> குருத்து: One Piece (2023) தொலைக்காட்சி தொடர் - புதையலை தேடிய ஒரு சாகச பயணம்

October 1, 2023

One Piece (2023) தொலைக்காட்சி தொடர் - புதையலை தேடிய ஒரு சாகச பயணம்


முதல் காட்சியில் ஒரு புகழ்பெற்ற கடற்கொள்ளையன் ஒருவனை திரண்டிருக்கும் மக்கள் முன்னிலையில் தூக்கில் இடுகிறார்கள். அவன் பல ஆண்டு காலம் அவனுடைய குழுவால் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருக்கிறான். அதன் பெயர் தான் ஒன் பீஸ். அதில் ஒரு பகுதி கிடைத்தால் கூட பெரிய பணக்காரனாகிவிடலாம். ஆகையால் பலரும் குழு, குழுவாக இணைந்து தேட துவங்குகிறார்கள். அதை அடைவதற்காக பலர் தங்கள் மொத்த வாழ்க்கையையும் தொலைத்திருக்கிறார்கள்.


நாயகன் ஒரு இளைஞன். அவருக்கு ஒரு கடற்கொள்ளையனை மிகவும் பிடிக்கும். ஆகையால் சிறு வயதில் இருந்தே, தான் ஒரு கடற்கொள்ளையனாக ஆகவேண்டும். அதுவும் அந்த குறிப்பிட்ட ஒன் பீஸை அடைந்து கடற்கொள்ளையர்களுக்கெல்லாம் ராஜாவாக வேண்டும் என்பது அவனது கனவு. அவனுடைய தாத்தாவோ, கடற்கொள்ளையர்களை எல்லாம் வேட்டையாடுகிற அரசு தரப்பு கப்பல் படையில் பெரிய தலையாக இருக்கிறார். பேரனை அடித்து, திட்டி, பயிற்சி எல்லாம் கொடுத்தாலும் அவன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறான்.

சின்ன வயதில் அவன் அபூர்வ பழத்தைச் சாப்பிட்டதால், ரப்பர் மாதிரி உடலை வளைப்பது, எவ்வளவு இழுத்தாலும் நீள்வது என்ற சக்தியோடு இருக்கிறான். இதில் வரும் பல கதாப்பாத்திரங்களுக்கு இப்படி ஏதோ விசேச சக்தி இருக்கிறது.


ஒன் பீஸை அடைய வேண்டுமென்றால், அரசு தரப்பில் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு வரைபடத்தை முதலில் அடைந்தாக வேண்டும். அதை தேடிப் போகும் பொழுது இருவர் அறிமுகமாகிறார்கள். ஒரு ஆள் கத்தி சண்டையில் தேர்ந்த ஆளாக இருக்கிறான். இன்னொரு பெண் விவரமறிந்தவளாகவும் திருடியாகவும் இருக்கிறாள். ஏக களேபரங்களுக்கு பத்தியில் வரைபடத்தை அங்கிருந்து நகர்த்திவிடுகிறார்கள்.

நாயகன் மற்றவர்களை ஒரு குழு என சொல்லிக்கொண்டாலும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மறுக்கிறார்கள். இருப்பினும் சேர்ந்தே பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் அடுத்தடுத்து என்ன தடைகள் வந்தன? புதிதாக இவர்கள் குழுவில் யார் யாரெல்லாம் இணைந்தார்கள்? என்பதை சுவாரசியாகவும், தொலைக்காட்சி தொடர் என்பதால், கொஞ்சம் இழுத்தும் சொல்லி முடித்திருக்கிறார்கள்.

****


அந்த காலத்தில் விமானம் இல்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு போகவேண்டும் என்றால், தரை வழிப் பயணம் அல்லது உலகத்தில் நான்கில் மூன்று பகுதி நீர் தான் என்பதால் கப்பல் பயணம் தான். ஆகையால் கப்பல் பயணம் என்பது பொருட்களை எடுத்துச்சென்று வியாபாரம் செய்வது என்பது பொருளாதாரத்திற்கு மிகவும் அடிப்படையாக இருந்தது. அந்த பொருட்கள், செல்வங்களை கடற்கொள்ளையர்களை ஈர்த்தது. அதனால், சின்ன குழுவாக, பெரிய படையாக ஆங்காங்கே நிறைய பேர் இருந்தார்கள். ஆகையால், அரசுக்கு கடற்கொள்ளையர்கள் பெரிய தலைவலியாக இருந்தார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாக இருந்தது.

இந்த பின்னணியில் தான் கடற்கொள்ளையர்களைப் பற்றிய இந்த கதை எடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில் மங்கா காமிக்ஸ் புகழ்பெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை படிப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ஒரு கதை தான் இந்த ஒன் பீஸ். அதைத் தான் இப்பொழுது தொலைக்காட்சிக்காக படமாக்கியிருக்கிறார்கள்.

நாயகனுக்கு அறிமுகமாகி பின்பு அவனோடு பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் பின் கதை ஒன்றை சொல்கிறார்கள். சிலது சுவாரசியமாக இருக்கிறது. சிலது சுவாரசியமில்லாமல் இருக்கிறது. ஆனால் குழு என்றால், ஐந்து விரல்கள் போல தான். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை. பெரிய அளவு திறமையில்லாமலும் இருக்கலாம். எல்லோரும் ஒரு இலக்கில் ஒரு செயலில் ஒன்றிணையும் பொழுது ஒரு பெரிய சக்தியாக மாறுகிறது. அப்படித்தான் பல கடுமையான தடைகளை எல்லாம் தகர்த்து அந்த இளைஞர் குழு பயணிக்கிறார்கள்.

உலகத்தில் அடைய சாத்தியமில்லாத பெரும் கனவு ஒன்றை அடையப்போவதாக சொல்லித் திரியும் ஒரு நாயகன், எப்படிப்பட்ட குணநலன்களோடு இருக்கவேண்டும் என நினைப்போம். ஆனால் அவன் அதற்கு எதிரான குணநலன்களோடு இருக்கிறான். வெள்ளந்தியாக, ஒரு திட்டமிடல் இல்லாமல், இடம், பொருள், ஏவல் அறிந்து பேசாதவனாக, சில சமயங்களில் முட்டாள்தனமாக கூட நடந்துகொள்கிறான். இத்தனை குறைபாடு இருந்தாலும் அவனிடம் வேறு நல்ல பண்புகள் இருக்கின்றன. தனது இலக்கில் பிடிவாதமாக இருக்கிறான். தன் ”குழுவில்” (அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும்) இருப்பவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், உயிரே போகும் என்றாலும் உடன் நிற்கிறான். அவர்களுடைய கனவுகளை மதிக்கிறான். அதற்கு துணை நிற்கிறான். அதனால் ஒரு கட்டத்தில் அவனை ஏற்று பின்தொடர்கிறார்கள்.

படமாக எடுத்திருந்தால் கச்சிதமாக எடுத்திருப்பார்கள். ஆனால், தொலைக்காட்சி தொடர் என்பதால், கொஞ்சம் இழுத்து எடுத்திருக்கிறார்கள். ஒன் பீஸை அடைவது நீண்ட பயணத்தில் ஒரு சின்ன பகுதியை ஒரு சீசனாக எட்டு அத்தியாயங்களாக, எட்டு மணி நேரமாக எடுத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து சீசன்கள் இனி வரிசையாக வரும் என எதிர்பார்க்கலாம். இது இளைய தலைமுறையை மனதில் வைத்து எடுத்திருக்கிறார்கள். அதனால் பெரும்பாலான பாத்திரங்கள் 20 லிருந்து 25 வரை தான்.

படத்தில் நடித்த அத்தனைப் பேரும் நன்றாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அசாத்திய திறமை இருப்பதால், நிறைய தொழில்நுட்பகாரர்கள் துணை நின்றிருக்கிறார்கள். இசை நன்றாக இருக்கிறது.

நெட் பிளிக்ஸ் தான் தயாரித்திருக்கிறது. தமிழில் நன்றாக மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். கடற் பயணம், கடற்கொள்ளையர்கள், சாகச பிரியர்கள் பாருங்கள். பிடிக்கும்.

0 பின்னூட்டங்கள்: