> குருத்து: வனம் (2021)

December 1, 2021

வனம் (2021)



ஓவியம், சிற்பம் என பல கலைகளையும் கற்றுத்தருகிற ஒரு கல்லூரி ஒரு வனத்திற்கு நடுவே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அறையில் தங்குகிற மாணவர்கள் எல்லாம் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அந்த அறையில் தங்கியுள்ள மாணவர்களில் நாயகனும் ஒருவன். நாயகியுடன் இணைந்து இதற்கான காரணத்தை தேடிச்செல்கிறான்.


ஐம்பந்து ஆண்டுகளுக்கு முன்பு கதை பின்னோக்கி செல்கிறது. ஒரு பொம்பளை பொறுக்கி ஜமீந்தாருக்கு வாரிசு இல்லை. செத்ததுக்கு பிறகு தன் பெயர் நிலைத்து நிற்கவேண்டும் என வனத்திற்கு நடுவே ஒரு கல்லூரி கட்ட திட்டமிடுகிறான். அங்கு இருக்கும் பழங்குடி மக்கள் அதை எதிர்த்து நிற்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை கொஞ்சம் சுவாரசியமாய் சொல்லியிருக்கிறார்கள்.

****

வாழுகிற பொழுது நல்ல பெயரை எடுக்காதவன் செத்ததுக்கு பிறகு தன் பெயர் ”நிலைத்து நிற்கவேண்டும்” என நினைப்பதே ஒரு பெரிய முரணாக இருக்கிறது. தன்னை கொன்றவர்களே சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் பொழுது, அப்பாவி மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுவது ஏற்றும்கொள்ளும்படி இல்லை.

தமிழ் படங்களில் புள்ளைத்தாச்சிகளை டார்ச்சர் பண்றதை கொஞ்சம் நிறுத்தக்கூடாதா? பழங்குடி பெண்ணாக அனுசித்தாரா. நகரத்தில் வாழும் பெண்மணி போல அத்தனை பளபளவென வருகிறார். ஆவி, மறுஜென்மம், மாயக்கண்ணாடி என ஒரு பேண்டசி கதையை எடுத்திருக்கிறார்கள். அதனால், லாஜிக்கே பார்க்க கூடாதா என்ன?

ஆங்காங்கே சில சுவாரசியங்கள் இருந்தாலும், மொத்தத்தில் படம் பெரிதாக ஈர்க்கவில்லை. கதையும் திரைகதையும் தான் பலவீனம். மற்றபடி நடிகர்கள் வெற்றி, அனுசித்தாரா, ஸ்மிருதி, அழகம்பெருமாள், பிரதீப் என எல்லோரும் நன்றாக பொருந்தியிருக்கிறார்கள்.

0 பின்னூட்டங்கள்: