> குருத்து: பயணம்
Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

August 29, 2024

ஊட்டிப் பயணம்


மதுரைக்கு அருகே இருப்பதால் கொடைக்கானலுக்கு பலமுறை போயிருக்கிறேன். ஆனால் ஊட்டி கொஞ்சம் தூரம் என்பதால், இதுவரை நான்கு முறை தான் போயிருக்கிறேன்.

 


இந்த முறை நண்பர் ஒருவர் இதுவரை போகவில்லை என சொன்னதால், வாங்க கிளம்புவோம் என கிளம்பிவிட்டோம்.  சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீலகிரி விரைவு ரயிலில் பயணம். அங்கிருந்து குன்னூர் வரை காரில் பயணம்.  போகிற வழியில் காட்டேரி பூங்காவில் கொஞ்சம் இளைப்பாறினோம்.

 


முதல்முறை வரும் நண்பருக்கு கொஞ்சம் தலைச்சுற்றலும், வாந்தியும் நிறைய சிக்கல் செய்துவிட்டது. முதல் நாள் நான் தான் வாந்தி தவிர்க்க மாத்திரைகள் வாங்கிவரவேண்டிய பொறுப்பை ஏற்றிந்தேன். நண்பர் தான் வாங்கி வருவதாக பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, மாத்திரைகளை வாங்கி வீட்டிலேயே மறந்து விட்டுவிட்டு வந்துவிட்டார். 

 



ரயிலை விட்டு இறங்கினால், ஞாயிறு விடிகாலை. கடை திறக்க நேரமாகும். சரி கிளம்பலாம் என கிளம்பியது தான் இரண்டாவது தவறு.  காலை உணவையும் தவிர்த்துப் பார்த்தார். அப்படியும் முடியவில்லை. மதிய உணவும் சாப்பிட முடியாத நிலையானதால், கொஞ்சம் சுதாரித்து, மருத்துவமனை போய் நிலைமையை சரி செய்தோம்.

 



சில வருடங்கள் கடந்து வந்திருக்கிறோம். ஊட்டி அன்று பார்த்த மாதிரியே அதே இளமையோடும், பசுமையோடும் இருக்கிறது.  ஊரே பிரிஜ்ஜில் வைத்த மாதிரியே சில்லென இருக்கிறது. மக்கள் ஸ்வெட்டர் உதவியுடன் வலம் வருகிறார்கள்.

 



டால்பின் வியூ பாயிண்ட் போய் சுற்றி வந்தோம்.   மருத்துவமனை போனதால், சிம்சன் பார்க்கிற்குள் உள்ளே நுழைந்துப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.

 

மாலை ஊட்டிக்கு வந்து சேர்ந்தோம். ஏற்கனவே திட்டமிட்டு இருந்த, ஹோட்டலில் தங்கினோம்.  ஆகஸ்டு கடைசி என்பதால், பகலில் 17 டிகிரி இருந்த குளிர், இரவில் 12 டிகிரி வரைக்கும் கீழே செல்கிறது. வெயில் எவ்வளவு என்றாலும் தாங்கிக்கொள்ள முடிகிறது. இந்த குளிர் கொஞ்சம் சிரமம் தான்.

 


நண்பருக்கு உடல்நிலை கொஞ்சம் சோர்வானதால், அறையில் ஒரு ஹீட்டர் ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டதில், குளிர் தாக்காமல் கத கதவென்று இருந்தோம்.

 

காலையில்  முதலில் தொட்டப்பெட்டா வியூ பாயிண்ட்க்கு வந்தோம். அடுத்து படகு குழாம். யாருக்கும் போக பெரிதாக ஆர்வமில்லை. நண்பர்கள் இருவரும் பெரிய பெரிய படகுகளில் அடிக்கடி சென்று வருபவர்கள்.  ஆகையால், கரையிலேயே  இருந்து சிறிது நேரம் ஏரியை வேடிக்கைப் பார்த்தோம்.

 


அடுத்து,  மைசூர் அரசர் ஆண்ட காலத்தில் ஊட்டியில் அரசருக்கு நிலம் இருந்திருக்கிறது. பிறகு அந்த நிலம் கர்நாடக அரசுக்கு கை மாற, இப்பொழுது கர்நாடக அரசு பராமரித்து வருகிறது. நல்ல பெரிய பூங்கா. பராமரிப்பும் நன்றாக இருக்கிறது. தொங்கு பாலம் சிறப்பாக இருந்தது.

