> குருத்து: 2025

October 9, 2025

அந்த நாள் (1954) ஒரு கொலையும் தொடர் விசாரணையும்


1943 காலக்கட்டம். ஜப்பான் ஆங்கிலேயரை எதிர்த்து இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்டிருந்த காலம். சென்னையில் குண்டு வீசுகிறது. எங்கும் மின்சாரம் இல்லை. பயத்தில் ஊரை விட்டு எல்லோரும் வேறு வேறு இடங்களுக்கு இடம் நகர்கிறார்கள்.

திருவல்லிக்கேணியில் ஒரு நல்ல வசதியாக இருக்கும் ஒரு ரேடியோ என்ஜினியர் துப்பாக்கியால் சுடப்பட்டு, அவர் வீட்டில் இறந்துகிடக்கிறார். போலீசுக்கு தகவல் போகிறது. அப்பொழுது போலீசு துறையில் இப்படிப்ப்பட்ட கொலைகளை துப்பறியும் சிஐடி விசாரணையை துவக்குகிறார்.

சுடப்பட்டவரின் தம்பி, தம்பி மனைவி, பக்கத்துவீட்டுக்காரர், அவருடைய காதலி என விசாரணையில் ஒவ்வொருவராக உள்ளே வருகிறார்கள். யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டறிந்தார்களா என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

***


1954ல் வந்த படம். ஆனால் இப்பொழுதும் பார்க்க சுவாரசியமாய் இருக்கிறது. குரோசாவின் Rashomon (1950) படம் உலகம் முழுவதும் இப்பொழுது வரை அதன் தாக்கத்தில் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தமிழையும் விட்டுவைக்குமா என்ன?

ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி, சிஐடி பாத்திரத்தில் நன்றாக நடித்திருமிருக்கிறார். வீணை S. பாலச்சந்தர் சிறப்பாக இயக்கியிருக்கிறார். 50களில் பாடல்களின் தாக்கம் மிக அதிகம். அப்பொழுதே ஒரு பாடல் இல்லாமல் எடுத்தது பெரிய விசயம். சண்டைகளும் இல்லை. ஏ.வி.எம் தயாரித்திருக்கிறது.

படம் வந்த பொழுதில், பெரிய வெற்றி அடையவில்லை. ஆனால் இன்றளவும் பேசப்படுகிற படம் என்பது முக்கியமானது.

சிவாஜி தான் முதன்மை பாத்திரம். தன்னைச் சுற்றி எல்லா பாத்திரங்களும் கொ*லைவெ*றியோடு திரிய வைக்கிற எதிர்மறைப் பாத்திரம். அருமையாக செய்திருக்கிறார். நாயகியாக பண்டரிபாயும் சிறப்பு.

கொலை. அது தொடர்பான விசாரணை துவக்கம் முதல், இறுதி வரை எங்கும் திசை மாறாமல் செல்கிறது. படம் முழுவதும் லேசான நகைச்சுவை காட்சிகளிலும் வசனங்களிலும் தூவப்பட்டு இருக்கிறது. மொத்த படமும் 130 நிமிடங்கள் தான். எல்லா பாத்திரங்களும் உடனுக்குடன் நேரடியாக சொல்வது கொஞ்சம் இயல்பாக இல்லை. அதை கொஞ்சம் இயல்பாக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

மற்றபடி, படம் சொல்கிற படி, ஜப்பான் தமிழ்நாட்டில் குண்டு வீசியதா? என தேடிப்பார்த்தால், இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனை பலவீனப்படுத்துவதற்காக கல்கத்தா, அந்தமான் வரை குண்டு வீசியிருக்கிறது. அதை கதைக்காக சென்னை மாகாணம் வரை இழுத்துவிட்டிருக்கிறார்கள்.

திரில்லர் ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய படம். பிரைமில் இருக்கிறது. யூடியூப்பிலும் நல்ல பிரதி கிடைக்கிறது.

October 3, 2025

EPFO and ESI Updates 2025 - Zoom Meeting - 04/10/2025 - சம்பந்தமாக!


வணக்கம். நாளை “EPF & ESI Updates 2025” தலைப்பில் நமது GSTPS சொசைட்டி சார்பில் ஜூம் கூட்டம் நடைபெற இருக்கிறது.   அதில் நான் பேச இருக்கிறேன். வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி.  ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த தலைப்பில் பேச அழையுங்கள் என தலைவரிடம் தெரிவித்திருந்தேன். அதை நினைவில் வைத்துக்கொண்டு தலைவர் இந்த கூட்டத்தில் பேசுகிறீர்களா? என கேட்டதில் ஒத்துக்கொண்டேன்.


நமது குழுவில் பெரும்பாலும் ஜி.எஸ்.டி, வருமான வரி ஆலோசகர்கள் தான்.  நானும் கூட  அதிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி தான் பார்த்து வருகிறேன்.


இருந்தாலும், கற்றுக்கொண்டதை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சில நிறுவனங்களுக்கு மட்டும் பார்த்துவருகிறேன்.   தனிநபர் கிளைம்களை பார்ப்பதில்லை.


நம் குழுவில் சில உறுப்பினர்கள் மட்டும் இ.எஸ்.ஐ, பி.எப் பார்த்துவருகிறார்கள்.  அவசியம் கலந்துகொள்ளுங்கள். தேவையானவர்களுக்கு இந்தக் கூட்டத்தின் பேனரை அனுப்பி வையுங்கள். 


மற்றபடி, பி.எப் தனது பத்தாண்டு காலங்களில் ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து, அதனை டிஜிட்டல்மயமாக்கி வருகிறது.  அதற்கு முன்பு பி.எப். அலுவலகத்திற்கு சந்தாதாரர்கள் நடையாய் நடந்தார்கள்.   இப்பொழுதும் மாறிக்கொண்டு இருக்கும் காலம் என்பதால், நேரிடையாக அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால் முன்பு போல இல்லை.


சென்னையில் மெட்ரோ வேலைகள் புதிய பாதைகளில் வேலை நடந்துகொண்டு இருக்கிறது. ஆகையால் அந்த பிரதான சாலைகள் சீட்டுக்கட்டு கலைத்துப் போட்டது போல தான் இருக்கிறது.   அங்கு ”எதிர்கால நலனுக்காக, இப்பொழுது கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். மன்னியுங்கள்” என எழுதியிருப்பார்கள்.  அவர்கள் ஒப்புக்காவது மன்னிப்பு கேட்கிறார்கள். பி.எப். கேட்பதில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.


இத்தனை கோடி சந்தாதாரர்களை வைத்திருக்கும் பி.எப். இன்னும் தேவைக்கேற்ப தன் வலைத்தளத்தின் திறனை வளர்த்துக்கொள்வதில்லை என்பது பெரிய சோகம்.  ஆகையால், ஒரு சந்தாதாரர் பகலில் பல நேரங்களில் உள்ளேயே நுழைய முடிவதில்லை.   இன்று காலையில் கூட சில விவரங்கள் பார்ப்பதற்கு உள்ளே நுழைய முயன்றேன். முடியவில்லை.


நாளை காலை 10.45க்கு துவங்கி 11.40  வரை என்னுடைய உரை இருக்கும். 20 நிமிடங்கள்  கேள்வி பதில். 12 மணிக்கு முடிந்துவிடும் என தலைவர் திட்டமிட்டுள்ளார். கூடுதலாக கேள்வி இருப்பவர்கள்  குழுவிலோ, என்னிடம் தனிப்பட்ட முறையிலோ கேளுங்கள். பதிலளிக்கிறேன்.


நன்றி.


- இரா. முனியசாமி.


****



Dear GSTPS Members,


Greetings.  Tomorrow, our society will be hosting a Zoom Meet “EPF & ESI updates 2025”


I had earlier suggested to our President SS Sir that such sessions should be conducted once every six months, and keeping that in mind, he kindly invited me to speak at this meeting. I gladly accepted.


As you know, most of our group members are GST and Income Tax consultants. I also manage GST compliance for many companies. However, to stay updated, I continue to handle a limited number of companies for ESI and PF, though I do not take up individual claim cases.


Only a few members among us are engaged in handling ESI and PF matters on a regular basis. Therefore, I encourage you to attend this session and share the meeting banner with others who may find it useful.


Over the last decade, the EPF department has been gradually digitizing its processes. In earlier days, subscribers had to physically visit PF offices. While improvements are happening, challenges remain—especially with the EPF website, which still does not have adequate capacity despite serving crores of subscribers. Many of us face login issues, as I personally did this morning.


To illustrate, when metro works are carried out in Chennai, road diversions are marked with a note: “For the sake of the future, please bear with us. Sorry for the inconvenience.” At least there, an apology is offered. Unfortunately, PF does not extend the same courtesy to its subscribers despite similar disruptions.


