”எதிர்ப்பு தான்
உயிருடன் இறப்பதற்கு சிறந்த
வழி”
25 ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு நாவல் படித்தது இன்னும் நினைவின் இடுக்குகளில் தங்கியிருக்கிறது. அந்த நாவலின்
பெயர் “சிலுவையின் தொங்கும் சாத்தான்”.
ஏகாதிபத்தியங்கள்
கென்யாவில் தங்களுக்கு ”சிறந்த” சேவை வழங்கும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வருகிறார்கள்.
அவர்களுக்கு முன்னால் கென்யாவின் மக்களை எப்படியெல்லாம்
திறமையாக ஏமாற்றினோம் என்பதை ஒவ்வொருவராக வந்து தங்களின் கடந்த கால செயல்பாடுகளை விளக்கி
நான் தான் ”சிறந்த சேவகன்” என வாதாடுவார்கள்.
கடைசியில் மக்கள்
எழுச்சிக்கொண்டு எல்லோரையும் துரத்தி அடிப்பது போல முடியும். சில நாவல்கள் தான் காலம் கடந்தும் நினைவில் தங்கும். அப்ப்டி இந்த நாவல் என் நினைவின் இடுக்குகளில் தங்கிவிட்டது.
கென்யாவிற்கு எழுதப்பட்ட
இந்த நாவல், அதன் வடிவத்தை எடுத்துக்கொண்டு அப்படியே இந்தியாவிற்கு பொருத்தமுடியும்.
1990களில் எளிமையான வடிவத்தில் சிறு சிறு நாடகங்களாக நண்பர்களோடு இணைந்து மேடையேற்றிக்கொண்டிருந்தோம். அதன் வரிசையில் இந்த நாடகத்தையும் நிறைவேற்ற முயன்றோம்.
ஆனால் இயலாது போனது.
”கார்டியன்” இதழில் அவர் இறந்த செய்தி நேற்று வெளியாகியிருக்கிறது. 1995ல் புற்று நோய் தாக்கி, 2019ல் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். 87 87 வயதாகிறது. நேற்று அவர் இறந்ததாக அவருடைய மகள் அறிவித்துள்ளார்.
1938ல் கென்யாவில்
பிறந்துள்ளார். அவருடைய அப்பாவிற்கு நான்கு மனைவிகள். 28 குழந்தைகளில் ஒருவர் இவர்.
”கிகி”யூ தான் தாய்மொழி. ஒரு பல்கலை கழகத்தில்
ஆங்கில துறையில் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்கிறார். சிறுகதைகள், நாடகம், நாவல் என பல எழுதியுள்ளார். ஒரு நாடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றியதற்காக,
சிறையில் தள்ளப்பட்டுள்ளார்.
ஓராண்டு காலம்
தடுப்புக் காவல் சிறையில் இருந்த பொழுது தான் மலம் துடைக்கும் தாளில் ”சிலுவையில் தொங்கும்
சாத்தான்” நாவலை எழுதியுள்ளார்.
1978ல் சிறையில்
இருந்து விடுவிக்கப்பட்டு, 1982ல் நாடு கடத்தப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு சென்றவர் பிறகு அமெரிக்காவிற்கு
இடம் பெயர்கிறார். அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலைக்காக தொடர்ந்து சிந்தித்தவர்.
எழுதியவர், செயல்பட்டவர்.
அவருடைய பிற நாவல்கள்
அழாதே குழந்தாய் (Weep not child), இடைப்பட்ட ஆறு (The river between), கோதுமை தானியமணி
(Grain of Wheat), இரத்த இதழ்கள் (Petals of Blood).
உலக நாடுகளை தன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகளால் ஆக்கிரமிப்பு செய்யும் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து நிற்கும் மக்கள் போராட்டங்களில் நிச்சயம் இவருடைய படைப்புகள் முக்கிய ஆயுதம்.
அவருக்கு நமது
அஞ்சலி!
#Ngugi wa thiongo
(1938 – 2025)
”சிலுவையில் தொங்கும்
சாத்தன்” நாவலை அமரந்த்தா – சிங்கராயர் தமிழில் அருமையாக மாற்றம் செய்துள்ளார்கள்.
பக்கங்கள் 432.