> குருத்து: May 2025

May 30, 2025

ஆப்பிரிக்க இலக்கியத்தின் ஜாம்பவான் நுகி வா தியாங்கோ காலமானார்!


”எதிர்ப்பு தான்

உயிருடன் இறப்பதற்கு சிறந்த வழி”

   -  நுகி வா தியாங்கோ

 

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாவல் படித்தது இன்னும் நினைவின் இடுக்குகளில் தங்கியிருக்கிறது. அந்த நாவலின் பெயர் “சிலுவையின் தொங்கும் சாத்தான்”.  

 

ஏகாதிபத்தியங்கள் கென்யாவில் தங்களுக்கு ”சிறந்த” சேவை வழங்கும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு முன்னால்   கென்யாவின் மக்களை எப்படியெல்லாம் திறமையாக ஏமாற்றினோம் என்பதை ஒவ்வொருவராக வந்து தங்களின் கடந்த கால செயல்பாடுகளை விளக்கி நான் தான் ”சிறந்த சேவகன்” என வாதாடுவார்கள்.

 


கடைசியில் மக்கள் எழுச்சிக்கொண்டு எல்லோரையும் துரத்தி அடிப்பது போல முடியும்.   சில நாவல்கள் தான் காலம் கடந்தும் நினைவில் தங்கும்.  அப்ப்டி இந்த நாவல் என் நினைவின் இடுக்குகளில் தங்கிவிட்டது.

 

கென்யாவிற்கு எழுதப்பட்ட இந்த நாவல், அதன் வடிவத்தை எடுத்துக்கொண்டு அப்படியே இந்தியாவிற்கு பொருத்தமுடியும். 1990களில் எளிமையான வடிவத்தில் சிறு சிறு நாடகங்களாக நண்பர்களோடு இணைந்து மேடையேற்றிக்கொண்டிருந்தோம்.   அதன் வரிசையில் இந்த நாடகத்தையும் நிறைவேற்ற முயன்றோம். ஆனால் இயலாது போனது.


”கார்டியன்” இதழில்  அவர் இறந்த செய்தி நேற்று வெளியாகியிருக்கிறது. 1995ல் புற்று நோய் தாக்கி, 2019ல் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். 87 87 வயதாகிறது. நேற்று அவர் இறந்ததாக அவருடைய மகள் அறிவித்துள்ளார்.


1938ல் கென்யாவில் பிறந்துள்ளார். அவருடைய அப்பாவிற்கு நான்கு மனைவிகள். 28 குழந்தைகளில் ஒருவர் இவர். ”கிகி”யூ தான் தாய்மொழி. ஒரு பல்கலை கழகத்தில்  ஆங்கில துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார்.  சிறுகதைகள், நாடகம், நாவல் என பல எழுதியுள்ளார்.   ஒரு நாடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றியதற்காக, சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.

 

ஓராண்டு காலம் தடுப்புக் காவல் சிறையில் இருந்த பொழுது தான் மலம் துடைக்கும் தாளில் ”சிலுவையில் தொங்கும் சாத்தான்” நாவலை எழுதியுள்ளார்.

 


1978ல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, 1982ல் நாடு கடத்தப்பட்டுள்ளார்.  இங்கிலாந்துக்கு சென்றவர் பிறகு அமெரிக்காவிற்கு இடம் பெயர்கிறார். அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்காக தொடர்ந்து சிந்தித்தவர். எழுதியவர், செயல்பட்டவர்.

 

அவருடைய பிற நாவல்கள் அழாதே குழந்தாய் (Weep not child), இடைப்பட்ட ஆறு (The river between), கோதுமை தானியமணி (Grain of Wheat), இரத்த இதழ்கள் (Petals of Blood).

 

உலக நாடுகளை தன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளால் ஆக்கிரமிப்பு செய்யும் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து நிற்கும் மக்கள் போராட்டங்களில் நிச்சயம் இவருடைய படைப்புகள் முக்கிய ஆயுதம்.

 

அவருக்கு நமது அஞ்சலி!

 

#Ngugi wa thiongo (1938 – 2025)

 


”சிலுவையில் தொங்கும் சாத்தன்” நாவலை அமரந்த்தா – சிங்கராயர் தமிழில் அருமையாக மாற்றம் செய்துள்ளார்கள். பக்கங்கள் 432. 

 

May 29, 2025

தமிங்கிலிஷ்


ஜி.எஸ்.டி குறித்த ஒரு அறிமுக வகுப்பு மாணவர்களுக்காகவும், தொழிலாக செய்யும் ஆர்வம் கொண்டவர்களுக்காகவும் பத்து நாட்கள் வகுப்பு திட்டமிடப்பட்டது.

 

பொதுவாக ஆங்கிலத்தில் பல வகுப்புகள் நடத்தப்படுகின்றன.   தமிழில் நடத்தப்படும் மாணவர்கள் குறைவு. ஆகையால் அவர்களுக்கு கவனம் கொடுக்கலாம் என தமிழில் வகுப்பு எடுக்க அதன் ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். அதையே தெரிவிக்கவும் செய்தார்கள்.   பிற மாநிலங்களில் இருந்து விசாரிக்கும் பொழுது, தமிழில் கவனம் கொடுக்கிறோம் என தெரிவித்து அவர்களை தவிர்த்தும்விட்டார்கள்.

 

கடந்த இரண்டு நாள்கள் வகுப்பில் தமிழில் பிபிடி தயாரித்து, தமிழில் விளக்க ஆரம்பித்ததும்,   ஆங்கிலத்தில் எடுங்கள் என சிலர் கேட்க ஆரம்பித்தார்கள்.   அதன் ஒருங்கிணைப்பாளர்கள்  தமிழில் எடுப்பது தான் திட்டம்.  அதற்கு தான் கவனம் கொடுக்கிறோம் என விளக்கம் கொடுத்தாலும்… மீண்டும் மீண்டும் எங்களுக்கு புரியவில்லை என சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

தமிழில் எடுக்க விரும்புவர்கள் வகுப்பில் ஒன்றிரண்டு பேர் தமிழிலேயே எடுங்கள் என அவர்களும் சொல்ல ஆரம்பித்தார்கள். தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து அதன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு தமிழிலேயே எடுங்கள் என கேட்டும் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் வகுப்பு நடக்கும் பொழுது   மாறி மாறி இப்படிக் கேட்டுக்கொண்டதற்கிணங்க.. இரண்டாவது நாள், மூன்றாவது நாளில் இப்பொழுது என்ன நடைமுறைக்கு வந்து இருக்கிறது என்றால்… பிபிடியை  ஆங்கிலத்தில் கொடுப்பது!   தமிலிங்கிஷில் விளக்குவது என முடிவு  எதுவும் எடுக்காமலேயே அமுலுக்கு வந்திருக்கிறது.

 

இது ஒரு சமூக பிரச்சனை.  ஆங்கில வழியில் படிக்கும் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. தாய்மொழியான தமிழும் தெரியவில்லை. அவர்களுக்கு இயல்பான தமிழ் வார்த்தைகள் கூட அவர்களுக்கு பரிச்சயமாக இருக்கவில்லை. நாம் தமிழில் ஏதாவது சொன்னால்… நம்மைப் பார்த்து வியந்து… தூய தமிழில் பேசுகிறீர்கள் என்கிறார்கள். 

 

ஜம்ப் - ஆங்கிலம்

ஜம்ப் பண்ணு - தமிழ்

 

சென்டர் - ஆங்கிலம்

நடு சென்டர் - தமிழ்

 

கேட்ச் - ஆங்கிலம்

கேட்ச் புடி - தமிழ்

 

டேமில் - ஆங்கிலம்

தமில் - தமிழ்

 

டிச் - ஆங்கிலம்

டிச்சுக் குழி - தமிழ்

 

# முப்பது நொடிகளில் ஆங்கிலம்

 

என ஷான் கருப்புசாமி இன்று ஒரு பதிவைப் போட்டிருந்தார்.  யதார்த்தம் இதுவாக தான் இருக்கிறது. :(

 

May 28, 2025

தோழர் ஜவஹர்


கடந்த ஒரு வார காலமாக அவரது நினைவு மலரில் பல ஆளுமைகள், மனிதர்கள் எழுதியதை மீண்டும் வாசித்ததன் மூலம் அவரது நினைவலைகள் மனதில் ஓயாது அடித்துக்கொண்டே இருக்கின்றன.

 

இனியனுக்கு புருஸ்லீயை அறிமுகப்படுத்தி… மறவாமல் சிடிக்களையும் வாங்கி மகிழ்வித்திருக்கிறார். இனியன் ஓரிடத்தில் “சிறுவர்களை கூட தனக்கு சமமாக நடத்துவார்” என குறிப்பிடுகிறான்.

 

”ஜவஹர் தாத்தாவின் முத்தம் – தாத்தாவின் முத்தம் அலாதியானது. அவ்வளவு அன்பு மிகுந்தது. அவ்வளவு வாஞ்சையானது. நரைத்த மீசை குத்தும். ஆனாலும் இன்னொரு முத்தத்திற்காக ஏங்கும்” என்கிறார் பேத்தி வானவில்.

 

ஒருமுறை இராஜீவ்காந்தி போகும் பாதையில் கையசைப்பதற்காக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை நிற்க வைத்திருக்கிறார்கள். அவர் வர தாமதமாகிறது.  ஆனால் உட்கார வைக்கவில்லை. ஏன் என கேட்டால், வரும் பொழுது அவசரமாக எழ சொல்லமுடியாது என மடத்தனமாய் பதில் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிக்கையாளர் சுப்பு சண்டையிட கிளம்புவதைப் பார்த்து… உடன் இருந்த ஜவஹர் தோழர் அவர்களிடம் போய் ஒன்றை சொல்ல… குழந்தைகளை அமர வைத்திருக்கிறார்கள்.   ”என்ன சொன்னீங்க?” என கேட்டதற்கு “நாங்க காங்கிரஸ் தான். தலைவர் வருவதற்கு தாமதமாகும்.” என சமயோசிதமாக சொன்னாராம். ஜவஹர் பொய் சொல்லமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தியையும் பதிவு செய்கிறார்.

 

ஒரு விசயம் குறித்து கேட்கும் பொழுது… குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதை போல உண்மையைத் தான் தோழர் பகிர்ந்துகொள்வார்.    அதை பலமுறை நானே உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே சில விசயங்களை அவரிடம் கேட்காமல் தவிர்த்திருக்கிறேன்.

 

தொழிலாளர் தோழர்கள் மீது எப்பொழுதும் அவருக்கு பிரியமும் தோழமையும் உண்டு.  “பொதுவாக தோழர் தன்னுடைய வேலைகளை ஒழுங்குபடுத்தும் எண்ணத்தில், வாருங்கள் என சொல்வார்.  ஆனால், எங்கள் இருவருக்கு மட்டும் விதிவிலக்கு.  இருவரும் இருபத்து நான்கு மணி நேரமும் தன் வீட்டுக் கதவைத் தட்டலாம், வந்து பேசலாம் என்பார்.  அதே போல வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தோழரைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவோம்” என்கிறார் தோழர் வெள்ளமுத்து.

-  

ஜவஹர் தோழர் மீதான அன்பும், தோழமையும் எனக்கு அதிகம் தான்.  ஆனால் அதை வெளிப்படையாக செயலிலோ, வார்த்தைகளிலோ காட்டிக்கொண்டதில்லை. ஆனால் அதை அவர் உணர்ந்திருந்தார். அவரிடம் இருந்து கற்றதும், பெற்றதும் அதிகம்.  அந்த அன்பில் ஏதும் சின்ன முரண் கூட வந்துவிடக்கூடாதே என்பதற்காகவே மிகுந்த நெருக்கம் கொள்ளாமல், தள்ளியே இருந்து… நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவரை சந்தித்து பேசிவருவதுண்டு.   அப்படி செய்திருக்க வேண்டியதில்லை என இப்பொழுது தோன்றுகிறது. 

 

பொதுவுடைமை தோழர்கள், திராவிட இயக்க தோழர்கள்,   தொழிலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தோழமை குடும்பத் தோழர்கள் என எல்லோரிடத்திலும் அன்பும், தோழமையும் பாராட்டி வந்திருக்கிறார்.   அதற்கு அத்தனை மனிதர்களுடைய பல்வேறு அனுபவங்கள் பதிவாகியிருக்கின்றன. அந்த நினைவு மலரை இப்பொழுது கையில் எடுத்தாலும், மணம் வீசுகிறது.

 

கொரானா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக்கொண்டிருந்தது.  மரணம் எங்கும் அலைந்து திரிந்துகொண்டிருந்த காலமிது. தோழர் மரணித்த நாளில், இடுகாட்டுக்கு போயிருந்தோம்.   எப்பொழுதும் புன்னகையுடன் “என்னப்பு!” என பிரியத்துடன் அழைக்கிற தோழர், அன்று ஒரு ஸ்டிரச்சரில் வெளியே படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரை எரியூட்டுகிற காட்சியை பார்க்கிற தெம்பு மனதில் இல்லை. கிளம்பி வந்துவிட்டோம். 

- 

- 28/05/2021 - இன்று அவரது நான்காம் நினைவு நாள்

May 25, 2025

Mission Impossible – The final Reckoning


ஒரு சிக்கலில் மாட்டி… கடுமையான தண்டனைகுள்ளானவர்களை பெருந்தன்மையுடன் காப்பாற்றி… அவர்களை அடையாளம் இல்லாதவர்களாக  (Ghost) மாற்றி… அவர்களுக்கு  உளவு வேலைகளை கொடுக்கிறது அமெரிக்க உளவு பிரிவு.

 

அந்த பிரிவுக்கு பெயர் IMF (Impossible Missions force). அதாவது மிக ஆபத்துள்ள, மிக முக்கிய வேலைகளை இரகசியமாக செய்யும் குழுவிற்கு பெயர்.  அந்த குழுவின் தலைவன் தான் நாயகன்.

 

இந்தமுறை நவீன உலகுக்கு தகுந்தமாதிரி, ஒரு வேலைக்காக உருவாக்கிய AI தனித்து சிந்தித்து, உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறது.  அந்த AI யை சில நாடுகளும், சில கும்பல்களும் தங்கள் கைகளுக்குள் கொண்டுவந்துவிட்டால், உலகை ஆளலாம் என நினைக்கிறார்கள்

 

ஆனால், இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒன்று யார் கையிலும் கிடைத்துவிடக்கூடாது அதை அழித்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள் நாயகன் குழு.  ஆக, ஆள், அம்பு, படை என எல்லாமும் வைத்திருக்கும் வில்லன்களும், நாடுகளும் நாயகன் குழுவை துரத்த ஆரம்பிக்கிறார்கள்.

 

இவர்களைத் தாண்டி நாயகன் குழு  அந்த AIயை அழித்தார்களா என்பது முழு நீளக்கதை.

 


கன்னித்தீவில் வரும் மந்திரவாதி மூசாவின் உயிர் ஏழு கடல், ஏழு மலைகள் தாண்டி ஒரு கிளியின் உடலுக்குள் இருக்கும்.  அவனை கொல்லவேண்டுமென்றால், பெரும்போராட்டம் இல்லாமல் சாத்தியமில்லை.

 

அது போல AI இருக்கும் இடமும் மிக சிக்கலான இடம். அங்கு போவது அத்தனை சாத்தியமில்லாத இடமும் கூட.  ஆகையால், அதை பேசி, பேசி விளக்கி, அதற்கான உதவிகள் பெற்று, தயாராகி அங்கு போவதற்குள் நாயகனை விட நாமே களைத்துப் போய்விடுகிறோம்.

 

முதல் பாகத்தைப் போல விறுவிறு என்றெல்லாம் இருக்காது. இந்தப் பாகத்தின் டிரைலர் பெரிய விறுவிறுப்போடு வெளியிட்டிருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்போடு போனால் ஏமாந்து தான் போவோம்.

 

நாயகன் டாமுக்கு நிறைய வயதாகிவிட்டது.  ஓடிக்கொண்டே இருந்தால் கூட தெரியாது.  படம் நிதானமாக நகர்வதால், நன்றாகவே வயது முதிர்வை உணரமுடிகிறது.  மற்ற நடிகர்களும் கொடுத்த பாத்திரத்தை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

 

இருந்தாலும் எனக்கு படம் பிடித்தது.  திரையரங்குகளில் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள். நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதையும் சொல்லுங்கள்.

May 24, 2025

லெவன் தமிழ் (2025) ஒரு நல்ல கிரைம் திரில்லர்


30 வயதுக்கு மேற்பட்ட ஆட்கள் சென்னைக்கு வெளியே தலையில் சுடப்பட்டு, பெட்ரோல் ஊத்தி கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.  யாரும் காணாமல் போனதாய் புகார் கொடுக்கவில்லை. எரித்து கொல்லப்பட்டதால் அடையாளம் தெரியவில்லை. ஏன் கொலை செய்யப்படுகிறார்கள் என எந்தவித தடயமும் கிடைக்காததால், வழக்கு முன்னேறாமல் தேங்கி நிற்கிறது.


நாயகன் அசிஸ்டெண்ட் கமிசனராக இருக்கிறார். திறம்பட செயல்படுவதால், இந்த வழக்கு இவரிடம் வந்து சேர்கிறது.

துவக்கத்தில் தடுமாறினாலும், கிடைத்த ஒரு தடயத்தை வைத்துக்கொண்டு ஏன் இந்த கொலைகள் நடக்கின்றன என்பதை கண்டுப்பிடிக்கிறார். தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைப் பிடித்தார்களா? ஏன் இந்த கொலைகள் என்பதை உணர்வுபூர்வமாக ஒரு பிளாஷ்பேக் மூலம் சொல்லிமுடிக்கிறார்கள்.

****


துவக்க காட்சிகள் எல்லாம் ராட்சசனை நினைவுப்படுத்தினாலும், பின்னாடி சொல்லப்படும் பிளாஷ் பேக் காட்சிகளால் அதை சரி செய்திருக்கிறார்கள்.

பொதுவாக நல்ல விசயங்கள் வாழ்வில் நிறைய நடைபெற்றாலும், அவற்றை கவனம் கொடுத்து நினைவு வைத்துக்கொள்வதிற்கு நம்மில் பலருக்கு மனத்தடை இருக்கிறது. ஆனால் சோகமான, பாதிக்கப்பட்ட சம்பவங்கள் என்றென்றைக்கும் மரத்தில் ஆணி அடித்தாற் போல தங்கிவிடுகிறது. எப்பொழுது நினைவுப்படுத்தினாலும், ஒரு பழைய படத்தைப் போல மனம் மனதில் ஓட்டிப்பார்க்க துவங்கிவிடுகிறது.


தவறுகள், தப்புகள் நடக்கும் பொழுது, அதற்கான நீதி தாமதமாக (!) கிடைத்துவிட்டால் கூட மனம் சமாதானமடைந்துவிடும். நீதி கிடைக்காத பொழுது, மனதில் ஒரு பெரிய வடுவாகிவிடுகிறது.

படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் ஆந்திர நெடி குறைவு என்பதால், நிதானமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நகர்கிறது. நாயகனான நவீன் சந்திரா  மொத்தப்படத்தையும் இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு தாங்குகிறார். கதாநாயகிக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. இடையே வந்து போகிறார். இமான் இசைத்திருக்கிறார். ஆங்கிலத்தில் ஒரு பாடல் கூட வருகிறது.  லோகேஷ் அஜிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். முதல்படம் என நினைக்கிறேன். எடுத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை.  இந்தப் படத்திற்கு ஒரு நல்ல தமிழ் பெயராக வைத்திருக்கலாம்.

திரில்லர் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

May 17, 2025

Final Destination - Blood lines (2025) துரத்தும் மரணம்


ஒரு கொடூர விபத்து நடப்பது ஒருவருக்கு மட்டும் காட்சிகளாக முன் அறிவிப்பு வரும். முன் அறிந்தவர் பதட்டமாகி.. அந்த விபத்தைத் தடுக்க…. பலர் செத்து சிலர் அதிருஷ்டவசமாக காப்பாற்றப்படுவார்கள்.

”அவர்கள் எல்லாம் சாகவேண்டிய ஆட்கள். அவர்கள் பிழைத்தால் விட்டுவிடுவேனா” என மரணம் வரிசை வரியாக துரத்தும். தப்பித்தார்களா? பிழைத்தார்களா? என்பது இந்த படங்களின் சாரம்.

****

இப்பொழுது இந்தப் படத்துக்கு வருவோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஸ்கை வியூ உணவகம், பார் ஒன்றை துவக்குகிறார்கள். அதில் கலந்துகொள்ள காதல் ஜோடி செல்கிறது.

அங்கு காதலிக்கு விபத்துக்கான முன் அறிவிப்பு காட்சிகள் வருகின்றன. வழக்கம் போல பலரையும் காப்பாற்றிவிடுகிறார்.

2025 வந்துவிடுவோம். இப்பொழுது. இந்த காட்சி நாயகிக்கு கனவுகளாக வந்து தொடர்ந்து தொல்லைப்படுத்துகிறது. தூக்கம் தொலைந்து அன்றாட வேலைகளை செய்யவே சிரமப்படுகிறார்..

ஏன் என புரியாமல் வீட்டில் கேட்கும் பொழுது... (அம்மாவின் அம்மாவான) பாட்டி அந்த நிகழ்வுக்கு பிறகு துரத்தும் மரணத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வாழ்கிறார். ”அவர் மிகவும் பயமுறுத்துவார். அவரைச் சந்திக்காதே!” என எச்சரிக்கிறார்கள்.

ஆனால் போய் சந்திக்கிறார். அந்த விபத்தில் இருந்து தப்பித்த எல்லோரும் வரிசையாக … குறிப்பாக அவர்களுடைய சந்ததியினரும் கொல்லப்படுகிறார்கள். நம்ம குடும்பத்துக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆகையால் கவனமாய் இருங்கள் என எச்சரிக்கிறார்.

பிறகு என்ன ஆனது? மரணத்தின் பிடியிலிருந்து தப்பித்தார்களா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லியிருக்கிறார்கள்.
***

நம்ம எமன், சித்திரகுப்தன் கணக்கு தான். அங்கு விதி என சொல்லாமல், செத்துடனும்னா செத்துடனும்! என மரண விளையாட்டை எடுத்திருக்கிறார்கள்.

ஒரு விபத்து. அதில் தப்பித்தவர்கள் வரிசையாக கொல்லப்படுவார்கள். ஏதாவது ஒருவர் எதையாவது செய்து தப்பிப்பார். அப்படி தப்பித்தவர் குடும்பத்தை விரட்டி கொல்வதாக இந்த பாகத்தில் யோசித்திருக்கிறார்கள். நல்ல பேய் யோசனை தான்.

ஒரு பேய் படத்தில் நம் கையை வைத்தே நம் கழுத்தை நெறித்து கொல்ல வைத்துவிடும். எங்காவது உயரத்தில் இருந்து எளிதாக தள்ளிவிட்டு கொ*ன்றுவிடும். ஆனால், இந்த படங்களில் மரணம் எல்லா சாத்தியங்களையும் அறிவியல்பூர்வமாக பயன்படுத்தும் என்பது தான் முரண் நகைச்சுவை. 🙂

அதே போல ஏகப்பட்ட கலாட்டா! ஏகப்பட்ட ரத்தம்! கொஞ்சம் டீசண்டா, கொலை செய்யக்கூடாதா! எனவும் மரணத்தை கேட்க வைத்துவிடுகிறது. 🙂
ரத்தம் படம் பார்க்கும் நம் மீதும் தெறிப்பதால் 18க்கு மேல் தான் பார்க்கலாம் என சான்றிதழ் தந்திருக்கிறார்கள். இளகிய மனதுகாரர்கள் தவிர்ப்பது நலம்.
இந்த சீரிசில் இரண்டாம் பாகத்தைத் தான் முதன் முதலில் பார்த்தேன். பிடித்திருந்தது. பிறகு அடுத்தடுத்த பாகங்களில் ஆர்வம் இல்லாது செய்துவிட்டார்கள். பதினான்கு வருடங்கள் கழித்து வந்திருக்கிறார்கள்.
இந்தப் படம் ஓக்கே தான். திரையரங்குகளில் தமிழ் மொழி மாற்றம் (Dubbed) செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.