> குருத்து: The last stop in Yuma county (2023) திரில்லர் படம்

June 27, 2024

The last stop in Yuma county (2023) திரில்லர் படம்

 


முன்ன ஒரு காலத்தில… கதை. அந்த நெடுஞ்சாலையில் ஒரு கேஸ் நிலையம். அருகே ஒரு உணவகம்.


சமையல் கத்தி விற்பவர் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட போய்கொண்டிருக்கிறார். நிலைய பொறுப்பாளர் கேஸ் தீர்ந்துப் போனதால், ”இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்! உணவகத்தில் காத்திருங்கள்!” என்கிறார்.

போலிஸ் அதிகாரியான ஷெரீப்பின் மனைவி தான் அந்த உணவகத்தை நடத்திவருகிறார். கத்தி விற்பவர் உள்ளே அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். வங்கியில் இருந்து சுடச்சுட கட்டுக்கட்டாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு, அவர்களும் அந்த உணவகத்தில் நுழைகிறார்கள்.

காலையிலேயே வங்கி கொள்ளை செய்தி, காட்டுத்தீயாய் பரவிவிட்டதால், கத்திக்காரரும், அந்த அம்மாவும் பேசிப் புரிந்துகொண்டு, தன் கணவனான போலீசிடம் சொல்லலாம் என போன் செய்தால், கொள்ளைக்காரன் சுதாரித்து போன் வயரை அறுத்துவிடுகிறான்.

”மரியாதையா பொழப்ப பாரு!” என மிரட்டுகிறான். கேஸ் வர இன்னும் தாமதமாகிறது, ஒரு வயதான தம்பதி அங்கு வருகிறார்கள். ஒரு இளஞ்ஜோடி அங்கு வருகிறார்கள். இன்னும் ஒருவர் அங்கு வருகிறார்.

நிலைமை பதட்டமாகிறது. கத்திக்காரர், உணவக முதலாளி இருவரிடம் மட்டும் துப்பாக்கி இல்லை. மற்ற எல்லோருமே விதவிதமாய் துப்பாக்கிச் சனியனை வைத்திருக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை, பதட்டமாய் சொல்லியிருக்கிறார்கள்.
****


படத்தின் துவக்கத்தில் ஒரு குருவி அங்கு காத்திருக்கும். படத்தின் முடிவிலேயேயும் ஒரு குருவி நடக்கிற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும்.

ஒரு உணவகம். அதன் சுற்றுப்புறம் மட்டும் தான் கதை. கதையில் நிறைய டிவிஸ்டுகள் இல்லை. அங்கு புழங்கும் மனிதர்களின் மனநிலை தான் கதை.

எனக்கு ஆச்சர்யம். பெரும்பாலோர் கையில் துப்பாக்கி எப்படி? அரசு என்ற உருவாக்கத்தின் துவக்கமே, மக்களிடத்தில் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, தான் மட்டும் ஆயுதங்களை வைத்திருந்தது தான். வரி, வசூல் என மக்களை நசுக்கும் பொழுது, கோபப்பட்டு சுட்டுவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் தான்.

சமூகம் ஏற்றத் தாழ்வான சமுதாயமாய் இருக்கும் பொழுது, சொத்து வைத்திருக்கும் நிலப்பண்ணையார்கள், பிறகு முதலாளிகள் என எல்லோருமே அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்தார்கள். இன்னும் வைத்திருக்கிறார்கள். சென்னையிலேயே நிறைய பேர் அப்படி துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்கள் தான். குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை பதிவை புதுப்பித்துக்கொள்ளவேண்டும். சமீபத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி, குண்டுகள் வைத்திருந்ததாய் செய்தியில் வந்தார். பிறகு அனுமதி வாங்கித்தான் வைத்திருக்கிறார் என முடித்துக்கொண்டார்கள்.

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அப்பப்ப மண்டை குழம்பி பள்ளியில், பொது இடங்களில் பலரை சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். உலகத்திலேயே அதிக ஆயுதங்களை வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஏற்ற தாழ்வற்ற சமூகம் தான் ஆயுதங்களே தேவையில்லாத சமூகம். அதை நோக்கி மனித சமூகம் நகர்வது பற்றி சிந்திப்பது தான் சரியானது.


90 நிமிடங்கள். சின்னப் படம். சில பாத்திரங்கள் தான். இதில் வில்லன் பாத்திரங்களில் மூத்தவராக வரக்கூடியவர் புத்திசாலி. நடிப்பும் அருமை. அந்தப் படத்தை எடுத்தவரின் நிதானம் ஆச்சர்யமூட்டக்கூடியதாக இருந்தது.

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை என இணையம் சொல்கிறது. வேறு வழிகளில் முயலுங்கள்.

0 பின்னூட்டங்கள்: