> குருத்து: கார்ப்பரேட் காவி பாசிசம்
Showing posts with label கார்ப்பரேட் காவி பாசிசம். Show all posts
Showing posts with label கார்ப்பரேட் காவி பாசிசம். Show all posts

September 7, 2022

கர்நாடகம் : கல்வித்துறையின் ஊழலில் திளைக்கும் பிஜேபி!


பிஜேபி தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று பொதுவெளியில் விளம்பரம் செய்கிறது. ஆனால் உண்மை நிலையோ வேறு. பிஜேபி ஆட்சி செய்யும் அத்துனை மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.


பிரதமர் மோடி ஊழல் குறித்து பல்வேறு மேடைகளில் முழங்குகிறார். சொந்த கட்சிகாரர்கள் மீது ஊரே காறித்துப்பினாலும் அமைதி காக்கிறார்.
***

கர்நாடகாவில் கல்வித்துறையில் லஞ்சம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி கர்நாடகாவைச் சேர்ந்த 13000 தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து இரண்டு சங்கங்கள் சார்பாக பிரதமர் மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

கர்நாடகாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில், முறையான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. அதோடு புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சம், ஊழல் நடக்கிறது.

இது தொடர்பாக கல்வியமைச்சார் பி.சி நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பலமுறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து, தனியார் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைகளையும் ஆளும் பிஜேபி செய்துவருகிறது எனவும் புகார் எழுந்து இருக்கிறது.

ஏற்கனவே கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் சார்பில் “கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதற்காக அமைச்சர்கள் 40% கமிசன் கேட்கிறார்கள். இது சம்பந்தமாக முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என மோடிக்கு புகார் கடிதம் அனுப்பினார்கள். இதே ஆண்டு மார்ச் மாதம் பிஜேபியை சார்ந்த ஒரு ஒப்பந்ததாரர் “4 கோடிக்கு சாலை பணிகள் செய்தேன். அந்த தொகையை விடுவிப்பதற்கு அமைச்சர் 40% கமிஷன் கேட்டார்” என மனம் நொந்து தற்கொலை செய்தது நினைவுக்கு வருகிறது.

கர்நாடகாவில் நிலைமை இப்படியிருக்க… பிரதமர் மோடியோ ”அரசின் நடைமுறையில் இருந்து ஊழல் வெறியேறவேண்டும். ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு வெற்றியடைந்துள்ளது” என 2021ல் பேசினார். கடந்த ’சுதந்திர’ தின உரையிலும் ஊழல் குறித்து உரக்க முழங்கினார். கர்நாடகாவில் பிஜேபி செய்யும் ஊழல்கள் நாளும் சந்தி சிரிக்கிறது.

July 9, 2022

மோடி அரசு கேஸ் மானியத்தை நிறுத்தியதே விலை உயர்வுக்கு காரணம்! சிலிண்டர்களை கொண்டு சாலையை மறிப்போம்!


 இப்பொழுது அரசு மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

****

ஒரு சிலிண்டரின் விலை ரூ. 1065.50

வீடுகளில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ரூ. 1068.50- என உயர்ந்திருக்கிறது. தில்லியில் ரூ. 1053க்கும், மும்பையில் ரூ. 1052.50க்கும் விற்கிறார்கள். கடந்த 14 மாதங்களில் 12முறை விலை ஏற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் தான் விரல்விட்டு எண்ணி நிறைய கவலைப்படுகிறோம். அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை.

இப்படி கடுமையாக விலை ஏறியதன் விளைவாக தமிழகத்தின் கிராமப்புறங்களில் சிலிண்டர் வாங்க முடியாமல், மீண்டும் மரபு வழி எரிபொருளான விறகு, மாட்டுச்சாணத்தால் செய்யப்படும் எருவாட்டி என பயன்படுத்த துவங்கிவிட்டார்கள் என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் இறக்கிறார்கள்


கடந்த காலங்களில் விறகு, எருவாட்டி, மண்ணெண்ணெய், மரம் அறுக்கும் தூள் என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை எரிபொருளாக கொண்டு, சமைத்துவந்தார்கள். இப்படி சமையல் செய்வதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் வெளியேறும் புகை கார்பன் உமிழ்வை அதிகம் உண்டாக்குகிறது. இது சுற்றுப்புற சூழலை கடுமையாக மாசுப்படுத்துகிறது. இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் தான் சமைப்பதால், புகை மண்டலத்தால் நிறைய சுவாச நோய்கள் உண்டாகின்றன. சமைப்பதில் எழும் புகை ஒரு மணி நேரத்துக்கு 400 சிகரெட்டுகள் புகைப்பதற்கு இணையானது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படி கரும்புகையோடு மல்லுக்கட்டி சமைப்பதால், ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் சுவாச நோய்களால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மரணங்களில் பெரும்பாலானவை, இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படுபவை. சமையல் எரிவாயு என்பது மற்ற எல்லாவற்றையும் விட தூய்மையான எரிபொருள் என்கிறார்கள்.

மோடியின் உஜ்வாலா திட்டம் பல்லிளித்துவிட்டது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஏழைப் பெண்கள் சமைப்பதை எளிதாக்க, சுவாச நோய்களிலிந்து தப்பிக்க என உஜ்வாலா (ஒளி) என்ற திட்டத்தை 2016ல் பந்தாவாக துவங்கினார்கள். இந்த திட்டம் துவங்கப்பட்டு, சமையல் எரிவாய் பதிவு கட்டணம் இல்லாமல் இணைப்பு வழங்கினார்கள். தொடங்கியதிலிருந்து இன்றைக்கு வரை இந்த திட்டத்தில் 9 கோடி இணைப்புகள் வழங்கியுள்ளதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இவ்வளவு விலை உயர்ந்துவிட்டதே! பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாட்டிலேயே மக்கள் மாற்று எரிபொருளை தேட ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற மாநிலங்களின் நிலை என்னவென்று சமூக ஆர்வலர் சந்திரசேகர் உஜ்வாலா திட்டத்தின் தற்போதைய நிலை என்னவென்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு வந்த பதில். 2021 – 22 நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தில் இருந்த 90 லட்சம் பயனாளிகள் தங்களுக்கு வழங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்த பிறகு, மீண்டும் வாங்கவில்லை. குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் 65 லட்சம் சிலிண்டர்கள் வாங்கவில்லை. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 9 லட்சம் பேர் வாங்கவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 16 லட்சம் பேர் வாங்கவில்லை. ஆக ஒரு ஆண்டிலேயே 90 லட்சம் பேர் வாங்கவில்லை. வாங்குவதற்கு பணமில்லை என்பதே எதார்த்த நிலைமை. உஜ்வாலா திட்டத்தின் வழங்கப்பட்ட பெரும்பாலான சிலிண்டர்கள் வீட்டில் காட்சிப்பொருளாக மாறிவிட்டன.

எரிவாயுக்கான மானியத்தை அரசு நிறுத்திவிட்டது


இவ்வளவு விலை உயர்வுக்கு என்ன காரணம். முதலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எரிபொருளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதை தன் வசம் வைத்திருந்தது. அப்பொழுது விலை கட்டுக்குள் இருந்தது. இப்படி கட்டுக்குள் வைத்திருந்ததின் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நிறைய மானியம் கொடுத்துக்கொண்டிருந்தது. ”மக்களுக்கு மானியம் தராதே” என ஏகாதிப்பத்தியங்களும், தங்களால் ”தொழில்” செய்யமுடியவில்லை என கார்ப்பரேட்டுகளும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஆட்சி தானே நடக்கிறது. ஆகையால், சில ஆண்டுகளுக்கு முன்பு விலை தீர்மானிப்பதை ஆயில் நிறுவனங்களிடமே விட்டுவிட்டார்கள்.

மொத்தமாய் மானியம் தராமல் கைவிட்டுவிட்டால், மக்கள் கொந்தளிப்பார்களே என யோசித்த அரசு, நைச்சியமாய் சமையல் எரிவாயு இணைப்புடன் வங்கி, ஆதாரை இணையுங்கள். மானியத்தை வங்கிக்கணக்கில் தந்துவிடுகிறோம் என்றார்கள். பணமும் போட்டார்கள். 2018ல் அதிகப்பட்சமாக ரூ. 465 வங்கியில் மான்யமாக வரவு வைத்தார்கள். (பார்க்க படம்). கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2021ல் ரூ. 25 மட்டுமே பெயரளவில் வரவு வைக்கிறார்கள். இன்று வரைக்கும் ரூ. 25 யாக தொடர்கிறது.

இன்னொரு வாக்குமூலம் சொல்லவேண்டுமென்றால்… “இந்தியாவில் 90% பேர் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். இதில் இந்தியா 50% எரிபொருளை இறக்குமதி செய்கிறது. உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியா மானியம் வழங்கிவந்தது. இப்பொழுது மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

காலி சிலிண்டர்களை கொண்டு சாலைகளை மறிப்போம்

உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு தருகிறோம் என சொன்னதின் மூலம், அரசு ரேசன் கடைகளின் மூலமாக தந்த மண்ணெண்ணெய்யும் நிறுத்திவிட்டார்கள். ஆக, பழைய நிலைமையை விட மோசமான நிலைக்கு வந்து நிற்கிறோம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கூடிக்கொண்டே போவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாமே கணிசமாக உயர்ந்திருக்கிறது. சிலிண்டர் விலை குறித்து மக்களிடம் பேசும் பொழுது, குமுறுகிறார்கள். ஒன்றிய ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.


ஆக, பழைய மரபு வழி சமையலுக்கு திரும்புவதால், முன்பு வருடத்திற்கு ஐந்து லட்சம் பெண்கள் செத்துப்போனோம். உச்சத்தில் இருக்கும் இன்றைய விலையால் சாவு எண்ணிக்கை மேலும் சில லட்சங்கள் நிச்சயம் உயரத்தான்போகிறது. ”இனிமேல் மூன்று வேளை சாப்பிட முடியாது. இரண்டு வேளை தான் சாப்பிடமுடியும்” என தொலைக்காட்சியில் ஒரு அம்மா மனம் உடைந்து பேசினார்.

ஏன் இவ்வளவு மனம் உடையவேண்டும். ஏன் இத்தனை லட்சம் பேர் சாகவேண்டும். இந்த நாட்டை மலிவு விலையில் வாங்கி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளையும், அவர்களுக்கு பாதந்தாங்கிகளாக இருக்கும் காவி ஆட்சியாளர்களையும் பணிய வைக்க, வீட்டில் காட்சிப்பொருளாய் இருக்கும் சிவப்பு காலி சிலிண்டர்களை எல்லாம் தூக்கி வந்து சாலையை மறிப்போம். சாலைகள் சிவப்பாகும். எதிரிகளை கதறவிடலாம். நம் பிரச்சனையையும் எளிதாய் தீர்த்துவிடலாம்.




July 7, 2022

ஓலா ஓட்டுநரால் கணிப்பொறியாளர் கொலை! மக்களையும் ஓட்டுநர்களையும் சுரண்டுகிறார்கள் கார்ப்பரேட்டுகள்! மக்களை மோதவிட்டு அரசு வேடிக்கைப் பார்க்கிறது!


பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம். 


*****

கணிப்பொறியாளர் கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே கன்னிம்பாக்கம் கிராமம். கணிப்பொறியாளர் உமேந்தர் கோயமுத்தூரில் வேலை செய்கிறார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சென்னையில் தன் சொந்த வீட்டுக்கு வருவது வழக்கம். ஞாயிறன்று தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன், மனைவியின் தங்கை, தங்கையின் இரண்டு குழந்தைகளுடன் மொத்தம் ஏழு பேர் மாலுக்கு சென்றுள்ளனர்.

கிளம்பும்பொழுது, மனைவியின் தங்கை ஓலாவில் இன்னோவா கார் பதிவு செய்திருக்கிறார்.  காரும் வந்திருக்கிறது. எல்லோரும் ஏறி அமர்ந்ததும், ஓலா ஓட்டுநர் ஓடிபி கேட்டிருக்கிறார். தன் மனைவியின் தங்கை செல்போனில் பதிவு செய்ததை மறந்து, தன் செல்லில் தேடியவர். வரவில்லை என சொல்லியிருக்கிறார். “வரவில்லை என்றால் கீழே இறங்குங்கள்” என ஓட்டுநர் தெரிவித்திருக்கிறார்.

கீழே இறங்கிய பயணி, கோபத்தில் காரின் கதவை வேகத்துடன் சாத்தியிருக்கிறார்.  “எப்படி என் காரின் கதவை வேகமாக சாத்தலாம்?” என சண்டை தீவிரமாகியிருக்கிறது.  இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு, பயணி கீழே விழுந்ததில் அவருக்கு அடிபட, மருத்துவமனைக்கு கொண்டு போய் சோதிக்கும் பொழுது ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இப்பொழுது ஓலா ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றம்

அலுவலகத்தில் சக ஊழியருடன் பேசும் பொழுது, மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என பொதுவாக சொன்னார்.   உண்மை நிலவரத்தை நாம் சரியாக‌ புரிந்துகொள்ளவேண்டும். கொரானா அலைகளில் ஊரடங்கின் பொழுது கார்களை ஓட்டமுடியாமல், கடனுக்கு எடுத்த காருக்கு மாதாந்திர கடன் (Due) கட்ட முடியாமல், ஓட்டுநர்கள் மேலும் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டினார்கள்.



ஊரடங்கிற்கு பிறகாவது நிலைமையை சமாளிக்கலாம் என நினைக்கும் பொழுது, வரலாறு காணாத விலையில் ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக‌ பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிக்கொண்டே வந்தது.  கடந்த எட்டு ஆண்டுகளில் 26 லட்சம் கோடி ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல், எரிவாயு பொருட்களில் மட்டும் வரிகளை ஏற்றி  மக்களை கொள்ளையடித்திருக்கிறது.  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு  தொழில்ரீதியாக கார் ஓட்டுபவர்களை கடுமையாக பாதித்தது.

ஓலா, ஊபர் கார்ப்பரேட்டுகள் அராஜகம்

இந்தியாவில் ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்த முறையில் ஒன்றிணைக்கப்படாததால்,  கார் ஓட்டுநர்களும், பயணம் செய்பவர்களும் தொடர்பு கொள்வதில், விலையை தீர்மானப்பதில் என நிறைய‌ சிரமங்களை எதிர்கொண்டார்கள்.  இருவரையும் ஒருங்கிணைத்தால், நன்றாக சம்பாதிக்கலாம் என ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் முடிவு செய்தன. துவக்கத்தில் ஜீரோ கமிசன் என பெரும்பாலான கார் ஓட்டுநர்களை ஒன்றிணைத்தார்கள்.பிறகு 5% கமிஷன் என பிடிக்கத் துவங்கினார்கள்.  இப்பொழுது அதிகபட்சமாக ரூ. 1000க்கு ரூ 350 வரை கமிசனாக பிடித்துக்கொள்கிறார்கள். அதாவது 35% சதவிகிதம் வரை கமிஷன் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள்.. இந்த கமிசனுக்கு பயந்துகொண்டு தான்,  ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் பதிவு செய்த பயணத்தை ரத்து செய்யுங்கள், “எங்களிடம் பணமாக கொடுங்கள்” என பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள்.  இப்படி பல ஓட்டுநர்கள் கோருவதை சமூக வலைத்தளங்களில் பலர் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பயணிகளிடமும் கொள்ளை



ஓட்டுநர்களிடம் அதிகப்பட்சம் 35% கமிஷன் என்ற பெயரில் சுரண்டுபவர்கள் பயணிகளையும் விட்டுவைக்க‌வில்லை. ஓலா, ஊபர் நிறுவனங்கள் விதவிதமான வழிகளில் வசூல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.  காலை, மாலை நேரங்களில்  டிராபிக் அதிகம் உள்ள (Peak Hours) நேரங்களில் வழக்கமான கட்டணத்தை விட‌ அதிகப்பட்சம் 5 மடங்கு வரை  வசூலிக்கிறார்கள்.  பயணத்தை ரத்து செய்தால் ஒரு கட்டணம்.பாதியில் இறங்கினால் அதற்கொரு கட்டணம். இப்படி விதவிதமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.

ஒன்றிய அரசு தலையீடு

தொடர்ந்து புகார்கள் வருவதால், இப்பொழுது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வசூலிப்பதில் புதிய நடைமுறையை கொண்டுவர‌ பரிசீலனையில் இருப்பதாக‌ சொல்கிறார்கள். காலை, மாலை என டிராபிக் நெருக்கடி உள்ள சமயங்களில் 2 மடங்கு மட்டுமே வசூலிக்கவேண்டும்.  அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுநர் புக் செய்யும் பயணங்களில் 10% மட்டுமே (பீக் அவர்) வசூலிக்கமுடியும். இப்படி இன்னும் எத்தனை கொலைகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவார்கள்?

மக்களுக்குள் மோதவிடுகிறார்கள்

சமீபத்தில் அண்ணா ஆர்ச் அருகே ஐம்பது வயது ஷேர் ஆட்டோ ஓட்டுநரும்,  20 வயதுள்ள‌ மருத்துவ கல்லூரி மாணவியும் சத்தமாகவும், மரியாதை இல்லாமல் தாக்கி பேசிக்கொண்டார்கள். சமாதானப்படுத்தி இருவரையும் அனுப்பிய பிறகு,  எதனால் சண்டை என விசாரித்தால், ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு இதுவரை 15ரூ வாங்கிக்கொண்டிருந்தவர்,  விலை உயர்வை காரணம் சொல்லி கூடுதலாக ரூ5 கேட்டிருக்கிறார். அதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் காரணம்.

இப்படி தினந்தோறும் மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தகராறு நடந்துகொண்டே இருக்கிறது. அந்த சண்டை முற்றிப்போய், இப்பொழுது கொலை வரைக்கும் போயிருக்கிறது.

தினந்தோறும் மக்கள் பயணங்களை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம்.

மக்களும் ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து  எதிர்த்து சண்டையிடவேண்டியவர்கள் ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களையும், ஒன்றிய அரசை எதிர்த்தும் தான்.

'வெற்றிகரமாக' ஆறாவது ஆண்டில் ஜி.எஸ்.டி! பரிசாக ! மக்கள் வாங்கும் மோர், தயிர்க்கு எல்லாம் வரி!


“ஒரு தேசம். ஒரு வரி” என பந்தாவாக முழங்கி, ஜி.எஸ்.டி வரிமுறையை துவங்கினார்கள். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. அரசு அதை கொண்டாடும் விதத்தில் 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகாரில் கூடி, பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு புதிதாக வரியும், சில முக்கிய பொருட்களுக்கு கூடுதல் வரியும் போட்டிருக்கிறார்கள்.


தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் பாக்கெட் தயிர், மோர்க்கு எல்லாம் இப்பொழுது வரி விதித்திருக்கிறார்கள். பிஜேபி ஆதரவு வழக்கறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் ‘வசதியில்லாதவர்கள் வீட்டில் உறை ஊத்திப் பயன்படுத்துவார்கள். வசதியானவர்கள் தான் கடைகளில் பாக்கெட் தயிர் வாங்குகிறார்கள்’ என கூசாமல் முட்டுக்கொடுக்கிறார்.

கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிக்கட்டணமும், கல்லூரிக் கட்டணமும் கட்டுவதற்காக மக்கள் கடன் வாங்குவதற்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா இங்க் போன்ற பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.


பம்புசெட்க்கு 12% வரியிலிருந்து, 18%ஆக உயர்த்தியிருக்கிறார்கள். வரி உயர்ந்ததின் விளைவாக பம்புசெட்டின் திறனுக்கேற்ப ஏழு ஆயிரத்திற்கு மேலே விலை உயரும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை கணிசமாக உற்பத்தி செய்யும் கோயமுத்தூர் உற்பத்தியாளர்கள், ‘குறைந்த விலையில் மூலப்பொருட்கள் குஜராத்தில் கிடைப்பதால் அவர்களோடு ஏற்கனவே விலையில் போட்டி போடமுடியவில்லை. அதனால் விலையைக் குறையுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் ‘ என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயம், நிலத்தடி நீரை மட்டுமே பிரதானமாக நம்பி செயல்பட்டு வருகிறது. 1,000 அடி, 1,500 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை,’ போர்வெல் பம்ப்செட் ‘ பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றோம். மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில்’ பம்ப்செட் ‘முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக அதிகரித்துள்ளது இந்த விலையேற்றம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே பலர் விவசாயத்தில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் விவசாயம் அழிந்து வருகிறது. எனவே விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப்செட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என’ தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ‘- பழனிசாமி கருத்து தெரிவிக்கிறார்.

‘ஒரு பக்கம் சூரிய சக்தியில் பயன்படுத்தும் பொருட்களுக்கு இதே ஆண்டிலேயே மானியமும், இன்னொரு பக்கம் சூரிய சக்தி அடுப்புகளுக்கு வரியை அதிகப்படுத்தவும் செய்கிறார்கள்’ என்கிறார், ‘ புதிய தலைமுறை நெறியாளர்’ -“கார்த்திகேயன்”.

“கொரானா அலைகளில் நிறைய தொழில்கள் நொடித்து இலட்சக்கணக்கான குறு, நடுத் தொழில்கள் செய்பவர்கள் விழி பிதுங்கி நிற்கும் பொழுது இப்படி அடிப்படை பொருட்களுக்கு விலை ஏற்றம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது !”என்கிறார், ‘இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர்’ -“ரகுநாதன் “அவர்கள்.

ஒரு அரசின் அச்சாணியே வரி தான்! மாநிலங்களின் வரி வசூலிக்கும் உரிமையையும் பறித்ததே ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி சிஸ்டம்.

மாநில கட்சிகள், அடிப்படையில் இதை ஏற்றுக்கொண்டிருக்கவே கூடாது. அவர்கள் பணியவைத்தார்கள். இவர்களும் பணிந்தார்கள்.

ஜி.எஸ்.டி அமுலாக்கத்தின் விளைவால் தொழிற்துறையில் முன்னேறி நிற்கும் மாநிலங்களுக்கு பெரும் இழப்புதான். அந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் இழப்பீடு தருவதாக சொன்னார்கள். இவர்களும் தலையாட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

இதோ ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மேலும் ஐந்து ஆண்டுகள் இழப்பீடு தரவேண்டும் என பாதிக்கப்படும் மாநிலங்கள் இப்பொழுது ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மறுத்துவிட்டால், அந்த சுமையையும் மக்கள் மீது தான் மாநிலங்கள் சுமத்தப்போகின்றன.

இலங்கையில் அரசு திவாலாகி மக்கள் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும் பொழுது, இங்குள்ள, ‘ இந்திய அதிகார வர்க்கம்’ , ‘ மாநில தேர்தல்களின் பொழுது தேசிய கட்சிகள், மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள்! இதனால் , இலங்கையை போல இங்கும் நிலைமை மோசமாகிவிடும்! ‘ என ஒன்றிய அரசுக்கு அறிவுரையை அள்ளி வழங்கினார்களாம்!

ஒரு நாடு ,நேர்முக வரியான வருமானவரி போன்ற வரிகளை அதிகரித்து, மறைமுக வரிகளான ஜி.எஸ்.டி போன்றவற்றை குறைப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு இலக்கணம் என்கிறார்கள். நடந்து கொண்டிருப்பது கார்ப்பரேட்- காவி அரசு: இது ‘மக்கள் விரோத அரசு ‘என்பதால் மறைமுக வரியை ஏற்றி, மக்கள் மீது சுமையை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்!

ஏற்கனவே சில பொருளாதார சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் டாலரின் மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது: அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறார்கள்: இதனால் ஆசிய நாடுகளின் பணமதிப்பு இன்னும் வீழ்ச்சி அடையலாம் என்கிறார்கள்!

இந்திய பங்கு சந்தையிலிருந்து நிறைய முதலீடுகளை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துகொண்டே வருகிறது: ஏற்கனவே பெரும்பாலான மக்கள் மீது மீண்டும் மீண்டும் சுமையை சுமத்துகிறவர்கள் வர இருக்கும் பொருளாதார ஆபத்துகளையும் சுமத்துவார்கள் என நினைக்கும் பொழுதே பகீரென இருக்கிறது.

இலங்கை மக்கள், கடும் நெருக்கடி வந்த பின்பு தான் உக்கிரமாக போராட துவங்கினார்கள். மக்கள் விரோத ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்து துரத்தினார்கள்!

நெருக்கடி வரும்முன்விழித்துக்கொண்டு போராடுவது நமக்கு நல்லது!

Fingertip. (2022) - சீசன் 2


அம்மாவும், அப்பாவும் சென்னையில் வாழ்கிறார்கள். வீடு மொத்தமும் சிசிடிவி பொருத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் மகன் கண்காணிக்கிறார். இத்தனை ”டிஜிட்டல் பாதுகாப்பு” இருந்தும், பெற்றோர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். கொலை செய்யும் பொழுது வீடியோ எடுக்கிறார்கள். ஏன்?


செல்போனில் ஒரு பிரச்சனை. கடையில் சரிசெய்ய பெண் தருகிறார் திருப்பி தரும் பொழுது, உள்ளே ஒரு கேமராவை வைத்து தந்துவிடுகிறார்கள். படுக்கை வரைக்கும் அந்தப்பெண் செல்போனை கொண்டு செல்கிறார். எல்லாவற்றையும் பார்த்து, ”பதிவு” செய்து மிரட்டுகிறார்கள்.

ஒரு கல்லூரியில் மாணவர்கள் தேர்தல். ஒரு மாணவன் 70%க்கு மேலாக வாக்கு வாங்கி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறான். எதிர்த்து நிற்கும் ஒரு மாணவி, ஒருவனை அணுகுகிறார். அந்த மாணவனைப் பற்றிய வதந்தி ஒன்றை பரப்பி, அதையே தன் ஆட்களை வைத்து காரசாரமாக விவாதிக்க வைத்து, ”டிரெண்டாக்கி”, தேர்தல் காலையின் பொழுது, அவனைப் பற்றிய ஒரு தப்பான படத்தை இவர்களே உருவாக்கி சமூக வலைத்தளத்தில் போடுகிறார்கள். அந்தப் படம் உண்மை இல்லை என்றாலும், எதிர்த்து நிற்கும் பெண் ஜெயிக்கிறாள். இதன் தொடர்ச்சியில் அவன் அமைச்சருக்கு வேலை செய்ய துவங்குகிறான்.


திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. அவள் படிக்கிற காலத்தில் அவள் மூக்கை தோழி ஒருத்தி கிண்டல் செய்ய, அவள் மனதில் வடுவாகப் பதிந்துவிடுகிறது. அந்த எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து… தன் மூக்கு லேசாக கோணலாகத்தான் இருக்கிறது என ”ஆழமாய்” நம்புகிறாள். தன் மூக்கை வெறுக்க துவங்குகிறாள். இதற்காக ஒரு சிகிச்சையில் ஈடுபட, முகத்தின் அமைப்பு வேறு மாதிரியாகிறது.

பிறகு இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது என்பதை உளவியல்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். முதல் சீசனும் சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதைத்தான் சொல்லியிருந்தார்கள். இந்த சீசனில் பிரசன்னா, ரெஜினா, அபர்ணா உட்பட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.



உலகம் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்தியாவும் டிஜிட்டல் மயத்தை விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் டிஜிட்டல் குற்றங்களும் வருடந்தோறும் அதிகமாகி கொண்டே வருகின்றன. 2016-ல் 12317 குற்றங்களும், 2017ல் 21796 குற்றங்களும், 2018ல் 27248 குற்றங்களும், 2019ல் 44735 குற்றங்களும், 2020ல் 50035 பெருகியுள்ளன. ஐந்து ஆண்டுகளில் 400% அதிகமாகி இருப்பதை கவனியுங்கள். டிஜிட்டல் குற்றங்களுக்கு எங்கு, யாரிடம் புகார் தருவது என மக்களுக்கு புரிபடவில்லை. இந்த டேட்டாவை தருபவர்களே 99% டிஜிட்டல் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த குற்றங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், பணத்தை மீட்பதும் சவாலாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள்.

செல்போன் நமது அன்றாட தேவைகள் அத்தனைக்கும் பயன்படுத்துகிறோம். அதில் எவ்வளவு நேர்மறை அம்சங்கள் இருக்கிறதோ, அவ்வளவு எதிர்மறை அம்சங்களும் இருப்பதை அறியாமலேயே மக்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் ஒரு இடத்தில் கணவனும் மனைவியும் தங்களது படுக்கையறையில் அலெக்சாவை வைத்திருப்பார்கள். குரல் கொடுத்தாலே புரிந்துகொண்டு வினையாற்றக்கூடிய ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள் தான் அலெக்சா. உள்ளாடைகள் வாங்கவேண்டும் என பேசிக்கொள்வார்கள். அடுத்தநாள் அந்த கடையை கடக்கும் பொழுது, தள்ளுபடி விலையில் தருவதாக ஒரு குறுஞ்செய்தி வரும். அவர்கள் அந்த கடைக்குள் மகிழ்ச்சியுடன் நுழைவார்கள். நமக்கு அலெக்சா நினைவுக்கு வந்து போகும். நம் படுக்கையறை வரை சந்தைப்படுத்துபவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்பது முக்கிய செய்தி.

சிசிடிவிக்கள் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடுகளில், தெருக்களில் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. சிசிடிவிக்களைப் பொருத்த சொல்லி, போலீசே தொடர்ந்து வலியுறுத்துகிறது. சமூகத்தில் குற்றங்களுக்கான அடிப்படைகளை கண்டறிந்து சரி செய்ய முயலாமல், சிசிடிவிக்களை பொருத்திக்கொண்டு போவது அறிவுடைமை செயலா? அமெரிக்காவின் தெருக்களில் 10 டாலருக்காக கொலை செய்யப்படுவீர்கள் என்பார்கள். அந்த நிலைமையை நோக்கி நாமும் போகிறோமா?

உலகம் டிரெண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தங்களது எதிர்ப்பையோ, ஆதரவையோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கிவருகிறார்கள். இந்தியாவில் இதை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, சங்கி காவிப்படைகள் சமூக வலைத்தளங்களில் மிக வலுவாக இருப்பதை ஊடகங்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் தான் நிகழ்ச்சி நிரலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எது விவாதிக்கப்படவேண்டும். எது விவாதிக்கப்படக்கூடாது என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். நாம் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

உலகம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. உலக ரவுடி அமெரிக்கா உலகத்தில் தன்னை எதிர்க்கும், ஆதரிக்கும் பலரையும் உளவுப் பார்த்தே வருகிறது. இதைத்தான் ஸ்னோடன் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். இதற்காக அவரை அமெரிக்கா டார்ச்சர் செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இப்பொழுது அரசு தன்னை எதிர்க்கும் பல அரசியல் தலைவர்களை, பத்திரிக்கையாளர்களை, சமூக செயற்பாட்டாளர்களை இஸ்ரேலிடமிருந்து பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கி உளவுப் பார்த்ததாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளி வதைத்து வருகிறது.

உலகம் டிஜிட்டல் மயமாவது கார்ப்பரேட்டுகளுக்கும், அரசுகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கும், காவி பயங்கரவாதிகளுக்கும் வசதியாக இருக்கிறது. அதனால் தான் விரைவுப்படுத்துகிறார்கள்.

April 26, 2022

இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

 


இராணுவச் செலவினத்தில் இந்தியா மூன்றாம் இடம்! ஏகாதிபத்திய ரசியாவே ஐந்தாம் இடம் தான்!

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள்.

****

ராணுவத்திற்கான செலவுகள் செய்வதில் அமெரிக்கா முதலிடம். சீனா இரண்டாமிடம். மூன்றாமிடத்தில் இந்தியா என சர்வதேச அமைதி ஆய்வுமையம் அறிவித்துள்ளது. கொரானா தொற்றிய நாடு, லட்சக்கணக்கான மக்களை பறிகொடுத்து கலகலத்த நாடுகள் என உலகம் நினைத்துகொண்டிருக்கிறது.

அமெரிக்கா ஒரு உலக ரவுடி. தன் கெத்துக்கு செலவு செய்யலைன்னா அழிஞ்சுபோவான்.  சீனா வளர்ந்துவரும் ரவுடி. அவன் உலகத்துக்கே பொருட்களை ஏற்றுமதி செய்றான். செலவழிக்கிறான்.

இந்திய ராணுவத்தில் 14 லட்சம் பேர் நிறைந்திருக்கிறார்கள்.  ”ஒழுங்கான சாப்பாடு இல்லை, அடிப்படை வசதி இல்லை” என கறார் விதிகளை எல்லாம் தூரப்போட்டு, காணொளியில் எல்லையிலிருந்து கதறுவது வைரலாகிறது. ”குளிரில் விறைத்துப்போய் நிற்கும் எல்லையோர இராணுவத்தினரை நினைத்துப் பாருங்கள்!” என அடிக்கடி சங்கிகள் கண்ணீர் வடிப்பார்களே! அவர்களின் வாழ்வை எல்லாம் உயர்த்திவிட்டார்களா? என நினைத்தீர்கள் என்றால் நாமெல்லாம் அப்பாவி!

சில அமெரிக்க பத்திரிக்கைகள், சில இந்திய பத்திரிக்கைகள் அவ்வப்பொழுது இந்திய இராணுவத்தின் ஏவுகணைகள், போர்விமானங்களின் நிலையை பக்கத்தில் இருக்கும் சீனாவுடனும், பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, ஒப்பிட்டு உசுப்பேற்றுகிறார்கள். இராணுவ கொள்முதலில் நன்றாக காசு பார்க்கலாம் என முடிவு செய்து, ஏகாதிப்பத்திய ஆயத உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, கார்ப்பரேட்டுகளையும் கூட்டு சேர்ந்துகொண்டு, வகை தொகையில்லாமல் களவாடுகிறார்கள்.

மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி எட்டு ஆண்டுகளில் பக்கத்து பக்கத்து நாடுகளில் எல்லாம் வம்பிழுத்து நல்லா இருந்த உறவை கூட கெடுத்துதான் வைத்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் கல்வி, மருத்துவம், உணவு என அடிப்படையானவைகளுக்கு எல்லாம் மான்யங்களை வெட்டுகிற இவர்கள்தான், இராணுவம் போன்ற செலவினங்களுக்கு தாராளமாய் செலவழிக்கிறார்கள். நேரடியாக பாதிக்கப்படும் நாம் தாம் விழிப்புணர்வுடன் இருந்து கேள்வி கேட்கவேண்டும். தொடர்ந்து கேட்போம்.

December 3, 2021

வங்கி ஊழியர்கள் போராட்டத்தை பரந்துப்பட்ட மக்கள் இயக்கமாக மாற்றுவோம்!


பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றுவதில் நமது நலனும் அடங்கியிருக்கிறது.
வங்கி ஊழியர் போராட்டத்தை பரந்துப்பட்ட மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க அனுமதிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு, வரும் 16, 17ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் காவி பாசிச கும்பல் பி.எஸ்.என்.எல், சிபிஐ, ரயில்வே, இந்திய ரிசர்வ் வங்கி என ஒவ்வொரு பர்னிச்சராக உடைத்து மதிப்பிழக்க செய்துவிட்டார்கள். அதன் தொடர்ச்சியில் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகளை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ளார்கள். அவ்வப்பொழுது ஒன்றிய அமைச்சர்கள் வங்கிகளை தனியார்மயமாக்குவது உறுதி என அறிவித்து வருகிறார்கள்.

இதனால் பொதுவங்கிகள் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்த்துவருகிறார்கள். தங்களுடைய வைப்புத்தொகையை வேகவேகமாக எடுப்பதும் நடந்தது. சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் 30 லட்சத்திற்கு புதியதாக வீடு வாங்கினார். எந்த வங்கி? எவ்வளவு கடன்? என விசாரிக்கும் பொழுது, உறவினர்களாக இருக்கும் சிலர் வங்கி எப்பொழுது வேண்டுமென்றாலும் திவாலாகும் என்ற எண்ணத்தில் வீடு வாங்குவதற்கு கொடுத்துள்ளார்கள். அப்படி கொடுத்த சில உறவினர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களாக, வங்கியில் பணிபுரிபவர்களாக இருப்பது தான் முக்கிய விசயம்.

கடந்த மே 13 லிருந்து 17 வரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். ”கேந்திரமில்லாத அனைத்து துறைகளிலிருந்தும் அரசு வெளியேறும் என்றும், கேந்திரமுள்ள துறைகளில் குறைந்தபட்சம் ஒன்று, அதிகப்பட்சம் நான்கு வைத்துக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார். அப்படிப் பார்த்தால், கேந்திரமுள்ள துறையில் வங்கித்துறையும் உள்ளே கொண்டு வந்தார்கள் என்றால், அதிகப்பட்சம் நான்கு வங்கிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மற்றவற்றை தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்கள் என்பது தான் அவர்களின் திட்டம்.

1947க்கு பிறகான காலங்களில் வங்கிகள் தனியார்மயமாக தான் இருந்தன. 1947 – 1969க்கும் இடைப்பட்ட காலத்தில் 559 வங்கிகள் திவாலாகின. 1969க்கு பிறகு 23 வங்கிகள் திவாலாகின. பிறகு தான் அரசு மக்களின் வைப்புத்தொகையை காப்பாற்றுவதற்கும், இந்தியாவை தொழில்துறையில் முன்னேற்ற வேண்டுமென்றால், அரசு வங்கிகளின் அவசியத் தேவையை உணர்ந்து வங்கிகள் தேசியமயமாக்கபட்டன. இது தான் கடந்த கால வரலாறாக இருக்கிறது. சமீபத்தில் கூட யெஸ் வங்கி திவாலாகும் நிலையில் அரசு வங்கியான SBIயும், பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சிதான் காப்பாற்றின.

இந்தியாவில் உள்ள வங்கிகளின் கணக்கு

அரசு வசம் உள்ள வங்கிகள் 4
வைப்பு நிதி நிறுவனம் 8
மொத்தம் 12

தனியார் வசம் உள்ளவை

பேமண்ட் வங்கி 7
வங்கிகள் 22
பிரதேச வங்கி 3
வெளிநாட்டு வங்கி 46
வங்கியில்லாத வைப்பு நிதி நிதி நிறுவனங்கள் 80
மொத்தம் 168

அரசு வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்கு 51% என்பதால், அதற்குரிய கட்டுப்பாடுகளுடன் இயங்குவதால் திவாலாக வாய்ப்பில்லை. அப்படியே திவாலானால் கூட மக்கள் போட்ட பணம் அப்படியே கிடைத்துவிடும். இல்லையெனில் முறையாக வழக்கு தொடுத்து மீட்டுவிட முடியும்.

ஆனால், தனியார் வங்கிகளில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. மக்கள் எத்தனை லட்சம் வைப்புத்தொகையாக வைத்திருந்தால் கூட, அதிகப்பட்சம் ஐந்து லட்சம் மட்டுமே கிடைக்கும். (இந்த தொகை சமீப காலம் வரை ஒரு லட்சம் தான் இருந்தது.) சமீபத்தில் ஒரு தனியார் வங்கி, வாடிக்கையாளரின் வங்கி கணக்குப் புத்தகத்தில் ”ஐந்து லட்சம் மட்டுமே” என சீல் வைத்து கொடுத்ததினால், பரவலாக பேசுபொருளானது.

நாட்டின் வளர்ச்சியில், மக்களின் நலனில் அரசு வங்கிகளையும் தனியார் வங்கிகளையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

அரசு வங்கிகள்

கிராமப்புற வங்கிகளின் பங்கு 35%
அடிப்படை கட்டுமானங்களுக்கு நிதி ஆதாரம் வழங்குகின்றன
குறுந்தொழில்களுக்கு எந்த பிணையும் இல்லாமல் 2லட்சம் வரை வழங்குகின்றன
விவசாய கடனுக்கு எந்த பிணையும் இல்லாமல் 3 லட்சம் வரை தருகின்றன.
கல்விக்கடனுக்கு எந்த பிணையும் இல்லாமல் 4 லட்சம் வரை வழங்குகின்றன.
ஏழை மக்களுக்கு மொத்த கடன் தொகையில் 40% முன்னுரிமை வழங்குகின்றன. அதில் விவசாய கடன்களில் 18% முன்னுரிமையும் வழங்குகின்றன.

தனியார் வங்கிகள்

கிராமப்புற வங்கிகளின் பங்கு 15%
அடிப்படை கட்டுமானங்களுக்கு நிதி ஆதாரம் வழங்குவதில்லை
குறுந்தொழில்களுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
விவசாய கடனுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
கல்விக்கடனுக்கு பிணையுடன் தான் கடன் வழங்குகின்றன.
கடன் வழங்குவதிலும் ஏழை மக்களுக்கு எந்தவித முன்னுரிமையும் இல்லை.

அரசு வங்கிகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகின்றன. யார்வேண்டுமென்றாலும், ஆர்.டி.ஐ மூலம் விவரங்கள் கேட்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். தனியார் வங்கிகளில் இம்மூன்றும் கிடையாது.

அரசு வங்கிகளில் சேவைக்கட்டணமும், அபாரதக் கட்டணமும் குறைவு. வங்கி கடன்களை வசூலிப்பதில் சட்ட ரீதியாகவும், மனிதாபிமானத்துடனும் நடந்துகொள்கின்றன. தனியார் வங்கிகளில் சேவைக்கட்டணமும், அபராதமும் அதிகம். கடன்களை வசூலிப்பதில் மிக மோசமான அணுகுமுறையை கையாள்கிறார்கள். இதனால், தற்கொலைகள் நிகழ்வதை செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம்.

வேலை வாய்ப்புகளை பொறுத்த வரையில், அரசு வங்கிகளில் நிரந்தர வேலை வாய்ப்புகளை தருகின்றன. தலித், ஆதிவாசி, முன்னாள் இராணுவத்தினருக்கென இட ஒதுக்கீடு உண்டு. இதில் எதுவும் தனியார் வங்கிகளில் கிடையாது.

அரசு வங்கிகளை கண்காணிப்பதற்கென்று நிறுவன அமைப்புகள் உண்டு. கடன்களை வழங்குவதிலும் கட்டுப்பாடுகள் உண்டு. நிர்வாக இயக்குநருக்கென பதவிக்காலம் 3 வருடங்கள் மட்டுமே. தனியார் வங்கிகளில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை. ஐசிஐசிஐயின் முன்னாள் இயக்குநர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்ட செய்தியை நாம் அறிவோம்.

இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் மீறித்தான், கார்ப்பரேட் முதலாளிகளும் தரகு முதலாளிகளும், அதிகாரத்தில் உள்ள காவி பாசிஸ்டுகளின் மூலம் ஏற்கனவே வங்கிகளிடம் ஏராளமாக கடன் பெற்று திரும்ப செலுத்தாமல், செலுத்தாத முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் வங்கிகளை திவாலாக்கும் நிலைக்கு தள்ளுகிறார்கள். மொத்தமாய் தனியார்மயமாக்கிவிட்டால், கொள்ளையை தாராளமாய் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

2008ல் உலகம் முழுவதிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பல நாடுகள் கலங்கிபோயின. அதிலிருந்து மீள்வதற்கே பல ஆண்டுகள் ஆயின. இன்னும் மீளாத நாடுகளும் உண்டு. வங்கிகளின் செயல்பாட்டில் அரசு தலையிடகூடாது என அடம்பிடித்து வால் ஸ்டீரிட்டில் இயங்கிகொண்டிருந்த பெரும் வங்கிகள் எல்லாம் அவர்கள் செய்த கோளாறுகளால் திவாலாகின. அரசிடம் கையேந்தி நின்றன. அமெரிக்க அரசு வேறுவழியில்லாமல் மக்கள் பணத்தை அள்ளித்தந்து காப்பாற்றியது. இந்த காலத்தில் இந்தியாவில் வங்கிகள் எல்லாம் அரசு வசம் இருந்ததால், அந்த பொருளாதார வீழ்ச்சி பெரிதாக பாதிக்கவில்லை.

ஆக இந்திய பொதுத்துறை வங்கிகளை காப்பாற்றுவது அவசர, அவசிய கடமையாகிறது. பொதுத்துறை வங்கிகள் எல்லாம் இருப்பதால் தான், பிணை இல்லாமல் கடன் பெற்று தொழில்கள் செய்துவருகிறோம். இல்லையெனில் ஐந்து வட்டிக்கும், பத்து வட்டிக்கும் வெளியில் கடன் வாங்கி கடனை கட்டுவதிலேயே நமது மொத்த உழைப்பும் தொலைந்துவிடும். ஆகையால், பொதுத்துறைவங்கிகளை காப்பாற்றுவதில் நமது நலனும் அடங்கியிருக்கிறது.

தரவுகளுக்கு நன்றி : தீக்கதிர்