> குருத்து: கதைகள்
Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

April 9, 2022

லிப்ட் கதை


திருமுல்லைவாயில் பகுதியில் உள்ளே நுழையும் பொழுது.. பதினைந்து வயது பையன் லிப்ட் கேட்டான்.


பைக்கில் அத்தனை வேகமாகவும், லாவகமாகவும் உட்கார்ந்த முதல் ஆள் அவன் தான்.

"என்ன தம்பி ஸ்கூல் போகலையா?"

"வேலைக்குப் போறேன் அங்கிள்".

(லிப்ட் கேட்ட பொழுது அண்ணன். ஏறி உட்கார்ந்த பிறகு அங்கிளா?!
🙂

"ஏன் படிக்கலையா?"

"ஒன்பதாம் வகுப்பு வரை படிச்சேன். பெயிலாகிட்டேன்."

"என்ன பாடம் கஷ்டமாயிருந்தது?"

"தமிழும் ஆங்கிலமும்!"

"இங்கிலீஷ் மீடியமா?"

"இல்லையில்லை. கவர்மெண்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியத்துல தான் படிச்சேன்."

"மத்த பாடமெல்லாம்?"

"அதுவும் சிரமம் தான்" என்று சொல்லிவிட்டு நெளிந்தான்.

கொஞ்ச தூரம் லிப்ட் கொடுக்கிறதுக்கு எத்தனை கேள்விகள்? மனசுக்குள் கொஞ்சம் திட்டியிருப்பான்.

"கூடப்பிறந்தவங்க?"

"ஒரு அக்கா டிகிரி முடிச்சாட்டாங்க! ஒரு அண்ணா பிளஸ் டூ படிக்கிறான். நான் தான் கடைசி பையன்" என்றான்.

"10 வது வரைக்குமாவது படிச்சிருக்கலாம்லா?"

"படிப்பு வரல்லை! ஸ்கூல்ல இருந்து கூப்பிட்டு பேசனாங்க! வீட்டுல உள்ளவங்களும் படிப்பு வரலைன்னு முடிவு பண்ணி நிறுத்திட்டாங்க!"

"அப்பா என்ன வேலை செய்யிறார்?"

"அப்பா மேஸ்திரி. வீட்டுலயும் பணம் கஷ்டம் இருந்துச்சி! அதனால வேலைக்கு போயிட்டேன்."

"இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சிருக்கலாம் பின்னாடி வருத்தப்படுவடா தம்பி"

"உங்களைப் போல நிறைய பேர் இப்படித்தான் சொல்றாங்க!"

"இப்ப என்ன வேலை செய்ற?"

"ஒரு ஹோட்டலில் வேலை செய்றேன். தினசரி 300 ரூ. சம்பளம்.

"என்ன வேலை பார்ப்ப?"

"காய்கறி வெட்டுறது! உருளைக் கிழங்கு உரிக்கிறது! இப்படி அவங்க சொல்ற வேலை எல்லாம் செய்வேன்!"

"உன் பெயர் என்ன தம்பி?"

அவன் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் இறங்கி கொண்டே "சந்தோஷ்" என்றான்.

அவன் முகத்தை இப்பொழுது மீண்டும் பார்த்தேன்.

நிறைய முடி. கண்ணுக்கு கீழே கொஞ்சம் கருவளையம் லேசா கருப்பாக இருந்தது. அந்த வயதுக்கு உரிய வெகுளித்தனம் இல்லை.

பத்தாவது பொது தேர்வு. எழுதினால், பெயிலாவன். பள்ளியின் பெயர் டேமேஜ் ஆகும்!

கொரானா காலம். வறுமை என எல்லாமுமாய் சேர்ந்து எல்லோரும் சேர்ந்து, ஒரு குழந்தை தொழிலாளியை உருவாக்கியிருக்கிறார்கள்.

August 29, 2017

50 புத்தகங்கள் சவால்!

இரண்டு மூன்று நாட்களாக மூளையை கசக்கி, புரண்டு, புரண்டு படுத்து யோசித்து அதிஷா செய்தது போல நானும் 50 புத்தகங்களை இந்த ஆண்டிற்குள் படித்து முடிக்கும் சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டேன்!

சின்ன புத்தகம், பெரிய புத்தகம் என்ற கணக்கில்லாமல், அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என கலவையாய் என எல்லாம் கலந்து தேர்ந்தெடுக்கலாம் என முடிவு!

என்னென்ன படித்தேன் என அவ்வப்போது தெரிவிக்கிறேன். சிறு குறிப்பு கூட தர முயற்சி செய்கிறேன்.

நிறைய இடைவெளி விட்டால், கொஞ்சம் விசாரியுங்கள்! அதற்காக தான் உங்களிடம் இதை பகிர்ந்துகொள்கிறேன்.

அதிஷாவிற்கு நன்றி.

- குருத்து

*****

இது மனதிற்கான டீடாக்ஸ்

****

ஃபேஸ்புக் நம் வாசிப்புப்பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டதா? அது நேரத்தை விழுங்குகிறதா? நாம் ஏன் முன்புபோல நிறைய வாசிப்பதில்லை? என்கிற டைப் கேள்விகளை இப்போதெல்லாம் அதிகமாக எதிர்கொள்கிறேன். சமீபத்தில் சில நண்பர்களோடு இதுகுறித்து விவாதித்துக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வெவ்வேறுவிதமான கருத்துகளை முன்வைத்தனர்.

1 - ஃபேஸ்புக் நம் நேரத்தை அதிகமாக விழுங்கிவிடுகிறது. அதில் நேரம் போவதே தெரியாமல் மூழ்கிவிடுகிறோம். 

2 - ஃபேஸ்புக்கில் ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கான பக்கங்களை நாம் அறியாமலேயே வாசிப்பது மனச்சோர்வை உண்டாக்குவது

3 - ஃபேஸ்புக் வாசிப்பிலேயே திருப்தி அடைந்துவிடுவது

4 - இப்போதெல்லாம் நூல்கள் வாசிக்க அத்தனை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. சுஜாதா போல எழுத யாருமே இல்லை. 

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு விதமான காரணங்களை முன்வைத்தனர். எல்லாமே ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகத்தான் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி வேறொரு முக்கியமான பிரச்சனை ஒன்று இருக்கிறது. அது கவனச்சிதறடிப்பு. 

சமூக வலைதளங்களுக்கு நாம் எப்படி அடிமையாக இருக்கிறோம்... என்பதைப்பற்றி சென்ற ஆண்டு ஆனந்தவிகடனில் ஒரு கவர்ஸ்டோரி எழுதியிருந்தேன். அதற்காக நிறைய ஆய்வுக்கட்டுரைகளை பத்து பதினைந்து நாட்கள் உட்கார்ந்து வாசிக்கவேண்டியதாயிருந்தது. உலகம் முழுக்க வெவ்வேறு ஆய்வுகளில் இந்த கவனசிதறடிப்பு என்கிற விஷயம் நம்மிடையே பரவிவருவதை பிரதானமான ஒன்றாக குறிப்பிடுகிறார்கள்.

ஃபேஸ்புக்கில் நீங்கள் ஒரே ஒரு ஸ்டேடஸை (சற்றே நீளமான) பொறுமையாக நிறுத்தி நிதானமாக படிப்பதில்லை என்பது பலருடைய ஆய்விலும் தெரிந்திருக்கிற தகவல். ஒரு வீடியோவைக்கூட நம்மால் முழுமையான கவனத்தோடு ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை என்கிறார்கள். அடுத்தடுத்து டைம்லைனில் நாம் காண்கிற வெவ்வேறு செய்திகளும் தொடர்ச்சியாக நம் கவனத்தை சிதறடிக்கின்றன. எதையுமே தவறவிடக்கூடாது என்கிற ஆவலும் சேர்ந்து கொள்ள நாம் எந்த ஒன்றிலுமே முழுமையான கவனத்தோடு இருக்கமுடியாமல் போய்விடுகிறது. வாசிக்கும்போது தலைக்கு மேல் ஒளிரும் சிகப்பு நிற நோட்டிபிகேஷன் உங்களை மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. 

இது ஃபேஸ்புக்கில் மட்டும் அல்ல. நம் அன்றாட வாழ்விலும் கூட நிகழ ஆரம்பித்திருக்கிறது. டிவி பார்ப்பது, மால்களில் ஷாப்பிங் செல்வது, ஹோட்டல்களில் சாப்பிடுவது, நண்பர்களோடு உரையாடுவது என எல்லா இடங்களிலும் இந்த கவனசிதறடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.  எங்கெல்லாம் அதிகமாக சாய்ஸ்கள் இல்லாமல் இருக்கிறதோ அங்கெல்லாம் நம்முடைய கவனம் அதிகரிக்கும். ஆனால் நாம் எல்லாம் மோசமான நுகவர்வோர்களாக மாற்றப்பட்டு வருகிறோம். எதையுமே பொறுமையாக யோசித்து ஆராய்ந்து தீர்மானிப்பதற்கு முன்னால் உங்களிடம் ஒரு பொருளை விற்றுவிடவேண்டும் என்கிற வியாபார யுக்தி தொடர்ச்சியாக செயல்படுத்துப்படுகிறது. அதன் ஒருபகுதியே இந்த கவனசிதறடிப்பு. 

இத்தகைய கவனசிதறடிப்பால்தான் நம்மால் நூல்களை முன்புபோல வாசிக்கமுடிவதில்லை. முன்பெல்லாம் ஒரு சிறுகதையை ஒரே அமர்வில் படித்துவிடுகிற நாம், இப்போது ஒரு சிறுகதைக்கு ஒன்பது இன்டர்வெல் விடுகிறோம். 

மொபைல் பார்க்க, டிவி பார்க்க, பராக்கு பார்க்க என்று ஒன்றரை பக்கங்களுக்கு மேல் நம்மால் தொடர்ச்சியாக கவனத்தை குவித்து எப்படிப்பட்ட ஜனரஞ்சக படைப்பையும் வாசிக்க முடிவதில்லை. அதற்கு மாறாக ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக்கில் எந்த படைப்பையும் ஆழ்ந்து வாசிக்காமல் ஸ்கிப் செய்து வாசிக்கவும், வாசிக்காமல் நகர்வதையும், ஒரு படைப்பின் முதல் இருவரிகள் பிடிக்கவில்லை என்றால் அடுத்த படைப்பிற்கு தாவுவதையும் நாம் அறியாமலே பயில்கிறோம். நூல்களை எடுத்து வாசிக்க அமரும்போது அந்த ஃபேஸ்புக் பயிற்சி நம் கவனத்தை மேலும் மேலும் சிதறடிக்கிறது. முதல் இரண்டு பக்கங்களே சோர்வைத்தருகின்றன. 

நம்முடைய வாசிப்பு கணிசமாக குறைந்து போனதற்கு முழு முதற்காரணம் கவனசிதறல்தான். அதனால்தான் நம்மால் ஃபேஸ்புக்கில் யாராவது 300சொற்களுக்கு மேல் எழுதுவதை வாசிக்க முடிவதில்லை. ஃபேஸ்புக்கில் அதிகமாக நேரம் செலவிட்டாலும் தொடர்ந்து திரைப்படங்கள் பார்க்க நம்மால் முடிகிறது. ஊர்சுற்ற முடிகிறது. நண்பர்களோடு உரையாட முடிகிறது.ஆனால் ஏன் புத்தகங்கள் வாசிக்கமுடிவதில்லை? திரைப்படம் பார்ப்பது போலவோ, உணவு உண்பதைப்போலவோ எளிதான செயல் அல்ல புத்தக வாசிப்பு. அதன் ஆதாரமாக இயங்குவது கவனம். 

*******

இதை சரிசெய்வது எப்படி என வெவ்வேறு விதமான விஷயங்களின் வழி முயற்சி செய்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக இங்கிருந்து விலகுவது என்பது நல்ல தீர்வாக இருக்காது. பயணம் போவது கூட பலன் தரவில்லை. காரணம் வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுப்பதோடு கவனச்சிதறலையும் சரிசெய்ய வேண்டும். கவனச்சிதறல் என்பது நேரடியாக நம் வாழ்வை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. அலுவலகத்தில் வீட்டில் எதையுமே கவனத்தோடு செய்ய முடியாமல் போவது அதன் இன்னொரு கோணம். இந்த கவனசிதறல் சிக்கலில் இருந்து மீளவும், மீண்டும் பழையபடி உற்சாகமாக வாசிக்க விரும்புகிற நண்பர்கள் சிலருக்காக ஒரு சின்ன சவால் ஒன்றை உருவாக்கினேன். ''50 Books Challenge"

இந்த சவால் மிக எளிமையானது. இன்றுதான் சவாலைத் தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இன்றிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூகவலைதளங்களை பர்சனல் விஷயங்களுக்காக பயன்படுத்தாதீர்கள். லாக் ஆஃப் செய்துவிடவும். அடுத்து வரும் நாட்களில் உங்களுக்கு பிடித்தமான 50 நூல்களை வாசிக்க ஆரம்பியுங்கள். 

50 நூல்களையும் முழுமையாக வாசித்து முடிக்கும் வரை ஃபேஸ்புக்கிற்கு திரும்பாதீர்கள். 50நூல்களையும் ஒரே நாளில் வாசித்தாலும் சரி ஒருவருடத்தில் வாசித்தாலும் சரி... ஆனால் முழுமையாக 50நூல்களையும் வாசித்து முடித்த பிறகுதான் மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு திரும்பவேண்டும். திரும்பியதும் அந்த 50நூல்களின் பட்டியலையும் வெளியிடுங்கள். அவ்வளவுதான் 50புக்ஸ் சேலஞ்ச். 

இது கொஞ்சம் கடினமான சவால்தான் என்றாலும். நிச்சயம் நல்ல பலன் தரும். கவனசிதறடிப்பு பிரச்சனையிலிருந்து மீண்டுவர உதவும். நண்பர்கள் சிலர் அதை இப்போதும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒல்லி ஒல்லியான நூல்களை கூட தேர்ந்தெடுத்து படித்து முடித்துவிட்டு இங்கே ஓடிவந்துவிடலாம். ஆனால் 50 மஸ்ட்டு. இதன்மூலம் பழையபடி வாசிப்புப்பழக்கம் அதிகரிக்கும், ஒரு சவாலை செய்து முடித்தோம் என்கிற திருப்தி, ஃபேஸ்புக் பிடியிலிருந்து சிறிய விடுதலை என நிறைய பலன்கள் கிடைக்கும். 

இது ஒருவகையான மனதிற்கான Detoxதான். எல்லோருக்குமே இதுத் தேவைப்படாது. தேவைப்படுபவர்கள் செய்துபார்க்கலாம். இந்த சவாலில் நீங்களேதான் உங்களுக்கு அம்பயர். நீங்களேதான் உங்களை கண்காணித்து வழிநடத்த வேண்டும். 

எனவே ஒரு சுயபரிசோதனை முயற்சியாக நான் இன்றிலிருந்து 50Books Challange ஐ தொடங்குகிறேன். 50நூல்களை வாசித்துமுடித்துவிட்டு இங்கே திரும்புகிறேன். என்னோடு நண்பர்கள் விரும்பினால் இணையலாம். 
அதுவரை டாட்டா பைபை.... 

- அதிஷா,
பத்திரிகையாளர்

December 11, 2012

பால் வெள்ளைக் காகிதம்!

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமானவளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது ‍ 'நான் பிறக்கும் பொழுதுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும் நான் இவ்வாறே தூய்மையாக இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலனாக்கிலும் பரவாயில்லை. பொறுத்துக்கொள்வேன். ஆனால் கறுமையின் இருள் கைகள் என்னைத் தொட அனுமதிக்கப்பட்டேன்.  தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில் கூட வரமுடியாது.'

இந்தப் பேச்சைக் கேட்ட மைப்புட்டி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுக்கட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன.  அவையும், அந்த காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்!

‍கலீல் ஜிப்ரான், மிட்டாய் கதைகளிலிருந்து....