> குருத்து: வசீகரா (2003)

May 21, 2022

வசீகரா (2003)

 


”தன் மகன் படித்துவிட்டு வெட்டியாக ஊரைச்சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்து பொறுப்புள்ள மனிதனாக்கு,!” என பெருநகரத்தில் இருக்கும் தன் நண்பனிடம் அனுப்பிவைக்கிறார்.  நண்பனுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்து, கல்யாண வேலைகள் நடந்துவருகின்றன.

 

வீடு வந்து சேர்ந்த பிறகு, சில பல கலாட்டாக்கள், முட்டல், மோதலுக்கு பிறகு நாயகனின் குணம் பிடித்துப் போய், நிச்சயம் ஆன நாயகி நாயகனை காதலிக்கிறாள். அவனுக்கு பிடித்திருந்தாலும், ஊருக்கு கிளம்பும் பொழுது “எந்த சூழ்நிலையிலும் என் நண்பனிடம் மன்னிப்பு கேட்கும் நிலையை மட்டும் உருவாக்கிவிடாதே!” என அப்பா சொன்னது நினைவுக்கு வருகிறது. விலகி விலகி போகிறான். பிறகு என்ன ஆனது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

 

சில படங்கள் எப்பொழுதுமே பார்க்க பிடிப்பவை. அதில் இந்தப் படமும் ஒன்று.  தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கும் இயக்குநர் திரி விக்ரம்  கதை வசனம் எழுத வெங்கடேஷ் ஆர்த்தி நடிக்க தெலுங்கில் பெரிய ஹிட். விஜய்யை வைத்து ”நினைத்தேன் வந்தாய்”  (இதுவும் ரீமேக் தான்) எடுத்த இயக்குநர் செல்வபாரதி இந்த கதையை வாங்கி விஜய், சிநேகா, நாசர் நடிக்க படத்தை எடுத்தார். எஸ்.ஏ. இராஜ்குமாரின் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை படத்தோடு ஒட்டி வரும் வடிவேலின் நகைச்சுவை நன்றாகவே எடுப்பட்டிருக்கும். படம் பலருக்கு பிடித்திருந்தாலும், வெளியான பொழுது கையை கடிக்காமல் ஓடியது என்கிறார்கள்.

 

பார்த்த உடனே காதல் என்பதை விட, பழகி, குணம், பழக்க வழக்கங்கள் பிடித்து வரும் காதல் யதார்த்தமானது தான்.  முதலில் தனக்கான வரன் பற்றி எந்த கருத்தும் இல்லாமல் இருக்கும் நாயகி, மெல்ல மெல்ல நாயகின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்டு, அவன் தனக்கு பொருத்தமானவன் என அறிந்ததில் இருந்து, அதில் உறுதியாய் இருப்பது அருமையாக இருக்கும்.  விஜய்யும், சிநேகாவும் சிறப்பாக பொருந்தியிருப்பார்கள்.  மற்றவர்களும் சிறப்பாக செய்திருப்பார்கள்.

 

தெலுங்குப் படத்தை அச்சு அசலாக காப்பியடித்த படங்களில் இதுவும் ஒன்று. இரண்டு படங்களுமே மூன்று மணி நேரப் படங்கள். இருந்தாலும் போராடிக்காத படம். பார்க்காதவர்கள் யூடியூப்பிலேயே இலவசமாக கிடைக்கிறது. ஒருமுறை பாருங்கள். பிறகு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பார்ப்பீர்கள்.

0 பின்னூட்டங்கள்: