> குருத்து: சார்வாகனும் தொழு நோயாளிகளுக்கு உதவிய Srinivasan effctயும்!

February 22, 2024

சார்வாகனும் தொழு நோயாளிகளுக்கு உதவிய Srinivasan effctயும்!

”இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு” புத்தகத்தில் வரிசையாக செல்லாமல், தேர்தெடுத்து படிக்கலாம் என பார்த்ததில்… சார்வாகன் எழுதிய ”கனவுக் கதை” சிறுகதையைப் படித்தேன்.



சிறுகதைப் பற்றி இறுதியில் பார்க்கலாம். சார்வாகன் – எழுத்தாளரைப் பற்றி தேடியதில்… சில முக்கிய தகவல்கள் கிடைத்தன.

சார்வாகன் என்கிற பெயரில் எழுதியவர் ஹரி சீனிவாசன். தமிழ்நாட்டில் ஆரணியில் பிறந்து, சென்னையில் மருத்துவம் படித்து, லண்டனில் இரண்டு மேற்படிப்பு (FRCS) பட்டங்களை பெற்றவர். வெளிநாட்டிலேயே வசதியாக வாழ்ந்திருக்கலாம். நன்றாக சம்பாதித்திருக்கலாம். பிடிவாதமாக தமிழ்நாட்டில் தான் சேவை செய்யவேண்டும் என முடிவெடுத்து இறுதிவரை அதை கடைப்பிடித்திருக்கிறார். நோயாளிகளிடம் பணம் வாங்க கூடாது. அரசு கொடுக்கும் சம்பளமே போதும் என்றும் வாழ்ந்திருக்கிறார். அதற்கு அவர் கொண்ட மார்க்சிய கொள்கைகளும், காந்திய கொள்கைகளும் துணை நின்றிருக்கின்றன.


துவக்கத்தில் முடநீக்கியல் துறையில் சிறப்பு மருத்துவராக இருந்தவர். ஒரு கட்டத்தில் தொழு நோயுண்டவர்கள் மீது கவனம் செலுத்தியிருக்கிறார். தொழு நோயுண்டவர்களுக்கு விரல்கள் மடங்கிப்போகும். அதை இயங்க செய்வதற்கான மருத்துவம் அதுவரை இல்லாமல் இருந்திருக்கிறது. அதில் ஆய்வு செய்து அறுவை சிகிச்சை செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இதனால் உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர்களுடைய விரல்கள் இயங்க தொடங்கியிருக்கிறது. உலக சுகாதார மையம் அவருடைய அந்த சேவையை மதித்து Srinivasan Effect என்ற பெயரும் வைத்திருக்கிறது. 1984ல் பத்மஸ்ரீ விருதும் கிடைத்திருக்கிறது.

“என் வாழ்க்கையின் உன்னதமான தருணம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரமோ, சர்வதேச மகாத்மா காந்தி விருதோ, பத்மஸ்ரீ விருதோ அல்ல. பல வருடங்களாகத் தன்னுடைய குடும்பத்தினராலேயே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தொழுநோயாளிப் பெண்மணி ஒருவர், என்னுடைய அறுவைச் சிகிச்சை மூலம் குணமான பிறகு, தன் கையால் பின்னிய ஒரு பூத்தையல் மேசை விரிப்பைப் பரிசளித்தார். நான் போற்றிப் பாதுகாக்கும் மிகவும் மகத்தான பரிசு அதுதான்!”

இந்திய வரலாற்றில் நாத்திகர்கள் தான் சார்வாகர்கள். பொருள்முதல்வாதிகளாக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் தன் பெயரை சார்வாகன் என புனைப்பெயராக வைத்திருக்கிறார்.

இப்பொழுது அவர் எழுதிய சிறுகதைக்கு வருவோம். அவர் எழுதிய காலம் 60, 70கள் என்கிறார்கள். 2015 வரை உயிர் வாழ்ந்திருந்தாலும், பின்னாட்களில் அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார். ”இப்ப யார் படிக்கிறார்கள்?” என வருத்தத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.


ஒரு சாமியார் நிறைய பெப்பர்மிண்ட் மிட்டாய்களை கடையில் வாங்கிக்கொண்டு, மக்களை ஓரிடத்தில் கூட்டியிருக்கிறான். மக்களும் கணிசமாய் கூடியிருக்கிறார்கள். ”எல்லோரும் மணிக்கூண்டுப் பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்க” என ஆணை பிறப்பித்திருக்கிறான். “ஆண்டவன் பிரசாதம்” என இலவசமாய் மிட்டாய்களை விசிறியடித்திருக்கிறான். “ஹரி ஓம்” என சொல்லிவிட்டு, ஆள் காணாமல் போயிருக்கிறான் - என ஏழுப்பக்கங்களில் இந்த சிறுகதையை எழுதியிருக்கிறார்.

இந்தக் கதை அவருடைய முக்கிய சிறுகதைகளில் ஒன்று என்று வேறு குறிப்பிடுகிறார்கள்.

குரங்கு கையில் பூமாலையாய் இன்று மத்தியில் ஆட்சி செய்கிறவர்களில் ஒரு ஆளைத் தான் அவர் அன்றைக்கே சுட்டிக்காட்டியிருக்கிறாரோ! “ஹரி ஓம்” தான் இப்பொழுது ஜெய் ஸ்ரீராம் என ஒலிக்கிறதோ!

உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

0 பின்னூட்டங்கள்: