> குருத்து: The Menu (2022)

September 13, 2023

The Menu (2022)

 


"Do not eat. Taste. Savor. Relish."

"Tonight will be madness."

ஒரு குட்டித் தீவு. அங்கு ஒரே ஒரு பிரபல உணவகம். வேறு யாரும் கிடையாது. அங்கு பிரபல சமையல் நிபுணர் சமைத்து தருகிறார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கட்டணம். இன்னும் தேதி கேட்டு பலர் காத்திருப்பில் இருக்கிறார்கள்.

அப்படித்தான் அன்றைக்கு பத்துப் பேருக்கும் மேலான ஆட்கள் கரையில் காத்திருக்கிறார்கள். உணவகம் ஏற்பாடு செய்துள்ள அந்த இயந்திர படகில் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். அதில் சாப்பாட்டு ப்ரியன் (Foodie) ஒருவன் கடைசி நேரத்தில் தன் காதலி வரமுடியாததால், இன்னொரு பெண்ணை அழைத்து செல்கிறான். ஒரு பெரும் பணக்காரர் தன் துணைவியாருடன் வந்திருக்கிறார். ஒரு பிரபல நடிகர் தன் உதவியாளனியுடன் வந்திருக்கிறார். பிரபல சமையல் விமர்சகரான பெண் ஒருவர், பத்திரிக்கை முதலாளியுடன் வந்திருக்கிறார். ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் மூவர் வந்திருக்கிறார்கள்.


உள்ளே நுழையும் பொழுதே பெயர்களை சரிப்பார்க்கும் பொழுது, அந்த சாப்பாட்டு பிரியன் ஆளை மாற்றி அழைத்து வந்திருக்கிறான் என உணவகத்தினருக்கு தெரிந்துவிடுகிறது.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு அந்த உள் அரங்கிற்குள் அழைத்துச் செல்கிறார்கள். அந்த பிரபல சமையல் நிபுணர் எல்லோரையும் வரவேற்கிறார். அவருடைய குழு விதவிதமான உணவுகள் சமைப்பதில் மும்முரமாய் இருக்கிறார்கள்.

ஒரு கைத்தட்டு. எல்லோரும் அமைதியாகிறார்கள். அந்த நிபுணர் உணவின் சிறப்பு குறித்து சில வார்த்தைகள் பேசுவார். இப்படி முதல், இரண்டாவது உணவு என இயல்பாக போய்க்கொண்டிருக்கும் பொழுது…. தன் இளம் வயது கதையை சொல்கிறார். ”அப்பா அம்மாவை அடித்து சித்திரவதை செய்வார். அன்றைக்கும் அப்படித்தான். கொஞ்சம் எல்லை மீறி போய்விட்டார். ஒரு கத்திரியை எடுத்தேன். அவரின் தொடையில் குத்தினேன். அந்த வயதில் அவ்வளவு விவரம் தெரியாது. இல்லையெனில், அவர் கழுத்தில் குத்தியிருப்பேன்” என்கிறார். வந்திருப்பவர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகிறார்கள். சரி பெரிசு ஏதோ பழைய கதையை பழைய நினைவில் உணர்ச்சியுடன் சொல்வதாக கடந்து போகிறார்கள்.


இதற்கிடையில், பார்வையாளர்கள் மத்தியில் அந்த சாப்பாட்டு பிரியனோடு வந்தவள் மட்டும் தனித்து தெரிகிறாள். அவளை அந்த நிபுணர் யார் என விசாரிக்கிறார். அவள் சொல்ல மறுக்கிறாள்.

அடுத்து ஒரு பெரிய வெள்ளைத் துணியை விரிக்கிறார்கள். சுற்றிலும் பூக்களைக் கொண்டு அலங்கரிக்கிறார்கள். சமைத்துக்கொண்டிருந்த அவருடைய உதவியாளர் ஒரு இளைஞரை அழைக்கிறார். அந்த திரையின் மத்தியில் நிற்கிறார். ”இவர் நன்றாக சமைப்பார். இப்பொழுது சாப்பிட போகும் ஒரு உணவை அவர் தான் சமைத்துள்ளார். ஆனால் நான் அடைந்த உயரத்தை தொட வேண்டும் என நினைக்கிறார். அதற்கு ஒருநாளும் வாய்ப்பில்லை” என்கிறார். அந்த உதவியாளரும் முக இறுக்கத்துடன் ”ஆமாம்” என்கிறார். ”அதனால் இப்பொழுது ஒன்றை செய்யப்போகிறார்” என சொல்லிவிட்டு, நிபுணர் நகர்ந்துவிடுகிறார். உதவியாளர் தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து வாய்க்குள் சுட்டுக்கொல்கிறார். ரத்தம் தெறிக்க மடங்கி கீழே விழுகிறார். அப்படியே அந்த துணியைச் சுருட்டி அள்ளிப்போகிறார்கள். இப்பொழுது பார்வையாளர்கள் அய்யய்யோவென பதறிப்போகிறார்கள். நாம் எக்குத்தப்பாக ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டுள்ளோம் என புரிந்து அலறுகிறார்கள்.

அதற்கு பிறகு அங்கு நடப்பதெல்லாம்… அதகளம் தான். இதற்கிடையில் ஒரு உண்மை தெரிகிறது. சாப்பாட்டு பிரியன் ஆள் மாற்றி அழைத்து வந்தது, ஒரு விலை மாது என தெரிய வருகிறது.

அந்த நிபுணர் ஒரு பக்கா திட்டத்துடன் தான் எல்லாவற்றையும் நடத்தி வருகிறார். அதில் அந்த பெண் மட்டும் எதைச்சையாக மாட்டிக்கொண்டாள். அந்த உணவகத்தில் அடுத்தடுத்து என்ன நடந்தது? அங்கிருந்து எல்லோரும் தப்பித்தார்களா என்பதை பதைபதைப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

****

இது ஒரு கற்பனை கதை தான். அந்த நிபுணர் ஏன் இதையெல்லாம் செய்கிறார் என்பதை முன்கதை பின்கதை என எதையும் விளக்கி சொல்லவில்லை. அந்த நாளில் சாப்பிட வருபவர்களை எல்லாம் எப்படி தேர்வு செய்தார் என்பதையும் விளக்கவும் இல்லை. படத்தின் போக்கில், அவருடைய செயல்கள், பேச்சு மூலம் நாமாக புரிந்துகொள்ள வேண்டியது தான் என விட்டு விட்டார்கள்.

இப்படி புரிந்துகொள்கிறேன். பெரும்பாலோர் அவர்களுக்கு பிடித்த வேலையை செய்ய முடியாமல், பிடிக்காத வேலைகளை பிழைப்புகாக செய்துவருகிறோம். பிடித்த வேலைகளை கூட பிடிக்காத இடத்தில் இருந்துகொண்டு செய்துவருகிறோம். ஒரு நல்ல தரமான படத்தில் வேலை செய்யவேண்டும் ஒரு கலைஞர் நினைப்பார். ஆனால், ஒரு குப்பை படத்தில் வேண்டா வெறுப்பாய் வேலை செய்துகொண்டிருப்பார். இப்படியே வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் பொழுது ஒரு கடும் வெறுப்பு உள்ளுக்குள் இருந்து எழும் அல்லவா! அந்த வெறுப்பில் ஒரு முடிவெடுத்து ஒரு செய்கை செய்தால் என்ன செய்வோம். அதை அந்த நிபுணர் செய்கிறார். அவ்வளவு தான்.

”நாங்கள் ஏன் இப்படி தண்டிக்கப்படுகிறோம்?’ என அந்த பெரும் பணக்காரர். அந்த நிபுணர் கேட்கிறார் ”இங்கு எத்தனை முறை வந்திருக்கிறீர்கள்”. அவர் ”மூன்று நான்குமுறை” என்கிறார். அவருடைய துணைவியார் ’11 முறை’ என திருத்துகிறார். இத்தனை முறை வந்திருக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொருமுறையும் என்ன சமைக்கிறோம். அதன் பெயர் என்ன சொல்கிறோம். ’ஒரே ஒரு உணவின் பெயரை சரியாக சொல்லுங்கள்” என கேட்கிறார். அவர் யோசிக்கிறார். யோசிக்கிறார். ம்ஹூம். அவருடைய துணைவியார் எடுத்துக்கொடுக்கிறார். அவரும் தப்பாக சொல்கிறார்.


பிடித்தமானது ஒன்று. ஆனால் செய்வது ஒன்று என இருப்பதை “அந்நியமாதல்” என்பார்கள். உழைப்பில் ஈடுபடுவார்கள். அதில் உயிர்ப்புடன் செயல்படமாட்டார்கள். பெரும்பாலான சமூகமே அப்படித்தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. உங்களில் பலரும் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருப்பீர்கள். இதை எப்படி சரி செய்வது? உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். விவாதிப்போம்.

மற்றபடி படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பு. அதில் அந்த சமையல் நிபுணர் வெகுச்சிறப்பு. சமையலையும் ரசித்து செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை எல்லாம் ஒத்துழைத்திருக்கிறது.

ஹாட் ஸ்டாரில் இருப்பதாக Just watch தளம் சொல்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

2 பின்னூட்டங்கள்:

குருத்து said...


படம் நல்லா இருக்கும். பார்க்கலாம்.

Jayaraj Ranganathan

முகநூலில்... 13/09/2023

குருத்து said...


Padam different ah irukkum. Overrated Branded hifi restaurant la thinravanunga padaththa kandippa paakkanum


- Sri Hari Prakash Chinnathurai

பேஸ்புக்கில், 13/09/2023