> குருத்து: The Himalayas (2015)

August 27, 2023

The Himalayas (2015)


உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இமயமலையில் ஒரு சாகச பயணம்

”மலையேற்றத்தின் பொழுது, ஒரு புதிய ஒன்றை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 7000 மீட்டர்களைத் தாண்டும் பொழுது, வாழ்க்கையை வாழ கற்றுகொள்ள முடியும். அதுவே 8000 மீட்டர்களை தாண்டும் பொழுது, வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். அதைத் தாண்டி பயணிக்கும் பொழுது.. உங்களை உணர்வீர்கள். நீங்கள் வாழ்வில் பயன்படுத்துகிற அத்தனை முகமூடிகளும் கழன்றுவிழும்.”

****

இமயமலையில் கடுங்குளிரில் ஒரு கேப்டன் தலைமையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். பயணிகளின் உடைமைகளை எடுத்து வந்தவர்களில் ஒருவர் இறந்துவிடுகிறார். உடலை விட்டுவிட்டு கிளம்பிவாருங்கள் என சொன்னால், ”அதெப்படி நண்பனை விட்டுவிட்டு வருவது!” என அடம்பிடிக்கிறார்கள். ஒருவழியாக கீழே வந்த பிறகு, கேப்டன் அந்த இருவரையும் திட்டுகிறார் “தலைவன் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்கவேண்டும். மற்றவர்களின் உயிருக்கும் சிக்கலாக்க கூடாது. இனி மேல் இமயமலை பக்கம் வந்தால்… தொலைத்துவிடுவேன்” என எச்சரித்து அனுப்புகிறார்.

சில ஆண்டுகள் கழித்து திட்டு வாங்கிய அந்த இருவர் மீண்டும் மலையேறுவதற்காக வந்து நிற்கிறார்கள். முதலில் மறுக்கும் கேப்டன், மன்னிப்பு கேட்ட பிறகு அவர்களை ஏற்றுக்கொள்கிறார். இந்தமுறை சொன்னதை கேட்டு நடக்கிறார்கள். பிரியத்துக்குரியவர்களாகிவிடுகிறார்கள்.

ஆண்டுகள் கடக்கின்றன. கேட்பனுக்கு காலில் ஒரு சிக்கல் வந்துவிடுகிறது. இனி மலையேறக்கூடாது. மீறினால் காலை மறந்துவிடவேண்டியது தான் என மருத்துவர் எச்சரிக்கிறார். இப்பொழுது திட்டு வாங்கிய இரண்டு ஜூனியர்கள் இப்பொழுது மலையேறுவதில் திறன் மிக்கவர்களாகிவிடுகிறார்கள். ”தென்கொரியாவில் மலையேற்றத்தில் இப்பொழுது நீ தான் முதலில் இருக்கிறாய்” என கேப்டனே பாராட்டுகிறார்.

ஒரு குழுவை வழிநடத்தி அழைத்து செல்லும் பொழுது… சீதோஷ்ண நிலை மாறி ஒரு விபத்து ஏற்படுகிறது. அவரின் ஜூனியர்கள் இருவர் உட்பட, மூவர் மாட்டிக்கொள்கிறார்கள். மைனஸ் 40 டிகிரி. உறைய வைக்கும் பனி. இப்பொழுது காப்பாற்ற போனால், அது ஒரு தற்கொலைக்கான முயற்சி தான் என போகாமல் விடுகிறார்கள்.


தனது ஜூனியர்கள் மாட்டிக்கொண்டார்கள் என்ற செய்தி அறிந்ததும், கேப்டன் துடித்துப்போகிறார். நாட்கள் கடக்கின்றன. அவர்களுடைய உடல்களையாவது கண்டறிந்து கீழே கொண்டு வரலாம் என தனது பழைய குழு ஆட்களை தேடிச் செல்கிறார். முதலில் வேறு வேறு காரணங்கள் சொல்லி மறுப்பவர்கள் பிறகு ஒன்றிணைகிறார்கள்.

இந்த குழு இறந்து போன அவர்களின் உடல்களை கொண்டுவந்தார்களா? என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

இமயமலையில் பயணம், குறிப்பாக எவரெஸ்ட்டை தொடுவதற்கான பயணம் குறித்த படங்களில் தென்கொரியாவிலிருந்து இந்தப் படம் வந்திருக்கிறது.

இமயமலையில் ஏறுவது என்பது பெரிய போராட்டமானது. பல லட்சம் செலவு வைக்கக்கூடியது. மைனஸ் 30, 40 டிகிரி என்பது உறைய வைக்கும் பனி. எத்தனை லேயர்கள் நாம் கவசமாக உடையணிந்திருந்தாலும், அதையும் மீறி உடலுக்குள் துளைக்க கூடியது. உயிர் போகும் அளவிற்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தக்கூடியது. கொஞ்சம் சீதேஷ்ண நிலை மாறினால், தவறி விழுந்தால், உயிர் போகும் சாத்தியமும் கூடியது. எத்தனை பாதுகாப்பாய் இருந்தாலும், ஆண்டுக்கு சிலர் இறந்துகொண்டு தான் இறக்கிறார்கள். இத்தனையையும் மீறி மனிதர்கள் மீண்டும் மீண்டும் பனி மலை மலையேறுவதற்கு எது தூண்டுகிறது?


அந்த கேப்டனிடம் ஊடககாரர்கள் கேள்வி கேட்பார்கள். இத்தனை முறை இமயமலையில் பயணித்திருக்கிறீர்கள். என்ன உணர்கிறீர்கள்?

”மலையேற்றத்தின் பொழுது, ஒரு புதிய ஒன்றை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். 7000 மீட்டர்களைத் தாண்டும் பொழுது, வாழ்க்கையை வாழ கற்றுகொள்ள முடியும். அதுவே 8000 மீட்டர்களை தாண்டும் பொழுது, வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும். அதைத் தாண்டி பயணிக்கும் பொழுது.. உங்களை உணர்வீர்கள். நீங்கள் வாழ்வில் பயன்படுத்துகிற அத்தனை முகமூடிகளும் கழன்றுவிழும்.” என்பார்.

தனது சிஷ்யர்கள் இரண்டு பேர் மாட்டிக்கொண்டார்கள். அவர்களின் உடல்களையாவது கீழே கொண்டுவந்து அடக்கம் செய்யவேண்டும் என்ற போராட்டம் உணர்ச்சிகரமாக காட்டியிருக்கிறார்கள்.

பெரிய போராட்டத்திற்கு பிறகு, தனது சிஷ்யன் இருக்கும் இடத்திற்கு போய் உடலைப் பார்த்து. “நான் ரெம்ப தாமதமாக வந்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள் சகோதரா!” என அழுது மன்னிப்பு கேட்பார். ஆனால் உடலை கொண்டு வருவது அத்தனை சாத்தியப்படவில்லை. அவருடைய மனைவி போனில் “அவருக்கு மிகவும் பிடித்த இமயமலையின் ஒரு பகுதியாக அவரும் இருந்துவிட்டு போகட்டும். நீங்கள் பாதுகாப்பாக வந்துவிடுங்கள்” என அழுதுகொண்டே சொல்வார்.

படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உள்ள படம் என்பதால், அதற்குரிய தன்மைகளுடன் தான் (Slow drama) இருக்கிறது. கொரியக்காரர்கள் உணர்வுப்பூர்வமாக படம் எடுத்துவிடுகிறார்கள். அது படத்தை காப்பாற்றிவிடுகிறது.

வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். இணையத்தில் எங்கும் இல்லை என just watch தளம் சொல்கிறது. வேறு வழிகளில் முயலுங்கள்.

0 பின்னூட்டங்கள்: