> குருத்து: ஆப்பிள் போனும், அவரும்!

August 13, 2024

ஆப்பிள் போனும், அவரும்!


50 வயதை கடந்த அந்த மனிதர். சிறிய தொழில் ஒன்றை செய்துவருகிறார். என்னுடைய சீனியர் அலுவலகத்தில் அவரை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எப்படியும் கண்ணில்பட்டுவிடுவார்.


அவர் ஆட்களைப் பார்த்துவிட்டால், சில அங்க சேஷ்டைகளை செய்து… குரலை ஏற்றி, இறக்கி எல்லோரையும் சிரிக்க வைக்க முயல்வார். சிலர் மெல்லியதாய் புன்னகைப்பார்கள். சிலர் வாய்விட்டே சிரிப்பார்கள்.

இப்படி ஏதோ ஒருநாளில், பலரும் கூடி இருக்கும் பொழுது, ஆட்டமும் போட அதை யாரோ காணொளி எடுத்து நண்பர்கள் வட்டத்தில் சுற்றுக்கு வர, பலரும் பாராட்ட நிறைய மகிழ்ந்து போனார்.

அந்த காணொளிக்கு கிடைத்த உற்சாக சுவை அவருடைய நாவில் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. நிறைய கனவுகள் கூட வந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்த நாள் சீனியர் அலுவலகத்தில் அங்கிருந்த இளைஞர்கள் ” உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. எவனவனோ மொக்கையா காணொளி வெளியிடுகிறார்கள். நீங்கள் வெளியிடலாமே!” என இன்னும் கிடைத்த நேரத்தில் ஏத்திவிட்டுள்ளார்கள்.

இப்படி பேசிப் பேசி, அதற்கு அடுத்த நாளில், அதைச் செயல்படுத்துவதற்கு ஒரு கூட்டமாய் உட்கார்ந்து அதற்கான சாத்தியப்பாடுகளை விவாதித்திருக்கிறார்கள். ஒரு ஆப்பிள் போன் மட்டும் வாங்கிவிட்டால்… அப்படியே எடுக்கலாம். அப்படியே அப்லோட் செய்யலாம் என ஒரு “கிரேட்” ஐடியாவை கொடுத்திருக்கிறார்கள்.

அவர் கஞ்சனுக்கும் சிக்கனக்காரனுக்கும் நடுவில் உள்ளவர். தன்னுடைய இயல்பில் ஐபோன் எல்லாம் அவர் வாழ்வில் வாங்கியிருக்க வாய்ப்பேயில்லை. இளைஞர்கள் குழு உற்சாகப்படுத்த, ஒரு உந்துதலில் ரூ. 60000த்துக்கு வாங்கிவிட்டார்.

வாங்கியதற்கு பிறகு, உற்சாகப்படுத்திய அந்த இளைஞர்கள் கூட்டம் தங்களுடைய சொந்த வேலை நிலைமைகளால் மெல்ல மெல்ல கலைந்து போனார்கள். ஆனால், ஆப்பிள் போன் மட்டும் இவரிடம் தங்கிவிட்டது.

பிரகாசமாய் சமூக வலைத்தளங்களில் வலம் வருவோம் என நிறைய கனவு கொண்டிருந்த ஒரு மனிதர், அந்த “நட்சத்திர” வாய்ப்பு பறிபோனது குறித்து எவ்வளவு வருந்தியிருப்பார். சோகம்.

நாளாக நாளாக போனின் எடை குறைவு தான் என்றாலும், விலை அதிகம் என்பதால், அவருக்கு மனதில் கனத்துக்கொண்டே போனது. அந்த போனை ஒரு நல்ல விலைக்கு விற்க முயன்றாலும், முடியவில்லை.

அன்றைக்கு சந்தித்த பொழுது, பேச்சின் இடையே என்னிடம் புலம்பினார். ”இந்தப் போனை வைத்துக்கொண்டு, கீழே கூட குனிந்து எதையும் எடுக்க முடியவில்லை. விழுந்துவிடுமோ! டேமேஜாகி விடுமோ என பயப்படவேண்டியிருக்கிறது.”

இன்னொரு முறை, (அவருக்கு இரண்டு பசங்க! இருவருமே இளைஞர்கள் தான்) “என் பசங்க இந்த போனை கேட்பாங்கன்னு நினைச்சேன். அவங்களும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை” என்றார்.

இன்னும் அந்த போன் அவருக்கு எவ்வளவு மன உளைச்சலை கொடுக்கப்போகிறது என தெரியவில்லை.

0 பின்னூட்டங்கள்: