> குருத்து: மனச்சோர்வு – கற்பிதங்களும் உண்மைகளும் - மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்

January 16, 2022

மனச்சோர்வு – கற்பிதங்களும் உண்மைகளும் - மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்


 ”என்னடா டிப்ரஸா இருக்கே?”

- என யாராவது நலம் விசாரித்தால்… அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இதெல்லாம் தற்காலிகமான சோர்வு தான். தொடர்ச்சியாக நான்கு வாரங்களுக்கு தன்னுடைய தினசரி நடவடிக்கைகளான வீட்டு வேலைகள், வேலைக்கு செல்லுதல் என எந்த வேலையும் செய்ய பிடிக்காமல், அடிப்படை வேலைகளை கூட செய்வதற்கு மற்றவர்களின் உதவி எதிர்பார்த்தால் மன்ச்சோர்வு ஒரு நோயாக தாக்கியிருப்பதாக முடிவு செய்யலாம் என்கிறார்.


யாராவது வழக்கமான இயல்பில் இல்லாமல் இருந்தாலோ, வாய்விட்டு சொன்னாலோ அதை மதியுங்கள். “உனக்கென்னப்பா? பணம் கொட்டி கிடக்கு! பதவி இருக்கு. புகழ் இருக்கு! மனசை ரிலாக்ஸா வை! யோகா செய்!” என போகிற போக்கில் இலவச ஆலோசனைகளை அள்ளிவிடாதீர்கள். நல்லா இருக்கிறவனே யோகா நல்லது! நல்லதுன்னு வாயிலேயே சொல்லிட்டு திரியறாங்க! மனச்சோர்வு கொண்டவர் மட்டும் ஒழுங்கா செய்துவிடுவாரா? ஒழுங்கு மரியாதையா மருத்துவரிடம் கூட்டிப்போங்க! என்கிறார்.

புறக்காரணங்களால், மனச்சோர்வு வருவதில்லை. உடலுக்குள் இருக்கும் சுரப்பிகளின் சமநிலை தவறுவது தான்! நடிகை தீபிகா படுகோனுடைய பேட்டியும், நோயர் சுமதி கதையும் நல்ல உதாரணங்கள் என்கிறார்.

உடல் நோய்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மனமும் உடலின் ஒரு பகுதி தான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இப்படி உரிய நேரத்தில் முக்கியத்துவம் கொடுத்திருந்தால், தற்கொலை செய்துகொள்பவர்களை பலரை தடுத்திருக்கலாம் என்கிறார்.

உலக அளவில் 300 மில்லியன் பேரும், இந்திய அளவில் 20 பேருக்கு ஒருவரும் மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மனிதனை தாக்கும் உடல், மன நோய்களை அது பாதிக்கும் தீவிர தன்மையில் பட்டியலிட்டால் மனச்சோர்வு நாலாவது இடத்தில் இப்பொழுது இருக்கிறதாம். உலகம் போகிற போக்கில் 2030ல் முதல் இடத்தில் வந்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்களாம்.

ஒன்றிய அரசும் அறியாமையில் இருப்பவரை போல “ரிலாக்ஸா இரு! யோகா செய்” என பத்துக் கட்டளைகளை அறிவித்துக்கொண்டிருக்கிறதாம். கொரானா இரண்டாம் அலையில் மனிதர்கள் கொத்து கொத்தா செத்து விழும் பொழுது கூட வேடிக்கைப் பார்த்த அரசு இது! கண்ணுக்கு தெரியாமல், இருளில் விழுந்து கிடக்கும் மனச்சோர்வு கொண்டவர்களையா அக்கறையோடு பார்த்துக்கொள்ளும் என ஆயாசமாக இருக்கிறது.

ஆகையால், பிரியத்திற்கு உரியவர்கள், இல்லாதவர்கள் யாராயிருந்தாலும், தொடர்ந்து டல்லாக இருந்தால், உடலோ, மனமோ எது பாதித்திருந்தாலும், மருத்துவரைப் பாருங்கள். அவர்களை காப்பாற்றுங்கள்! என்கிறார்.

துறைச் சார்ந்து எழுதுபவர்கள் தமிழில் குறைவு. அதுவும் மனம் சார்ந்த விசயங்களில் எழுதுவது இன்னும் குறைவு. அதை சமூக அக்கறையுடனும், மக்களுக்கு புரியும் விதத்திலும் எழுதுபவர்கள் மிகவும்குறைவு. முன்பு ருத்ரன் இரண்டு, மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இப்பொழுது சிவபாலன் இளங்கோவன் நன்றாக எழுதுகிறார்.

80 பக்கங்கள் என்றாலும், கையடக்க புத்தகமாக இருப்பதால், மனச்சோர்வு வராமல், உற்சாகமாக படிக்க முடிகிறது. மருத்துவர் தொடர்ந்து எழுதவேண்டும். எல்லோரும் படிக்கவேண்டிய, வீட்டிலும் வைத்து இருக்கவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒரு புத்தகம். விலை தான் கொஞ்சம் அதிகம். இந்த மாதிரி புத்தகங்களை மலிவு விலையில் மக்களிடம் பரவலாக கொண்டு செல்லவேண்டும். சமூக அக்கறை கொண்ட ஒரு இயக்கமோ, இயக்கம் சார்ந்த பதிப்பகமோ அதை செய்யமுடியும். செய்யவேண்டும்.

பக்கங்கள் : 80
விலை : ரூ. 70
வெளியீடு : உயிர்மை

0 பின்னூட்டங்கள்: