> குருத்து

August 8, 2015

கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?

நீங்கள் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை காலை, மதியம், இரவு என ஏதேனும் ஒருவேளையில் கூட குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடந்து, சைக்கிளில் தேநீர் கொண்டு செல்லும் கணபதியை காணலாம்! பல தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு சுடச்சுட தேநீர் தருவது தான் கணபதியின் வேலை.

வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.

எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார்.  மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம்.  ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார்.  நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.

எனக்கு பால் என்றால் அலர்ஜி. அதனால் பால் கலந்த தேநீர் சாப்பிடுவதில்லை. ஆனால், கணபதி தரும் தேநீர் குடித்தால் பிரச்சனையேயில்லை. அதில் பால் பெயரளவுக்கு தான் இருக்கும்!   பால் விலை கூடினால் உங்களுக்கு பிரச்சனையே கிடையாதுல்ல! என கிண்டல் செய்வேன். ஒரு புன்னகையுடன் கடந்து போய்விடுவார். ஆனால் அவரது தேநீரில் கலந்திருந்த பாலின் பின்னே ஒரு சோகம் இருந்தது எனக்குத் தெரியாது.

ஒருமுறை வார கணக்கை முடிக்கும் பொழுது, வேறு அலுவலகங்களின் கணக்கு அட்டையை அவர் கையில் வைத்திருந்ததை வாங்கிப் பார்த்தேன். ஒரு நிறுவனத்திற்கு தேநீர் விலை 5.50, ஒரு நிறுவனத்திற்கு ரூ. 5.45 என வெவ்வேறு விலைகளில் இருந்தது.  கணபதி கொண்டு வருவது ஒரே தரமான தேநீர் தான். விலை மட்டும் எப்படி வேறுபடுகிறது என குழம்பி போனேன்.
அதற்கு கணபதி ” எந்த முதலாளி சார் நல்ல விலை கொடுத்து, தங்கள் தொழிலாளிக்கு நல்ல தேநீர் வாங்கித் தர தயாரா இருக்காங்க. தேநீர் எந்த தரத்துல இருந்தாலும் விலையை மட்டும் குறைக்கணும்னு தரை ரேட்டுக்கு இறங்கி பேரம் பேசுறாங்க. ஒப்புக்கு வாங்கி கொடுக்கிறாங்க சார்! பால், டீத்தூள், சர்க்கரை எல்லாம் அப்பப்ப விலை கூடிட்டே இருக்கு.  நானும் முடிஞ்ச வரைக்கும் நல்ல தேநீரை கொடுக்க அல்லாடுறேன் சார்’ என்றார்.
Cycle tea 2கணபதியை பற்றி பேச்சு வரும்பொழுதெல்லாம் பல ஊழியர்கள், தொழிலாளிகள், “எனக்கு அவரை 8 வருசமா தெரியும், 12 வருசமா தெரியும்” என்பார்கள். ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். “டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!” என்றார்.  ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.

ஞாயிறன்று வேலை இருந்தால் கூட கணபதி தேநீர் தருவார். ஏழுநாளும் ஓய்வில்லாத வேலை! அப்பொழுதிலிருந்து கணபதியின் கடும் உழைப்பில் உருவாகும் தேநீரில் அவரது செந்நீரும் கலந்திருப்பதாக தோன்றும்.
அப்பப்ப எங்க எம்.டியிடம் எங்கேயாவது ஒரு சின்ன இடம் இருந்தா சொல்லுங்க சார்! என சொல்லிக்கொண்டிருந்தார். ’கணபதி நிறைய பணம் சேர்த்திட்டீங்க போல! இடமெல்லாம் வாங்கி போடுறீங்க!’ என்றேன். ”எத்தனை வருசம் ராவும் பகலும் ஓடிட்டே இருக்கிறது? ஒரு நல்ல கூட்டம் கூடுற இடத்தில தேநீர் கடை ஒன்னு சொந்தமா போடணும். கையில உள்ள பணம் பத்தல! பல வருசம் உழைச்சு, சிறுக சிறுக சேர்த்தது! கையில வைச்சிருந்தா, ஏதாவது செலவு வந்துருது! ஒரு சின்ன இடத்தை வாங்கி போட்டுட்டு, பின்னாடி வித்து கடை போடலாம்னு ஒரு யோசனை” என்றார். ”விரைவில் சொந்த கடை போட வாழ்த்துக்கள்” என்றேன். முகம் மலர ’நன்றி’ என்றார்.

இன்னும் சில தொழிற்சாலைகள் கூடுதலாக கிடைக்க, வேகமாக கொண்டு செல்ல, சைக்கிளிலிருந்து டிவிஎஸ் 50க்கு மாறினார். கணபதிக்கு திருமணம் முடிந்ததை கேள்விப்பட்டு, ’ஏன் சொல்லல கணபதி? என்றேன்.  கொஞ்சம் தடுமாறி, சமாளித்தார். அவருக்கு தெரிஞ்சவுங்கள கூப்புட்டா முழு அம்பத்தூரும் கல்யாணத்துக்கு போக வேண்டியிருக்கும்.

பிறகு நான் அந்த அலுவலகத்தில் வேலையிலிருந்து நின்றுவிட்டேன். 9 மாதம் கழித்து அங்கு சென்ற பொழுது, வேறு ஒருவர் தேநீர் கொண்டு வந்து தந்தார். ” என்ன ஆச்சு? கணபதியை மாத்திட்டீங்களா? என்றேன்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியம் 3 மணியளவில் சாலையை கடக்கும் பொழுது, ஒரு வேன் மோதி, தலையில் அடிப்பட்டு ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார், கணபதி அண்ணன்” என்றார் தம்பி. அதிர்ச்சியில் உறைந்து போனேன். கணபதிக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று அம்மாவுடன் இனி ஆதரவின்றி காலம் தள்ள வேண்டும்.

இறந்த நாள் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமை தானாம்! உடல்நலம், உறவினர் திருமணம், சுற்றுலா, சொந்த ஊர் பயணமென்று நாம் அடிக்கடி விடுமுறை எடுக்கிறோம். கணபதியோ அதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. தேநீர் கொண்டு வரத் தவறினால் அவரையே தவிர்த்து விடுவார்கள். என்றாலும் அவர் விடுமுறையின்றி தேநீர் தருவதை சலிப்புடன் செய்து பார்த்ததில்லை.
tea boyபல அலுவலக ஊழியர்கள், தொழிலாளிகள் தேநீரைக் குடித்து விட்டு அவருடன் பேசுவார்கள். தான் தேநீர் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இன்று குடிக்க முடியாதே என்று பொறுப்புணர்வோடும் அன்போடும் செய்தபடியால்தான் கணபதி அப்படி கடுமுழைப்பு செய்து வாழ முடிந்தது.

ஆனாலும் கணபதியை நினைத்துப் பார்க்காமல் அம்பத்தூர் தனது வழமையான வேலைகளுக்கு திரும்பி விட்டது. கணபதியை நினைத்துப் பார்க்க அவரொன்றும் அப்துல் கலாமில்லை.

“பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று உலகமெங்கும் பல்வேறு பன்ஞ் முழக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நைந்து போன வாக்கியம்தான் அப்துல் கலாம் நினைவஞ்சலி பேனரில் இடம்பெற்ற இந்த சம்பவம், சரித்திர வகையறா.

அப்துல் கலாமுக்கு அம்பத்தூர் அஞ்சலி செலுத்துவதை ஆடம்பரத்துடன் செய்து முடித்தது. விடுமுறை என்ன, மெழுகுவர்த்தி என்ன, படங்கள் என்ன, சுவரொட்டிகள் என்ன என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பலருக்கு அப்துல் கலாம் யார் என்றே தெரியாது. ஏதோ மற்றவங்க மதிக்கிறாங்க நாமும் மதிச்சு வைப்போமே என்ற போலச் செய்தல்தான்.

