> குருத்து: யோகா

November 26, 2019

யோகா

அம்மாவிடமிருந்து கொஞ்சம் ஒவ்வாமையும் (Allergies), அப்பாவிடமிருந்து கொஞ்சம் ஆஸ்துமாவும் சொத்தாக எனக்கு வந்து சேர்ந்தது.

அதிலிருந்து தப்பிக்க யோகா வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஹோமியோபதி மருந்து, உணவு கட்டுப்பாடு, யோகா என மூன்றும் வேலை சேர்ந்து ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து என்னை காப்பாற்றின.

2009 ல் யோகா செய்ய துவங்கினேன். பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

விடிகாலை 5.30 முதல் 6.30 வரை ஒரு பேட்ஜ். வாரத்தில் ஐந்து நாட்கள். திங்கள் முதல் வெள்ளி வரை. ரூ. 300ல் துவங்கினேன். இப்பொழுது ரூ. 700.

இரண்டு நாட்கள், ஒரு வாரம், ஒரு மாதம் வந்தவர்கள்- என இந்த பத்து ஆண்டுகளில் எங்கள் பகுதியில் உள்ள பாதி பேரிடம் அறிமுகமாகிவிட்டேன். 
இடையில் இரண்டு வருடம் நான் மட்டுமே தொடர்ச்சியாக போனேன். மாஸ்டர் தான் ஐந்து நாட்கள் வருவதற்கு பதிலாக நான்கு நாட்கள் தான் வருவார். ஒரு நாள் மட்டம் போட்டுவிடுவார்.

யார் தொடர்ச்சியாக வருகிறார்கள் என்றால், அதன் பலனை நன்றாக உணர்ந்தவர்களும், ஆஸ்துமா, தைராய்டு, சர்க்கரை என சிரமப்படுபவர்கள் தொடர்ந்து வந்து நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள்.

இத்தனை ஆண்டுகளில் 7 மாஸ்டர்கள் வரை மாறிவிட்டார்கள். எல்லோருமே சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வார்கள். சிலரிடம் அர்த்தம் கேட்டிருக்கிறேன். தெரியாது என்பார்கள். அதில் ஒரு மாஸ்டர் இந்துத்துவ கருத்துக்களை பேசுவார். அதையும் நான் கேள்விகள் கேட்டு இடைமறித்ததும் நிறுத்திவிட்டார். நான் மந்திரங்களை சொல்வதில்லை. எந்த மாஸ்டரும் ஏன் என கேள்வியும் கேட்டதில்லை.

உடல் உழைப்பிலிருந்து பிரிந்துவிட்ட நடுத்தர வர்க்க ஆட்கள் தான் யோகா பக்கம் வந்து சேர்கிறார்கள். அப்படி வருபவர்களை இந்துத்துவ ஆட்கள் ஆன்மிகம், கோயில், குளம் என தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

யோகாவை இந்துத்துவ ஆட்கள் கையில் எடுத்ததால், முற்போக்கு முகாம் ஆட்களுக்கு யோகா மீது ஒவ்வாமை வந்துவிட்டது. நாம் அதை புறக்கணிக்க வேண்டியதில்லை.

யோகா அவர்களுடைய சொத்தில்லை. நாம் யோகாவை அவர்களிடமிருந்து காப்போம்.

- 21, June 2019 - முகநூலிலிருந்து...

0 பின்னூட்டங்கள்: