> குருத்து: Manjummel Boys (2024)

February 29, 2024

Manjummel Boys (2024)


2006. கொச்சின் அருகே உள்ள மஞ்சுமேல் என ஒரு பகுதி. வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களான இளைஞர்கள். கயிறு கட்டி இழுக்கும் போட்டியில் குழுவாக ஈடுபடுகிறார்கள். அந்த குழுவிற்கான பெயர் தான் ”மஞ்சுமேல் பாய்ஸ்.”


வேறு ஒரு குழு சுற்றுலா போய்வந்த புகைப்படங்களை எதைச்சையாக பார்க்கிறார்கள். அந்த உற்சாகத்தில் கோவா செல்லலாம் என ஒருவன் சொல்ல, எப்பொழுதும் இப்படித்தான். ஒருவன் சாத்தியமோ இல்லையோ பெரிதாக முன்வைப்பான். பிறகு, பட்ஜெட்டுக்குள்ளேயோ, கொஞ்சம் பட்ஜெட்டைத் தாண்டியோ ஒரு இடம் என முடிவாகும். அப்படித்தான் கொடைக்கானல் என அவர்களும் முடிவு செய்கிறார்கள்..

ஒரு காரைப் பிடித்து ஜாலியாய் ஊர் சுற்றுகிறார்கள். குணா குகையை சுற்றிப் பார்க்கும் பொழுது, இளைஞர்கள் அல்லவா! உற்சாக மிகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியை தாண்டி செல்ல, சிலர் தடுத்தாலும், சிலர் செல்ல, எல்லோருமே உள்ளே போகிறார்கள்.

அந்த அபாயகரமான பாதையில் ஒருவன் சறுக்கி விழ, ஒரு ஆழமான குகைக்குள் விழுகிறான். அந்த குகைக்குள் விழுந்தவர்கள் இதுவரை பிழைத்த வரலாறு இல்லை என பல கதைகளை சொல்ல, சொல்ல நண்பர்கள் திகைத்துப் போகிறார்கள்.

பிறகு அந்த இளைஞனை மீட்டார்களா இல்லையா என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****


கேரள திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடி, இப்பொழுது தமிழகத்தில் வெளியிட்டு, வரவேற்பை கண்டு திரையரங்குகளை அதிகரித்து இருக்கிறார்கள்.

உண்மைச் சம்பவம் என்பதால், அதற்குரிய இயல்புகளோடு இருப்பதே படம் அழகாக இருக்கிறது. குகைக்குள் விழுந்த பிறகு, போலீசு, தீயணைப்புத் துறை என அரசு நிர்வாகம் எத்தனை அலட்சியத்தோடும், திமிரோடும் நடந்துகொள்கிறார்கள் என்பதையும் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கை இது வழக்கமான திரைப்பட கிளிசே காட்சிகளாக இருக்கிறது என எழுதுகிறது. நிகழ்வை எப்படி பதிவு செய்தார்களோ, அரசு நிர்வாகமும் எப்படி நடந்துகொண்டது என்பதை பதிவு செய்திருக்கிறார்கள். இதில் கிளிஷேவாக இருக்கிறது என சொன்னால்… அதை உல்டாவாக அவர்களை எல்லாம் வியந்தோத வேண்டுமா என்ன! நான்சென்ஸ்.

இளைஞர்களுக்கே உரிய உற்சாகம், நண்பனை காப்பாற்றுகிற பதட்டம், அழுகை, என எல்லா உணர்ச்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சிதம்பரம் என்பவர் இயக்கியிருக்கிறார். செளபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி என பலரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கதை கொடைக்கானல் என்பதால், தமிழ் நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு, கலை என எல்லாமும் பக்கபலமாக நின்றிருக்கிறது. இளையராஜாவும் பொருத்தமாக ஆங்காங்கே வந்து போகிறார்.

திரையரங்குகளில் சப் டைட்டிலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

***

ஒரு கருத்தும், அதற்கான பதிலும்!

நமது தீயணைப்பு வீரர்களை கோழைகளாக காட்டியிருப்பது ஏற்புடையதாக இல்லை. இரண்டாவது கயிறை இழுக்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பது போல காட்டியிருப்பதும் தமிழர்கள் மனதாபிமானம் இல்லாமல் நிற்பதாக காட்டி இருப்பதும் அப்படித்தான்.. - Sne han, from facebook அப்படி கருதவேண்டியது இல்லை. விழுந்த இடம் அப்படி. அதுவரைக்கும் விழுந்தவர்கள் அங்கிருந்து காப்பாற்றப்பட்டது இல்லை என்பதையும் தெளிவாக சொல்லியிருப்பார்கள். காப்பாற்ற உள்ளே போய், அவரும் விழுந்துவிட்டால், தன்னுடைய பாடி கூட கிடைக்காது. இறப்புச் சான்றிதழ் கூட தரமாட்டார்கள். என் குடும்பம் தெருவிற்கு வந்துவிடும் என தெளிவாக சொல்வார்கள். இது கோழைத்தனம் அல்ல! அரசின் மீது ஒரு ஊழியருக்குள்ள நம்பிக்கையின்மை. இன்னொரு விசயம். முதலில் தீயணைப்பு வீரர்கள் தான் முதலில் கயிறு விடுவார்கள். அந்த நபரை எவ்வளவு நேரம் அப்படி உள்ளே அனுப்பினார்கள் என்பதை எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கட்டத்தில் தான், அந்த இளைஞர்கள் கைகொடுப்பார்கள். அவர்கள் கயிறு இழுக்கும் போட்டியில் தொடர்ச்சியில் ஈடுபடுபவர்கள். அதற்காக பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள். அவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதும் முக்கியமான காரணம்.

0 பின்னூட்டங்கள்: