> குருத்து: வினவு - தொடரட்டும் உங்கள் புரட்சிகர பயணம்!

July 18, 2013

வினவு - தொடரட்டும் உங்கள் புரட்சிகர பயணம்!

வினவு தோழர்களுக்கு,

புரட்சிகர வணக்கங்கள். ஆறாம் ஆண்டு பிறந்தநாள் பதிவு ஐந்தாண்டு நினைவுகளை மேலேழும்ப வைத்துவிட்டன.

இணையத்தில் வினவின் வருகைக்கு முன்பு பல ம.க.இ.க தோழர்கள் தங்கள் தளங்களில் எழுதிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு பேர் இருக்கிறார்களே என பலரும் பொறுமுவார்கள். பொறாமையில் ஒரு ஆள் தான் வேறு வேறு பெயர்களில் எழுதுகிறார்கள் என கிசு கிசு பேசுவார்கள்.

அந்த காலங்களில் பதிவர் தோழர் அசுரன் தான் எங்கள் தளபதி. இந்துத்துவவாதிகளுடன் கருத்து ரீதியாக அடிக்கடி கட்டிப்புரண்டு சண்டை போடுவார். செம ரகளையாக இருக்கும். அவரின் படையணியில் ஒரு சிப்பாயாக உடன் நிற்பதே அவ்வளவு கவுரவம்.

அச்சுத்துறையில் அரசியல் ஏடான புதிய ஜனநாயகம், பண்பாட்டு இதழான புதிய கலாச்சாரம் ஒரு அமைப்பாளனாய் செயல்பட்டது போல இணையத்தில் ஒரு கலககாரனாக, அமைப்பாளனாக வினவு களம் இறங்கியது. இனி எதிரிகளை வினவு பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை வந்தபிறகு, தோழர் அசுரன் களப்பணிகளுக்கு சென்றுவிட்டார்.

தொடக்க காலங்களில் வினவை தமிழ்மணத்திலும், மற்ற தளங்களிலும் பிரபலப்படுத்த எடுத்த தனிப்பட்ட முயற்சிகள் எல்லாம், இப்பொழுது வினவின் பரந்த பரப்பெல்லையை கண்டு வெட்கம் கொள்ள வைக்கின்றன. வினவை யாராவது விமர்சித்துவிட்டால் அவர்களோடு போய் மல்லுக்கட்டியது நினைவுக்கு வருகிறது.

வினவு பிரபலமாகும் பொழுது, பதிவுகளில் விவாதங்கள் களை கட்டியது. இணைய வசதி, வேலைப்பளு எல்லாம் விவாதங்களில் பங்கேற்பதை சாத்தியமில்லாத நிலையில் இருந்தேன். இருப்பினும் எல்லா வாதங்களையும் கொஞ்சம் தாமதமாய் ஆனாலும் வாசித்துவிடுவேன். கட்டுரைக் குறித்த என் கருத்தையும் முடிந்த அளவில் பதிவு செய்துவிடுவேன்.

விவாதங்களில் கேள்விக்குறி, என்கவுன்டர், கலகம், மா.சே, அரைடிக்கெட் என இன்னும் பலரும் பங்கேற்பார்கள். விவாதங்கள் நிறைய கற்றுத்தந்திருக்கின்றன. ஒரு சமயத்தில் தோழர் அசுரனைப் போல வினவு எல்லாம் பார்த்துக்கொள்ளும் என் களத்திற்கு போய்விட்டார்கள் என நினைக்கிறேன்.

முன்பெல்லாம் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் இருப்பதினாலேயே, முதலாளித்துவ பத்திரிக்கைகளும், சானல்களும் நக்சல்பாரி அமைப்புகள் செய்யும் எழுச்சிமிக்க போராட்டங்களை இருட்டடிப்பு செய்துவந்தார்கள். தினமணியில் கூட அமைப்பு பெயர்களை வேண்டுமென்றே தப்பும் தவறுமாக எழுதுவார்கள். உங்கள் நிருபர்களுக்கு எழுத படிக்க தெரியாதா? என்று கூட கடிதம் எழுதி திட்டியிருக்கிறேன். களத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் எழுச்சியான செயல்பாடுகளும் இணைய உலகில் வினவும் அந்த நிலைமையை மாற்றி இருக்கின்றன.

தொடர்ந்து வினவை வாசிக்கிற, ஆனால் மறுமொழி எதுவும் இடாத சில நண்பர்கள் சில ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.

* ரசிய புரட்சி, சீனப் புரட்சிகளை ஒரு வரலாற்று தொடர் போல வெளியிடவேண்டும்

*  மார்க்சிய ஆசான்கள், புரட்சியாளர்களின் வாழ்க்கையை தொடர்களாய் வெளியிடவேண்டும்.

* வாசகர்களின் கேள்வி பகுதி பகுதியை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும்.

*  கடைகளுக்கு சென்றால் நிறைய புதிய புத்தகங்கள் வரவேற்கின்றன. அதைப் படித்து நல்ல நூலை தேர்ந்தெடுப்பது சிரமமாக இருக்கிறது. புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

* பெண்களுக்காக கவனம் கொடுத்து, கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதவேண்டும். பகுதியில் வேலை செய்யும் பெண் தோழர்கள் அமைப்பு கட்ட இவை கண்டிப்பாக உதவும்.

*  இப்பொழுது படிக்கும் பழக்கம் குறைந்து, பார்க்கும் பழக்கம் அதிகமாகி இருப்பதால், நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தவேண்டும்.

* மறுமொழிகளை ‘எடிட்' செய்யாமல், வினவு அனுமதிக்கிறது என பலரும் பாராட்டி உள்ளார்கள். ஆனால், விவாதம் சில சமயங்களில் வசவுகளாக மாறி, அடித்துக்கொள்கிறார்கள். அதை வினவு சரியான சமயத்தில் தலையிட்டு நெறிப்படுத்த வேண்டும்.

* நீங்களே செய்ய திட்டமிட்டு இருப்பதை பட்டியலிட்டு இருக்கிறீர்கள். அதை விரைவில் ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கலாச்சார இதழுக்கு எழுதிய வாசகர் கடிதத்தில், இன்று மாத இதழாக வரும் இதழ், வருங்காலத்தில் மாதம் இரண்டாக, வாரம் ஒன்று, இரண்டாக, தினசரி இதழாக வரவேண்டும் என எழுதினேன். இதோ வினவின் வடிவத்தில் அந்த கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி கொண்டிருக்கிறது.

காலை பொழுது வினவில் தான் துவங்குகிறது. இரவு பொழுதும் வினவில் தான் முடிகிறது. வினவின் தாக்கம் குறித்து, வாசகர்களின் கருத்துக்களைப் பார்க்கும் பொழுது சந்தோசமாயிருக்கிறது.

தொடரட்டும் உங்கள் புரட்சிகர பயணம்!

‍- குருத்து

0 பின்னூட்டங்கள்: