> குருத்து: கடல் பார்க்க அழகு!

August 20, 2019

கடல் பார்க்க அழகு!

மெரினா கடற்கரையில் குழந்தைகள் குதூகலமாய் அலைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர்களும் குழந்தைகளோடு போட்டிப்போட்டு அலைகளோடு
மல்லுக்கட்டி விளையாடுகிறார்கள்.

எனக்கு கடல் பார்க்கத்தான் அழகு. என் துணைவியாரும், என் பொண்ணும் அழைக்கும் பொழுது கூட அதிகபட்சமாய் கால்கள் மட்டும் நனைப்பதுண்டு.

கடல் சுனாமியாய் மாறி பல லட்சம் மக்களை கொன்று குவித்த கோரமான படங்கள் வெகுகாலம் மனதில் தங்கி இருந்தது. அதனால் சில வருடங்கள் கால்கள் கூட நனைக்காமல் இருந்ததுண்டு.

இப்பொழுது நீரோடு எனது உறவை நினைத்துப்பார்த்தால்... ஒரு விசயத்தை உணர்கிறேன்.

வைகையில் நீர் வரும் காலமெல்லாம் நண்பர்களுடன் குளித்திருக்கிறேன். அது உப்பாய் இருப்பதில்லை.

பாசனத்திற்காக திறக்கப்படும் நீண்ட கால்வாய்களில், பம்பு செட்டுகளில் குளித்திருக்கிறேன். அதுவும் உப்பாய் இருப்பதில்லை.

எங்கள் பகுதியில் இருக்கும் கண்மாய்களில், ஊர் குளங்களில் பல மணி நேரம் நண்பர்களுடன்
குளித்திருக்கிறேன். அதுவும் உப்பாய் இருப்பதில்லை.

விதவிதமான கிணறுகளில் நேரம் போவதே தெரியாமல் நிறைய உயரத்திலிருந்து தாவி தாவி குளித்திருக்கிறேன். அதுவும் உப்பாய் இருப்பதில்லை.

நீர் உப்பாய் இருப்பதால்,
கண்கள் எரிவதால்
பார்க்க மட்டும்
கடல் அழகாய் படுகிறது!

பின்குறிப்பு : கடல் மீது பிரியம் கொண்டவர்கள் கோபித்துக்கொள்ளாதீர்கள்.

0 பின்னூட்டங்கள்: