> குருத்து: நெருப்பு - II (செங்கொடியின் நினைவில்)

August 29, 2011

நெருப்பு - II (செங்கொடியின் நினைவில்)


என்ன சொல்வது?
என்ன வெளிப்படுத்துவது?
என்ன செய்வது?

உன்னை கண்டிப்பதா?
அதற்கான தகுதி எனக்கு உண்டா?
உனக்காகக் கதறி அழுவதா?
தன்னை நொந்து கொள்வதா?
நம்மை நொந்து கொள்வதா?
ஆவேசம் கொள்வதா?
அடங்கி விடுவதா?

என்ன செய்வது?

சொற்கள்…
சொற்கள் மட்டுமே போதுமா?

மூலக்கொத்தளத்தில் உறங்குபவன்
அன்று எரிய விட்ட தீயின் ரணமே
இன்றளவும்
அவ்வப்பொழுது
நினைவில் எழும்பி
இதயம் கிழித்துக் கடக்கும் பொழுதில்…
நீ…
நீ ஏன் இப்படிச் செய்தாய்…?

மொத்தமாய் மரத்து விட்ட சமூகம்
உன் உடல் தின்ற
நெருப்பினால் உணர்வு பெறும் என்றா?
உணர்வு…
உணர்வு பெறுமா சமூகம்?
உணர்வு பெறுவார்களா மக்கள்?
அது நடக்குமா?
என்றேனும் நடக்குமா?

நான் நம்ப விரும்புகிறேன் செங்கொடி…
நடக்கும் என நம்ப விரும்புகிறேன்.
உனக்காக நம்ப விரும்புகிறேன்…

விசும்பல்கள் மாத்திரமே ஒலித்தாலும்,
வீர வசனங்கள் மாத்திரமே ஒலிக்கும்
என இரண்டாண்டுக்கு முந்தைய நிகழ்வுகள்
மூளையில் அறைந்து சொன்னாலும்,

உனக்காக…
அருமை செங்கொடி…
அன்பு மகளே…
உனக்காக நான் நம்ப விரும்புகிறேன்…
உணர்வு பற்றும்…
உனதுடல் தின்ற தீயின் ஆவேசத்தோடு
நாடு முழுதும் பற்றியெறியும்
என நம்ப விரும்புகிறேன்.
நம்புவேன்

- போராட்டம்

0 பின்னூட்டங்கள்: