> குருத்து

April 30, 2026

மே நாள் – பயத்தை உடைக்கும் நடை



அந்த நாள்
காலை மட்டும் பிறக்கவில்லை
ஒரு சிந்தனை பிறந்தது

 

மூடப்பட்ட கதவுகளுக்குள்
சுருண்டு கிடந்த பயம்
வெளியே வந்தது
மனிதர்களின் காலடியில் நசிந்தது.

 

தொழிற்சாலைகளின் புகை
இன்று வானத்தில் ஏறவில்லை
மாறாக
மனங்களில் ஏறிய கோபம்
மேகமாக திரண்டது

 

சாலைகளில்
ஒரு கூட்டம் நகரவில்லை
நெஞ்சங்கள் நகர்ந்தன
நாளையை நோக்கி

 

நாம் வேலைக்காரர்கள் அல்ல
நாம் மனிதர்கள்!”
என்ற குரல்
ஒரு வாயில் இருந்து இல்லை
நூறு இதயங்களில் இருந்து வெடித்தது

 

கைகளில் உயர்ந்த கொடிகள்
காற்றை மட்டும் வெட்டவில்லை
அடக்குமுறையின் அமைதியை வெட்டின

 

ஒவ்வொரு அடியும்
அதிகாரத்திற்கு எதிரான சாட்சியம்
ஒவ்வொரு முழக்கமும்
நீண்ட மௌனத்திற்கு முடிவு

 

அம்மா நின்றாள்
அவள் கண்களில் பயம் இருந்தது
ஆனால்
அதை விட பெரியது
புரிதல்

 

தன் மகன் நடப்பதைப் பார்த்தாள்
ஆனால்
அவள் உணர்ந்தது
ஒரு தலைமுறை எழுந்ததை

 

அந்த நடை
சாதாரண பாதை இல்லை
வரலாறு திசை மாறும் வழி

 

போலீஸின் கண்ணோட்டம்
பயத்தை விதைக்க முயன்றது
ஆனால்
மக்களின் பார்வை
அதை மிதித்தது

 

அடி வாங்கிய உடல்கள்
தாழவில்லை
மாறாக
உயர்ந்து நின்றன

 

இரத்தம் சிந்திய இடம்
வலி மட்டுமில்லை
விதை போல்
எதிர்ப்பை விதைத்தது

 

அன்று
அவர்கள் வென்றார்களா?
அல்ல

 

ஆனால்
அவர்கள் பயத்தை இழந்தார்கள்

 

அது போதும்
ஏனெனில்
பயம் இழந்த மனிதனை
எந்த சக்தியும் அடிமையாக்க முடியாது

 

சூரியன் மறைந்தபோது
ஒளி குறையவில்லை
மாறாக
ஒவ்வொரு உள்ளத்திலும்
ஒரு புதிய விடியல் ஏறியது

 

-          ”தாய்” நாவலில் வரும் மே நாள் நினைவுகளை கொண்டு எழுதப்பட்டது.

லால்பாக் பொட்டனிக்கல் கார்டன் – பெரு நகரத்தின் நடுவே பெரிய பூங்கா

 


ஒரு ஆள் பழைய சிந்தனை கொண்டவராய் இருந்தால், என்னப்பா ஹைதர் காலத்து ஆளாக இருக்கிறாயே?! என்பார்கள்.   உண்மையில், இந்த லால் பாக் திப்புச் சுல்தானின் அப்பா ஹைதர் அலியால் 1760ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திப்புச் சுல்தான் இன்னும் விரிவுப்படுத்தியிருக்கிறார்.

 

நகரத்தின் மையத்தில் 240 ஏக்கரில் பரந்து விரிந்து நிற்கிறது இந்த பூங்கா.  வெளிநாடுகளில் இருந்து விதவிதமான மரங்கள், செடிகளை பார்த்து பார்த்து வரவழைத்து கவனமாய் வளத்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் சிவப்பு மலர்களை நிறைய வளர்த்ததால், சிவப்பு தோட்டம் (Lal bagh) என பெயர் காரணமாகியிருக்கிறது.

 





265 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட பெரிய வரலாறு தான்.   அதனால் பெரிய, மிகப்பெரிய மரங்கள் இருக்கின்றன. 250 வருட  ஒரு இலவம் பஞ்சு மரம் (silk tree) ஒன்று இருக்கிறது. மரமாய் இருந்து, கால ஓட்டத்தில் மில்லியன் ஆண்டுகள் கடந்து அது இப்பொழுது பாறையாய் இருக்கிறது. வேறிடத்தில் இருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.   நல்ல விசயம்.


 

ஒரு ஏரி உள்ளே இருக்கிறது. அதன் அருகில் செயற்கையாய், மணிக்கு ஒருமுறை 1 முதல் 1.15. 2 முதல் 2.15 என்ற கணக்கில் கால் மணி நேரம் அருவி போல ஒன்றை செயற்கையாய் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  கண்ணாடி மாளிகை இருக்கிறது.  இதில் குடியரசு தினத்திலும், சுதந்திர தினத்திலும் சிறப்பாக மலர் கண்காட்சி நடத்துகிறார்கள்.

 

தமிழ் புத்தாண்டு தினத்தில் உள்ளே போயிருந்தோம்.   குடும்பம் குடும்பமாய் ஒரே விதமான ஆட்கள் அவர்களுடைய வண்ணம், பெரிய சிவப்பு பொட்டு வைத்துக்கொண்டு என ஆயிரக்கணக்கில் வந்துகொண்டே இருந்தார்கள். அசாம் மக்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இது விசேச நாள் என நண்பர் கணித்தார்.  ஆனால் பேட்டரி கார் ஓட்டியவர் இவர்கள் நேபாளத்துக்காரர்கள். அவர்களுக்கு இன்று புத்தாண்டு என எங்கள் குழப்பத்தை தெளிவுப்படுத்தினார். மகிழ்ச்சி.

 

விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம்.  வார நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். ஆகையால் நாட்களை திட்டமிட்டு செல்லுங்கள்.

 

உள்ளே நுழைய கட்டணமாய் பெரியவர்களுக்கு ரூ. 50, சிறியவர்களுக்கு ரூ. 25 என்றும் விசேச நாட்களில் இன்னும் கூடுதல் விலை விற்கிறார்கள்.


 

மைசூரில் நகரத்துக்கு உள்ளேயே ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றை நடத்தியது ஆச்சர்யம் தந்தது. நிறைய விலங்குகளும் உற்சாகமாய் வலம் வந்தன.  பர பரவென இயங்கும் ஒரு மெட்ரோ நகரத்துக்கு மத்தியில் 250 ஏக்கரில் லால் பாக் பூங்கா மட்டும் மெதுவாக சுவாசிக்க செய்கிறது எனலாம்.

 

-        -  இரா. முனியசாமி

-         14/04/2026

April 27, 2026

The Shadow’s Edge (2025) ஜாக்கிசானின் அருமையான சீன ஆக்சன் திரில்லர்

 


வில்லனின் வளர்ப்பு மகன்களாகிய இளைஞர்கள் ஒவ்வொன்றிலும் திறன் கொண்டவர்கள். அவர்களை கொண்டு, சாத்தியமில்லாத கொள்ளையை திறம்பட செய்கிறார்.   போலீசுக்கு பெரிய அழுத்தமாகிறது.

 

ஓய்வு பெற்று வாழும் நாயகனை போலீசு துறை மீண்டும் அழைக்கிறது.  அவர் நவீன வசதிகள் கொண்டது இல்லாமல், பழைய முறையில் ஒரு படையை உருவாக்குகிறார்.    அடுத்த கொள்ளைக்காக காத்திருக்கிறார்.

 

இதில் வளர்ப்பு மகன்களுக்கும், வில்லனுக்கும் ஒரு உள்ளுக்குள் முரண்பாடு வருகிறது.  அவர்களுக்குள் சிக்கலாகிறது.

 

நாயகன் அந்த கும்பலின் தலைவனுக்கு  வலை விரிக்கிறார்.  பிடித்தாரா? என்பதை விறு விறுப்பான காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

 

***

 


ஜாக்கிசானின் கடந்த பத்து ஆண்டு வரலாற்றில், இப்படி துவக்கம் முதல் இறுதி வரை ஒரு பரபர ஆக்சன் படம் பார்த்து நாட்களாயிற்று.   அருமையான படம்.

 

என் 20களில் சாகச சண்டையுடன், நகைச்சுவையும் கலந்து மகிழ்வித்த ஜாக்கிசான் இப்பொழுது அவருடைய எழுபதுகளிலும் மகிழ்விக்கிறார்.  சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல்  அவரே நடிக்கிறார். அடிபடுகிறார்.  இறுதி காட்சிகளில் காண்பிக்கிறார்கள்.

 

Eye in the sky (Surveillance என அர்த்தம்)  ஒரு தென்கொரிய படம்  அந்த படத்தை அடிப்படையாக கொண்டு, இன்னும் செழுமைப்படுத்தி, ஆக்சன் காட்சிகளை அதகளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.

 

ஆக்சன் ரசிகர்கள், ஜாக்கிசான் ரசிகர்கள் அவசியம் பாருங்கள். ஆங்கிலத்தில் சப் டைட்டிலுடன் பார்த்தேன். இப்போதைக்கு  எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள்.