 


நேரே (Bench Mark) சாக்லேட் தொழிற்சாலை வந்து சேர்ந்து, சொந்தங்களுக்கு விதவிதமான சாக்லெட்டும், வர்க்கியும் டீத்தூள் விதவிதமாய் இருந்தது.  அதிலும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம்.    சில சாகச வேலைகள் செய்ய அருகிலேயே இருந்தது. இந்த முறை வேண்டாம் என கட்டுப்படுத்திக்கொண்டோம்.

 


பிறகு தங்குமிடம் போனோம்.  அடுத்த நாள் காலையில் பைக்காரா அருவி செல்லும் பாதையில் பைன் காடுகளைப் பார்த்தோம்.  அங்கு இருந்த ஏரியும் அருமையாக இருந்தது.   பிறகு முன்னொரு காலத்தில் நிறைய திரைப் படப்பிடிப்புகள் நடந்ததால், ஷூட்டிங் பாயிண்ட் என ஒரு புல் குன்று இருந்தது.  அருமையான இடம்.  செமத்தியான காற்று.  அட்டகாசமாய் இருந்தது.

 


பைக்காரா அருவி போய் பார்த்தோம்.   பெரிதான ஒரு அருவியை எதிர்பார்த்து போனால்,  குட்டியாய் இருந்தது.  அதுவும் நன்றாக தான் இருந்தது.  அப்படியே வண்டியை வந்த வழியிலேயே திரும்பினோம்.

 

ஒரு வழியாய் பொட்டனிக்கல் கார்டன் வந்து சேர்ந்தோம்.  ஒரு சுற்று வந்தோம். ஒரு வழியாய், ஊட்டி பய்ணம் இறுதிக் கட்டத்திற்கு வந்து சேர்ந்தோம்.

 


இந்தமுறை கொஞ்சம் திட்டமிட்டு, ஊட்டி – மேட்டுப்பாளையம் ரயிலில் போகலாம் என முன்பதிவு செய்திருந்தோம்.  கடந்த வாரம்  விட்டுவிட்டு பெய்த மழையால், ஆங்காங்கே பாதையை செப்பனிட வேண்டியிருந்ததால், 31ந் தேதி வரை ரத்து செய்துவிட்டார்கள். 

 

ஆகையால், வந்தது போலவே காரிலேயே மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.   கீழே வருவதற்குள் தலைச்சுற்றலும் வாந்தியும் என்னை சிக்கல் செய்துவிட்டன.   அதற்காக எல்லாம் கவலைப்பட்டால், ஊட்டி, கொடைக்கானலை மறந்துவிடவேண்டியது தான்.  

 


மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்ததும், இயல்பு நிலைக்கு வந்துவிட்டேன்.  இரவு வந்த நீலகிரி ரயிலைப் பிடித்து  காலையில் ஊர் வந்து சேர்ந்துவிட்டோம்.

 

பயணம் இனிதே முடிவுற்றது.  இந்தப் பயணத்தில் இன்னும் சில அம்சங்களை எழுதலாம். பிறகு எழுதுகிறேன்.

 

January 18, 2023

கனவு வெளிப் பயணம் – கவிஞர் சல்மா


பத்து நாடுகள் பயணித்ததில்.. முதல் அனுபவமாக பாகிஸ்தான் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் கல்வி, நிர்வாகம், சமூகம் என பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க அம்சங்களை மட்டும் பகிர்கிறேன்.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்து பாகிஸ்தான் அழைத்து சென்று அங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்வது தான் பயணத்தின் நோக்கம். இங்குள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும், அங்குள்ள நிறுவனமும் இணைந்து எடுத்த முயற்சி இது.

தமிழகத்தில் பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த கவிஞர் சல்மா அந்த 30 பேரில் ஒருவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சென்ற முதல் குழு இது தான். ஆச்சர்யம். தலைநகர் இசுலாமபாத், லாகூர், பெஷாவர் என மொத்தம் 11 நகரங்களுக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.

சென்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகள் மட்டுமில்லாமல்… பொது மக்களும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள். மாலைகள், மரியாதைகள், அன்பு பரிமாற்றங்கள். பிரிவினையின் பொழுது அவர்களுடைய சொந்தங்கள் சிலர் இந்தியாவில் இருந்தனர். அப்படிப்பட்ட இந்தியாவில் இருந்து வந்தவர்களை தங்கள் சொந்தங்களாக நினைத்து அன்புடனும், மரியாதையுடன் வரவேற்றுள்ளனர்.

பெட்ரோல் பங்கில் முன்னாள் இராணுவ வீரர் (அரசு அனுமதியுடன் துப்பாக்கியுடன்) காவலுக்கு இருக்கிறார். அவருடன் பேச்சுக்கொடுத்ததில்… முன்பு இந்திய சகோதர்ர்களோடு சண்டையிட்டதை வருத்தத்துடன் பகிர்கிறார். எல்லோருக்கு தேநீர் தருகிறார். அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ள மறுக்கிறார். ”இது என்னுடைய பரிசு” என்கிறார்.

அங்கு பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33%. சட்டத்தில் இருந்தாலும், அதை களத்தில் சாத்தியப்படுத்துவதற்கான போராட்டத்தில் பெண்கள் இருக்கிறார்கள். கிடைக்கிற வாய்ப்புகளை பிடித்து மேலேறி வருகிறார்கள். அங்கு பெண்களுக்கு மேஜர் வயது 16. ஆண்களுக்கு 18.

20,000 கிறிஸ்தவர்களும் 20 சர்ச்சுகளும் உள்ள முல்தான் மிகவும் புராதனமான அமைதியான நகரம். இதுவரை மதக்கலவரங்களே நடந்ததேயில்லை என பெருமையுடன் சொல்கிறார் அங்கு இருக்கும் எம்.பி.

சல்மா அவர்களுக்கு உருது தெரியவில்லை. ”உருது தெரியாத முசுலீமா?” என ஆச்சரியப்படுகிறார்கள். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தானில் பிறந்தவர். அந்த கிராமத்திற்கு போயிருந்த பொழுது, இந்த ஊரில் பிறந்தவர் இந்திய பிரதமர் என பெருமையுடன் அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். பிரதம புகழ்பெற்ற இந்தி நடிகர் இராஜ்குமார் பாகிஸ்தானில் பிறந்தவர் தான்.

பயணம் முடித்து சொந்த ஊர் சேர்ந்ததும், காத்திருந்து உளவு போலீசார் எல்லா விவரங்களையும் விவரமாக கேட்டுக்கொண்டனர். ”இந்த விசாரணை எல்லோருக்குமா?” என்றதற்கு ”ஆமாம்” என்றிருக்கிறார்கள். ஆனால் உடன் வந்தவர்களை விசாரித்தில் அப்படி யாரையும் இது வரை விசாரிக்கவில்லை என பதில் சொல்லியிருக்கிறார்கள். இது இந்திய நிலைமை.

ஆசிரியர் : கவிஞர் சல்மா (2014)
பக்கங்கள் : 249
விலை : 145
வெளியீடு : விகடன் வெளியீடு

December 7, 2022

பிரயாண நினைவுகள்


தமிழகத்தில் பயணக் கட்டுரைகள் எழுதுவதின் முன்னோடி என இவரை சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அண்ணாமலை கருப்பன் (ஏ.கே. செட்டியார் என அழைக்கிறார்கள்.) கருப்பன் மிக அருமையான பெயர். அதைச் சொல்லியே இனி அழைப்போம்.


பழைய ஆள். அதனால் எழுத்தும் கொஞ்சம் போரடிக்கும் என நானாக நம்பிக்கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தைப் படித்ததும், சே! எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என வருத்தப்பட வைத்துவிட்டார். நறுக்கென்றும், கொஞ்சம் கேலியோடும், நகைச்சுவையோடும், வரலாற்று கண்ணோட்டத்துடனும் அருமையாக எழுதுகிறார்.

இந்தத் தொகுப்பில் உலகநாடுகள், இந்தியா, தமிழ்நாடு என 12 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் சிலதை மட்டும் பகிர்கிறேன். இந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை 1940களில் என புரிந்துகொள்ளுங்கள்.

1. பிரான்சு : நம்ம ஊர் பேருந்துகளில் இப்பொழுதும் வல்லவனுக்கு இருக்கை கிடைக்கும் என்பது தானே வழக்கம். பிரான்சில் பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு அங்குள்ள எந்திரத்தில் டோக்கன் எடுத்துக்கொள்கிறார்கள். நாம் பத்தாவது ஆளாக இருக்கிறோம் என்றால்… ஒரு பேருந்து வருகிறது. அதில் பத்து பேருக்கு இடம் இருக்கிறது என்றால் பத்து பேரும் ஏறலாம். ஐந்து பேருக்கு தான் இடம் என்றால், முதலில் வந்த ஐந்து பேர் தான் ஏறமுடியும். அந்த டோக்கனை கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். அருமையான முறையாக இருக்கிறதே!

2. ஜெர்மனியில் 1920களில் ஒரு பெரிய மிருக காட்சி சாலையில் விலங்குகளோடு, சில சீனர்களையும், 25 இந்திய ஆண், பெண்களையும் கூண்டில் பார்வைக்காக வைத்திருந்தார்களாம். இந்திய தலைவர்கள் தலையிட்டு விடுதலையடைய செய்திருக்கிறார்கள் என சொல்கிறார். அட கொடுமைக்காரங்களா!

3. செஞ்சிக்கு பயணம் செல்லும் வழியில், செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் இட்லி நன்றாக இருக்கும் என கேள்விப்பட்டு அங்கு போகிறார். பிரமாணர் சாப்பிடும் இடம், பிரமாணரல்லாதவர் சாப்பிடும் இடம் என்ற போர்டுகள் காணாமல் போனதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். பெரியாருக்கு நன்றி சொல்கிறார்.

4. காந்தி ஒருமுறை கன்னியாகுமரிக்கு போயிருக்கிறார். விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை அமைத்திருக்கிறார்கள். அங்கு காந்தியை அழைத்திருக்கிறார்கள். வாசகசாலைக்கு அடுத்த கட்டிடம், ஒரு விவேகானந்தா காபி கிளப். காந்தி காபி கிளப்பிற்குள் நுழைந்துவிட்டாராம். கடைக்காரருக்கு ஒரே குழப்பம். காந்தி ஆட்டுப்பால் தானே சாப்பிடுவார். காபி குடிக்கமாட்டாரே! என சிந்திக்கும் பொழுதே, அவர் தவறுதலாக வந்ததை உணர்ந்து, உடனே வெளியே போய்விட்டாராம்.

5. வெளிநாட்டில் ஒரு ஹோட்டலில் தங்குகிறார். காசை கொஞ்சம் மிச்சம் பிடிக்க வெளியில் சாப்பிடுகிறார். ஆனால் பில்லில் காலை உணவுக்கு 55 காசு என சார்ஜ் செய்திருக்கிறார்கள். என்னங்க? என விளக்கம் கேட்டால், இங்கு தங்கினால், இங்கு தான் காலை உணவு சாப்பிடவேண்டும் என விதி வைத்திருக்கிறோம் என பதில் சொல்லியிருக்கிறார்கள். சரி போகட்டும். டிபன் 50 காசு தானே! ஏன் 55 காசு? என கேட்டால், அந்த ஐந்து பைசா சர்வீசுக்கு 5 காசாம். டென்சனாயிட்டார்.


1911ல் பிறந்த கருப்பன் அவர்கள், படிப்புக்காக ஜப்பானுக்கும், பிறகு அமெரிக்காவிற்கும் பயணம் செய்திருக்கிறார். காந்தியைப் பற்றி ஆவணம் படம் எடுப்பதற்கு பல நாடுகள் பயணித்திருக்கிறார். வெற்றிகரமாக கொண்டும் வந்திருக்கிறார். ஆனால் அப்பொழுது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்ததால், திரையரங்கு முதலாளிகள் பயந்துகொண்டு வெளியிடவில்லையாம். பிறகு ”சுதந்திரம் அடைந்த” பிறகு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். பிறகு இந்த ஆவணப் படம் எங்கு போனது என தெரியாமல் தேடிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பிறகு கண்டுப்பிடித்தும் இருக்கிறார்கள். அந்த கதையை சொன்னால் நீண்டு விடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்பொழுது யூடியூப்பில் பார்க்க கிடைக்கிறது.

- பக்கங்கள் 61

October 9, 2022

கரிகாலனின் வாளும், குறிஞ்சிக்கூடலின் தட்டும்!


சுற்றுலாவில் இணைந்த பொழுது குறிஞ்சிக்கூடலின் அடையாளமாக கொடுக்கப்பட்டது உணவுக்காக தரப்பட்ட சில்வர் தட்டு. அந்தத் தட்டை உற்றுப்பார்த்தால், நான்கு விரிந்த மலர்களுடன் Prince என அச்சிடப்பட்டு இருந்தது. அது பொன்னியின் செல்வனில் கரிகாலன் வந்தியத்தேவனுக்கு கொடுக்கப்பட்ட வாள் போல என அப்பொழுது எனக்கு தெரியவில்லை.


இந்தியாவின் வட பகுதிகளில் பயணம் செய்வதில் உள்ள ஒரு பெரிய சிக்கல். நம்மூர் சாப்பாடு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், நம்ம கைப்பக்குவத்தில் கிடைக்காது. இரண்டே நாளில் சொணங்கி சொந்த ஊர் பற்றிய ஏக்கத்திலேயே மீதி நாட்களை கழிப்போம். ஊரே வெறுத்துப்போகும். அரை உசுரோடு தான் ஊர் வந்து சேர்வோம்.

முதல் நாள் சாப்பிடும் பொழுது கவனித்தேன். எல்லோரும் அந்த தட்டை மறக்காமல் பவ்யமாய் எடுத்துவந்தார்கள். அறையில் மறந்து வைத்து வந்தவர்கள் பதட்டத்துடன் அறைக்குப் போய் எடுத்துவந்தார்கள். மறந்து வருபவர்களுக்கு கூடுதலாக ஒன்றிரண்டு தட்டுகள் வைக்கப்படும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால் இல்லை. அது தட்டுமட்டுமில்லை. குறிஞ்சிக்கூடலின் அடையாள முத்திரை என புரிந்துகொண்டேன். பத்து நாட்களுக்கு நம்மூர் சாப்பாடு வேண்டுமென்றால், இந்தத் தட்டை பாதுகாக்கவேண்டும் என மனதில் ஆழமாய் பதித்துக்கொண்டேன்.

அஜ்மீரில் பொன்னியின் செல்வன் படம் பார்க்க சென்று வந்த பிறகு, என்னுடைய அறையை மாற்றிவிட்டார்கள். காலையில் தட்டைத் தேடினால் காணவில்லை. பதட்டமாகிவிட்டது. அடுத்த நாள் காலையில் (அறை) நண்பர் சிவா தட்டுத்தந்து காலை உணவு பறிபோவதில் இருந்து காப்பாற்றினார். ராஜேந்திரன் தோழரிடம் போன் பண்ணி கேட்டால், ஊர் சுற்றப்போய்விட்டேன். மாலை தான் வருவேன் என கூலாக சொன்னார். மாலை அவர் அறையில் தட்டை திரும்ப பார்த்த பொழுது தான் உசுரே திரும்ப வந்தது.

ஊரிலிருந்து திரும்ப வந்த பிறகு கூட அந்த தட்டைப் பாதுகாத்து மூன்று வேளையிலும் சாப்பிட்டுவருகிறேன். அத்தனை மரியாதை அந்தத் தட்டுக்கு!

அஜ்மீர் : பொன்னியின் செல்வன் போகலாமா?


ஜோத்பூர் சுற்றிப் பார்த்துவிட்டு, அஜ்மீருக்கு பேருந்தில் கிளம்பினோம்.


குழுவில் ஒரு வழக்கறிஞர் பொன்னியின் செல்வன் அஜ்மீரில் ஐநாக்ஸ்-ல் இந்தியில் ஓடுகிறது. போகலாம் என ஆரம்பித்தார். நாவலின் பாத்திரங்களை நன்றாக நினைவில் வைத்திருந்தார்.

பெரிய டிக்கெட்டுகள் பலரும் பயணக் களைப்பில் இருக்க.. அவரோடு மாணவர்கள் மூவர் கிளம்பினார்கள்.

இந்தியில் பார்ப்பதா? என யோசனையாய் இருந்தது. கடைசி நேரத்தில் நானும் என கையை தூக்கிவிட்டேன்.

படம் வெளியான வெள்ளிக்கிழமை. மாலை 7 வரை பத்து டிக்கெட்டுக்குள் தான் புக் ஆகியிருந்தது. போய் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம் என சொன்னாலும் உறுதியாய் மறுத்துவிட்டார். என்ன ஒரு மன உறுதி.

டூரிஸ்ட் பேருந்தை பத்து மணிக்கு மேல் தான் அஜ்மீருக்குள் நுழையவிடுவோம் என சொன்னதால்... ஷேர் ஆட்டோ மூலம் நாங்கள் தங்க இருந்த ஹோட்டலை அடையும் பொழுது இரவு 9.30க்கு மேலாகிவிட்டது.

இரவு உணவுக்கு நேரமில்லை. வேறு ஒரு நெருக்கடியில் ஒரு மாணவர் வர இயலவில்லை.

வெளியே வந்து ஆட்டோ பிடித்தால்.. தூரம் 8 கிமீ. ரூ. 200. "கூட வாப்பா! படம் பார்க்கலாம். திரும்ப எங்களையும் கூட்டிட்டு வந்துரு!" என சொன்னதற்கு ரூ. 500 ஒப்பந்தமானது.

இன்னும் 15 நிமிடங்கள் தான். அந்த பழைய ஆட்டோவில் "ஜல்தி! ஜல்தி பையா" என டிரைவரை விரட்ட... 10.35க்கு ஐநாக்ஸ் அடைந்தோம்.

உள்ளே நுழையும் பொழுது, கரிகாலன் வந்தியத்தேவனிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தார்.

படத்தில் ஏதோ ஒரு இடத்தில் பயணக் களைப்பில் கொஞ்சம் அசந்தோம். மற்றவரிடன் உதவியுடன் தெளிந்தோம். முழுதாய் பார்த்து ரசித்தது ஆட்டோ இளைஞர் தான். மொழி பிரச்சனை அவருக்கு இல்லை.

2 மணி நேரம். 50 நிமிடங்கள். படம் பார்த்துவிட்டு, வெளியே வரும் பொழுது..ஒரு ஆட்டோ கூட இல்லை. தப்பித்தோம்.

அஜ்மீர் 2 மணிக்கு எல்லாம் அடங்கியிருந்தது. வரும் பொழுது அனார் ஏரி அருகேயும், நடுத்தெருவில் அமர்ந்தும் புகைப்படங்கள் எடுத்தோம்.

உடன் வந்த மாணவர்களில் ஒருவன். "அம்மா, அப்பாவுடன் இல்லாமல் வெளியே இரவுக் காட்சி படம் பார்த்தது முதல்முறை . இந்த நாளை என்னால் மறக்கமுடியாது" என்றான். எல்லோருக்கும் தான்.

பரந்து விரிந்த அந்த ஏரி விளக்குகளின் வெளிச்சத்துடன் ஒளிர்ந்தது!

6000 கிமீ பயணம்


இராஜஸ்தானின் வரலாற்று தடயங்களை அறிய..


சென்னையில் துவங்கிய பயணம் ...

தலைநகர் ஜெய்ப்பூர் அடைந்து... (2252)

ஜெய்ப்பூரில் இருந்து ஜெய்சல்மீர் வந்து... (698)

தார் பாலைவனத்தின் வழியே இந்தியாவின் எல்லையை ஒட்டிய லோங்கிவாலா அடைந்து.. (125)

மீண்டும் வேறு வழியில் திரும்ப... (150)

ஜெய்சல்மீரில் இருந்து ஜோத்பூரை வந்தடைய (300)

ஜோத்பூரில் இருந்து அஜ்மீர் அடைய (205)

அஜ்மீரில் இருந்து சென்னை வர (2191)

எட்டு நாளில் மொத்தம் 5921 கிமீ பயணம் செய்திருக்கிறோம்.

சென்னையில் ஆறாயிரம் கிமீ சுற்றிவர எனக்கு ஆறு மாதம் ஆகும்.

ரயில் நட்பு


பயணத்தில் 'ரயில் ஸ்நேகம்' பிரபலமானது. 10 மணி நேரம் 12 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயணிக்க வேண்டியதிருக்கும்.


எப்பொழுதும் வேலையின் ஊடாக கதை பேசும் மனிதர்களால் சும்மா உட்கார்ந்திருந்தால் பேசாதிருக்க முடியுமா?

அருகில் இருப்பவர்களிடம் மெல்ல பேச்சு துவங்கி... தன் கதை, ஊர் கதை, உலக கதை பேச துவங்கிவிடுவார்கள்.

இப்படித்தான் ஒருமுறை வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் ஐவர் இரவு 8 மணி போல பேச ஆரம்பித்தோம். 11 மணி ஆன பொழுது, பேச்சில் இன்னும் உற்சாகம் வந்தது. பக்கத்தில் இருந்த அக்கம் பக்கத்தினர் தூங்கவேண்டும் என கோரிக்கை வந்தது. அதன்பிறகும் கூட கொஞ்சம் அடக்கி வாசித்தோம். பேச்சு நிற்கவில்லை.

இப்படி ரயில் ஸ்நேகத்தில் ஒரு அம்மா ஆசையாய் தன் மகளுக்கு கொண்டு போன தீபாவளி பலகாரத்தில் எங்களுக்கும் கொடுத்து இருக்கிறார். (இப்பொழுது எல்லாம் திருட்டு பயத்தால் சாத்தியமேயில்லை.)

இடையில் பிரிகிற காதலர்கள் நம் உறவு 'ரயில் ஸ்நேகம்' போல என தமிழ் படத்தில் வசனம் பேசியிருக்கிறார்கள்.

இதோ ராஜஸ்தானுக்கு இரண்டு ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கிறோம். நம்மோடு வருபவர்களுடன் மட்டும் கதை பேசிகொண்டே வருகிறோம்.

எதிரில் உட்கார்ந்திருக்கும் இந்தி பேசும் இளைஞன் தன் லேப்டாப்பில் படம் பார்க்கிறார். களைத்து போனதும் தூங்குகிறார்.

பக்கத்தில் இருக்கும் இரண்டு குட்டிப் பசங்க இருக்கிற இடம் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களின் கைகளிலும் செல்போன்கள்.

"ரயில் ஸ்நேகம்' என்பது கடந்த தலைமுறையின் வார்த்தையாகிவிட்டது.

இராஜஸ்தான் பயணம்


மதுரையில் சில வழக்கறிஞர் தோழர்களின் முன்னெடுப்பில் 'குறிஞ்சி கூடல்' என்ற பெயரில், கீழடி துவங்கி பல சின்ன சின்ன பயணங்களை கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.


அதே போல இந்திய அளவில் நான்கு மாநிலங்களுக்கு பெரிய பயணங்களும் செய்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியில் இராஜஸ்தானில் வரலாற்று தடயங்களை காண ஒரு குழுவாக பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்கள்.

பயணங்களில் ஆர்வம் இருந்தாலும், யாரோடு இணைந்து பயணிப்பது என்ற தயக்கமும், தொடர்ச்சியாக சில நாட்கள் விடுப்பும், கொஞ்சம் கூடுதல் பணமும் எப்பொழுதும் பற்றாக்குறை தான்.

தோழர்கள் ஏற்பாடு செய்கிற பயணம் என்பதால், இந்த பயணத்தில் சந்தோசமாய் நானும் இணைந்துவிட்டேன். அடுத்த பயணத்தில் குடும்பத்தோடு போகலாம் என முடிவு செய்திருக்கிறோம்.

இதோ அந்த நாளும் வந்துவிட்டது. நேற்று மாலை சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் ஜெய்ப்பூர் விரைவு வண்டியில் கிளம்பிவிட்டோம்.

இன்னும் ஒரு வாரத்திற்கு இராஜஸ்தான் தான் நம்ம ஊர். அசோக் கெலாட் தான் நம்ம முதல்வர். மார்வாடி நம்ம மொழி. :)

August 8, 2022

குற்றாலமும் பாலருவியும்


கொரானா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றால அருவிகளில் தடை என்பதால், குளிக்க முடியவில்லை. இந்த முறை ஜூனில் அருவிகளில் தண்ணீர் குறைவாக இருந்தது. ஆடி பிறந்ததும் அருமையாக தண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

மதுரையில் இருந்து அண்ணன் குடும்பமும், சென்னையிலிருந்து எங்க குடும்பமும் குற்றாலத்திற்கு வந்து சேர்ந்தோம்.

வழக்கமாக மூன்று நாட்களில் ஒரு நாள் திருநெல்வேலி அகஸ்தியர் அருவியிலும், தாமிரபணியிலும் குளித்துவிட்டு வருவோம். இந்தமுறை அருவிக்கு அருகே கட்டுமான வேலைகள் வேலை நடைபெறுவதால், ஒரு குறிப்பிட்ட தேதி வரை அனுமதியில்லை என அரசு அறிவித்துவிட்டது.

ஆகையால், இந்த முறை குற்றாலத்தில் இருந்து 25 கிமீ தூரத்தில் இருக்கும் பாலருவி போகலாம் என முடிவெடுத்தோம். பாலருவி கேரளாவிற்குள் இருக்கிறது. கடந்த வருடங்களிலேயே போகலாம் என யோசித்தோம். மதுரையில் இருந்து வரும் வேனுக்கு கேரளா பர்மிட் இல்லை என சொன்னதால் போகாமல் இருந்தோம். இப்பொழுது பர்மிட் வாங்கிய படியால், அந்த சிக்கல் இல்லை.

செங்கோட்டையை தாண்டி கொஞ்சம் மலைப்பாதை ஏற துவங்கியதுமே சிலு சிலுவென காத்தும், குளுமையும்
அருமையாக
இருந்தது. பாலருவியின் முகப்பிற்கு போய்விட்டோம்.

அங்கிருந்து கேரளா அரசு உள்ளே அருவியை அடைய பேருந்துகள் ஏற்பாடு செய்திருக்கிறது. 10 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்கள் பயணம். தலைக்கு ரூ. 60 என வசூலிக்கிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்காமல் நிறைய பேருந்துகள் வந்தும் போயும் கொண்டே இருக்கின்றன.

உள்ளே போய் இறக்கிவிட்ட பிறகு சில நிமிடங்கள் நாம் நடக்கவேண்டும். தூரத்தில் இருந்தே அருவி ஆர்ப்பரித்து விழும் சத்தம் கேட்கிறோம். நல்ல உயரத்தில் இருந்து விழுகிறது. அங்கு நம்மால் நேரடியாக குளிக்க வாய்ப்பில்லை. விழும் தண்ணீர் இரண்டு வழிகளில் பிரிந்து வருகிறது. அதில் ஆண்கள், பெண்கள் என பிரித்துவிடுகிறார்கள்.

நாங்கள் மதியத்திற்கு மேல் போயிருந்ததால் நிறைய கூட்டம் இல்லை. அவசரம் இல்லாமல் குளிக்கு முடிந்தது. மீண்டும் வண்டி ஏறி எங்கள் வண்டி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

குற்றாலம் போகிறவர்கள் பாலருவியையும் பார்த்து வாருங்கள். நல்ல அனுபவம்.

ராஜஸ்தான் : புஸ்கர்


தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பிரம்மா மீது கோபத்தில் அவருடைய மனைவி சாவித்திரி கொடுத்த சாபத்தினால், அவருக்கு வேறு எங்கும் கோயில்கள் இல்லையாம். சாப விமோசனமாக மூலவராக ஒரு இடத்தில் இருக்கும் பிரம்மா கோயில் புஸ்கரில் தான் இருக்கிறதாம். அவரின் இன்னொரு மனைவியான காயத்ரி தேவியுடன் இருக்கிறார்.

பிறகு ராஜஸ்தானில் புஸ்கரைச் சுற்றி சுரங்கங்கள் தோண்டப்பட்டக்கொண்டே இருப்பதால், தார் பாலைவனம் கொஞ்சம் நீண்டுக்கொண்டே வருகிறதாம். ஆகையால் ஒட்டகம்/ஜீப் உதவியுடன் அங்கு மக்கள் செல்கிறார்கள்.
ஆரவல்லி மலைத்தொடரில் நல்ல உயரத்தில் இருக்கும் பிரம்மாவின் துணைவியார் சாவித்திரி கோயில் இருக்கிறது. நமது பழனி முருகன் கோயில் போல ரோப் கார் காலையிலிருந்து மாலை வரை இயக்குகிறார்களாம். தலைக்கு ரூ. 150 வசூலிக்கிறார்களாம்.
விரிவாக தெரிந்துகொள்ள பின்னூட்டத்தில் காணொளி பாருங்கள்.

#ராஜஸ்தான்

https://www.youtube.com/watch?v=gMVhplKt1xY