ஆனால் தினசரி வாழ்க்கையில் கணபதியைப் போன்றோர் வெறும் சம்பவமாகத்தான் மறைந்து போகிறார்கள். இவர்களின்றி இந்த உலகத்தின் இயக்கம் இல்லை. சாதாரண மனிதர்களின், தொழிலாளிகளின் காலம் ஒன்று வரும் போது கணபதிகள் ஹீரோக்களாக போற்றப்படுவார்கள். அந்த வரலாற்று திருப்பத்திற்காகவேணும் கணபதியை நான் நினைத்துக் கொள்கிறேன்.

கடும் உழைப்பாளியான கணபதிக்கு எனது அஞ்சலிகள்!

வினவு தளத்தில் 06/08/2015 அன்று வெளிவந்தது

July 20, 2015

ஆட்சியில் பங்கும் காங்கிரசு தொண்டனும்!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இயக்கப்பணி தொடர்பாக வீடு வீடாக, ரயில்களில், பேருந்துகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். மக்களில் நேற்று துவங்கிய கட்சிக்கு கூட தொண்டர்களை சந்தித்திருக்கிறேன். ஆனா பாருங்க இந்த காங்கிரசு தொண்டரை மட்டும் பார்த்ததேயில்லை. சக தோழர்களிடமும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு. அவர்களும் பார்த்ததேயில்லை என்பார்கள்!

என் வாழ்வில் இரண்டு காங்கிரசுகாரர்கள் கடந்து போயிருக்கிறார்கள். ஒருவர் என் அப்பா. பஞ்சாலை தொழிலாளியான அவர், தன் வாழ்வில் இறுதி ஆண்டுகளில் குடியில் காலம் கழித்தார். அதனால், அவ்வப்பொழுது வேலைக்கு போகமாட்டார். அங்கிருந்த காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி தான் அவ்வப்பொழுது வேலை போகாமல் காப்பாற்றியது. அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வீட்டில் ஒரு இந்திரா படத்தை மாட்டி வைத்திருந்தார். மற்றபடி, காங்கிரசின் நடவடிக்கைகளை எப்பொழுதும், எவ்வளவு விமர்சனம் செய்தாலும், எதிர்த்து பேசமாட்டார். மெளனமாக இருப்பார்.

இன்னொரு காங்கிரசுகாரர். 1991ல் அப்பொழுதெல்லாம் ரெம்ப சின்ன பையன் நான். வீட்டு திண்ணையில் என் அப்பாவுடன் தூங்கிகொண்டிருந்தேன். திடீரென பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். பக்கத்து வீட்டில் குடியிருந்த 55 வயது பெரியவர் துக்கம் தாளாமல் விடிய விடிய அழுதார். என்னவென்று கேட்ட பொழுது ராஜீவ் கொல்லப்பட்ட விசயத்தை சொன்னார்கள்.

என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இரண்டு காங்கிரசுகாரர்களும் செத்துப்போய் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, E.V.K.S இளங்கோவன் எந்த தைரியத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறார்? சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது! இவரே பங்கு கேட்கும் பொழுது, டாக்டர் அன்புமணிக்கு முதலமைச்சர் ஆசை வருவது எல்லாம் இயல்புதான் போல!
சாத்தியமில்லை தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். உங்களில் யாராவது காங்கிரசு தொண்டரை பார்த்தால், என்னிடம் தெரிவியுங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நான் பார்த்துவிடவேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்.

June 22, 2015

யோகாவும் ஆர்.எஸ்.எஸ்.யும்!

மோடி அரசின் கோரிக்கையை ஐ.நா. அங்கீகரித்து ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அறிவித்து இருக்கிறது. யோகாவை கல்லாக் கட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் பம்பரம் போல சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்து மாடுகளுக்கு தருவார்கள். அதுபோல இந்துத்துவவாதிகள் யோகாவிற்குள் இந்துத்துவ கருத்துக்களை வைத்து தந்துகொண்டிருக்கிறார்கள். இனியும் தருவார்கள்.

வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கில் காலையில் இரண்டே இரண்டு ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவரின் வாரிசுகள் ஏதோதோ புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி, தரையில் எதையும் விரிக்காமல் மண் தரையிலேயே உருண்டு புரண்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். இன்று யோகா தினத்தை சாக்காக வைத்து 20 பேரை திரட்டியிருந்தார்கள்.

நான் யோகா எதிர்ப்பாளன் எல்லாம் கிடையாது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக யோகா வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30 முதல் 6.30 வரை போய்க்கொண்டிருக்கிறேன். ஆஸ்துமா தொந்தரவு இருந்தபடியால், மூச்சுப்பயிற்சிக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் துவக்கத்தில் போனேன். 1 வருடத்தில் ஹோமியோபதி மருந்தினாலும், யோகாவின் உதவியினாலும், உணவுக் கட்டுப்பாட்டினாலும் ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெற்றேன். இருப்பினும், மரபு வழியாக வந்த நோய் என்பதால், அதன் வேர் இன்னும் உடலில் இருப்பதால், தொடர்ந்து யோகாவை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகா செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். ஏதேனும் ஒரு நோயில் சிரமப்பட்டுக்கொண்டிப்பவர்கள் யோகாவை தொடரும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளமுடியும். யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில் நின்றுவிடுவார்கள். நாலுநாள், 10 நாள், 30 நாள், 6 மாதம் என நின்று போனவர்கள் அதிகம். பகுதியில் நான்கு வருடங்களில் பாதிபேரை யோகாவை வைத்தே பழக்கமாகியுள்ளேன்.

திருமணத்தில் ஐயர் ஓதுவது போல யோகா வாத்தியார்கள் அதன் செய்முறையில் புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்கள். மாணவர்களும் சொல்வார்கள். ஒருமுறை அர்த்தம் கேட்டபொழுது, இதெல்லாம் சொன்னால் ரெம்ப நல்லது என்றார். அர்த்தம் தெரியவில்லை என புரிந்துகொண்டேன். நான் மந்திரங்களை சொல்வதில்லை. அவர்களும் ஏன் சொல்லவில்லை என கேள்வியும் கேட்பதில்லை. இந்த நான்கு வருடங்களில் 7 வாத்தியார்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு சிலர் வகுப்பு முடிகிற தருவாயில், இந்துத்துவ கருத்துக்களை நைச்சியமாக பேசுவார்கள். நான் அதில் கேள்வி எழுப்புவதின் மூலம் அவர்களை இடைமறித்திருக்கிறேன். இப்பொழுது உள்ள வாத்தியார் கருத்துக்கள் பேசுவதில்லை. தொல்லையும் இல்லை. தொடருகிறேன்.

நான் யோகா சேரும் பொழுது ரூ. 350 இருந்தது. இப்பொழுது ரூ.600 வாங்குகிறார்கள். விசாரித்த பொழுது, பல இடங்களில் யோகாவை வைத்து நிறைய கல்லாக் கட்டுகிறார்கள் என தெரிய வந்தது. உடல் உழைப்பு செய்கிறவர்கள் வருவதில்லை என சொல்ல தேவையில்லை. உடல் உழைப்பிலிருந்து பிரிந்த நடுத்தர வர்க்கம் தான் பெரும்பாலும் யோகாவை நாடுகிறார்கள்.

நடுத்தரவர்க்கத்தில் பலர் தான் மோடி அப்படி, இப்படி என இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்தார்கள்.  அதனால் தான் மோடி அரசு யோகாவிற்கு ஒரு அமைச்சரவையை உருவாக்கி சுறு சுறுப்பாக வேலை செய்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என் செல்பேசிக்கு யோகா நல்லது என நாலைந்து குறுஞ்செய்திகளை அரசு அனுப்பி வைத்திருக்கிறது!

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆள் பிடிக்க அவர்களுக்கு கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பலவற்றில் இப்பொழுது யோகாவும் சேர்ந்துள்ளது. யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்களை ஆர்.எஸ். எஸ். சிறிது சிறிதாக தன் இந்துத்துவ வெறிக்கருத்துக்களை திணிக்கும். நாம் தாம் கவனமாய் இருக்கவேண்டும்!