
ஷகீலா படங்களுக்கு புகழ்பெற்ற பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி வரிசையில்... நெற்குன்றம் ஈகிள் திரையரங்கு கடந்த வாரம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஷகீலா ரசிகர்கள் நிச்சயம் குலுங்கி, குலுங்கி அழுதிருப்பார்கள்.
மதன மர்ம மாளிகை, சாயாக்கடை சரசு, மாயக்கா, ட்யூசன் டீச்சர் போன்ற ஷகீலா படங்களைப் பற்றி சில பதிவுகளில் லக்கிலுக்கும், சுகுணாதிவாகரும் பேசியிருக்கிறார்கள். இந்த பதிவு அந்த படங்களைப் பற்றி அல்ல! அந்த படங்களை திரையிடும் திரையரங்குகளைப் பற்றியது!
மதுரவாயிலில் இயங்கும் ஈகிள் திரையரங்கு இப்படித்தான் தமிழ்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு, நண்பனுடன் ஒரு நாள் இரவு 'குமரன் s/o. மகாலட்சுமி' என்ற படத்திற்கு தப்பி தவறி போய், போன கால்மணி நேரத்தில் வெளியே வந்துவிட்டோம். எல்லாமே மோசம். தரையிலிருந்து, சவுண்ட் சிஸ்டம் வரை. அடுத்து வந்த சில நாட்களில், பலான படங்களை திரையிட துவங்கினார்கள்.
இப்படி பலான படங்களை வெளியிடும் திரையரங்குகளின் தகுதி மோசமான சேர்ஸ், மோசமான ஸ்கீரின், மோசமான கழிவறை என எல்லா மோசங்களும் அடங்கியது தான். பொதுவாக தமிழ் படங்களை திரையிடும் திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாய் பராமரிப்பை கைவிடும் பொழுது மக்கள் அந்த திரையரங்குக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில்... திரையரங்கை நடத்த வேண்டும். "மக்களும் வரவேண்டும்" என்கிற பொழுது... பலான வகை படங்களை திரையிட துவங்குகிறார்கள். மோசமான பராமரிப்பு, கூடுதல் கட்டணம் வசூல் என்பது இந்த திரையரங்கிற்கான தகுதி. இரண்டு மாநகராட்சி, நிறைய நகராட்சிகளை கவனித்த பொழுது இதுதான் எதார்த்த நிலைமை. விதிவிலக்குகள் இருக்கலாம்.
இப்படிப்பட்ட திரையரங்குகள் ஒருவேளை கைமாறும் பொழுது, செலவழித்து திரையரங்கை புதுப்பிக்கும் பொழுது மீண்டும் பலான படங்களை திரையிடுவதில்லை. ஏனென்றால், என்ன தான் மாதம் மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கோ அல்லது திரைப்பட கண்காணிப்பு சார்ந்த அரசு அதிகாரிகளை 'கவனித்தாலும்' ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒப்புக்கு ஒருமுறை பலான பிலிமை கைப்பற்றி ஆபரேட்டரையும், திரையரங்கு நிர்வாகியையும் கைது செய்து, வழக்குப் போடுகிறார்கள். இது மானக்கேடாய் ஆகிவிடுகிறது.
ஆக, அரசு மக்கள் கூட்டம் கூட்டமாய் செல்லும் திரையரங்கை, அதற்கு உரிய பராமரிப்பை செய்ய சொல்லி, கறாராய் இருந்தாலே போதும். பலான திரையரங்குகள் உருவாவதை தடுக்க முடியும்.
இந்த அரசு மக்களைப் பற்றி கவலைப்பட்டது? மதித்தது? அந்தந்த பகுதியில் இயங்கும் முற்போக்கு அமைப்புகள், சமூக மன்றங்கள், குடியிருப்பு சங்கங்கள் ஒன்றாய் சேர்ந்து....
"அரசே!
ஆபாச படங்களை திரையிட அனுமதிக்காதே!
திரையரங்கை இழுத்து மூடு!"
என போஸ்டர் ஒட்ட வேண்டும். அதற்கும் நடவடிக்கை இல்லையெனில்... மக்களை ஒன்று திரட்டி, உருட்டை கட்டைகளை எடுத்து போய் நிர்வாகிகளை உதைக்க வேண்டியது தான். நிலைமை சரியாகிவிடும்.
தமிழக வரலாற்றில் இப்படி ஏற்கனவே நடந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா, ரூபா என இரண்டு திரையரங்குகள் இருந்தன. மேலே சொன்ன மோசமான எல்லா தகுதிகளுக்கும் திரையரங்கு வந்தடைந்த பொழுது, ஆபாச படங்களை திரையிட துவங்கினார்கள். ஒருமுறை புரட்சிகர பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர்கள் குழு உள்ளே நுழைந்து... பிலிமை எடுத்து வந்து, முக்கிய சாலையில் கொண்டுவந்து நடுரோட்டில் போட்டு கொளுத்தினார்கள். தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தி அது.
மக்களுக்கான புரட்சிகர இயக்கங்கள் வளர வேண்டும். அது ஒன்றே இதையெல்லாம் தீர்க்க வழி.