> குருத்து: வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 7

June 17, 2024

வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 7


பி.எப். தொழிலாளர்களுக்கென ஒரு தளத்தை இயக்கி வருகிறது.  அந்த தளத்தின் வழியாக தான் கடனுக்கு விண்ணப்பிப்பது, பி.எப். பணத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிப்பது, ஓய்வு நிதி விண்ணப்பத்தை  சமர்ப்பிப்பது என பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது.   இந்த தளம் தொடர்பாக நமக்கு தொடர்ந்து சந்தேகங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆகையால், அந்த தளம் குறித்து  முக்கிய தகவல்களை பார்ப்பது பலருக்கும் பலனளிக்கும்.

தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/



இதில் உள்ளே நுழைவதற்கு… User ID :  xxxxxxxxxxxx  12 எண்களால் உருவாக்கப்பட்ட எண்ணை ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிறுவனத்தால் ஆதார் எண், தொழிலாளியின் விவரங்களைக் கொண்டு பி.எப் தளத்தில் உருவாக்கப்படும் . அந்த  UAN (Universal Account Number) எண்ணை தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.  இதற்கான கடவுச்சொல்லை (Password) நாமே தளத்தில் உருவாக்கிக்கொள்ளலாம்.

 

தொழிலாளியின் அடிப்படை விவரங்கள் (Know your customer)

 

ஒரு தொழிலாளிக்குரிய பி.எப் பணம் உரியவர்களிடம் கொடுப்பதில் பி.எப் மிகவும் கறாராக நடந்துகொள்கிறது. அதனால், எல்லா விவரங்களும் சரியாக இருக்கவேண்டும் என்பது  மிக அவசியமானது.  பி.எப்பில் உள்ள தரவுகளும் ஆதார், பான் கார்டு, வங்கி விவரங்கள்  எல்லாமும் ஒரே சீராக இருக்கவேண்டியது அவசியம்.  நடைமுறையில், பல தொழிலாளர்களின் ஆதாரில் உள்ள விவரங்கள், பான் கார்டில் உள்ள விவரங்கள், வங்கிப் புத்தகத்தில் உள்ள விவரங்கள் என மூன்றிலுமே நிறைய சின்ன சின்ன வித்தியாசங்கள் இருப்பது இயல்பாக இருக்கிறது. பொதுவாக இந்த மாற்றங்களில் கவனம் செலுத்துவதில்லை.  அந்த மாற்றங்களை தொழிலாளர்கள் நேரம் ஒதுக்கி, உரிய இடங்களில் விண்ணப்பித்து சரி செய்து சீராக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். இல்லையெனில், பணம் எடுக்கும் பொழுது, இவற்றை எல்லாம் சரி செய்த பிறகு தான் பணம் எடுக்கமுடியும் என்ற நிலை ஏற்படும்.

 

செல்பேசி எண், மின்னஞ்சல்

 

தொழிலாளியின் ஆதாரின் என்ன செல்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதையே பி.எப். தளத்திலும் பதிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், தளத்தில் நுழையும் பொழுதே, ஆதார் எண்ணுக்கு ஒரு ஓடிபியை அனுப்பிவைக்கிறது.  அதை பதியும் பொழுது தான் உள்ளேயே நம்மை நுழையமுடியும்.   அதே போல மின்னஞ்சல் முகவரியும் இப்பொழுது நாம் வழக்கமாக பயன்படுத்துகிறோமோ அதையே கொடுப்பது தான் சரியானது.

 

UAN  அடையாள அட்டை



UAN என்பது தான் தொழிலாளிக்குரிய அடையாள எண்.  தளம் UAN Card என்பது ஒரு தொழிலாளிக்குரிய அடையாள அட்டை ஒன்றை பி.எப் தருகிறது. அதை பிரிண்ட் எடுத்து லேமினேசன் செய்து வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும்.

 

கணக்கு விவரங்கள் (Passbook)

 

நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக தனியாக ஒரு தளத்தை பி.எப். உருவாக்கி தந்திருக்கிறது.  அந்த தளத்திற்கான User ID, கடவுச்சொல் பி.எப் தளத்தில் நாம் பயன்படுத்துகிற அதே User ID, கடவுச்சொல்லையே பயன்படுத்திக்கொள்ளலாம். https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login  என்ற தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

 

வாரிசுதாரர் நியமனம் (E Nomination)

 

பி.எப். (EPF) கணக்கு வைத்திருப்பவர்களின் பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம் அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுவதற்கு இந்த வாரிசுதாரர் நியமனம் உதவுகிறது.  ஆகையால்,  தொழிலாளியின் துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என அடிப்படை விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றவேண்டும்.  தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு,  ஆதார் ஓடிபி மூலமாக  E sign யையும் பூர்த்தி செய்யவேண்டும்.

 

பணியிலிருந்து விலகும் தேதி (Mark Exit)

 

ஒரு தொழிலாளி  ஒரு நிறுவனத்திலிருந்து விலகும் பொழுது விலகும் தேதியை பதிவு செய்வது அவசியம். முன்பு நிறுவனம் மட்டுமே தொழிலாளி விலகும் தேதியை பதிவேற்றும் வசதி இருந்தது.  சில சமயங்களில் நிறுவனம் மூடிவிடும் பொழுதோ,  நிறுவனம் அதை பதிவேற்ற தாமதிக்கும் பொழுதோ, தொழிலாளிகள் பணத்தை பெற முடியாத சிரமத்திற்கோ, தாமதத்திற்கோ உள்ளாகிறார்கள். ஆகையால்,  சமீப காலத்தில் தொழிலாளியே விலகும் தேதியை கொடுக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  நினைவில் இருந்து அதை பதிவேற்றாமல், விலகிய தேதியை சரியாக பதிவேற்றவேண்டும். இல்லையெனில் அதைத் திருத்துவதற்கு பி.எப் அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருக்கும்.

 

கடவுச் சொல் (Password)


முன்பெல்லாம் ஒரே UAN, ஒரே கடவுச்சொல் இருந்தால் நீண்ட காலத்திற்கு போதுமானதாக இருந்தது.  பி.எப் தளம் என்பது பணம் சம்பந்தப்பட்டது என்பதால், கடவுச்சொல் என்பது மிகவும் முக்கியமானதாக மாறிவிட்டது. ஆகையால் அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள் என பி.எப் தொழிலாளர்களை வலியுறுத்துகிறது.

 

மாற்றுவதற்கு, பழைய கடவுச்சொல்லை இட்டு, அதற்குரிய விதிகளுடன் புதிய கடவுச்சொல்லை இரண்டுமுறை முறை பதிவு செய்து, ஆதார் ஓடிபி பெற்று பதிந்தால், புதிய கடவுச்சொல்லை தளம் ஏற்றுக்கொண்டுவிடும்.

 

Form 31  - முன்பணம் மற்றும் கடன் படிவம் (PF Part Withdrawal)

 

நாம் செலுத்திய பி.எப். பணத்தில் இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் முன்பணம், கடன் பெறுவதற்கு பி.எப்பில் வசதிகள் இருக்கின்றன.  அதற்கான நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களை பி.எப் விதிகளை விதித்திருக்கிறது.  ஏற்கனவே இது குறித்து முந்தைய கட்டுரைகளில் விளக்கியிருக்கிறோம். அதைப் புரிந்துகொண்டு இங்கு கடனுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

 

பி.எப் பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுதல் (Claim Form 19)

 

இந்த விண்ணப்பம் என்பது நாம் நம்முடைய பி.எப் கணக்கில் செலுத்திய மொத்தப் பணத்தையும் திரும்ப பெறுவதற்கான விண்ணப்பம் ஆகும். 

முழுமையாக திரும்ப பெறுவது என்பது இரண்டு சமயங்களில் சாத்தியப்படும். 

1. தொழிலாளி தன்னுடைய பணிக்காலம் முழுவதும் வேலை செய்து, ஓய்வு பெறும் காலமான 58 வயது நிறைவு பெற்றதற்கு பிறகு விண்ணப்பித்து வாங்குவது. 

2. ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவது.

 

ஓய்வூதிய பணத்தை மொத்தமாக பெறுதல் (Claim Form 10C)

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, வேலையில் இருந்து நின்ற பிறகு இன்னொரு நிறுவனத்தில் இரண்டு மாதம் வரை இணையாத பொழுது, அதுவரைக்கும் நாம் செலுத்திய  ஓய்வூதிய பணத்தை முழுவதுமாக திரும்ப பெறுவதற்கு இந்த விண்ணப்பத்தை பயன்படுத்தவேண்டும்.

 

எட்டு மாதங்களுக்கு குறைவாக வேலை செய்தால்… ஓய்வூதிய கணக்கில் செலுத்திய பணத்தை திரும்ப பெறமுடியாது.  பி.எப். இந்த ஓய்வூதிய பணத்தை திரும்ப செலுத்துவதற்கு சில விதிகளை உருவாக்கியுள்ளது.  அடுத்து நீங்கள் ஒரு நிறுவனத்தில் இணையும் பொழுது, எட்டு மாத காலத்திற்கு கீழே செலுத்தப்பட்ட தொகை உங்கள் கணக்கிற்கு வந்துவிடும். அதை வாங்கவே முடியாது என்று நினைக்க தேவையில்லை.

 

அதே போல  ஒன்பது ஆண்டுகளும், ஆறு மாத காலத்தையும் நாம் தாண்டிவிட்டால், பணிக்கால ஓய்வுக்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியம் தான் பெறமுடியுமே தவிர, இந்த நிதியை நாம் பெற முடியாது.

 

மேலும், 10C விண்ணப்பிதற்கு முன்பாக, பி.எப் பணத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் 19 ஐ பூர்த்தி செய்த பிறகு, 10C ஐ பூர்த்தி செய்வது சரியானது.  இல்லையெனில், பி.எப். உங்கள் விண்ணப்பத்தை ஏற்காமலோ, திருப்பி அனுப்பியோவிடும்.

 

ஓய்வு நிதி விண்ணப்பம் (Claim Form 10D)

 

ஒரு தொழிலாளி தனது பணி ஓய்வு காலமான 58 வயதுக்கு பிறகு மாதாந்திர ஓய்வு நிதி பெற விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம்  இது.

 

மாதாந்திர ஓய்வு நிதி பெறுவதற்கான முதல் தகுதி, ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்திலோ அல்லது சில நிறுவனங்களில் வேலை செய்தோ மொத்த பணிக்காலம் 9.5 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கவேண்டும்.

 

அதற்கு குறைவான பணிக்காலமாய் இருந்தால்,  ஓய்வு நிதிக்கு விண்ணப்பிக்க முடியாது.  அதுநாள் வரைக்கும் எவ்வளவு நிதியை ஓய்வு நிதியில் செலுத்தியிருந்தோமோ, அதை விண்ணப்பித்து மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். (அதற்கான விண்ணப்பம் 10C.).

 

ஒரு UAN எண் – ஒரு பி.எப் கணக்கு (One member – one EPF Account (Transfer Request))

 

ஒரு தொழிலாளி ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்திருக்கும் பொழுது, பி.எப். பணத்தை பெற விண்ணப்பிக்கும் பொழுது, எல்லா நிறுவனங்களின் கணக்குகளும் கடைசியாய் வேலை செய்த கணக்கிற்கு மாற்றவேண்டும் என பி.எப். கோருகிறது. எல்லா கணக்குகளிலும் தொழிலாளியின் அடையாள எண்ணான ஓரே UAN (Universal Account No.) தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் அதுவாகவே மாறாதா?  கடந்த ஏப்ரல் 1, 2024 தேதியில் இருந்து, ஒரே UAN எண்ணாக இருந்தால், தொழிலாளி நிறுவனம் மாறும் பொழுது  பழைய கணக்கை, புதிய கணக்கிற்கு மாற்ற தேவையில்லை என பி.எப். ஒரு அறிவிப்பைத் தந்தது. 

 

பெயரில் எழுத்துப்பிழை, வேலையில் சேர்ந்த தேதி, விலகிய தேதி குறிப்பிடப்படவில்லை என்ற சில காரணங்களால் பி.எப். மாற்றாமல் தனித்தனியான கணக்காகவே வைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், நிறுவனங்களில் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கு மாறிவிட்டதா என சோதிப்பது மிக அவசியம்.

 

நமது விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளல் (Track Claim Status)

 

நாம்  பி.எப் கணக்கில் இருந்து கடன் பெற, பி.எப். பணம் பெற  பி.எப். ஓவ்யூதிய பணத்தைப் பெறவும் விண்ணப்பிக்கிறோம்.

 

விண்ணப்பிப்பதோடு நமது வேலை முடிந்துவிடுவதில்லை.   நமது பி.எப் கணக்கில் சில சிக்கல்கள் இருக்கலாம்.  ஆகையால், அதை முன்னிட்டு, நமது விண்ணப்பத்தை பி.எப். நிராகரிக்கலாம்.  குறைகளை சரி செய்ய கோரலாம்.  ஆகையால், விண்ணப்பம் செய்த பிறகு, ஒரு வாரம், பத்து நாளில் இந்த இடத்தில் போய் நாம் சரிப்பார்க்கவேண்டும்.  இன்னும் சரிபார்த்துக்கொண்டு (Processing)  இருக்கிறோம். உங்களுடைய விண்ணப்பம் (Approved) ஏற்கப்பட்டது.   உங்களுடைய விண்ணப்பத்தை நிராகரிக்கிறோம் (Rejected) என தெரிவிப்பார்கள்.

 

ஒரு விண்ணப்பத்தை எதற்காக நிராகரிக்கிறோம் என்பதை பி.எப். அலுவலகம் இன்னும் முறையாக தொழிலாளிக்கு தபால் வழியாகவோ, குறுஞ்செய்தி வழியாகவோ தெரியப்படுத்துவதில்லை.  கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருந்து பணம் வங்கிக்கு வரவில்லை என தெரிந்துகொண்டு, பி.எப். அலுவலகம் சென்று கேட்டால் தான் எதற்காக நிராகரித்தார்கள் என்கிற விவரம் தெரிய வருகிறது.   இதற்கு ஒரு தீர்வு கண்டுப்பிடித்தால் நலம்.

 

அதே போல இந்த தளம் நாள் முழுவதுமே மிக மெதுவாக வேலை செய்கிறது.  பல சமயங்களில் உள்ளேயே நுழைய முடியாத படி சிக்கல் செய்கிறது. ஆகையால் பல தொழிலாளர்களின் பல மணி நேரம் வீணாக செலவாகிறது. ஆகையால் பி.எப். தலைமை இதில் கவனம் செலுத்தவேண்டும் என தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

 

இன்னும் வளரும்.

 

இரா. முனியசாமி,

பி.எப்., .எஸ்.,  ஜி.எஸ்.டி ஆலோசகர்.


மின்னஞ்சல் முகவரி : ilakkiyaassociates@gmail.com

0 பின்னூட்டங்கள்: