> குருத்து: ஈழம்
Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

February 20, 2014

தமிழக மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!


August 26, 2013

கண்டன ஆர்ப்பாட்டம் - ஈழத்தமிழ் அகதிகள் மூவரை நாடு கடத்தாதே!


நாள் : 27/08/2013 (செவ்வாய்கிழமை)       காலை 10.30 மணி

இடம் : வள்ளுவர் கோட்டம் அருகில்

செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய ஈழ அகதிகள் மூவரை ஈழத்தமிழ் அகதிகள் மூவரையும் நாடுகடத்தக்கூடாது.

சிறப்பு முகாம்கள் எனப்படும் சிறைக்கூடங்களை கலைத்து அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

ஈழத் தமிழ் அகதிகள் மீது தமிழக போலீசு இழைத்துவரும் துன்புறுத்தல்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிராக போலீசு நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழ் அகதிகள் அனைவருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்.




இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

April 23, 2013

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! மே நாளில் டிஜிபி அலுவலகம் முற்றுகை!

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
 

அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

மே நாள் பேரணி, டி.ஜி.பி. அலுவலகம் முற்றுகை.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


சிங்கள இனவெறிப் பாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர் போராட்டம் தோற்றுவித்த பொதுக்கருத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக, தாங்களும் மாணவர் கோரிக்கைகளை ஆதரிப்பது போல எல்லா ஓட்டுக்கட்சிகளும் நடிக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, “இலங்கையின் மீது பொருளாதாரத் தடை, போர்க்குற்ற விசாரணை, பொது வாக்கெடுப்பு” என்று அடுத்தடுத்து சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றி, நடிப்பில் மற்றெல்லா ஓட்டுக் கட்சிகளையும் விஞ்சுகிறார்.

இராஜபக்சேவுக்கு எதிராக இந்த சவடால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற இதே காலகட்டத்தில்தான், சிறப்பு முகாம் என்ற சிறையிலிருந்து தங்களை விடுதலை செய்யுமாறு ஈழ அகதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். “கணவனைப் பார்க்க வேண்டும்” என்ற ஒரு மிகச்சாதாரணக் கோரிக்கைக்காக தனது இரு பிள்ளைகளுடன் சிறப்பு முகாம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு ஈழத்தமிழ்ப் பெண். போராட்டம் நடத்திய குற்றத்துகாக பிள்ளைகளுடன் அவரைக் கைதுசெய்து சிறை வைக்கிறது ஜெ அரசு. மனைவிக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சிறப்பு முகாமிலிருந்த கணவன் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

எந்த விதக் குற்றமும் இழைக்காத ஈழத்தமிழ் அகதிகள், சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் கையொப்பமிட்ட ஒரு அரசாணையே போதுமானது. ஆனால், சிங்கள அரசிடமிருந்து ஈழத்தமிழர்க்கு விடுதலை வாங்கித்தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதா, சிறப்பு முகாம்கள் எனும் இந்தக் கொடுஞ் சிறைகளிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க மறுக்கிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிறப்பு முகாம்கள் எனும் இந்த சித்திரவதைக் கூடங்களை ஈழத்தமிழருக்காக உருவாக்கியது யார் தெரியுமா? இன்று ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் ஜெயலலிதாவின் அரசுதான்.

இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ அகதிகளுக்கு இங்கே இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் பற்றித் தெரியாது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் வாழ்கின்றனர். தமது உடைமைகளைத் துறந்து, ஏதிலிகளாக வந்திறங்கிய இம்மக்களில் சுமார் 70,000 பேர் தமிழகமெங்கும் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தம் சொந்தப்பொறுப்பில் வெளியே வீடு எடுத்து தங்கியிருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து இங்கே வந்திறங்கும் ஈழத்தமிழ் மக்களை தமிழக அரசின் அதிகாரிகளும் போலீசும் அனுதாபத்துக்குரிய அகதிகளாகக் கருதுவதில்லை. சந்தேகத்துக்குரிய குற்றவாளிகளாகவே நடத்துகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தினரை உளவு பார்ப்பதற்கென்று தமிழக போலீசு உருவாக்கியிருக்கும் “கியூ பிரிவு” உளவுத்துறைதான் அகதிகள் அனைவரையும் கண்காணிக்கிறது, கட்டுப்படுத்துகிறது. ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்குவது என்ற இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில்தான் திமுக, அதிமுக அரசுகள் ஈழ அகதிகள் அனைவரையும் ஒடுக்கி வருகின்றன.

சிங்கள இராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்டவர்கள், குண்டடி, ஷெல்லடி பட்டவர்கள் யாராக இருந்தாலும், படகில் வந்து இறங்குபவர்களின் உடம்பில் காயம் இருந்தால், அவர்கள் மீது “புலி” என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறது கியூ பிரிவு போலீசு. இது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முடியாதவர்களுக்கும், எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களுக்கும் போலீசு விதிக்கும் தண்டனை சிறப்பு முகாம். தமிழகத்தில் உள்ள ஆறு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு, ஒரு சிறைக்கைதிக்குரிய உரிமைகள் கூட கிடையாது. வெளியுலகத் தொடர்பிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, மனைவி மக்களைக் கூடப் பார்க்க முடியாமல் இவர்கள் தடுக்கப்படுகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படும் அகதிகள், கை கால்களில் விலங்கிடப்பட்டு கொடிய கொலைக்குற்றவாளியைப் போலவே கொண்டு செல்லப்படுகிறார்கள். பல பத்தாண்டுகள் ஆனாலும் இந்த முகாம்களில் இருப்பவர்களுக்கு பிணை என்பது கிடையாது. வழக்கு, விசாரணை, விடுதலை எதுவும் கிடையாது. இது ஒரு வகை ஆயுள் தண்டனை.

சிறப்பு முகாம்களில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பிற முகாம்களில் உள்ள அகதிகளும் நிரந்தரமாகவே போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கண்காணிப்பின் கீழ் தான் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அகதி இரண்டு நாட்களுக்கு மேல் முகாமுக்கு வெளியே செல்வதென்றால், வட்டாட்சியரின் அனுமதியைப் பெற வேண்டும். அனுமதியின்றி சென்றால் முகாமிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படுவர். அனுமதி வாங்க வட்டாட்சியரையே பார்க்க முடியாத காரணத்தினால், பிற முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோர் இறந்து போகும்போது, பிள்ளைகளால் இறந்தவர் முகத்தைக் கூடப் பார்க்க முடிவதில்லை. பெண்கள் வேறு முகாமில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்துக்காக சென்று திரும்பினால், முகாமிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்கள் மாலை 6 மணிக்குள் முகாமிற்கு திரும்பவேண்டும் என்ற விதியின் காரணமாக, குறைந்த கூலிக்கு உள்ளூரில் மட்டும்தான் இவர்கள் வேலை செய்ய முடிகிறது. தொழில் திறமை இருப்பவர்கள் கூட நகரங்களுக்கு சென்று நல்ல ஊதியம் ஈட்ட முடியாது.

மண்டபம், புதுச்சேரி தவிர தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்கள் எதிலுமே முறையான வீடு கிடையாது. பத்தடிக்கு பத்தடி அளவில் தகரம் அல்லது, பாலித்தின் காகிதத்தினால் வேயப்பட்ட கூரை; பராமரிப்பில்லாமல் நாற்றமெடுத்த கழிவறைகள்; மின்கம்பங்கள் ஏதும் நிறுவப் படாததால், குறுக்கு நெடுக்காக தொங்கும் மின்சாரக் கம்பிகள்; பகல் முழுவதும் மின்வெட்டு, இரவு மட்டும்தான் மின்சாரம் என ராஜபக்சே அரசின் மேனிக் பார்ம் முள்வேலி முகாமோடு போட்டி போடுகின்றன தமிழகத்தின் அகதி முகாம்கள். முகாம்களில் பள்ளியோ ஆரம்ப சுகாதார நிலையமோ கூட கிடையாது. அருகாமையில் உள்ள போலீசு நிலையங்களின் போலீசார், தங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம், ஏதாவது ஒரு வழக்கில் “குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு” முகாமிலிருந்து ஆள் அனுப்புமாறு மிரட்டுவார்கள். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை இழைப்பார்கள். இவையெல்லாம் அகதிகளுக்கு எதிராக போலீசார் கேட்பாரின்றி இழைத்து வரும் குற்றங்கள்.

இத்தகைய கொடுமைகளைத் தாங்க முடியாமல்தான், உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்பிச் செல்ல முயல்கிறார்கள் அகதிகள். அவர்களையும் மடக்கி கைது செய்து சிறையில் அடைக்கிறது தமிழக போலீசு. இவ்வாறு பயணம் மேற்கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கடலிலேயே மூழ்கி மடிந்துள்ளனர். “தாய்த்தமிழகம்” ஈழத்தமிழ் அகதிகளுக்கு பேய்த்தமிழகமாக இருந்து வருகிறது. தொப்புள் கொடி உறவு என்று வசனம் பேசாத பிரான்சு, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்தான் ஈழ அகதிகளை கவுரவமாக நடத்துகின்றன. 7 ஆண்டுகளுக்குப் பின்னர் விரும்புவோருக்கு குடியுரிமையும் வழங்குகின்றன.

ஆனால், இங்கோ எதுவும் கிடையாது. அகதிகள் பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், அவர்களுக்கு வழங்கப்படும் புழுத்த அரிசியையும், உதவித்தொகையையும் கொஞ்சம் கூட்டிக் கொடுப்பதற்கு மேல் திமுக, அதிமுக அரசுகள் எதுவும் செய்வதில்லை. முக்கியமாக உரிமையும் சுயமரியாதையும் கொண்ட மனிதர்களாக அவர்களை அங்கீகரிப்பதில்லை. இந்திய அரசு அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடவில்லை என்பதால், ஐநா அதிகாரிகளை அகதி முகாமுக்குள் நுழைய தமிழக அரசு அனுமதிப்பதில்லை.

ஒரு பேச்சுக்கு இங்குள்ள ஈழத்தமிழர்களை அகதி என்று அழைத்தபோதிலும், இந்திய அரசைப் பொருத்தவரை ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் எல்லை தாண்டி ஊடுருவியிருக்கும் சட்டவிரோத குடியேறிகள். இந்த நிலைமை காரணமாக, இலங்கை மண்ணையே கண்ணால் பார்த்திராத, அகதி முகாமிலேயே பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இங்கே அரசு நிறுவனமோ. தனியார் நிறுவனங்களோ வேலை தருவதில்லை.

அகதிகள் தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால், பிறக்கும் குழந்தைக்கு இரண்டு நாட்டின் குடியுரிமையும் கிடைக்காது. ஈழத்தவரையே திருமணம் செய்து குழந்தை பிறந்தால், இலங்கை துணை தூதரகத்திற்கு தெரிவித்து குடியுரிமைக்குப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2009 இறுதிப் போருக்குப் பின் நாடு திரும்பிச் செல்ல விரும்பிய சிலர், ஈழம் சென்றனர். அங்கே தமது வீடோ, நிலமோ இல்லாத நிலை கண்டு அதிர்ச்சியுற்று மீண்டும் தமிழகம் திரும்பினர். ஆனால் அவர்கள் முகாமை விட்டு ஒரு முறை வெளியேறிவிட்டதால் மீண்டும் அகதியாக உள்ளே சேர்க்க முடியாது என்று கூறி, பதிவிலிருந்து அவர்கள் பெயரை எடுத்ததுடன் அவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் நிறுத்திவிட்டது ஜெ அரசு. முகாமிலுள்ள மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழக்கூட இவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ராஜபக்சே அரசு. ஆனால், ஜெ அரசு ஈழ அகதி முகாம்களை ஏன் இன்னமும் போலீசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் ஈழத்தமிழர் அனைவரையும் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளாகவே கருதுகிறது ஜெ அரசு. ராஜீவ் கொலையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஈழ அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு கப்பலேற்றி அனுப்பியவர் ஜெயலலிதா. ஈழத்தமிழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் தடை விதித்தவர். இன்றைக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பவர். ஜெயலலிதாவின் இந்த நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் வேறல்ல.

நாம் ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைக்கு குரல் கொடுக்கும் அதே நேரத்தில், தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் உரிமைகளுக்கும் கண்ணியமான வாழ்க்கைக்கும் குரல் கொடுக்க வேண்டும். அகதிகளாக மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்கள் விரும்பினால் அந்நாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு, இலங்கைக் குடியுரிமையுடன், இந்தியக் குடியுரிமையும் வழங்கப் படவேண்டும். தஞ்சம் புகுந்த நாட்டின் குடிமகனாவதா, சொந்த நாட்டிற்குத் திரும்புவதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த உரிமையை இந்தியாவும் வழங்க நிர்ப்பந்திக்க வேண்டுமானால், இந்திய அரசை அகதிகளுக்கான ஐ.நா உடன்பாட்டில் கையொப்பமிடச் செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களிலிருந்து ஈழ அகதிகள் அனைவரையும் விடுவிக்கவும், பொய் வழக்குகளை ரத்து செய்யவும், அம்மக்களுக்கு கவுரவமான வீடுகள், வேலைவாய்ப்பு வழங்கவும் கோரி தமிழக அரசிடம் நாம் போராட வேண்டும். இந்தப் போராட்டங்கள் ஈழமக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஓட்டுக்கட்சிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் சந்தர்ப்பவாதிகளையும் அடையாளம் காட்டவேண்டும்.

இந்திய அரசுதான் ஈழ மக்களின் போராட்டத்தை கருவிலேயே சிதைத்தது. அந்தக் கொள்கையின் தொடர்ச்சிதான் அகதிகள் மீதான இந்த அடக்குமுறை. அவர்களுடைய உரிமைகளை உத்திரவாதம் செய்வது சர்வதேசப் பாட்டாளிவர்க்கம் என்ற முறையில் நமது கடமை.

சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலிசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
கவுரவமான வேலைவாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!


இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

April 18, 2013

கிழக்கு தைமூர் - ஒரு தேசத்தின் மரணம்!

இயக்கம் : ஜான் பில்ஜெர்

போர்ச்சுக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும், இந்தோனோசியாவின் இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி பார்க்கும் ஆவணப்படம்.

ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு தைமூரை பிரிட்டன் மற்றும் அமெரிக்க உதவியோடு 'கம்யூனிஸ்டுகள்' என்று முத்திரைக் குத்தி  எப்படி இந்தோனோசியா வேட்டையாடியது என்பதை புகைப்படங்கள்,  வீடியோக்கள் மூலம் விளக்கிப் பதறவைக்கிறார்கள். 

1970 முதல் 1997 வரை பிரிட்டனின் ஆயுதங்கள் மூலம் இந்தோனோசியா ராணுவம் இரண்டு லட்சம் மக்களை கொன்றதும், அது தொரபாக உலக நாடுகள் சாதித்த மெளனமும் தைமூரியர்க்ள் ஆயுதப் பாதைக்கு திரும்பியதும் மனம் கனக்கும் ரண வரலாறு.

பத்திரிக்கைச் செய்திகள், அரசு ஆவணங்கள், புகைப்பட வீடியோ தொகுப்பு, மக்களின் வாழ்க்கை முறை, கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள், போராளிகளின் பேட்டிகள் என ஓர் அடிமைப்பட்ட தேசத்தின் வரலாற்றைக் கடின உழைப்போடு தொகுத்திருக்கிறார் போர்முனை செய்தியாளார் ஜான் பில்ஜெர்.  அவசியம் காண வேண்டிய அபூர்வமான வரலாற்றுப் பதிவு!

நன்றி : ஆனந்தவிகடன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்

விலை ரூ. 100

நேரம் : 77 நிமிடங்கள்

பின்குறிப்பு : தமிழ் மொழிபெயர்ப்பு வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சில இடங்களில் மக்களின் பேச்சை அவர்களின் குரல் போல பேசுவதாக கம்மி குரலில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். 1994ல் வெளிவந்த படம். தமிழுக்கு கொண்டுவர இத்தனை ஆண்டுகள் நமக்கு தேவைப்பட்டிருக்கிறது.  இது மாதிரியான பல படங்கள் தமிழ்ச் சூழலில் மொழிப்பெயர்க்கப்படவேண்டும்.

வரலாறு நெடுக உலகம் முழுவதும் ஈழ இனப்படுகொலை போல நடந்துகொண்டே தான் இருந்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது!

April 13, 2013

இந்திய எம் பி க்கள் குழு இலங்கை பயணம்! - முகிலனின் கார்ட்டூன்


[ FICCI] பிக்கியின் [இந்திய தரகு முதலாளிகள் சங்கம் ] நலன்களுக்காக
இந்திய எம் பி க்கள் குழு இலங்கை பயணம்! - முகிலனின் கார்ட்டூன்



April 9, 2013

காங்கிரசுகாரர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் யாருக்கு வேண்டும்?

முல்லைப்பெரியாறு, காவிரி, ஈழம் ‍என தேசிய பிரச்சனைகளில் தமிழக காங்கிரசுகாரர்கள் ஏதாவது சொல்லவேண்டுமே என கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். சொல்லிவிட்டு, இது தங்களது தனிப்பட்ட கருத்து என்கிறார்கள். 

நேற்று கூட மத்திய அமைச்சர் இலங்கைக்கு வணிகம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு இந்திய எம்.பி.க்கள் இலங்கை செல்லக்கூடாது என ஜெயந்தி நடராஜன் இப்படி பேசியிருக்கிறார்.

எதற்கும் பயன்படாத காங்கிரசுகார்களின் தனிப்பட்ட கருத்து யாருக்கு வேண்டும்? தங்களது தலைமையிடம் ஓரணியில் (!) நின்று போராடி தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்க வைத்தால் தான் தமிழகத்துக்கு பிரயோஜனம்.

இப்படி தனிப்பட்ட கருத்துக்களை கூட காங்கிரசுகாரர்கள் சொல்வதற்கு மக்கள் போராட்டங்கள் தான் நிர்பந்திக்கின்றன!

மக்களின் காத்திரமான போராட்டங்கள் தான் ஒரே தீர்வு!

March 26, 2013

ஈழம் : இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி? - தோழர் மருதையன்

முன்குறிப்பு : ஈழ தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழக தழுவிய அளவில் மக்கள் போராட்டங்கள் நடந்துவருகின்றன.  இந்த போராட்டம் குறித்தான பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பதிலளித்தார். முன்பு ஆடியோவாக வெளிவந்த பேட்டி, இப்பொழுது "இராஜபக்சேவை தண்டிப்பது எப்படி?" என நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. வாங்கிப் படியுங்கள்!

விலை ரூ. 10

39 பக்கங்கள்   

*****

 "ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு ‘எதிராக’ அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஒட்டி ஈழப்பிரச்சினை தமிழக அரசியல் அரங்கின் முன்களத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது. தேர்தல் அரசியலில் உள்ள கட்சிகள், இல்லாத அமைப்புகள், மாணவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பேசியோ, போராடியோ வருகின்றனர். அங்ஙனம் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கை அரசை ஏதாவது செய்ய முடியுமா என்று முனைகின்றனர்.

    தோழர் மருதையன் இது தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் அளித்த நேர்காணலை இங்கே ஆடியோவாக வெளியிடுகின்றோம். இது யூ டியூபில் பொருத்தமான படங்களுடன் வீடியோ ஃபைலாக உங்கள் பார்வைக்கு வருகின்றது.

    ஒரு மணி நேரம் – இருபத்தி மூன்று நிமிடம் ஓடக்கூடிய இந்த நேர்காணலில் அமெரிக்காவின் நோக்கம், மனித உரிமையை ஆயுதமாக பயன்படுத்தும் ஏகாதிபத்தியங்கள், ஈழத்தை அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும் இந்தியா நண்பனா இல்லை எதிரியா, ஈழ விடுதலை குறித்த காரியவாதப் பார்வை, புலிகளின் அரசியல் தவறுகள், இது தொடர்பான முப்பதாண்டு வரலாறு, திமுக, அதிமுகவின் சவடால் அரசியல், தற்போது போராடும் தமிழக மாணவர்கள் என்று ஈழம் குறித்த அனைத்து பிரச்சினைகளையும் தோழர் மருதையன் விளக்குகிறார்.

    ஈழம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் சரி, தவறு குறித்த வெளிப்படையான கருத்துக்கள், நடைமுறையில் செய்ய வேண்டியவை, புரிந்து கொள்ள வேண்டியவை என்று ம.க.இ.க.வின் அணுகுமுறை மற்றும் நடைமுறை, செல்ல வேண்டிய இலக்கை துல்லியமாக காட்டுகின்றதா என்பதை வாசகர்கள் முடிவு செய்யலாம்.

    தற்போதைய சூழலின் அவசரமான, பரபரப்பான தருணத்தில் சவடால்கள், வீராவேசமான முழக்கங்கள், இரத்த உறவு சென்டிமெண்டுகள் இன்னபிற ஜோடனைகள் ஏதுமின்றி வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

    இந்த நேர்காணலை உங்கள் நட்பு வட்டாரத்தில் விரிந்த அளவில் கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

******
வெளியீடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

நூல் கிடைக்குமிடங்கள்:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக்நகர்,சென்னை - 600 083.
பேச : 044-23718706

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
110,63, என்.எஸ்.கே. சாலை,
கோடம்பாக்கம், சென்னை - 600 024.
பேச : 94453 84519

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை - 600 002.
பேச : 044-28412367

August 26, 2011

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத்தின் மீதான போர் புரிந்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற போர்க்குற்றவாளி ராஜீவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்யக் கோரியும், விடுதலை செய்யக்கோரியும் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் 27.8.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்ட விவரத்தை இங்கே தருகிறோம். அனைவரும் வருமாறு கோருகிறோம்.

இடம்: பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

நாள்: 27.8.2011

நேரம்: மாலை 4.30 மணி

தலைமை: வே. வெங்கடேசன், சென்னை ம.க.இ.க செயலாளர்

சிறப்புரை: மா.சி.சுதேஷ்குமார், மாநில இணைச்செயலாளர், பு.ஜ.தொ.மு

* இராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! இது அநீதி!! தன்மானமுள்ள, மனிதாபிமானமுள்ள எவரும் இதனை எதிர்த்து போராடவேண்டும்.

* தடா என்ற கொடிய கருப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, பல்வேறு சித்திரவதைகள் செய்யப்பட்டுத்தான் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டது. முதலில் இந்த கருப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியதையும் அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதும் பச்சை பாசிசம்!

* இவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை பரிசீலிக்காமலே ஏற்கனவே, முடிவு செய்துவைத்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பைதான் உச்ச நீதிமன்றம் அன்று வழங்கியது. கருணை மனுப்போட்ட பின்னர், அவர்களது மரணத்துடன் விளையாடத் தொடங்கிய காங்கிரசு அரசு, தற்போது அவர்களை தூக்கிலிட அனுமதித்துள்ளது.

* இந்தத் தீர்ப்பன் அடிப்படையில் 21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?

* ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தான் இராஜபக்சே, இராஜபக்சே இனப்படுகொலை செய்தவன், போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் போராடிக் கொண்டு வருகின்றனர். இராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்குத் துணைபுரிந்த இந்திய அரசு, இராஜபக்சேவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளைதான் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டதன்மூலம் தனது நோக்கத்தை மீண்டும் தெளிவுப்படுத்தி உள்ளது.

* ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க இராஜபக்சேவுக்கு உதவுவதன் மூலம் தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இந்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியே பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத்தண்டனை!

* ஈழத் தமிழர்களின் சுயநிரணய உரிமைக்காகவும், இந்திய அரசின் தெற்காசிய மேலாதிக்கத்தை வீழ்த்தவும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவும், பேரறிவாளன்- சாந்தன்- முருகன் ஆகியோரின் விடுதலைக்காகவும் போராடுவோம்!

அனைவரும் வருக!

______________________________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

அலைபேசி - (91) 97100 82506 (வினவு)

தொடர்புடைய சுட்டிகள் :

கருணையினால் அல்ல! - புதிய கலாச்சாரம்

April 19, 2010

நம்மை நாமே ஏமாற்றுகிறோம்!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் இந்திரகுமார் குஜ்ராலைச் சந்திக்க வியட்நாமிய அமைச்சர் ஒருவர் வந்திருந்தார். அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பதையும் நமது உணவுக்கிடங்குகள் நிரம்பி வழிவதையும் சொன்னபோது புன்னகைத்தார்.

"ஏன் நீங்கள் இதை நம்பவில்லையா?' என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் -

""பிறகு ஏன் தெருவோரங்களில் பலர் உங்கள் நாட்டில் பிச்சையெடுக்கிறார்கள்? ஒரிசா மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் நிகழ்வதாகச் செய்தி வருகிறதே, அது எப்படி? பலர் பட்டினி கிடக்கும்போது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும், உணவு ஏற்றுமதி செய்வதாகவும் நீங்கள் கூறுவது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமை தொடருமானால், இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்நாட்டுக் குழப்பம்தான் ஏற்படும்''.

1991-ல் இந்தியா பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் தாராளமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டபோது அடுத்த பத்துஆண்டுகளில் நமது நாடு பூலோக சொர்க்கமாகப் போகிறது என்று உறுதியளித்தவர்களில் அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய பிரதமருமான மன்மோகன் சிங்கும் ஒருவர். பத்து ஆண்டுகளாகியும் சொர்க்கம் தென்படவில்லை என்பது இருக்கட்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேறவில்லை. பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பயன் இப்போதுதான் மேல்தட்டு மக்களிடமிருந்தும் பெருநகரங்களிலிருந்தும் மெல்ல மெல்ல கீழ்நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகவும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையும், பசி பட்டினியும், வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்காது என்றும் ஆட்சியாளர்களும் பொருளாதார மேதைகளும் உறுதி அளித்தனர்.

அடுத்த பத்து ஆண்டுகளும் இப்போது உருண்டோடிவிட்டன. இன்றைய நிலைமை என்ன தெரியுமா? மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி மத்திய திட்டக்கமிஷனுக்கு அளித்திருக்கும் அறிக்கையின் 2004-05 ஆண்டுக்கான புள்ளிவிவரப்படி, இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கீழே வாழ்பவர்களின் எண்ணிககை 37.2 சதவிகிதம். அதாவது, ஏறத்தாழ 40.71 கோடி மக்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது நிச்சயமாக அதிகரித்திருக்குமே தவிர, குறைந்திருக்காது.

மத்திய திட்டக்கமிஷனின் கடந்த மார்ச் 2007 புள்ளிவிவரப்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 27.5 சதவிகிதம். அதாவது 30.17 கோடி. திட்டக்கமிஷனின் புள்ளிவிவரத்தை நம்புவதா இல்லை சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை நம்புவதா என்பதில் மத்திய அமைச்சரவைக்குக் குழப்பம் ஏற்பட்டு இபபோது பொது விநியோக முறையில் உணவுப் பொருள்களை வழங்க சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரத்தை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

வேடிக்கை இத்துடன் நின்றுவிடவில்லை. அனைவருக்கும் உணவுதிட்டத்தின்படி பயன் அடையப்போவது திட்டக்கமிஷனால் அடையாளம் காட்டப்பட்ட 30.17 கோடிப் பேரோ சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியால் குறிப்பிடப்படும் 40.71 கோடிப் பேரோ அல்ல. வெறும் 10 கோடிப்பேர் மட்டும்.

ஏன் என்று கேட்கிறீர்களா? இந்தப் பத்துக் கோடிப் பேருக்குத்தான் இருப்பிடம் என்று பெயருக்கு ஒரு குடிசையாவது, விலாசமாவது இருக்கிறது. ஏனையோர் தெருவோரங்களிலும் பொதுஇடங்களிலும் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்ய நிரந்தரத் தொழிலும் இல்லாமல் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். இல்லையென்றால், காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள்.

மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் சரிதானா? இன்னொருபுறம் நடந்து கொண்டிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தந்தேவாடா பகுதியில் ஆதிவாசிகள் வசிக்கும் சுமார் 258 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார்கள். இதேபோல, டெண்டுல்கர் கமிட்டியின் புள்ளிவிவரமும் பல ஆதிவாசிக் கிராமங்களைக் கணக்கில் எடுக்காமல் தானே தனது அறிக்கையைத் தயாரித்திருக்கும்?

உணவுப் பாதுகாப்பு என்கிற பெயரில் அனைவருக்கும் உணவு என்று திட்டம் தீட்டி பொது விநியோக முறை மூலம் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது அத்தியாவசியத் தேவை. இதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால், முறையாக நிறைவேற்றப்படாத நல்ல திட்டம் என்பது முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணாக மாறி, மக்கள் மனதில் கொந்தளிக்கும் எரிமலையாக மாறிவிடுமே என்பதுதான் நமது கவலை.

ஒருபுறம், வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் மட்டுமல்ல, விவசாய நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகின்றன. இன்னொருபுறம் 60 ஆண்டுகளாகியும் இன்னும் இந்தியா முழுவதும் முறைகேடுகள் இல்லாத பொது விநியோக முறையை ஏற்படுத்தாமல் இருக்கிறோம். பல மாநிலங்களில் ரேஷன் கடைகள்கூட கிடையாது என்பதுதானே யதார்த்த உண்மை? அப்பழுக்கில்லாத பொதுவிநியோகச் சங்கிலியைக் கூட நம்மால் முறைப்படுத்தி நெறிப்படுத்த முடியாத நிலையில் அனைவருக்கும் உணவு எப்படிச் சாத்தியம்?

விலாசமே இல்லாத - ரேஷன் அட்டைக்கு அருகதையில்லாத - தெருவோரவாசிகள் இந்தியப் பிரஜைகள் அல்லாமல் போய்விடுவார்களா? அவர்களின் பசியை யார், எப்போது, எப்படிப் போக்குவது? அவர்களைப் பற்றிக் கவலைப்பட இங்கே யாருமே இல்லையா?

பொருளாதாரத் தாராளமயமாக்கல் என்று சொன்னபோது செல்வம் தாராளமயமாக்கப்படும் என்றும் குடிசைகள் கோபுரங்களாக மாறும் என்றும் கனவு கண்டோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் புரிகிறது தாராளமயமாக்கப்படுவது செல்வம் அல்ல, வறுமை என்று. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்கள் இந்திய அரசின் ஆளுமையில் இல்லை என்று. ஆண்டுதோறும் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று...

முன்னாள் பிரதமர் குஜ்ரால் வீட்டில் சந்தித்த வியட்நாமிய அமைச்சருடனான உரையாடல் ஏனோ நினைவை உலுக்குகிறது. நமது ஆட்சியாளர்கள் போடுவது தப்புக்கணக்கு என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை!

19/04/2010 -‍ தினமணி தலையங்கத்திலிருந்து...

June 18, 2009

பிள்ளைப் பூச்சிகளை பிடித்து வதைக்கும் அரசியல் போலீசார்!

சென்னை நகரத்தின் ஒரு முக்கிய சந்திப்பில் உள்ள ஒரு பொட்டிக்கடை அது. வழக்கம்போல இந்த மாதமும் புதிய ஜனநாயகம் மாத அரசியல் இதழை கொடுக்க போயிருந்தேன். கடந்த மாதம் கொடுத்திருந்த ஐந்து இதழ்களையும் அப்படியே தந்தார். ஐந்து இதழ்களும் விற்ககூடிய கடையாயிறே! "ஏன்?" என கேட்டேன்.

சொல்ல தயங்கினார். ஐந்து இதழ்களும் விற்காமல் வீணாகி போனதே என்ற ஆதங்கம் எனக்கு. மீண்டும் கேட்டதற்கு... "பிரச்சனையாகிவிட்டது" என்றார்.

"என்ன பிரச்சனை?"

கடந்த மாதம் கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்து... விற்பனைக்கு கொஞ்சம் புத்தகம் தந்தார்கள். புத்தகங்களை பார்வைக்கு வைக்க அவர்களே ஒரு சின்ன ஷோ-கேஸ் மாதிரி தந்தார்கள். அதில் புத்தகங்களை அடுக்கி வெளியில் பார்வைக்கு வைத்திருந்தேன். ஈழம் பேசப்படுவதால்.. நன்றாக விற்குமே என்ற எண்ணத்தில்.. பிரபாகரன் குறித்த இரண்டு புத்தகங்களை புத்தக வரிசையில் முதலில் வைத்திருந்தேன்.

இப்படி வைத்த இரண்டாவது நாள் மப்டியில் இருந்த போலீசு வந்து... "உங்க மேலே கம்பைளைண்ட் வந்திருக்கு! விசாரிக்கனும். கூட வர்றீங்களா!" என அழைத்தார். அப்பாவை கடையில் நிற்க வைத்து போனேன். காலையிலிருந்து மாலை வரை விசாரித்தார்கள். அடுத்தடுத்த இரண்டு நாள்களும் இதே மாதிரி தொடர்ச்சியாக விசாரணை. விசாரணைக்கு வர வில்லையென்றால்... என்ற மிரட்டல் வேறு.

நான் யார்? எங்கே பிறந்தேன்? என் குடும்ப பின்னணி என்ன? என் சொந்தகாரன் எங்கெல்லாம் இருக்கிறார்கள்? .. என்கிற ரீதியில்.. என் மொத்த ஜாதகத்தையும் கிளறிவிட்டார்கள்.

"நீங்க சொல்ல வேண்டியது தானே! கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்களைத் தானே விற்கிறேன்" என நீங்கள் கேட்டிருக்கலாமே! என்றேன் நான்.

அதை சொன்னதற்கு... புத்தகத்தை வெளியிட்டது அவங்க! உன்னை விற்க சொன்னது யார்? என்றார்கள்.

மூன்றாவது நாள்... 'இனி இப்படி புத்தகங்களை விற்காதே!" என மிரட்டி அனுப்பினார்கள். முதல் நாள் அப்பா பார்த்துகொண்டார். இரண்டு நாள் கடையை மூடிவிட்டு போனேன். இரண்டு நாள் பொழப்பு கெட்டுப்போச்சு!

நல்ல வேளைக்கு கடைக்குள்ளே கிழக்கு பதிப்பகத்தோட 'அல்கொய்தா'ப் பற்றிய புத்தகம் வைத்திருந்தேன். அது அவங்க கண்ணுல படல! பட்டிருந்துச்சு... நான் ஒரு முஸ்லீமாகவும் இருக்கிறதனால... என்னை காலி பண்ணியிருப்பார்கள்."

இதை விவரிக்கும் பொழுது... வருத்தம், கோபம், விரக்தி என அவர் முகத்திலும், பேச்சிலும் வெளிப்பட்டது.

***

ஈழத்திற்கு உருகு உருகு உருகிற கருணாநிதியின் ஆட்சியின் கீழ் தான், கிழக்குப் பதிப்பகம் புத்தகங்களை விற்றதற்கே... மூன்று நாள் ஒரு பொட்டிக்கடைகாரரை விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்து இருக்கிறர்கள்.

இங்கு விடுதலைக்கான இயக்கங்கள் வளர வேண்டும். அப்பொழுது தான் இந்த அரசு, அரசியல் போலீசார் (க்ரைம் போலீசு = ரகசிய போலீசு) எல்லாம் வாலைச்சுருட்டி அடங்கியிருப்பார்கள்.

அப்படி வளராத வரை... இப்படி பிள்ளை பூச்சிகளை பிடித்து... "சரோஜா படத்தில் கேனை மண்டையில் தட்டி விசாரிப்பார்களே!" அது மாதிரி, வதைத்து கொண்டுதான் இருப்பார்கள்.

March 26, 2009

ஈழம் (நீலிக்)கண்ணீர் + தலைவர்கள் = தேர்தல்!


அலைகள்
ஓயாது விளையாடும்
அழகான தீவு!

குண்டுகள் விழுந்து
நொடிக்கொருமுறை
பூமி அதிர்கிறது.

திரும்பிய திசையெல்லாம்
பிணங்கள்!

பரம திருப்தியுடன்
பறக்க முடியாமல்
கழுகுகள்
புதிய பிணங்களுக்காய்
ஆவலாய்
காத்துக்கொண்டிருக்கின்றன.

****

வானம் வெறித்துப்
பார்க்கிற கண்கள்
தீயில் வெந்த உடல்கள்
பிளாட்பாரத்தில் - வரிசையாய்
கிடத்தப்பட்டிருக்கின்றன

பிணங்களை காட்டி காட்டி
சிலர்
ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார்கள்

அருகில் போய்
உற்றுக்கேட்டேன்
"ஓட்டு"

***

March 10, 2009

ஈழ இனப்படுகொலை - கருத்துப்படம்.



குறிப்பு : தோழர் முகிலனின் இந்த கருத்துப்படத்தை விளக்குவதற்கென்று வார்த்தைகள் தேவையில்லை.





இலங்கை இனவெறி அரசு + இந்தியா ஆயுத சப்ளை = ஈழ இனப்படுகொலை

தூரிகையின் துயரப்பதிவுகளிலிருந்து


நன்றி : போராட்டம்

February 10, 2009

இதயம், முதுகுவலி – ஆபரேசன் - கவிதை


முதுகெலும்பு
இல்லாதவருக்கு
முதுகுவலி
ஆபரேசன்.

இதயம் இல்லாதவருக்கு

8 மணி நேர
இதய ஆபரேசன்.

- யாரோ!
- நேற்று வந்த எஸ்.எம்.எஸ்-ல்.

February 5, 2009

பத்திரிக்கையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்!


(இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7ம் தேதி எழுதிய தலையங்கம் இது. இதை எழுதிய அடுத்த நாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது.)

ராணுவத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் - தொழில் நிமித்தமாக - அந்த தொழில்
புரிபவர்களின் உயிரை பலியாக கேட்பதில்லை; இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுவதும், வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவதும், மூடப்படுவதும், பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உட்பட - எனக்கும் பொருந்தும் என்பது எனக்கு மிகவும் சிறப்பு செய்வதாக உள்ளது.

பத்திரிகைத் தொழிலில் மிக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். உண்மையில், இந்த 2009ம் ஆண்டு, சன்டே லீடர் பத்திரிகையின் 15ம் ஆண்டாகும். இந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பல மாறுதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் விரும்பத்தக்கவை அல்ல என்பதை நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எல்லையில்லா ரத்த தாகம் கொண்டவர்களால் இரக்கமற்று தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளாலோ, அரசாங்கத்தாலோ ஏவப்படும் பயங்கரவாதம் என்பது நமது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. சுதந்திரத்தை முடக்க விரும்பும் அரசு முக்கிய நடவடிக்கையாக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது.

இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். நாளை நீதிபதிகள் கொல்லப்படுவார்கள். இந்த இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. நம்பிக்கைதான் குறைந்து வருகிறது.

இருந்தபோதிலும் ஏன் இந்த தொழிலை தொடர்ந்து செய்கிறோம் என்று நான் அவ்வபோது ஆச்சரியப்படுவதுண்டு. நானும் ஒரு கணவன்தான். எனக்கும் மூன்று அருமையான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன, நான் சட்டம் அல்லது பத்திரிகை ஆகிய எந்தத் துறையில் இருந்தாலும். ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவது தேவைதானா? தேவையில்லை! என்றே பலரும் கூறுகின்றனர்.

நண்பர்கள் என்னை வழக்குரைஞர் தொழிலுக்குத் திரும்புமாறு கூறுகின்றனர். அத்தொழில் எனக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாழ்வைத் தரும் என்று அவர்கள் நம்புகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வருமாறு என்னை அழைக்கின்றனர், நான் விரும்பும் துறைக்கு என்னை அமைச்சராக்குவதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்த வெளிநாட்டுத்தூதர்கள், என்னை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் - அவர்கள் நாட்டில் பாதுகாப்பாக வசிக்குமாறும் அழைக்கின்றனர். எனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஒன்றைக்கூட நான் செய்வதாக இல்லை.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம்
மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது.

நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதை, அவ்வாறே மண்வெட்டி என்றோ, திருடன் என்றோ, கொலைகாரன் என்றோ அப்படியே எழுதுவதால் சண்டே லீடர் பத்திரிகை சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. நாங்கள் வார்த்தை விளையாட்டுகளுக்கு பின்னே பதுங்குவதில்லை.

நாங்கள் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அதற்காக ஆபத்து வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் எங்களுக்கு ஆதாரங்களை வெளிப்படுத்தும் சமூகப்பொறுப்புள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் நிரூபித்தது இல்லை. அதேபோல எங்களுக்கு எதிரான எந்த வழக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இல்லை.

சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்குக் காட்டும். பத்திரிகைகளின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்தத் தலைவர்கள்தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

சில நேரங்களில் இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கும் உருவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலைக்காக நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்காக அந்தக் கண்ணாடியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். இதுதான் எங்களுக்கான அழைப்பு - நாங்கள் புறக்கணிக்க முடியாத அழைப்பு.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எங்கள் பார்வையை நாங்கள் மறைத்ததில்லை. இலங்கையை ஒரு வெளிப்படையான, மதசார்பற்ற, சுதந்திர ஜனநாயக நாடாக நாங்கள் பார்க்க விரும்பினோம். இந்த வார்த்தைகளுக்கு உள்ளே இருக்கும் பொருளை கவனியுங்கள். வெளிப்படையாக என்றால் அரசு என்பது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக, அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தாததாக இருக்க வேண்டும்.

மதசார்பின்மை என்பது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட - பல கலாசாரங்களைக் கொண்ட நம்முடைய சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான முக்கியமான கருத்தாகும். சுதந்திரம் என்பது, மனிதர்கள் பலவிதங்களில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இருக்கும் முரண்பட்ட விதங்களிலேயே ஏற்றுக்கொள்வதுமாகும். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவதல்ல. மேலும் ஜனநாயகம் என்பது… இது ஏன் முக்கியமானது? என்பதையும் நான் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், மன்னிக்கவும்! நீங்கள் இந்தப் பத்திரிகையை வாங்குவதை நிறுத்திவிடுவதே நல்லது.

பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு கருத்தை கேள்வி கேட்காமல் எழுதுவதன் மூலம் - பிரதிபலிப்பதன்மூலம் சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு தேடியதில்லை. கருத்து முரண்பாடுகளை எதிர்கொள்வதன் மூலமாகவே இதுவரை பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் கூறிய கருத்துகள் மக்களில் பலருக்கும் சுவை அளிப்பதாக இல்லை என்பது தெரியும்.

உதாரணமாக, தனிநாடு கேட்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களை கண்டறிந்து அவற்றையும் களைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை இனப்பிரசினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்காமல், வரலாற்று நோக்கிலும் இந்தப் பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி அதை எதிர்த்து வருகிறோம். இத்தகைய கருத்துகளுக்காக நாங்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசவிரோதம் என்றால் அதைப் பெருமிதத்துடன் ஏற்கிறோம்.

சண்டே லீடர் பத்திரிகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்; எதிர்கட்சிகள் மீதல்ல. கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆட்சியின் அத்துமீறல்களை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து அன்றைய ஆட்சியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக நாங்கள் இருந்தோம். இத்தகைய எங்களின் போக்கும் அந்த ஆட்சி வீழக் காரணமாக இருந்தது.

போரை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை
ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. உலகில் உள்ள மிகவும் இரக்கமற்ற - ரத்தவேட்கை கொண்ட இயக்கங்களில் ஒன்றாக அந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு கூறுவதால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதையும், அவர்கள் மீது இரக்கமற்று துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுமழை பொழிவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது தவறானது மட்டுமல்ல, புத்தரின் தம்மத்தை பாதுகாப்பதாகக் கூறும் நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும். இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள், செய்தித்தணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்று சேர்வதில்லை.

இதைவிட நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களின் சுயமரியாதையை இழந்து, நிரந்தரமாக இரண்டாம்தர குடிமக்களாக வசிக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பின்னர், அப்பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதன்மூலம் சீற்றத்தை தணிக்கமுடியும் என்று கனவு காணக்கூடாது.

இந்தப்போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக தமிழ் மக்களிடம் மேலும் கசப்புணர்வும், வெறுப்புணர்வுமே ஏற்படும். அதை சமாளிப்பது எளிதல்ல. அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை, அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்ப்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். நான் கோபமடைந்தும், சலிப்புற்றும் இருக்கிறேன் என்றால், எனது நாட்டு பெரும்பான்மை மக்களும் - முழு அரசும் - வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மையை பார்க்கத் தவறுவதால்தான்.

நான் இரண்டு முறை தாக்கப்பட்டதும், எனது வீடு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தி, இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் அரசின் தூண்டுதல் காரணமாகவே நடந்தது என்று நான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இறுதியில் நான் கொல்லப்பட்டால், அரசுதான் என்னை கொன்றிருக்க வேண்டும்.


இதில் துயரமான வேடிக்கை என்னவென்றால், நானும் மஹிந்தாவும் கடந்த கால்நூற்றாண்டாக நண்பர்களாக இருப்பது பொதுமக்களில் பலருக்கும் தெரியாது. அவரை அவரது முதல் பெயரான ‘மஹிந்தா’ என்ற பெயரிலும், சிங்கள மொழியில் அழைக்கும் ‘ஓயா’ என்று அவரை இன்றும் அழைக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன்.

அதிபர் மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கும் கூட்டத்திற்கு நான் செல்வதில்லை. எனினும் சில பின்னிரவு நேரங்களில் தனியாகவோ, நெருங்கிய நண்பர்கள் சிலருடனோ அதிபரின் இல்லத்திலேயே சந்தித்து அரசியலைப்பற்றியும், பழைய இனிமையான நாட்களைப் பற்றியும் பேசுவதுண்டு. இந்த இடத்தில் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.
நண்பர் மஹிந்தா! கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நீங்கள் உருவெடுத்தபோது, எங்கள் பத்திரிகையைப்போல இதமான வரவேற்பு உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை. உண்மையில் உங்கள் முதல் பெயரை குறிப்பிடுவதன்மூலம் பல்லாண்டாக நடைமுறையில் இருந்த சம்பிரதாயங்களை உடைத்தோம்.

மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீது அப்போது நீங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக உங்களை நாங்கள் வரவேற்றோம். ஆனால் ‘ஹம்பன்டோடா’வுக்கு உதவும் முறைகேட்டில் நீங்கள் முட்டாள்தனமாக ஈடுபட்டபோது நாங்கள் கனத்த இதயத்தோடு அதை வெளியிட்டோம். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கும்படியும் வலியுறுத்தினோம். அதை நீங்கள் பல வாரங்கள் கடந்து செய்தீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பில் மிகப்பெரும் தீயவிளைவை அது ஏற்படுத்தியது. அது உங்களை இன்றளவும் துரத்தி வருகிறது.

அதிபர் பதவி மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்று நீங்களே என்னிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் அதிபர் பதவியைத்தேடி செல்லவில்லை: அப்பதவி தங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்களே உங்களின் மகிழ்ச்சி என்றும், அரசு நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் மகன்களோடு நேரத்தை செலவிடுவதே உங்களுக்கு விருப்பமானது என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் தந்தை இல்லாது போகும் சூழலில் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

எனக்கு மரணம் ஏற்படும்போது, நீங்கள் வழக்கமான சடங்குச் சொற்களை கூறுவதோடு, முழுமையான விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இதே போன்ற மற்ற சம்பவங்களில் நடந்ததைப்போல இந்த விசாரணையிலும் எந்த உண்மையும் வெளிவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மையைச் சொன்னால், எனது மரணத்திற்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்பது நாம் இருவருக்கும் தெரியும், அந்த பெயரைச் சொல்லும் துணிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும்கூட. ஏனெனில் என் வாழ்க்கையோடு, உங்கள் வாழ்க்கையும் அந்த உண்மையில் சிக்கியிருக்கிறது.

இலங்கை தேசம் குறித்து நீங்கள் இளமையில் கண்ட கனவுகள், நீங்கள் அதிபராகப் பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உடைந்த செங்கற்களைப்போல தூள்தூளாகி விட்டது. தேசபக்தி என்ற பெயரில் மனித உரிமைகளைப் பறிப்பதிலும், ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதிலும், பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடியதிலும் மற்றெந்த அதிபரையும்விட நீங்களே மிஞ்சி இருக்கிறீர்கள்.

உண்மையைச் சொல்லப்போனால், பொம்மை கடையில் இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதாரணம்கூட உங்களுக்குப் பொருந்தாது. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய ரத்தக்கறையையும், குடிமக்களின் மனித உரிமைகளைப் பறித்ததையும்போல எந்தக் குழந்தையாலும் செய்ய முடியாது. நீங்கள் பதவி போதையில் மூழ்கி இருப்பதை உங்களால் உணரமுடியாது: இந்த போதை தலைக்கேறிய நிலையில் உங்கள் மகன்கள் இருப்பதைப் பார்த்து நீங்கள் வருந்தும் நிலை ஏற்படலாம். அது துயரத்தையை கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை, தெளிவான மனநிலையில் என்னைப் படைத்தவனிடம் நான் செல்கிறேன். உங்களுக்கான நேரம் இறுதியாக வரும்போது, நீங்களும் அதையே செய்வீர்கள் என்று நம்புகிறேன். அதை விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எந்த தனிமனிதனுக்கும் பணியாமல், தலை நிமிர்ந்து வாழ்ந்த நிறைவு இருக்கிறது. நான் இந்தப் பாதையில் தனியே பயணம் செய்யவில்லை. சக பத்திரிகையாளர்களும் என்னோடு பயணம் செய்துள்ளனர். அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்; விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதிபரான நீங்கள் முன்னொரு காலத்தில் எந்த பத்திரிகை சுதந்திற்காக பாடுபட்டீர்களோ, அதே பத்திரிகை சுதந்திரத்திற்காக தற்போது பாடுபடும் மேலும் சில பத்திரிகையாளர்கள் மரணத்தின் நிழலில் உள்ளனர். எனது மரணம் தங்கள் கண்காணிப்பின் கீழ் நிகழ்வதை நீங்கள் மறக்கவே முடியாது. எனது கொலையாளிகளை நீங்கள் பாதுகாப்பதைத்தவிர வேறு வாய்ப்பில்லாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படாத வகையில் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களைப் பதவியில் அமர்த்தியுள்ள உங்கள் குடும்பத்தினர், உங்கள் பாவங்களுக்காகவும் கடவுளிடம் நீண்ட நேரம் முழந்தாளிட்டு பாவமன்னிப்பு கேட்பார்கள்.

சண்டே லீடர் பத்திரிகையின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்கள் பணியில் துணை நின்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினரின் நலன்களுக்காக, குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம்.
வேர்களை மறந்துவிட்டு தலை கொழுத்துத் திரிபவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி உங்கள் வரிப்பணம் விரயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அரசுத்தரப்பில் கூறப்படும் பிரச்சாரங்களுக்கு மாற்றாக உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறோம். இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் - என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம்.

நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனைத் தடுக்க நான் எதையும் செய்யவில்லை; முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளைக் கண்டிக்கும்போது மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும், எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உயிர் யாரால் எப்படி கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும் என்பதுதான் மீதமுள்ள கேள்வி.

சண்டே லீடர் பத்திரிகை தனது அறம் சார்ந்த யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நான் இந்தப்பணியில் தனித்து செயல்படவில்லை. இந்த பத்திரிகை வீழ்த்தப்படுவதற்கு முன்னர் எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் - கொல்லப்படுவார்கள். அதுவரை சண்டே லீடர் பத்திரிகை மக்களுக்காகப் போராடும். எனது கொலை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படாமல், கருத்துரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான தூண்டுதலாக செயல்படும் என்று நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கொலை, இலங்கையில் மனித விடுதலைக்கான புதிய யுகத்தை படைப்பதற்காக போராடும் சக்திகளை இணைக்க உதவி செய்யும் என்றும் நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் பல படுகொலைகள் நடந்தாலும், மனிதநேயம் மேலும் செழித்து வளரும் என்றும் அது அதிபரின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். எத்தனை ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் மனிதநேயத்தை அழித்துவிட முடியாது.

நான் இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் இறங்க வேண்டுமா என்று பொதுமக்கள் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காலம் மாறும்போது இந்த அநீதிகளும் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனக்கும் அது தெரியும்: அது தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால் இப்போது நாம் பேசாவிட்டால், பின்னர் பேசுவதற்கு யாரும் மிஞ்சாமலே போய்விடக்கூடும். அவர்கள் சிறுபான்மையினராக, ஒடுக்கப்பட்டவர்களாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவமே எனது பத்திரிகை வாழ்க்கை முழுக்க எனது உந்து சக்தியாக செயல்பட்டு வந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார்.
ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை
நாஜிக்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக் கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதையை நான் என் இளம்பருவத்தில் படித்தேன். என் நெஞ்சில் நிலைத்த அந்த கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் - அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல; அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப் பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

மூலம்: http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர்: சுந்தரராஜன்(sundararajan@lawyer.com)

நன்றி: கீற்று