> குருத்து: கும்பகோணமும் சுவாமிமலையும்

November 25, 2019

கும்பகோணமும் சுவாமிமலையும்



கல்யாணத்திற்காக கும்பகோணம் வரை போயிருந்தேன். தம்பதிகளை வாழ்த்திவிட்டு, சாப்பிட்டு முடிய மதியம் ஆகிவிட்டது.

கும்பகோணத்தில் பார்க்க கூடிய இடங்கள் பற்றி தேடும்போது சுவாமிமலை, தாராசுரம் என இரண்டு இடங்கள் கிடைத்தன.

முருகனின் அறுபடை வீடுகளில் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் மலையில் உள்ள பழமுதிர்ச்சோலை, பழனி, திருச்செந்தூர் என முருகனின் அருளை பெற்று வளமாய் (!) இருக்கிறேன். இன்னும் இரண்டு தான் பாக்கி. சுவாமிமலையும், திருத்தணியும்!

சுவாமிமலை வரை போய் வரலாம் என முடிவு செய்தேன். எட்டு கிலோமீட்டர் தூரம். பேருந்து பிடித்து போய் சேர்ந்தேன்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். சுவாமிமலையில் நிறைய படிகள் ஏற வேண்டி இருக்கும் என பயந்து விசாரித்தால்... கும்பகோணத்தில் எங்கே குன்றெல்லாம்...? போங்க! ஒன்னும் சிரமம் இருக்காது என சிரித்துக்கொண்டே சொன்னார்.

செயற்கையாக ஒரு 20 அடி உயரத்திற்கு ஏற்றி கோயிலை கட்டி வைத்திருக்கிறார்கள். நிறைய லாட்ஜுகள் சுற்றி நிரம்பியிருந்தன. சுவாமிமலை ஊரில் பலரையும் முருகன் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என புரிந்தது.

வெள்ளிக்கிழமை. கூட்டம் மிதமாக இருந்தது. முகூர்த்தநாள் என்பதால், இரண்டு ஜோடிகள் முருகனிடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.
செருப்பை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் ஏதும் ஏற்பாடு செய்யவில்லை. முருகன் மீது பாரத்தை போட்டு வெளியே விட்டு விட்டு போனேன். திவ்ய தரிசனம் முடித்துவிட்டு வந்து பார்த்தால், விட்ட இடத்திலேயே இருந்தது. அப்பாடா!

இன்னும் மூன்று மணிநேரம் முழுசாய் இருந்தது. கும்பகோணத்தில் என்ன சிறப்பு என்று இணையத்தில் தேடினேன். முராரி ஸ்வீட்ஸ் கடையில் கிடைக்கும் பூரியும், தொட்டுக்கொள்ள பாசந்தியும் சிறப்பு என சமஸ் சப்புக்கொட்டி எழுதியிருந்தார். பக்கத்தில் இல்லாததால் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை.

படம் பார்க்கலாம் என தேடியதில் 'சுட்டு பிடிக்க உத்தரவு' பார்க்கலாம் என இணையம் சொன்னது. பரணிகா திரையரங்கில் ஓடியது. நடந்து போகும்போது ஒரு இளைஞரிடம் வழிகேட்டேன். கொஞ்ச நேரத்தில் அவரே பின் தொடர்ந்து வந்து திரையரங்கு வாசலில் இறக்கிவிட்டு சென்றார். முருகனை பார்த்து வந்த பிறகு நடந்த அதிசயம் இது! :)

திருத்தணி முருகன் மட்டும் பாக்கி. விரைவில் பார்க்க வேண்டும். முருகன் அதற்கும் ஏற்பாடு செய்வார். காத்திருப்போம்.

0 பின்னூட்டங்கள்: