> குருத்து: பிடித்த கவிதைகள்
Showing posts with label பிடித்த கவிதைகள். Show all posts
Showing posts with label பிடித்த கவிதைகள். Show all posts

August 8, 2022

அத்தை மகள்கள்


அத்தை மகள்கள்

வெறும் பெண்கள் அல்ல;
காலமாணிகள்.

நாற்பதுகளின் அத்தை மகள்கள்
கை சூப்புவதை மறந்ததும்
தாலி கட்டிக் கொண்டார்கள்.
முதல் விடாய் முடிந்ததுமே
கர்ப்பமானார்கள்.
பாதிப் பேர் ஏதோ ஒரு பிரசவத்தில்
செத்துப் போனார்கள்.
மீதிப் பேர்
வெள்ளைச் சேலை உடுத்தி
நம் கண்பார்வை படாத
மூலைகளில் முடங்கிக் கிடந்தார்கள்.

அறுபதுகளில் ,
அத்தை மகள்களுக்கும்
நமக்கும் இடையே
ஒரு கதவு இருந்தது.
அவர்களின்
கோபம்
சம்மதம்
வெட்கம்
எல்லாமே
அந்தப் பக்கம்தான்.
எழுதப்படாத கவிதைகளுக்கு
நாம் இங்கிருந்து விரிவுரை எழுதினோம்.

எழுபதுகளில்
அந்தக் கதவை யாரோ திறந்து விட்டார்கள்.
அதே அத்தை மகள்கள்
நாம் பார்க்க வெட்கப்பட்டார்கள்
கோபப்பட்டார்கள்
நமக்குத் தெரியாமல் கண்ணீர் விட்டார்கள்.

எண்பதுகளில்,
கிணற்றடியில்
மரத்தடியில்
ஆற்றங்கரையில்
அத்தை மகள்கள்
காதலர்களோடு
கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்.

தொண்ணூறுகளில்,
சித்தி வீட்டுக்குப் போவதைப் போலவே
அத்தை வீடுகளுக்கும் போனோம்.
கூட வந்து போகும்
நண்பர்களில் ஒருத்தனையே
ரூட் விட்ட அத்தை மகள்கள்
தைரியமாய்
நம்மிடமே கடிதம் கொடுத்தனுப்பினார்கள்.
சம்பந்தமில்லாத வேறொருவன்
தாலி கட்டி கூட்டிப் போகையில்
'அவனை அழாமப் பாத்துக்க'என்று சொல்லி நம்மை அழ வைத்தார்கள்.

இரண்டாயிரங்களுக்குப் பிறகு
எல்லாம் மாறி விட்டது.
நேற்றிரவின் கனவில் ,
காதலைச் சொன்னமுறைப் பையனை
குழந்தையாக்கித் தொட்டிலில் போட்டு
ஓர் அத்தை மகள்
'இன்செஸ்ட்டெல்லாம் தப்பு ப்ரோ '
என்று மெல்லிய குரலில்
தாலாட்டிக் கொண்டிருக்கிறாள்.

- * மானசீகன் *

February 16, 2022

எனக்கு பயமாக இருக்கிறது!


 நீங்கள் மழையை நேசிக்கிறீர்கள்

என்று சொல்கிறீர்கள்
ஆனால் அதன் கீழ் நடக்க
ஒரு குடையைப் பயன்படுத்துகிறீர்கள்

நீங்கள் சந்திரனை நேசிக்கிறீர்கள்
என்று சொல்கிறீர்கள்
ஆனால் அது பிரகாசிக்கும் போது
நீங்கள் உங்கள் தங்குமிடங்களில்
அடைந்து கொள்கிறீர்கள்

நீங்கள் காற்றை நேசிக்கிறீர்கள்
என்று சொல்கிறீர்கள்
ஆனால் அது வரும்போது
உங்கள் ஜன்னல்களை மூடி விடுகின்றீர்கள்
அதனால்தான்

நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்
என்று சொல்லும்போது
எனக்கு பயமாக இருக்கிறது!

August 20, 2019

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…

மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்…
நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புத்தான்…

– கலீல் ஜிப்ரான்

November 15, 2011

இன்றைய நிலவரம்! - கவிதை!


காலுக்குத் தொப்பியும்
தலைக்குச் செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம் வரை உத்தரவு
எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.


கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே
இருந்துவிட்டுப் போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது,
கருணையுடன்…..

தொடர்ந்தும் வாய் வழியாகவே
உண்பதைமாற்றுவது குறித்து
இன்றைய அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்.

ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

உலகிலேயே முதன் முறையாக
தண்டவாளத்தில் பேருந்து,
தார் ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம்,
விமான நிலையத்தில் கப்பல் என்று
அரசு எடுத்துவரும்
ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.


பிரசவ ஆஸ்பத்திரியை
சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும்
திட்டம் படிப்படியாக நிறைவேறும்.

கோன் எவ்வாறோ குடிமக்களும்
அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும்
ஒரே இடத்தில்
நீடித்திருக்க விடமாட்டார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

****

நன்றி: ஆதவன் தீட்சண்யா

முதல் பதிவு: ஜூனியர் விகடன் 13/11/2011 இதழ்

November 8, 2011

முத்தத்தில் துவங்கி....


முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு
எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

யாரும் சொல்லாமலேயே
கற்றுக்கொள்கிறார்கள்
அலுத்துத் தூங்குவதற்கான
உடற்பயிற்சியாக!

- கவிஞர் அ. வெண்ணிலா

*ச. தமிழ்ச்செல்வன் தொகுத்த 'ரெக்கைகள் விரியும் காலம்' புத்தகத்திலிருந்து...

June 6, 2007

ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக - கவிதை

நான் ஒன்றைப் பற்றிப் பேசும்போது
இன்னொன்றைப் பற்றிப்
பேசுவதுபோல இருக்கிறது என்கிறாய்
மெய்தான் -
இந்த நாளில் ஒன்றை விலக்கி
இன்னொன்றைக் காணுவது
இயலாத காரியம்

மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட
தற்கொலைப் போராளியின் உடல்
ஜெருசலம் நகரில் வெடித்துச் சிதறுகிறது
மட்டக்களப்புக்குப் போகையில்
மறிக்கப்படுவோரது அடையாள அட்டைகள்
இஸ்ரேலியப் படையினனிடம்
ஒரு பலஸ்தீனியனரால் நீட்டப்படுகின்றன
திரிகோணமலை முற்றவெளியில்
பொலிஸ் தேடும் சந்தேக நபர்
சிரிநகரில் இந்தியப்படையினரால்
கொண்டு செல்லப்படுகிறார்

பினோஷேயின் சிலியில் காணாமற் போனவர்கள்
சூரியகந்தலிலும் செம்மணியிலும் புதையுண்டார்கள்
கொழும்புச் சோதனைச் சாவடியில்
சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல்நாய்கள்
தடுப்பு மறியலில் கடித்துக் குதறுகின்றன

வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால் அனுமதி மறுக்கப்படுகிறான்
எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது
எல்லாச் சிறைக்கூடத்துச் சுவர்களும்
ஒரேவிதமான அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன

உலகின் எல்லாத் தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்
துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்து கொண்டிருக்கிறான்

யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த
கடப்பாரைகள் வடிக்கப்பட்டன

சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காஸா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கின்றன
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன

கியூபா மீதான அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமல் தடுக்கிறது

புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளுக்ள்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது

காஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த் தொழிலாளிக்காகப் போராடுகிறான்

கொலாம்பியாவில் விரிகின்ற விடுதலைப்போர்
இலங்கை விவசாயிகளின் விமோசனதுக்கானது
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது

ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லா கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன
எனவேதான்
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்


சி. சிவசேகரம், ஈழக்கவிஞர்

- மூன்றாவது மனிதன் தொகுப்பிலிருந்து