> குருத்து

May 8, 2026

🦁 பன்னேருகட்டா தேசிய பூங்கா – ஒரு அருமையான அனுபவம்

 


📅 பயணத் திட்டம்அவசரம் இல்லாமல் ஒரு நாள்


பெங்களூர் மூன்று நாட்களில் ஒரு நாள் இதற்காக ஒதுக்கினோம். ஏனெனில் இதுவரை விலங்குகளை வண்டலூரில் பார்த்திருக்கிறோம். கூண்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகளை பார்த்திருக்கிறோம். காட்டுப் பின்னணியில் ஒரு வரம்புக்குட்பட்ட பரப்பளவில் சுதந்திரமாக சுற்றித்திரியும் விலங்குகளை பார்த்ததில்லை. ஆகையால் இது சிறப்பானது என தோன்றியது.

 

📌 சரியான நாள் தேர்வு


வாரவிடுமுறை எப்பொழுது என இணையத்தில் தேடிய பொழுது, செவ்வாய் என இருந்தது. ஆகையால் திங்களன்று முதல் வேலையாக போய்விட்டோம்.

 

🎟️ நுழைவு & கட்டணம்என்னென்ன அடங்கும்?


உள்ளே விலங்குகளைப் பார்க்க குளிர்சாதன வண்டி (சபாரி) மூலம் அழைத்து செல்ல, பட்டாம்பூச்சிக்கென ஒரு பூங்காவைப் பார்க்க, பெரிய கம்பி வலைக்குள் இருக்கும் விலங்குகளைப் பார்க்க எல்லாவற்றிற்கும் ஒரு தலைக்கு ரூ. 690 வசூல் செய்தார்கள். வெயில் என்பதால் சோர்வடைய செய்யும் என்பதால், ஏசி வண்டியை தேர்வு செய்தோம்.

 

🚐 சபாரி அனுபவம்அருகில் விலங்குகள்

முதல் சுற்றிலேயே போய்விட்டதால், கொஞ்ச நேரம் காத்திருந்தோம். உடனே சபாரி மூலம் அழைத்து செல்லப்பட்டோம்.

 

🐘🦁🐅 விலங்குகளின் உலகம்

யானைகள், சிங்கம், புலி, கரடி, மான்கள், குரங்கு, குதிரை என பல விலங்குகளைப் பார்த்தோம். ஏப்ரல் பாதியில் சென்றாலும், காலை என்பதால், எந்த விலங்கும் சோர்வாக எங்கும் படுத்து கிடக்காமல், சுற்றிக் கொண்டிருந்தன. உலாத்திக்கொண்டிருந்தன. வண்டியில் வந்த குழந்தைகள் உற்சாகமாய் குரல் கொடுத்து கொண்டிருந்தார்கள்.  ஊரில் விட்டு வந்த குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் லைவ்வாக மொபைலில் காண்பித்துக்கொண்டிருந்தார்.

 

🛑 பாதுகாப்பு ஏற்பாடுகள்

சிங்கம், புலி என விலங்குகளுக்கு மட்டும் கொஞ்சம் பாதுகாப்பு பலமாய் இருந்தன. அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் சுற்றிவரலாம். மற்றபடி எல்லைத் தாண்டி வேறு எங்கும் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

😄 புலி புல்லை திங்குமா?

ஒரு புலி எல்லாம் வேட்டை வேலை இல்லாமல், நேரத்திற்கு சாப்பாடு தருகிறார்களே என அலுத்துக்கொண்டு, அசுவாரசியமாய் ஒரு புல்லை கடித்துக்கொண்டிருந்தது. பசித்தாலும் புலி புல்லைத் தின்னாது என சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள் என நண்பர் கலாய்த்தார்.

 

🔄 சுற்றுப்பயணம் நிறைவு

பிறகு சுற்றி வந்து துவங்கிய இடத்திலேயே இறக்கிவிட்டுவிட்டார்கள். நல்ல அனுபவம்.

 

🦋 பட்டாம்பூச்சி பூங்காஅமைதியான பகுதி

பிறகு பட்டாம்பூச்சிகளுக்கென ஒரு இடத்தை உருவாக்கி, சில ஆய்வு வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறார்கள். இது சீசன் இல்லை என்பதாலோ, சில வகைப் பட்டாம்பூச்சிகள் எல்லாம் சுதந்திரமாய் மனிதர்களைப் பற்றிய கவலை இல்லாமல் சுற்றிவந்தன.


 

🔋 மின்சார வண்டி வசதி

விலங்குகள் கண்காட்சிக்கு, பேட்டரியில் இயங்கும் வண்டிகள் மூலம் அழைத்து செல்கிறார்கள். ஒரு ஆளுக்கு பெரியவர்களுக்கு ரூ. 100 வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் சில விநாடிகள் நிறுத்தி, துவங்கிய இடத்தில் கொண்டு வந்து விட்டுவிடுகிறார்கள்.

 

📏 பரப்பளவுஆச்சர்யமான அளவு

இந்த பூங்காவின் மொத்த பரப்பு 104 ச.கிலோ மீட்டர் என்கிறார்கள். மிருக காட்சி சாலைக்கு 100 ஏக்கர். பட்டாம்பூச்சிக்கு 7.5 ஏக்கர். பெங்களூர் போன்ற பெருநகரத்திலிருந்து 25 கி.மீக்குள் இத்தனை பெரிய பூங்கா. ஆச்சர்யம்.

 

📆 கூட்டத்தை தவிர்க்க வேண்டுமா?

சனி, ஞாயிறுகளில் எப்பொழுதும் பெங்களூரில் கூட்டம் இருக்கிறது. ஆகையால் வார நாட்களில் திட்டமிடுங்கள். பெரியவர்கள், சிறியவர்கள், மாணவர்கள் என வகை வகையாய் டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறார்கள்.

 


🚫 பிளாஸ்டிக் தடைகவனம்

உள்ளே நுழையும் பொழுது, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை தவிருங்கள். உள்ளே அனுமதிப்பதில்லை. அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டல்களை அங்கேயே 60க்கு விற்பனை செய்கிறார்கள். நீங்கள் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கும்.

 

🦓 விலங்குகள் வந்த வழி


இங்குள்ள விலங்குகள் எப்படி வந்தன? ஊருக்குள் சிக்கியவை, இந்தியாவின் வேறு பூங்காவில் இருந்து கைமாற்றாய் மாற்றிக்கொண்டவை, இனப்பெருக்கத்தின் மூலம் பெருகியவை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்தவை என இருக்கின்றன.

 

🚌 போக்குவரத்து வசதி

நேரடியாக பூங்காவிற்கு வர, திரும்ப என அரசு பேருந்துகள் இருக்கின்றன. தாமதமாக சென்றால், எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும்.

 

🍽️ பயணம் முடிந்து

எல்லாவற்றையும் சுற்றி வந்து நிற்கும் பொழுது, மதியமாகிவிட்டது. பசி வயிறை கிள்ளியது. அடுத்து ஒரு நல்ல சாப்பாட்டை தேடி நகர்ந்தோம்.

 

இறுதியாக...

சாதாரண மிருகக் காட்சி சாலை அனுபவத்தை விட, இயற்கை சூழலில் விலங்குகளை அருகில் காணும் அனுபவம் மிக வேறுபட்டதும் நினைவில் நிற்கக்கூடியதுமாக இருந்தது. வாரநாட்களில் திட்டமிட்டு சென்றால், மேலும் அமைதியான அனுபவத்தை பெற முடியும்




என்னுடைய  மொபைலில் (படங்கள் இணையத்தில் ஒரு தனிநபர் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. பெயரை குறித்து கொள்ள மறந்துவிட்டேன். அவருக்கு நன்றி.)

May 5, 2026

விசில் சத்தம்


நேற்று வழக்கமாய் செல்லும் பகுதி டிபன்கடைக்கு சென்ற பொழுது, அந்த கடையை நடத்தும் அந்த அம்மாவிற்கு வயது 50க்கும் மேல். ஊரில் இருந்து அவருடைய அம்மா அழைத்து, ”விஜயை உன் தம்பியை நினைச்சு ஓட்டு போடும்மா!” என பரிந்துரை செய்தார்களாம்.


ஒரு நிறுவனத்தின் லிப்டில் போய் கொண்டிருந்த பொழுது, துடைத்து பெருக்கும் அந்த அம்மாவிற்கு 60 வயதிருக்கும். யாருக்கு ஓட்டு போட்டீங்க! என கேட்டால், ”விசில்” என்றார். ”ஏன்” என கேட்டதற்கு, நான் எப்பொழுதும் உதய சூரியனுக்கு தான் போடுவேன். நிறுவனத்தின் நடுத்தர வயது பெண் முதலாளி விசிலுக்கு வாக்களிக்க சொன்னாராம். அன்று மாலை ஸ்டாலின் தோற்று போன செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டார்.


அந்த நிறுவனத்தின் நிர்வாகி, 50 வயது கடந்தவர், தேர்தல் முடிவுகள் இனி நடக்க இருக்கும் விளைவுகள் என பேசியே களைத்துப்போனார். அவர் வீட்டில் மொத்தம் நான்கு பேர். இவரும் இவருடைய கணவரும் உதயசூரியனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் விசிலுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் (பங்காளி குடும்பங்களைச் சேர்த்தால்)  20 வாக்கு சார். பெரும்பாலும் விசிலுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.


திராவிட கட்சிகள் செய்யும் ஊழல், அவர்களுடைய குறைபாடுகள், மாற்று வேண்டும் என மாற்றி குத்திவிட்டார்கள். அவசரகதியான இந்த மாற்றத்தால் உள்ள இந்தியாவின் அரசியல் நிலை, தமிழ்நாட்டின் நிலை இன்னும் கவலைக்குள்ளாகிவிட்டது என நிச்சயமாய் சொல்லலாம். இதன் எதிரொலிப்புகள் சமூகத்தில் நீண்ட காலத்திற்கு ஒலிக்கும்.


நேற்று மாலை தெருவில் குடியிருக்கும் ஒரு வீட்டில் இருந்து தொடர்ந்து இரண்டு இள வயது பெண்கள் விசிலை வைத்து அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அமைதியாகி விடுவார்கள் என நினைத்தால், விடவேயில்லையாம். போய் சொன்னாலும் கேட்கவில்லை. அருகில் வயதானவர்கள் இருப்பார்கள். குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். எதைப் பற்றிய கவலையும், அக்கறையும் இல்லமல், சொல்லி வந்த பிறகும் நெடுநேரம் விசில் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த விசில் சத்தம் (Noise) தொடர்ந்து கேட்க போகிறது.


நேற்றிரவு வீட்டுக்கு போனதும் எப்பொழுதும் 15, 20 நிமிடத்தில் பேசிவிட்டு தூங்கப் போய்விடுவோம். மகள் இலக்கியா இரண்டு மணி நேரம் தேர்தல் முடிவுகள் குறித்த கவலைகளைப பகிர்ந்துகொண்டாள். தன் நண்பர்களின் மனநிலை குறித்து, இன்று அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து, இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.


மக்களின் அரசியல் விழிப்புணர்வு, பண்பாட்டு உணர்வு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி தான் தலைவர்கள் கிடைப்பார்கள் என்பதில் முழு உடன்பாடு. (இப்பொழுது விஜய் ஜெயித்ததால், இதைச் சொல்லவில்லை. ) நாம் மக்கள் இடத்தில் தொடர்ந்து செயல்படுவது அவசியம். வேறு ஏதும் குறுக்கு வழிகள் இல்லை.

May 3, 2026

Big bad wolves (2013) – இஸ்ரேலிய திரைப்படம் Horror Thriller movie

 


பள்ளி செல்லும் மூன்று சிறுமிகள் மூவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தீடீரென ஒரு சிறுமி காணாமல் போகிறாள். தலைவெட்டப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு உடல் மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.   யூதர்களை பொறுத்தவரையில் முறையாக முழுமையாக உடல் அடக்கம் செய்யப்படவேண்டும். இல்லையெனில் அதை பெரிய சிக்கலாக கருதுகிறார்கள்.

 

ஒரு அதிகாரி ஒரு ஆண் ஆசிரியரை   சந்தேகித்து போலீசு தன் ஆட்களை இருவரை வைத்து அடித்து உதைத்து “உண்மையை” கக்க வைக்க முயற்சி செய்கிறார்.  ஆனால், அந்த காட்சிகள் மக்கள் மத்தியில் வைரலாகிறது.

 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வேலை பறிபோகிறது. ஆனால் அந்த ஆசிரியரை பள்ளியில் மாணவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவருடைய வேலையும் சிக்கலாகிறது.

 

வேலை இழந்த அதிகாரி அந்த ஆசிரியரை கடத்தி வந்து ”உண்மையை” வரவழைத்து வேலையை காப்பாற்றிக்கொள்ளலாம் என திட்டமிடுகிறார். அதே வேளையில் அந்த பெண்ணின் அப்பா அந்த ஆசிரியர் மீது கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்.

 

அதற்கு பிறகு நடப்பதெல்லாம் களேபரம் தான்.

****

 


படத்தின் இறுதியில் எதையும் பளிச்சென சொல்லாமல், பார்வையாளர்களே சிந்திக்கட்டும் என இயக்குநர் விட்டுவிடுகிறார்.

 

எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த போலீசு அந்த ஆசிரியரை சந்தேகிக்கிறது என்பதை கடைசி வரை சொல்லமாட்டார்கள். அந்த ஆசிரியரும் கடைசி வரை தான் குற்றம் செய்யவில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார்.

 

ஆதாரங்களின் அடிப்படையில் முறையாக சட்ட விசாரணை நடைபெறாமல், கொலைவெறியோடு முன்முடிவோடு “விசாரணை” செய்வது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதைத் தான் படம் சொல்கிறது.

 

படத்தில் குதிரையில் ஒருவர் சுற்றிக்கொண்டிருப்பார்.  ஓரிடத்தில் கேட்பார். அரேபியன் என்றாலே ஏன் கொலை செய்ய போகிறவர் என்றே பார்க்கிறீர்கள்? என்பார். அப்பொழுது தான் இது இசுரேலிய படம் என்பது நினைவுக்கு வருகிறது.

 

இந்தப் படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இரண்டு இயக்குநர்கள் எழுதி, இயக்கியுள்ளனர்.

 

எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூப்பில் இருக்கிறது. அதன் சப்டைட்டில் செட்டிங்க்ஸ்ல் கொஞ்சம் மாற்றினால் தமிழிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.