> குருத்து: ஜெயிலர்

August 20, 2023

ஜெயிலர்


முன்னாள் ஜெயிலர். இப்பொழுது ஓய்வு பெற்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.   மகன் போலீசில் உயரதிகாரியாக இருக்கிறார். ஒரு பெரிய சிலை கடத்தல் மாபியா கும்பலை துரத்திக்கொண்டு இருக்கிறார். திடீரென ஒருநாள் காணாமல் போகிறார்.

 

அவரைத் தேடும் முயற்சியில் ஜெயிலர் இறங்க… போன் செய்து ”மொத்த குடும்பத்தையும் காலி செய்கிறேன்” என  வில்லன் மிரட்டுகிறான்.   தனது செல்வாக்கை பயன்படுத்தி, வில்லன் கும்பலை எப்படி எதிர்கொண்டார் என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

 

ஓய்வு பெற்ற ஜெயிலர். அவருடைய செல்வாக்கு என இந்தப் படம் அடிப்படையே பலவீனமாக இருக்கிறது.    அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். இப்பொழுது விழுந்து விழுந்து மரியாதை செய்பவர்கள் அதிகாரத்தை இறங்கிவிட்டால், ஒரு பயலும் தன்னை மதிக்கமாட்டார்கள் என மற்றவர்களை விட அவர்களுக்கு நன்றாக உணர்ந்து இருப்பார்கள். 

 


அதனால் தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள் கூட அதிகாரத்தை விட்டு இறங்கினால் மதிக்கமாட்டார்கள் என  கவர்னருக்கு அடிபோடுகிறார்கள். ஆளும் கட்சிக்கு ஆதரவாக வேலையில் இருக்கும் பொழுதே அதற்கான அடித்தள வேலைகளை கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள்.

 

இராயப்பேட்டை மருத்துவமனையில் ம.க.இ.கவைச் சேர்ந்த ஒரு தோழர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்க தினமும் இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் வந்து போய்க்கொண்டிருப்பார்கள்.  அவருடைய பக்கத்து படுக்கையில் இருந்த ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் ஒருவரை பார்க்க அபூர்வமாக ஆள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.  இது தான் யதார்த்த நிலை.

 

படத்தில் ஓவர் பில்டப். எதார்த்தம் தெரிவதால், எல்லாமே நமக்கு அபத்தமாக படுகிறது.  அவர் சர்வ சாதாரணமாக கொலைகளை செய்கிறார். பெரிய பெரிய வேலைகளை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்கிறார். தாங்க முடியவில்லை.

 

ஒன்று அதிகாரத்தில் இருப்பது போல காண்பித்திருக்கலாம். எல்லோரும் ஒத்துழைப்பார்கள் என புரிந்துகொள்ளலாம். இல்லையெனில், பெரிய பணக்காரராக காண்பித்து, தனது செல்வாக்கால் நகர்த்துகிறார் என்றாவது சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. பார்வையாளர்களால் புரிந்துகொள்ளமுடியும்.  ஒரு ரிட்டையர்டு ஜெயிலர் ஒரு சாதாரண வீட்டில் இருந்துகொண்டு  இவ்வளவு ஆட்டம் போடுவதெல்லாம் தாங்க முடியவில்லை.

 

ஜெயிலருக்கான புரமோசன் வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன. மொத்த இந்தியாவிலும் அம்பலப்பட்டு நிற்கும் .பியின் முதல்வர் காலில் சாஷ்டாங்கமாக ரஜினி விழுந்தார் என செய்திகள் வருகின்றன.

இந்த பொழப்புக்கு நிம்மதியாக வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடலாம். அதிகாரம், புகழ், பண போதை யாரை விட்டது? ரஜினியை விடுவதற்கு!

0 பின்னூட்டங்கள்: