> குருத்து: வேள்பாரி நாடகம்

August 17, 2024

வேள்பாரி நாடகம்


நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில், சு. வெங்கடேசன் எழுதிய “வேள்பாரி” நாடகத்தை சிவப்பு யானைக் குழுவைச் சார்ந்த திரு. சந்திரமோகன் நாடகு குழு அரங்கேற்றினார்கள். நானும், இலக்கியாவும் கலந்துகொண்டோம்.


நாவலின் முதல் பகுதியை ஏற்கனவே நாடகம் போட்டதாக சொல்லி, இரண்டாவது பகுதியாக, நாவலின் சில பகுதிகளை அரங்கேற்றினார்கள்.

பாரி மன்னன், புலவர் கபிலர், பறம்பு நாட்டு மக்கள், பாண்டிய மன்னன், அவர்களுடைய படைகள் என ஒரு மணி நேரம் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்கள்.


அதில் ஒரு காட்சி.

பறம்பு மலையில் தெய்வவாக்கு சொல்லும் தேவாங்கின் சிறப்பு எப்பொழுதும் வடக்கு திசையைக் காட்டி நிற்பது. இந்த விலங்கு குறித்து அறிகிறான் குலசேகர பாண்டிய மன்னன். கடலில் தன் வீரர்களுக்கு வழிகாட்ட பெரிய உதவியாக இருக்கும் என புரிந்துகொண்டு, ஒரு இனக்குழுவை கைது செய்து, பறம்பு மலையில் இருந்து நிறைய தேவாங்குகளை திருடிக்கொண்டு வர உத்தரவிடுகிறான். அவர்களும் வேறு வழியேயில்லாமல் செய்கிறார்கள். திருடும் பொழுது பாரி மன்னன் தடுக்கிறான்.

பறம்பு மலையை ஆண்ட ஒரு குறுநில மன்னன் பாரியை, மூவேந்தர்களும் சேர்ந்து சதி செய்து கொன்றிருக்கிறார்கள்.

ஒரு மணி நேரம் நடத்தினார்கள். அந்த Stage மேடை மிகவும் சின்ன இடம். அந்த இடத்திற்குள், இப்படி சாத்தியப்படுத்தியது ஆச்சர்யம். நாடகம் முடிந்ததும், பார்வையாளர்கள் பாராட்டினார்கள். சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

அதில் ஒரு இளம்பெண். ”நாடகம் அருமையாக இருந்தது. எனக்கு தமிழ் வாசிக்க தெரியாது. அம்மாவின் வழியாக வேள்பாரியை தெரிந்துகொண்டேன். வேள்பாரியை படிப்பதற்காக இனி தமிழ் படிக்கப் போகிறேன்” என்றார்.


நேற்றைய நிகழ்வில் நிறைய குழந்தைகள் பங்குகொண்டார்கள். ஆசிரியர்கள் சிலர் தன்னார்வத்தில் வேள்பாரி நாவலைப் பற்றி பள்ளியில் குழந்தைகளிடம் விரிவாக பகிர்ந்துகொள்ள அவர்களும் ஆர்வத்துடன் பங்குகொண்டிருக்கிறார்கள்.

”வெறுப்பு அரசியலை பரப்பும் சம கால அரசியல் சூழ்நிலையில், வேள்பாரியின் விழுமியங்கள் நாடு முழுவதும் பரவவேண்டும். வாழ்த்துகள்” என நானும் தெரிவித்தேன்.

இன்று மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடத்த இருக்கிற செய்தியை அதன் அமைப்பாளர் தெரிவித்தார். வாய்ப்பு உள்ளவர்கள் நிச்சயம் பாருங்கள். அதற்காகவே உடனே இப்பொழுது எழுதுகிறேன்.

0 பின்னூட்டங்கள்: