> குருத்து: swathi mutthina male haniye (2023) கன்னடம்

February 13, 2024

swathi mutthina male haniye (2023) கன்னடம்


“ஸ்வாதி நட்சத்திரம் ஆகாயத்தில் தெரியும் சமயத்தில் சரியாக சிப்பிக்குள் விழும் மழைத்துளி முத்தாகிறது.”


****

”நந்தியாவட்டை. அது சாதாரண பூ. குப்பை போல என் வீட்டில் தினமும் கொட்டும். அதை ஏன் தேர்வு செய்தாய்?”

"அதுதான் என்னுடைய நோக்கமும் அதை ஒரு குப்பையாக நினைத்துக் கொள்வது. அது ஒரு மிக சாதாரணமான செடி. நாம் அதை கொண்டாடா விட்டாலும் அது மலரும். கடவுளின் பாதங்களுக்கு செல்லாவிட்டாலும் அது மலரும். யாரும் அதை வைத்து கவிதைகள் எழுதாவிட்டாலும் அது மலரும். நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் போனாலும் அது மலரும். அது யாருக்காகவும் மலர்வதில்லை. அது தனக்காகவே மலர்கிறது. அது உயிருடன் இருப்பதே அது மலர்வதற்கு போதுமான காரணம். அது சுதந்திரமாக இருக்கிறது. அதனால் அது மலர்கிறது”
- ராகேஷ் தாரா

****
குணப்படுத்தமுடியாத ஒரு நோய்கள். இன்னும் சில மாதங்களில் நிச்சயம் இறந்து போகும் மனிதர்கள் அந்த மலைப்பிரதேசத்தில் உள்ள தனித்திருக்கும் மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்களை மரணத்தை எதிர்கொள்வதற்கான மனநிலையை சரி செய்யும் மருத்துவராக வேலை செய்கிறார் நாயகி.

அங்கு வரும் ஒவ்வொரு மனிதனுக்கு பின்னாலும் நிறைய துயரங்கள் இருக்கின்றன. துவக்கத்தில் அவளை உலுக்குகிறது. பிறகு அதிலிருந்து கொஞ்சம் விலகி நிற்க “பழகி” கொள்கிறாள். ஆனால், அவள் சொந்த வாழ்வில் அவள் கணவனின் நடவடிக்கையால் ஏற்படுகிற விரக்தி, அவளை துயரத்துக்குள்ளாக்கிறது.

அந்த சமயத்தில் அந்த மருத்துவமனைக்கு ஒரு மனிதன் வந்து சேர்கிறான். மரணம் என தெரிந்த பின்பும், அதற்காக கலங்கி நிற்காமல், ஒவ்வொரு நொடி வாழ்வையும் உணர்வுப்பூர்வமாய் வாழ்கிறான். அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப்போய்விடுகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

மனிதர்களின் வாழ்வு ஒரு பெரிய எந்திரத்தின் ஒரு பல் சக்கரம் போல ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்தப் படம் ஒரு நிமிடம் நிதானித்து வாழ்வை கவனிக்க வைக்கிறது.

காவல் காக்கும் அந்த மனிதன் சொல்வான். என்னவென்று தெரியாத வயதில், என் தாய் நோயினால் இறந்துபோனாள். இங்கு வரும் ஒரு மனிதனையாவது காப்பாற்றினால், என் அம்மாவை காப்பாற்றியது போல உணர்வேன். ஆனால், ஒவ்வொரு மனிதனாக கைநழுவி போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பான்.

“எனக்கு அந்த மனிதனை பிடித்திருக்கிறது” என்பாள் தன் தாயிடம்! “ஒரு அம்மாவா இது தப்பு என்பேன். ஆனால் ஒரு பெண்ணாக இது தப்பில்லை என்பேன். இங்கு கூட்டுவது, பெருக்குவது, துவைப்பது, தோசை வார்ப்பது என எல்லாமும் செய்வோம். எல்லாமும் கிடைக்கும். அன்பைத் தவிர!” என்பார்.

படத்தில் எல்லா உணர்வுகளும் அளவோடு தான் இருக்கிறது. அழுது வடியாமல், நிதானமாக பார்க்க முடிகிறது.

ராஜ் பி ஷெட்டியின் கதையான ”777 சார்லி” பார்த்திருக்கிறேன். நல்ல படம். அதே இயக்குநர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பிரதான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். நாயகி சிரி ரவிக்குமார் நல்ல தேர்வு. ஒளிப்பதிவு, இசை எல்லாம் பலமாக துணை நின்றிருக்கிறது. படத்தில் சில நல்ல கவிதைகள் வருகின்றன. கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. ”சாண்டல் உட்” நாயகி (பொல்லாதவன்) ரம்யா தயாரித்திருக்கிறார். (அப்படித்தான் விளம்பரத்திலும் போடுகிறார்கள்.)

பார்க்கவேண்டிய படம். அமேசானில் வெளியாகியிருக்கிறது. பாருங்கள்.

0 பின்னூட்டங்கள்: