படத்தில் ஏனோ கொஞ்சம் ஒட்டினார்.  அத்தனை அறுவை சிகிச்சைக்குப் பிறகும், அதே உடல், அதே தெம்புடன் என காட்டுகிற பொழுது கொஞ்சம் பிசிறு அடிக்கிறது.  (அதற்காக நிஜமாகவே உடல் இளைக்க முடியுமா என்ன!)  

நாயகனைப் பார்த்துக்கொள்ளும் அந்த பெண் நர்ஸ் அவன் உயிரை மாய்த்துக்கொள்ள போகும் பொழுது, தன் பேச்சால் காப்பாற்றுகிறாள். பின்னாளில் அவள் தன்னை மாய்த்துக்கொள்ளும் பொழுது, மனிதர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறவர்களாக இருக்கிறார்கள் என தோன்றுகிறது.

 

நாயகனின் மகள் நல்ல தேர்வு.  சிறு வயது பெண் தனது அப்பாவிற்கு புரிய வைப்பதற்காக, வட்டம் வட்டமாக வரைந்து, அம்மா முதல் வட்டம், நண்பர்கள், ஆசிரியர்கள் என சுட்டி, எட்டாவது வட்டத்தில் தான் நீங்கள் இருக்கிறீர்கள் என சொல்லும் பொழுது… எனது மகளிடம் நான் எத்தனையாவது  வட்டத்தில் என கேட்க தோன்றுகிறது.   பிறகு இன்னும் கொஞ்சம் சரி நெருங்கிக்கொள்ளலாம். பிறகு கேட்கலாம் என தோன்றுகிறது.

 

நாயகனுக்கும், அவனுடைய துணைவியாருக்கும் என்ன பிரச்சனை என்பதை எங்குமே காட்டவில்லை.   இவனின் கதை என கறாராக முடிவு செய்துவிட்டார்கள்.  

0 பின்னூட்டங்கள்: