> குருத்து: Dear Child (2023) - TV series psychological thriller

September 21, 2023

Dear Child (2023) - TV series psychological thriller


13 வயது பெண். ஆறு வயது பையன். ஒரு பெண். காட்டை ஒட்டி இருக்கும் ஒதுக்குப்புறமான வீட்டில் இருக்கிறார்கள். குழந்தைகள் அது தான் தங்கள் உலகம் என இயல்பாய் இருக்கிறார்கள். அந்த பெண் அப்படி இல்லை. பதட்டமும், பயமும் கலந்தவளாய் இருக்கிறாள். கதவைத் திறந்துவிட்டால், தலைதெறிக்க ஓடுபவளாய் இருக்கிறாள். நீங்கள் நினைப்பது சரி தான். அவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.


அவன் நடந்துவரும் சத்தம் வரும் நெருங்கும் பொழுதே, இவர்கள் வரிசையாக நிற்கிறார்கள். தங்கள் கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறார்கள். சுத்தமாய் இருக்கவேண்டும். அந்த வீட்டில் எல்லாமும் நேரத்திற்கு சரியாக நடக்கவேண்டும். இல்லையெனில் கடுமையான தண்டனை.

இங்கிருந்து தப்பித்தாகவேண்டும். அதற்காக ஒரு நேரம் பார்த்து காத்திருக்கிறாள். ஒருநாள் இரவு வேளையில் அவன் கொஞ்சம் அசந்த நேரத்தில் தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிக்கிறாள்.

சாலையில் ஒரு கார் மோதி கீழே விழுகிறாள். ஆம்புலன்ஸ் வந்து தூக்கிப்போகிறது. கூடவே அந்த குட்டிப்பெண்ணும் செல்கிறாள்.


மருத்துவமனை வந்து சேர்ந்ததும், குட்டிப்பெண் மூலமாக அவளின் பெயர் தெரிந்ததும் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து தேடினால்… 13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவள் அவள்.. பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். அவர்கள் அடித்துப் பிடித்து வந்துப் பார்த்தால், அவள் தன் மகளில்லை. ஆனால், அந்த குட்டிப்பெண் தன் மகளின் மகள் என அவள் தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்கிறார்கள். அந்தப் பெண் உடல்நிலை தேறி, தன் பழைய வாழ்க்கைக்கு நகர்கிறாள். அந்த குட்டிப்பையனையும் தேடலுக்கு பிறகு மீட்டு வருகிறார்கள்.

யார் இப்படி பல வருடங்கள் அடைத்து வைத்தது? அந்த பெண்ணின் அம்மாவிற்கு என்ன ஆனது? உயிரோடு இருக்கிறாளா? செத்துவிட்டாளா? என விசாரணை நடக்கிறது. டி.என்.ஏ வைத்து சோதனை செய்தால், அந்த பையனின் அம்மா வேறு ஒருவர் என தெரியவருகிறது. ஆக அடைத்து வைக்கப்பட்டது ஒரு ஆள் இல்லை. சில பேர் என தெரிய வருகிறது.

அடைத்து வைத்தவனோ, “தன் குடும்பத்தை” கடத்தி… புதிய ”வீட்டிற்கு” நகர்த்திக் கொண்டு போவதற்கான வேலையில் தீவிரமாய் இருக்கிறான்.

இதுவரை சொன்னதெல்லாம் துவக்கம் தான். இதற்கு பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுபூர்வமாய் சொல்லியிருக்கிறார்கள்.
*****
ஒரு பெண்ணை அவளின் விருப்பம் இல்லாமல் கடத்தி ஒரு இடத்தில் அடைத்து வைப்பது. அவளின் மொத்த வாழ்க்கையும் நாசமாக்குவது. ஒருநாள் தப்பித்தவறி அங்கிருந்து தப்பித்தாலும் .. பழைய நினைவுகளில் இருந்து அதிலிருந்து விடுபட முடியாமல்…. தடுமாறுவது. கொடூரம் தான்.

பிறந்ததில் இருந்தே வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகள். முதன் முதலாக சூரிய வெளிச்சத்தைப் பார்த்ததும், கண்கள் வெகுவாக கூசுகின்றன. கூலிங் கிளாஸ் இல்லாமல் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை. அந்த குழந்தைகளின் மனநிலை எவ்வளவு சிக்கலாக இருக்கிறது.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு கொடூரத்தை செய்யமுடியும். தொடர்ச்சியாக வதைக்க முடியும்.

இப்படிப்பட்ட கதைகளை எல்லாம் வளர்ந்த நாடுகளில் தான் பார்க்க முடியும். நம்மூரில் பின்தங்கிய பகுதிகளில் இயல்பிலேயே சில வீடுகளில் பெண்களை, குழந்தைகளை வதைக்கிற ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். அதை விட்டு நகர்ந்தால், தன் வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை பாழாய் போகுமே என பெண்களும், வேறு வழியின்றி குழந்தைகளும் சகித்துக்கொள்கிறார்கள். பொறுத்துக்கொள்கிறார்கள். குடும்ப வன்முறை என்பது வளர்ந்த நாடுகளை விட, நம் நாடுகளில் மிகப்பெரிய அளவில் தான் இருக்கிறது. இதெல்லாம் எப்பொழுது தீரும் என நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரையில் சமூகத்தில் வளர்ச்சிப் போக்கில் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், பெண்களை, குழந்தைகளை உடைமை பொருட்களாக பார்க்காத தன்மை என்பதெல்லாம் மாறும் பொழுது தான் இந்த காட்சிகள், செய்திகள் எல்லாம் மாறும்.


இந்த சீரிஸ் ஒரு சீசன். 6 அத்தியாயங்களுடன் இருக்கிறது. நாவலாக வெளிவந்து, கவனம் பெற்று… அதைத்தான் எடுத்திருக்கிறார்கள். அந்த பெண், அந்த குட்டிப்பெண், அந்த குட்டிப் பையன், அந்த பெண்ணுக்கு தாத்தா, பாட்டியாக வரும் நபர்கள், அதிகாரிகளாக வருபவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முன்பு Room என ஒரு படம் பார்த்தேன். அந்தப் படம் அறையில் அடைக்கப்பட்டு, அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்தது என காண்பித்திருப்பார்கள். இது அங்கிருந்து தப்பித்து வந்த பிறகு என்ன நடந்தது என்பதாக கதை இருக்கிறது.

திரில்லர் பாணியிலும், உணர்வுப்பூர்வமாகவும் (ரெம்ப விறுவிறுப்பாக எதிர்பார்க்கக்கூடாது) பார்க்க கூடிய அளவிற்கும் இருக்கிறது. நெட்பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: