> குருத்து: Benefits to Employees under ESIC Scheme - ஜூம் கூட்ட அனுபவம்

August 9, 2024

Benefits to Employees under ESIC Scheme - ஜூம் கூட்ட அனுபவம்


”இ.எஸ்.ஐ திட்டத்தில் தொழிலாளர்களுக்கான நலன்கள் குறித்து!” கடந்த (13/07/2024) சனிக்கிழமையன்று ஜூம் கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. நமது GSTPS உறுப்பினர்களும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் கலந்துகொண்டார்கள். இந்த முறை கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் என பதிவு அவசியம் என தெரிவித்தும், திரளாக கலந்துகொண்டது இ.எஸ்.ஐ குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.


கூட்டத்தை செயலர் பாலாஜி அனைவரையும் வரவேற்று துவங்கி வைத்தார். தலைவர் செந்தமிழ்ச்செல்வன், பேச்சாளரை அறிமுகப்படுத்தும் பொழுது, “சொசைட்டியில் உற்சாகமாக செயல்படும் உறுப்பினர் முனியசாமி. நம் சொசைட்டியின் சமூக வலைத்தளப் பக்கங்களை அவர் தான் பராமரித்து வருகிறார். அவர் தொடர்ந்து பேசவேண்டும்” என வாழ்த்து தெரிவித்தார்.

”கடந்த ஆண்டு, தலைவர் பி.எப். இ.எஸ்.ஐ குறித்து பேச சொன்ன பொழுது, ஒரு பறவைப் பார்வையில் இரண்டு தலைப்புகளிலும் பேசினேன். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக இ.எஸ்.ஐ குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக பேசலாம்.

பிரிட்டிஷ் காலத்திலேயே தொழிலாளர்களுக்கான இப்படி ஒரு மருத்துவ வசதி தரவேண்டும் என விவாதித்தார்கள்.

1948ல் சட்டமாக்கப்பட்டு, 1952ல் உ.பி. கான்பூரில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு துவங்கி வைத்தார்.

இப்பொழுது மனிதனுடைய சராசரி வாழ்வு 70 என உலக சுகாதார மையம் சொல்கிறது. ஆனால், 1950களில் 35 என்று தான் இருந்தது. காரணம் மலேரியாவால் ஆண்டுக்கு பத்து லட்சம், காச நோயால் ஆண்டுக்கு 2.25 லட்சம், பிரசவத்தில் பெண்கள் ஒரு லட்சத்துக்கு 2000 பேர் வரை இறந்தார்கள். 70 ஆண்டு மருத்துவ துறையின் வளர்ச்சியில் எல்லாவற்றையும் மட்டுப்படுத்தியதில்… இ.எஸ்.ஐ.யும் நல்ல பங்களித்திருக்கிறது.

இந்தியா முழுவதும் மருத்துவமனைகள், டிஸ்பன்சரிஸ் என இ.எஸ்.ஐ. தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது.

ரூ. 21000 வரை சம்பளம் பெறுபவர்கள் இந்தத் திட்டத்தில் பலன்பெறுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25000 வரை செலுத்தலாம்.

தொழிலாளர்களுக்கு உடல் நல குறைபாடு, அறுவை சிகிச்சைகள், இ.எஸ்.ஐயில் செய்ய இயலாத மருத்துவத்தை தனியார் மருத்துவமனைகளும் பங்களிக்க அவர்களோடு ஒப்பந்தம். வேலைக்கு செல்ல இயலாத காலத்தில் பணபலன்கள், பகுதி ஊனம், முழுமையான ஊனம் ஏற்பாட்டால் ஓய்வூதிய உதவி, தொழிலாளி இறந்து போனால், குடும்பத்தினருக்கு உதவி, இறப்புச் சடங்குகளை செய்ய ரூ. 15000 என அதனுடைய செயல்பாடுகள் ஆரோக்கியமானவை.

ஒவ்வொரு நிறுவனத்தில் சேரும் பொழுதும், தொழிலாளர்கள் ஒரே எண்ணை கொண்டு, தொடர்ந்து பணம் செலுத்துவது தான் சரியானது. இல்லையென்றால், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவம் என பல நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் கிடைப்பதற்கு காலம் தாமதமாகும். ஒரு தொழிலாளிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்பதற்கு, இ.எஸ்.ஐ ஒரு தளமே உருவாக்கி தந்துள்ளது.

சிறப்பு ஒரு பக்கம் என்றால், அதன் போதாமைகளும் உண்டு. மருத்துவமனைகள் இன்னும் நிறைய திறக்கப்படவேண்டும். திருப்பூரில் 1.75 லட்சம் தொழிலாளர்கள் வருடந்தோறும் 85 கோடி செலுத்துகிறார்கள். கடந்த பல வருடங்களாக, 45 கிமீ தூரத்தில் கோவைக்கு சென்று மருத்துவம் பார்க்கிறார்கள். தொடர்ச்சியான கோரிக்கைக்கு பிறகு, சமீபத்தில் தான் மருத்துவமனையை திறந்துள்ளார்கள். சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி, திண்டுக்கல், வாணியம்பாடி, நாகர்கோவில் என பல ஆண்டுகளாக இடம் தேடுகிறார்கள். அடிக்கல் நடுகிறார்கள். ஆனால் தாமதிக்கிறார்கள். திறக்கப்பட பல ஆண்டுகள் மக்கள் காத்திருக்கிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாட்டின் உற்பத்தியும் கூடும். ஆகையால் கூடுதல் நிதி ஒதுக்கி இதையெல்லாம் சாத்தியப்படுத்தவேண்டும்.

இந்தியாவில் இ.எஸ்.ஐ சார்பில் 10 மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. (இதில் சென்னையில் , கோவை என இரண்டு இருக்கின்றன.) 437 MBBS இருக்கைகளும், 28 பல் மருத்துவ இருக்கைகளும் இருக்கின்றன. இதில் இ.எஸ்.ஐ. பணிபுரிகிற தொழிலாளர்களுக்கென்று இட ஒதுக்கீடும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பல தொழிலாளர்கள் இ.எஸ்.ஐயை பயன்படுத்துவதில்லை. அதில் கிடைக்கும் பலன்கள் அதிகம். அதைப் பயன்படுத்திக்கொண்டவர்கள், தொடர்ந்து செல்கிறார்கள். ஆகையால் பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து பேச உற்சாகம் அளிக்கும் தலைவர் அவர்களுக்கும், இ.எஸ்.ஐ சட்டம், நடைமுறை குறித்து கற்றுக்கொடுத்து, சந்தேகம் கேட்கும் பொழுதெல்லாம் தீர்த்து வைக்கும் சீனியர் வில்லியப்பன் அவர்களுக்கும், கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும் நன்றி சொல்லி, உரையை முடித்தார்.

பங்கேற்பாளர்கள் சிலர் கேள்வி கேட்டார்கள். கோவையில் இருந்து பெருமாள் அவர்களும், சீனியர் வில்லியப்பன் அவர்களும் தெளிவான பதிலை தந்தார்கள். அவர்களுக்கும் நன்றி.

”இ.எஸ்.ஐ ஜி.எஸ்.டியை போல மிகவும் சிக்கல் இல்லாத துறை. ஆகையால், வரி ஆலோசகர்கள் இதையும் கையாளலாம். வருமானம் வரும்” என நல்ல ஆலோசனையாக பெருமாள் அவர்கள் தெரிவித்தார். உண்மை. இதில் எந்த சந்தேகம் இருந்தாலும், சீனியர் வில்லியப்பன் அவர்களையும், என்னையும் தொடர்பு கொள்ளுங்கள். உதவ தயாராக இருக்கிறோம்.

பங்கு கொண்ட அனைவருக்கும் பொருளாளர் செல்வராஜ் நன்றி தெரிவித்து, கூட்டத்தை முடித்துவைத்தார்.

நன்றி.

- GSTPS

0 பின்னூட்டங்கள்: