> குருத்து: ”அப்ரோச்”சின் இலவச மக்கள் சேவை! மென்மெலும் வளர வாழ்த்துகள்!

August 16, 2023

”அப்ரோச்”சின் இலவச மக்கள் சேவை! மென்மெலும் வளர வாழ்த்துகள்!


”அப்ரோச்” அமைப்பின் சார்பில் நடைபெற்ற இலவச ஹோமியோ சேவை மையத்தின் ஆண்டு விழா அழைப்பிதழை பகிர்ந்திருந்தார்கள்.


ஒவ்வொரு ஆண்டும் போகவேண்டும் என நினைப்பேன். அவர்கள் நடத்துகிற அதே நாளில் வேறு கூட்டங்களுக்கு போகவேண்டிய நெருக்கடியில் இருப்பேன். ஆனால் இன்று (15/08/2023) வாய்ப்பு கிடைத்தது. போய் கலந்துகொண்டேன்.

உள்ளே நுழைந்த பொழுது, கூட்டத்தை தலைமையேற்று தோழர் மணிவண்ணன் நடத்திக்கொண்டிருந்தார்.


இருபது ஆண்டுகளுக்கு முன்பாக தோழர் ஜவஹர், தோழர் இராமசாமி மூலமாக ”அப்ரோச்” எனக்கு அறிமுகமானது. பாடி பிரிட்டனியா அருகே இலவச ஹோமியோ மையம் செயல்பட்ட பொழுது இரண்டொரு முறை போயிருக்கிறேன். பின்னாட்களில் ஒருமுறை அம்பத்தூர் ஓ.டியில் தோழர் ஜவஹர் சிறப்பு பங்கேற்பாளராக பேசிய பொழுது கலந்துகொண்டிருக்கிறேன். இப்பொழுது அம்பத்தூர் ரயில்வே நிலையம் செல்லும் வழியில் பழைய இ.எஸ்.ஐ சாலை என்னுமிடத்தில் பல வருடங்களாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தோழர் சத்யா அவர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தாலும், ஞாயிறுகளில் அவசர அவசியம் என்றால் ”அப்ரோச்” மருத்துவர்கள் தான் உதவி செய்கிறார்கள்.

மருத்துவம் வணிகமயமாகி, அதன் உச்சத்தில் இருக்கும் பொழுது, இத்தனை வருடங்களாக ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்வது அசாத்தியமான செயல்பாடு. மருத்துவர்கள், ஹோமியோபதி கற்கும் மாணவர்கள், புரவலர்கள், அங்கு வேலை செய்யும் தன்னார்வலர்கள் பெரியவர்கள் துவங்கி சிறுவர், சிறுமிகள் வரை என அந்த அரங்கில் திரண்டிருந்த அத்தனை பேரும் அப்ரோச்சோடு அத்தனை நெருக்கமான உறவோடு இருக்கிறார்கள். அதனால் தான் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து இயங்குவது சாத்தியமாகியிருக்கிறது. அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

”அப்ரோச்”சில் இயங்கும் அனைவருக்கும் அதன் செயல்பாட்டாளர்கள் கைத்தறி துண்டுகள் அணிவித்து, புத்தகங்கள் பரிசாக தந்து உற்சாகப்படுத்தப்பட்டார்கள்.

”எண்களும் மருத்துவமும்” என்ற தலைப்பில் சீனிவாச இராமனுஜம் கொஞ்சம் அறிவியல் பூர்வமான விசயத்தை எளிய முறையில் விளக்கிப் பேசினார். என்னைப் போல பார்வையாளர்களை மனதில் வைத்து இப்படி மருத்துவம் சார்ந்த ஒரு தலைப்பில் வருடம் வருடம் பேச பேச்சாளர்களை பேச அழைக்கிறோம் என்றார் அதன் செயலர் தோழர் இராமசாமி. இதை தொடர்ந்துச் செய்யுங்கள் என கோருகிறேன்.

இறுதி சிறப்புரையாக ”அப்ரோச்” செயல்பாட்டாளர்களை பாராட்டியும் சமகால அரசியல் சூழல் எத்தனை சிக்கலாக இருக்கிறது என்பதையும் பேசி, மக்கள் எல்லோரும் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டிய காலக்கட்டம் என்பதை வலியுறுத்தி பேசினார் நெய்வேலி பாலு அவர்கள்.

இறுதியில் அனைவருக்கும் சுவையான உணவு ஏற்பாடு பரிமாறப்பட்டது. தோழர்கள் மருத்துவர் சத்யாவிடமும், மோகனா, சமுலா அவர்களிடம் விடைபெற்று வந்தேன்.

தொடரட்டும் ”அப்ரோச்”சின் இலவச மக்கள் சேவை! மென்மெலும் வளர வாழ்த்துகள்!
தோழமையுடன்....

0 பின்னூட்டங்கள்: