> குருத்து: Crimson Tide (1995) அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் நடந்த மோதல் கதை

September 5, 2023

Crimson Tide (1995) அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் நடந்த மோதல் கதை


 “அணு உலகில் உண்மையான எதிரி போரே”

- படத்திலிருந்து…!

உலகில் மிக அதிகாரமிக்க பதவி – அமெரிக்க அதிபர்.
உலகில் மிக அதிகாரமிக்க பதவி – இரசிய அதிபர்.
உலகில் மிக அதிகாரமிக்க பதவி – அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் கேப்டன்.
- என்கிற செய்தியுடன் படம் துவங்குகிறது.

ரசியாவில் கிளர்ச்சி நடக்கிறது. கிளர்ச்சிகாரர்கள் ரசியாவின் அணு ஆயுத ஏவுகணை தளத்தை கைப்பற்றுகிறார்கள் எதிரிகளை தாக்கப்போவதாக அறிவிக்கிறார்கள்.

அமெரிக்கா உடனே தனது அணுசக்தி நீர்முழ்கியை தயார்படுத்தி, போர்முனைக்கு அனுப்பிவைக்கிறது. அதில் நாயகன் கேப்டனுக்கு அடுத்த நிலையில் இருக்கிறார்.

ஏவுகணையை ஏவவேண்டும் என்றால்… மேலிடத்திலிருந்து உத்தரவு வரவேண்டும். பிறகு கேப்டன் அனுமதி தரவேண்டும். அடுத்த நிலையில் இருக்கிற நாயகன் அனுமதி தரவேண்டும். ஏவுவதற்கான சூத்திரம் அறிந்த இன்னொரு அதிகாரி ஏவுவார். ஏதொவொரு சூழலில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கும், ஆகையால் கூட்டு முடிவில் அமுலாகவேண்டும் என இந்த ஏற்பாடு அது.

கப்பல் போர்முனைக்கு போய்க்கொண்டிருக்கும் பொழுது, கேப்டன் மற்றவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். நாயகனிடம், ”ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட குண்டுப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என வினவுகிறார். “அது தவறு என நினைத்தால், இங்கு பயணம் செய்துகொண்டிருக்க மாட்டேன்” என்கிறான். அதோடு இல்லாமல், போர் என்பது பெரும் இழப்பு. இரண்டு பக்கமும் சேதாரங்களை விளைவிக்க கூடியது என்ற பொருளில் பதிலளிக்கிறான். இந்த பதில் கேப்டனுக்கு செம கடுப்பாகிறது.

அணு ஆயுத ஏவுகணையை ஏவுவதற்கான உத்தரவு மேலிடத்தில் இருந்து கிடைக்கிறது. ஏவுவதற்கான வேலைகளை துரிதமாக செய்துகொண்டிருக்கும் பொழுது, கப்பல் தாக்கப்படுகிறது. இதில் கப்பலின் சில பகுதிகள் சேதமாகின்றன. அப்பொழுது அடுத்த உத்தரவு வருகிறது. அப்பொழுது கப்பலில் ஏற்பட்ட சேதத்தால் தொலை தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

கேப்டன் முதலில் வந்த உத்தரவை நிறைவேற்றுவோம் என்கிறார். நாயகன் அதில் முரண்படுகிறான். அடுத்து வந்த உத்தரவு என்னவென்று தெரியாமல், ஏவவேண்டாம் என மறுக்கிறான். வாக்குவதம் ஆகிறது. ஒரு கட்டத்தில் கேப்டன் அவனை கைது செய்ய உத்தரவிடுகிறார். ஆனால் கப்பலின் பொறுப்பு அதிகாரி நாயகனின் நிலையை அதிகரிப்பதால், இப்பொழுது கேப்டன் கைது செய்யப்படுகிறார். நாயகன் பொறுப்பேற்கிறான்.

இதற்கிடையில், கேப்டனுக்கு ஆதரவான அதிகாரிகள் ஒன்றிணைந்து கேப்டனை விடுவித்து, அதிகாரத்தை கைப்பற்றும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த முயற்சி வெற்றி பெற்றதா? கேப்டன் அணுசக்தி ஏவுகணைகளை ஏவினாரா? என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இது கற்பனையான படம். ஆனால், உண்மையில் இப்படி சம்பவம் நடந்தால், என்ன நடந்திருக்குமோ அதை கற்பனையாக வடிவமைத்திருக்கிறார்கள்.


ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு சில பத்தாண்டுகள் கடந்தும், அதன் பாதிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ரசியாவின் மீது போட கிளம்புகிறது என்கிற முதல் காட்சியே பதைபதைப்புடன் தான் இருக்கிறது.

இதில் அந்த கேப்டன் உத்தரவு வந்துவிட்டால், உடனே நிறைவேற்றிவிடவேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறான். ஆனால் நாயகனுக்கோ ஏவுகணை விழுந்த பிறகு உருவாக்கும் விளைவுகள் அவன் கண்ணுக்கு முன் வந்து நிற்கின்றன. அதனால் அவன் நிதானமாய் செயல்பட நினைக்கிறான். இருவரும் வேறு வேறு பள்ளிகளை சேர்ந்தவர்களாய் இருக்கிறீர்கள் என சக அதிகாரி சொல்லும் பொழுது நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இருவருக்குமான வாக்குவாதத்தில் அந்த தலைமை கேப்டன் ”இங்கு ஜனநாயகத்தை பாதுகாக்க வந்துள்ளோம். அதை நடைமுறைப்படுத்த அல்ல!” (We're here to preserve democracy, not practice it.” ) என அதிகாரத்துடன் அழுத்தமாய் சொல்கிறான்.

இது தான் அமெரிக்காவின் இயல்பு. என்னோடு இல்லையென்றால், நீ எனக்கு எதிரி தான். உலகில் அமெரிக்க செய்த அக்கிரமான போர்கள். அதன் விளைவுகள் எல்லாம் படு பயங்கரம். அப்படி ஒரு நாட்டில் இருந்து… ஒரு படத்தில் இப்படி ஒரு விவாதத்தை செய்திருப்பது ஆச்சர்யம்.

இறுதியில் ஒரு உத்தரவு வரும் பொழுது, படகில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். போர் என்பது எதிரி நாட்டுக்கும் மட்டுமல்ல! எல்லோருக்கும் துன்பம் தான். வரலாற்றில், ஆள்கிறவர்கள் தங்களது லாபத்துக்காக நடத்துவதற்காக நடத்தியவை தான் போர்கள். கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடத்திய போர்கள் முதலாளித்துவம் நடத்திய போர்கள் வரலாற்றில் எவ்வளவு மனித உயிர்கள் சேதம். எவ்வளவு பொருளாதார சேதம். மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும் என ஒரு சொலவடை உண்டு. அது போல முதலாளித்துவம் நீடிக்கும் வரை போர் அபாயம் நீடிக்கத்தான் செய்யும். உலகை நேசிப்பவர்கள், அமைதியை விரும்புகிறவர்கள் போரை வெறுக்கிறார்கள். முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டாத வரைக்கும் போர் அபாயம் இந்த உலகுக்கு இருந்துகொண்டு தான் இருக்கும். ஆகையால் அமைதி விரும்புவர்கள் கூட முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டும் வேலையை சிந்தித்தே ஆகவேண்டும். செயல்பட்டே ஆகவேண்டும்.

இதில் வெள்ளையினத்தை சேர்ந்தவர் கேப்டன். அடுத்த நிலையில் இருக்கும் நாயகன் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் இன துவேசம் இன்றைக்கும் நீடித்துக்கொண்டு தான் இருக்கிறது. அது படத்திலும் வெளிப்படும்.

நாயகனாக டென்சில் வாஷிங்டன் சிறப்பான நடிப்பு., கேப்டனாக வருகிற்வர், சக அதிகாரிகள் என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். Man of fire, Enemy of State, unstoppable இயக்கிய Tony Scott தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஒரு பெரும் திமிங்கலத்தைப் போல நகரும் அந்த நீர்முழ்கி கப்பல், கடலுக்குள் தான் பாதிப் படத்திற்கும் மேலே! ஆகையால் தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

அவசியம் பார்க்கவேண்டிய படம். யூடியூப்பிலும், ஆப்பிள் சானலிலும் கிடைப்பதாக just watch தளம் தெரிவிக்கிறது.

1 பின்னூட்டங்கள்:

குருத்து said...

Anto Niroshan Antony

Training Day பார்த்த பின் Denzel Washington படங்களை தேடி தேடி பார்த்த போது இந்தப் படத்தையும் பார்த்தேன். இதுவரை மூன்று அல்லது நான்கு தடவைகள் பார்த்திருப்பேன். உங்கள் எழுத்து இன்னும் ஒரு முறை பார்க்க தூண்டுகிறது நன்றி.

from Facebook