> குருத்து: சமையலறை பொதுவுடைமை!

February 11, 2024

சமையலறை பொதுவுடைமை!


என் அம்மா என்னை அடுப்பைத் தொடவிட்டதில்லை. சுத்து வேலைகள் மொத்தமும் வாங்குவார்.

 

திருமணத்திற்கு பிறகு சுமார் 16 பேர் கொண்ட குடும்பம். சமையல் தெரியாமல் உள் நுழைந்தேன். காப்பி கலக்க கூட கை நடுங்கும்.

 

தினமும் மாலை டிபன் ஏராளமான பண்டிகைகள், அது போக பிறந்தநாள் திருமணநாள் விழாக்கள் என 16 பேருக்கும் மாறி மாறி வரும்.

 

அரிசி பருப்பை மட்டுமே நாங்கள் வெளியில் இருந்து வாங்குவோம். ஊறுகாய், வற்றல், அப்பளம் என அனைத்தும் வீட்டில். பட்சணங்கள் தனியர்களின் ருசிக்குத்தக்க இரண்டு மூன்று கறிகாய்கள் என நான் கண்டவை அனைத்தும் சமையலறையாக மாறிப்போனது.

 

பத்து பேருக்கு அடை தோசை வார்க்க வேண்டும். அழுகை வரும். பண்டிகை வந்தாலே வயிற்றைக்கலக்கும். வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது. எந்நேரமும் குடும்பத்தைப் பற்றி யோசிக்கணும். நாலு பேர் கூடினாலே சாப்பாட்டைப்பற்றி பேசுவார்கள்.

 

எங்கம்மா சமைக்கற மாதிரி வராது என அனைவரும் என் மாமியாரை சுரண்டினோம். அவர்களுக்கு அது பெருமை. பாக்கியம்.சமையலறை ராஜ்ஜியத்தை தரமாட்டார்.

 

எனக்கு இயல்பிலேயே சமைப்பது பிடிக்காது. தீவிர மனநோயாளியாகும் அளவு பாதிக்கப்பட்டேன். அது அவர்கள் குற்றமல்ல.நான் மறுப்பு சொன்னதே இல்லை. ஏனெனில் கலாச்சாரம் அப்படி பழக்கியிருந்தது.

 

என் மகன் பள்ளி சேர்ந்த பிறகு அவனுக்கு என சமைக்க துவங்கியது. பிறகு அவனது ருசிக்காக சமைக்க துவங்கினேன்

 

அதுவரை அவர்களது மெனுதான். அம்மாவாசை விரதநாள் என ஏக கட்டுப்பாடுகள். எல்லாம்  தாண்டி மகனுக்கென உள்நுழைந்த எனக்கு மூச்சு முட்டியது. மகன் தோசைப்பிரியன். ஆறு பேருக்கு சப்பாத்தியும் தோசையும் என நொந்திருக்கிறேன்.

 

பிறகு தான் எனக்கான ஞானோதயம் கிடைத்தது. அது என்னவென்றால் என் அம்மா என் மாமியார் என்னை ஒதுக்கியது போல அல்லாமல் சமையலைறையினை அனைவருக்குமானதாக ஆக்குவது.

 

மகனை மகளை கணவரை சமைத்துக்கொள்ள  அவர்களின் இயல்பான ஆர்வத்துடன் ஊக்குவித்திருக்கிறேன்.

 

அதென்ன ஊக்குவிப்பு?

 

முதலில் அவர்கள் செய்வதில் குறை சொல்ல மாட்டேன். கீழே சிந்திருக்கு மேல கொட்டிருக்கு ரக புகார்கள் இல்லை.

 

அடுத்தது பொருட்களை டப்பா மாற்றி வைத்து சதிவேலைகள் செய்யாமல் இருப்பது.

 

உணவின் ருசி முன்பின் இருப்பின் பரவாயில்லை. சரிபண்ணிக்கலாம் என சொல்வது. அதுக்குத்தான் நானே பண்றேன் என சொல்லாமல் இருப்பது.

 

சமையலறை என் கோட்டை அல்ல என்பதில் இருந்த தெளிவு, விட்டுக்கொடுத்தல்.

 

மோசமாக இருந்தால் நால்வருமே சரி செய்யணும். நால்வருமே ஒரே நேரத்தில் கிச்சனில் இருப்போம் என்ற வழிமுறை.

 

இதற்கு முதலில் பலத்த எதிர்ப்பு மாமியார் தரப்பில் இருந்து கிடைத்தது. குழந்தைகளை சமைக்க விடுகிறேன் என்று,  என் அம்மா வரை புகார் சென்றது.

 

என் அம்மாவுமே என் தம்பியிடம் சமையலறையை கொடுத்திருந்தார்.  பின்னர் எல்லாம் தானாக சரியானது.

 

ஆக இப்போது மாமியாரே எங்களுடன் சமைக்கிறார். அவரும் தன் பிடியினை தளர்த்தி கொடுத்தார்.

 

இதற்கு 15 வருடங்கள் ஆனது. எனது மனநிலை கடுமையான ட்ராமாவிற்கு சென்று மீண்டது.

 

ஆனால் பிள்ளைகளுக்கு அத்தனை தன்னம்பிக்கையும் மகிழ்வும். எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.

 

அவ்வளவுதான் இதில்.

 

என் ராஜ்ஜியம் என் மதிப்பு போகும் என் பிள்ளை என் கையை விட்டு போய்விடுவான் நான் சமைப்பது போல வராது. என் மகனுக்கு யாராவது செய்தால் பிடிக்காது எனக்கென ஒரு மரியாதை இல்லாது போய்விடும் என்றெல்லாம் பேசும் பெண்கள் நீங்கள் என்றால் நான் ஒன்று சொல்வேன். ஒன்று நீங்கள் முட்டாள் அல்லது திருட்டுத்தனம் உடையவர். இந்த இரண்டினையும் அம்மா பாசம் என சுகர் கோட் தடவுகிறீர்கள்.

 

எந்த அம்மாவும் தன் பிள்ளைகள் ஊனத்தைப்போல பிறர் கையேந்துவதை விரும்பமாட்டார்கள். அவர்கள் காலில் நிற்கத்தான் சொல்லித்தருவார்கள். அதுவே பாசம். அதுவே அன்பு. அதுவே பிள்ளைகளுக்கு செய்யும் நியாயம்.

 

பேம்பரிங் செய்து பிள்ளையை கைக்குள் வைத்து இன்னொரு பெண்ணை கெடுப்பது என்றோ மகளை கைக்குள் வைத்து அவளது குடும்பத்தில் தலையிட்டு அதையும் கெடுப்பது என்றோ செய்யும் செயல்களுக்கு குடும்ப அரசியல் என்று பெயர். பாசம் என பொய் சொல்லாதீர்கள்.

 

பெண்களே நீங்கள. இறந்து போனால் உங்களது வீடு அடுத்தவாரம் தனது கடமைகளை தானே துவங்கும். நீங்கள். நினைப்பது போல. எதுவும் நிற்காது. ஆண்களுக்கும் இது பொருந்தும். கிடைக்கிற கொஞ்ச காலத்தில் வாழும் வழியை பாருங்கள்.

 

சமையலறை வீட்டின் பிற பகுதிகளைப்போன்றே அனைவருக்கும் பொதுவானது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு ஆண்களைச்சொல்லலாம்.

 

சமையலறையிலும் அவசியம் வேண்டும் பொதுவுடமை.

 

-          ஷோபனா நாராயணன்

0 பின்னூட்டங்கள்: