திரை விமர்சகர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என தியடோர் பாஸ்கரன் பற்றி வெவ்வேறு இடங்களில் படித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய புத்தகம் எதுவும் வாசித்ததில்லை. அந்த ஆர்வத்தில், கடந்த புத்தக திருவிழாவில், இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது. வாங்கினேன்.
ஒரு பறவைப் பார்வையில் தமிழ்நாட்டில் (குறிஞ்சி மலர்) துவங்கி, குஜராத்தில் (காங்க்ரேஜ் மாடுகளைப் பற்றி) தொட்டுப்பேசி, இந்தியா முழுவதும் சுற்றி, பிறகு பரவலாக உலகமும் சுற்றி (ஆடுகளை லாவகமாக மேய்க்கும் ஆஸ்திரேலியா நாய்) வந்துவிடுகிறார்.
ஒவ்வொரு கட்டுரையிலும் நிறைய அடர்த்தியான செய்திகள் இருக்கின்றன. நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்ததினால், எல்லோருக்கும் தெரிந்த தாவரங்கள், விலங்கினங்கள் தான் நாம் அறிந்தவை. ஆசிரியர் ஒவ்வொரு தாவரத்தையும், விலங்கினத்தையும், பறவைகளையும் நம்மை உற்றுப் பார்க்க வைக்கிறார். கற்றுக்கொள்ள தூண்டுகிறார்.
எப்பொழுதும் சுதந்திரத்தின் மீது கவனமாய் இருப்பதால், பறவைகளை கூண்டில் பார்க்கும் பொழுது எரிச்சல் வரும். இதில் காதல் பறவைகள் என்று வேறு பாசம் காட்டுவார்கள். பறவைகள் பறந்தால் தான் அழகு. ஆசிரியர் ஒன்றை சுட்டிக்காட்டுகிறார்.
”சந்தைக்கு வரும் ஒவ்வொரு பறவைக்குப் பின்னாலும், ஒன்பது பறவைகளாவது உயிரிழந்திருக்கும். அதாவது பத்தில் ஒன்று தான் பிழைக்கிறது. மரங்களின் ஆழமான பொந்துகளில் அடைகாத்து குஞ்சு பொரிக்கும் பறவைகளைப் பிடிக்க மரத்தையே திருட்டுத்தனமாக வெட்டிவிடுகிறார்கள்”.
ஓரிடத்தில் “யாரொருவர் பறவைகளை கவனிக்க ஆரம்பிக்கிறாரோ, அவருக்கு புற உலகைப் பற்றிய ஒரு விழிப்பு ஏற்படும். அத்தகைய பிரக்ஞை இயற்கை சார்ந்த பல தளங்களுக்கு அவரை இட்டுச் செல்லும்”என்கிறார்.
கணக்கு வழக்கு இல்லாமல் காடுகளை அழிப்பதும், அதன் மூலம் பல உயிரினங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருவதையும் இந்தக் கட்டுரைகளின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதற்காக கவனப்படுத்தும், போராடும் மனிதர்களையும் அறிமுகப்படுத்துகிறார். இயற்கை எல்லோருக்குமானதால், எல்லோருக்கும் இந்த அக்கறை அவசியம். இந்த அக்கறை இல்லையென்றால், இயற்கையின் ஒரு பகுதி தானே மனிதன். அவன் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியுமா என்ன?
ஆசிரியருக்கு நல்ல தமிழ் புலமை இருப்பதால், அவர் எழுதுவதைப் படிக்கையில் அத்தனை ஆசை ஆசையாய் இருக்கிறது. அடுத்தடுத்து அவர் எழுதிய புத்தகங்களை படிக்கவேண்டும் என ஆவல் வருகிறது. ஆங்கிலத்தில் நல்ல புத்தகங்களை மோசமாக மொழிப்பெயர்த்து கொன்றுவிட்டார்கள் என வருத்தப்படுகிறார். ஒரு நல்லப் புத்தகத்தைப் பார்த்ததும், இது அவர்களிடம் சிக்காமல் இருக்கவேண்டுமே என உண்மையிலேயே கவலைப்படுகிறார்.
வாங்கிப் படிக்க பரிந்துரைக்கிறேன்.
வெளியிடு : தமிழ் திசை
பக்கங்கள் : 122
விலை : ரூ. 150