Meeting Details:


Date: Tomorrow (04/10/2025)


Time: 10:45 AM to 11:40 AM (Speech)

Q&A: 11:40 AM to 12:00 Noon

End: 12:00 Noon


If you have additional queries beyond the session, please feel free to raise them in the group or contact me directly. I will be happy to assist.


Looking forward to your participation.


Warm regards,

R. Muniasamy


September 26, 2025

Let me in (2010) ஆங்கிலம்


1983. எங்கும் வெள்ளைப் பனி.   குளிர் வாட்டி வதைக்கிற ஊர். பள்ளி செல்லும் ஒரு 12 வயது பையன்.  அம்மாவும் அப்பாவும் பிரிகிற முடிவில் பிரிந்து வாழ்கிறார்கள். அதனால் வீட்டுச் சூழல் இயல்பானதாக இல்லை.   பள்ளியிலும் இவன் கொஞ்சம் நோஞ்சான் பையனாக இருப்பதால், மூன்று மாணவர்கள் இவனை டார்ச்சர் செய்துகொண்டு இருக்கிறார்கள். மனதளவில் தனிமையில் வாடுகிறான்.


பக்கத்து வீட்டுக்கு ஒரு வயதானவரும் 12 வயது பெண்ணுமாய் புதிதாய் குடியேறுகிறார்கள்.  தனிமையில் இருப்பதால், ஒரு பைனாகுலரை வைத்துக்கொண்டு சுற்றி உள்ளவர்களை நோட்டமிடுவது இவனது வழக்கம்.  அந்த பழக்கத்தில் அந்த பெண்ணையும் நோட்டமிடுகிறான்.


அவள் அத்தனை கடும் பனியிலும் வெறும் காலில் நடக்கிறாள். அவளைச் சுற்றிய நடவடிக்கைகள் கொஞ்சம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கின்றன. இருவரும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள்.


சில நாட்களிலேயே அவள் ஒரு ரத்தம் குடிக்கும் காட்டேரி என தெரிந்துவிடுகிறது. அவளுக்கு பல காலமாகவே 12 வயது தான் ஆகிறது.   அவள் உயிர் வாழ்வதற்கு மனித ரத்தம் தேவைப்படுகிறது.  ஊரில் ஆங்காங்கே சிலர் காணாமல் போகிறார்கள். போலீசு துப்பு துலக்க ஆரம்பிக்கிறது.

அவர்களுடைய நட்பு வளர்ந்ததா? போலீசு கைது செய்ததா?  பிறகு என்ன நடந்தது என்பதை  விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 ****


Let the right one என்ற பெயரில் 2004ல் ஒரு நாவல் எழுதி, புகழ் பெறுகிறது.  அதை ஸ்வீடிசு மொழியில் 2008ல் இதே பெயரில் திரைப்படமாக எடுத்து படம் வெற்றி பெறுகிறது.  பிறகு 2010ல் ஹாலிவுட்டில் இந்த படத்தை எடுக்கிறார்கள்.  இந்தப் படத்தின் உத்வேகத்தில் தான் நம்மூருக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்து லோகா (2015) என மலையாளத்தில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் திரைமொழி அத்தனை அடர்த்தியாய் இருந்தது.   கேமிரா கோணங்கள், மிகவும் குறைவான வசனங்கள், ஒன்றை காட்சியில் காண்பிக்காமலே அதன் தீவிரத்தை உணர்த்துவது என சிறப்பாய் இருந்தன.  இயக்குநர் யார் என தேடினால்… Matt Reeves. இவர் Planet of apes சம்பந்தமான இரண்டு பாகங்களை எடுத்தவர்.

கதைக்கு தேவை என்றால் கூட அத்தனை குளிர் பனியில் அந்த பெண்ணை எப்படி வெறும் காலில் எடுத்தார்கள் என ஆச்சர்யமாய் இருக்கிறது. தொழில்நுட்பம் உதவியிருக்குமோ! எல்லா மக்களும் அத்தனை கனத்த ஆடைகளுடன் சுத்தும் பொழுது, ஷூ இல்லாமல் எப்படி உலாவுகிறாள். பார்க்கிறவர்களுக்கு பட்டென்று சந்தேகம் வந்துவிடும் அல்லவா!

அந்த பையனும், பெண்ணும் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார்கள். காட்டேரியாக இருந்தாலும், அந்த பெண் தன் புன்னகையால் அத்தனை ஈர்க்கிறாள்.  படத்தைப் பார்த்து முடிக்கும் பொழுது, அவளுடன் வரும் பெரியவரின் இன்னொரு பாத்திரம் தான் அந்த பையன் என உணரமுடிந்தது.

காட்டேரிகளின் கதைகள் Originals,  Vanhelsing பல இருந்தாலும், இளம் பருவத்தின் நட்பு என்ற கதைக்களன் புதிதாக இருந்தது.

வாம்பயர் கதை பிடிக்கும் என்பவர்கள் பாருங்கள். இப்பொழுது எந்த ஓடிடியிலும் இல்லை. தமிழில் இல்லை.  வேறு வழிகளில் முயலுங்கள்.

September 25, 2025

Su from So (2025) கன்னடம்


ஒரு சிறிய கிராமம். நிறைய மூடநம்பிக்கைகளுடன் மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். 

 

ஒரு துக்க காரியத்தில் சொந்தங்கள் கூடும் பொழுது, ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும் கண்ணாலேயே பேசிக்கொள்கிறார்கள். இரவு வீடு திரும்பும் பொழுது, அந்த பெண்ணின் வீட்டு ஜன்னலில் எட்டிப் பார்க்க, அங்கு ஒரு பாட்டி அலறுகிறது.

 

அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில், பேய் தன் மீது இறங்கியதாக ஆடுகிறான்.  அந்த ஊர் முழுவதும் தீயாக பரவுகிறது.  தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் சாமியார் பேய் விரட்ட அழைக்கப்படுகிறார்.

 

அந்த இளைஞனுக்கு பேயை விரட்டுவதற்கான “சடங்குகளை” செய்த பிறகு கிராமமே நிம்மதியாகிறது. ஆனாலும், அடுத்தடுத்து இயல்பாய் நடக்கும் சமாச்சரங்கள், “பேய்” இன்னும் அவனை விட்டு விலகவில்லை என நம்புகிறார்கள்.

 

அடுத்தடுத்து நடக்கிற கலாட்டாக்களும், உணர்வுப்பூர்வமாகவும் கதை சொல்லியிருக்கிறார்கள்.

***


செயற்கை கிராமமாக இல்லாமல், ஒரு சின்ன கிராமத்தை இயல்புக்கு நெருக்கமாய் எடுத்திருப்பது சிறப்பு.  அவர்களுடைய நம்பிக்கைகள், ஒரு விசயத்தை எப்படி சிக்கலாக்குகிறது என்பதை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள்.  ”பேயா” இருந்தா கூட விரட்டியிருவார். நடிக்கிறவன்கிட்ட சிக்கிகிட்டு, அந்த சாமியார் உண்மையிலேயே அழுவது நகைச்சுவை தான்.

ரவியண்ணா ஊருக்கு ஒன்றென்றால் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பது ஆச்சர்யம் தான். எனக்கென்னமோ கதைக்கு தேவை என்பதால், இயக்குநர் அப்படி ஒரு பாத்திரமாக எழுதியிருக்கிறார் எனப் பட்டது.

முன்பு ஆண்களை விட பெண்களுக்கு நிறைய பேய் பிடிக்கும். ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் ”பேய் பிடிப்பது” குறைந்திருக்கிறது. இப்பொழுது பெண்கள் தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படையாக பேசுவதால், குறைந்திருக்கலாம் என தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

படத்தில் இளைஞனாய் வருபவர் தான் இயக்குநர் துமினாட். முதல் படத்திலேயே ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார். வசூலிலும் பெரிய வெற்றிப்படமாகியிருக்கிறது.  இப்பொழுது கன்னட உலகில் வில்லனாக, நாயகனாக, இயக்குநராக என புகழ்பெற்றவராக வரும் ராஜ் பி ஷெட்டி தான் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவர். சாமியாராக வந்து கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும் நபராகவும் சிரிக்கவைக்கிறார்.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.  ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. தெலுங்கிலும், மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். தமிழில் வெளியாகவில்லை. யாரோ தமிழில் படம் எடுப்பதற்காக அனுமதி வாங்கியிருப்பதால், மொழி மாற்றம் செய்யவில்லை என காரணம் சொல்கிறார்கள்.

 

பாலருவி – புதிய மாற்றங்கள்


வருடம் தோறும் அண்ணன் குடும்பம், இன்னும் சில சொந்தங்களுடன் குற்றாலம் செல்வது வழக்கம். சில சமயங்களில் அருவிகளில் அதிகம் நீர்வரத்து இருந்தாலோ, மிக குறைவான நீர் வரத்து இருந்தாலோ, திட்டமிட்ட பயணத்தை குலைத்துப் போட்டுவிடும்.


இப்படித்தான் கடந்த மாதம் திட்டமிட்ட நாட்களில் அதிகம் நீர் கொட்டி ரத்து செய்யவேண்டியதாகிவிட்டது. நண்பர்கள் இருவருடனும் கடந்த ஞாயிறிலிருந்து மூன்று நாட்கள் குற்றாலத்தில் தான் இருந்தோம்.


பேரரருவியிலும், ஐந்தருவியிலும் குளிக்கும் அளவிற்கு குறைவாகவே நீர்வரத்து இருந்தது. மற்றவை இன்னும் சுமார். குற்றாலத்தில் எப்பொழுதும் மக்களை கூட்டம் கூட்டமாக பார்த்துவிட்டு, இப்பொழுது குறைவான ஆட்களை பார்க்கும் பொழுது வித்தியாசமாக இருந்தது.


இரண்டாம் நாள் பாலருவிக்கு சென்றோம். குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை (6 கிமீ – கட்டணம் ரூ. 10) பேருந்தில் சென்றோம். மீண்டும் கேரளா பேருந்து ஏறி, தென்காசி மாவட்டத்தின் எல்லையான புளியரையை தாண்டினால், கேரளாவின் ஆர்யங்காவிற்குள் கொஞ்சம் உயரமான சாலைகளில் போகும் பொழுது, குளிர்ச்சியை நன்றாகவே உணரமுடிகிறது.


பாலருவியின் வாயிலில் இறங்கினோம். (18 கி.மீ – கட்டணம் ரூ. 36) காலை 9.30 மணிக்கு சென்றுவிட்டோம். திங்கள்கிழமை வார நாள் என்பதால், மிக மிக குறைவாக கூட்டம் இருந்தது.

ஒரு நபருக்கு ரூ. 70 வசூலிக்கிறார்கள். ஏர்டெல் நெட் வொர்க் சுத்தமாக வரவில்லை. அவர்களே வைபை நமக்கு தருகிறார்கள். காட்டிற்குள் நான்கு கிமீ தூரத்தை அவர்களே பேருந்து வைத்து அழைத்து செல்கிறார்கள்.


அவர்கள் இறக்கிவிட்ட இடத்தில் இருந்து அதற்கு பிறகு அருவையைத் தொட ஒரு கிமீ நடந்து செல்லவேண்டும். முன்பு இதன் பாதை நிறைய ஈரத்துடன், மேடும் பள்ளமுமாய் இருந்ததை இப்பொழுது பதப்படுத்தி, நடந்த செல்ல வசதி ஏற்படுத்தியிருக்கிறார்கள்.


அருவியை அடையும் பொழுது அதன் சத்தம் மட்டும் தனியாக கேட்கிறது. சீசன் காலத்தில் நேரடியாக குளிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழும் பொழுது, அதன் வழியில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும், குட்டி அருவிகளில் நாம் குளிக்கலாம். இப்பொழுது செப்டம்பர் என்பதால், நேரடியாக அருவி கொட்டும் இடத்திலேயே ஆண்கள் குளிக்க அனுமதிக்கிறார்கள்.

மக்கள் கூட்டமும் குறைவு. ஆகையால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அருவியோடு மல்லுக்கட்டி குளியல் போட்டோம்.


மீண்டும் அவர்களுடைய பேருந்து இடத்திற்கு வந்தால், குளித்ததற்கு இதமாக, அவர்களே தேநீர், கொழுக்கட்டை, பழம்பொரி, முட்டைப் போண்டா சுடச்சுட விற்கிறார்கள். விலையும் கட்டுப்படியானதாக இருக்கிறது.

பிறகு மீண்டும் வாயிலுக்கு வந்து, கேரள பேருந்தில் ஏறி செங்கோட்டை வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து குற்றாலம் வந்து சேர்ந்தோம்.

நல்ல அனுபவம்.

September 15, 2025

The map that leads to you (2025) பயணமும் காதலும்


நாயகி தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, நியூயார்க்கில் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு, ஐரோப்பாவை வலம் வரவேண்டும் என தன் இரு தோழிகளுடன் பயணம் கிளம்புகிறாள்.  நாயகன் எதைச்சையாய் ஒரு ரயில் பயணத்தில், ஹெமிங்வேயின் புத்தகத்தை வைத்து பேச துவங்குகிறார்கள்.

அவன் தனது கொள்ளுத் தாத்தாவின் குறிப்புகளை கையில் வைத்துக்கொண்டு, அதே தடத்தில் பயணித்துக்கொண்டிருப்பவன்.

அடுத்தடுத்த சந்திப்புகளும், உரையாடல்களும் நெருக்கத்தைத் தந்து, காதலிக்க துவங்குகிறார்கள். அவள் வாழ்வில் எல்லாமே திட்டமிட்டவை. ஒழுங்குடன் கூடியவை. அவனோ அந்த நிமிடத்தில் வாழவேண்டும். அப்படியே ஒரு பறவை போல பயணம் செய்து கொண்டே வாழவேண்டும் என நினைக்கிறவன்.

 

இருவரும் பயணம் செய்வது ஓக்கே. இருவரும் இணைந்து வாழவேண்டும் என நினைக்கிற பொழுது… அவர்களுக்குள் விவாதம் எழுகிறது. முரண்பாடு முளைக்கிறது.  பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.


****


ஒரு நாவல் எழுதி, புகழ்பெற்று, அதையே படமாக்கலாம் என எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மிகவும் மேலோட்டமாக இருந்தது. முடிவு இது தான் என நாம் கணிக்கிற ஒன்றை முடிவாக கொண்ட கதை. காட்சிகளில் கூட புதுமையோ, ட்விஸ்டோ ஏதுமில்லை.

பயணம் தொடர்பான படம் என்பதாலும், பிரைமில் தமிழில் இருந்ததாலும் பார்த்தேன். குறிப்பாக நாயகியின் இயல்பான நடிப்பு பிடித்திருந்தது.

September 13, 2025

Colombiana (2011) பழிவாங்கும் படலம்


கொலாம்பியா. மாபியா உலகம். ஏதோ ஒரு பிசகில், சிறுமியாய் இருக்கும் நாயகியின் கண் முன்னாலேயே பெற்றோர்களை போட்டுத்தள்ளுகிறார்கள்.

 

அமெரிக்காவிற்கு வந்து சேர்கிறாள். தன் மாமாவிற்கு உதவியாய் சில இரகசிய வேலைகளை செய்து வந்தாலும், பெற்றோரை கொன்றவர்களை விடக்கூடாது என்கிற உணர்வு மாறவில்லை.

 

வில்லன் தொடர்பான ஆட்களை ஒவ்வொருவராய் கொலை செய்ய துவங்குகிறாள். அதற்கு அடையாளமாக கொலம்பியாவின் புகழ்பெற்ற மலரான கேட்டாலியா மலரை அடையாளமிடுகிறாள். அவள் பெயரும் அதுதான்.

 

அவள் தான் என எதிரி புரிந்துகொள்கிறான். அவர்கள் இவளைச் சார்ந்தவர்களை வேட்டையாட ஆரம்பிக்கிறார்கள். வரிசையாய் கொலைகள் என்பதால் ஒருபக்கம் FBI துப்பறிய ஆரம்பிக்கிறது.

 

பிறகு என்ன ஆனது என்பதை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.

***

Ballerina வில் உள்ள போதாமைகளைப் பார்த்து வருத்தத்தில் இருந்தவனுக்கு இந்தப் படத்தை சக பதிவரான Muthuvel அறிமுகப்படுத்தினார்.

 

துவக்கத்தில் இருந்து இறுதி வரை, கிரிப்பாக இருந்தது.  லாஜிக் இருந்தது. சண்டைக் காட்சிகளும் அருமை.


மாபியா உலகம் என்கிறார்கள்.  பொல்லாதவன் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. “தொழிலுக்காக செய்கிறியா! செய்” என்பது இவர்களுக்கு பொருந்தாதா என்ன? மற்றபடி வெற்றிப்பட எளிய பார்முலாவாக பழிவாங்கல் இருப்பது என்பதால் எடுக்கிறார்கள் போல.

 

நாயகி அவதாரில் நேத்ரிக்கு உருவம் தந்த Zoe Saldana தான் படம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தார். மொத்தப் படத்தையும் தாங்கியிருந்தார். இயக்குநர் Oliver Megaton. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தான் புகழ்பெற்ற Taken2, 3 படங்களை இயக்கியிருக்கிறார்.

 

தமிழிலும் கிடைக்கிறது. ஒரு நல்ல பழிவாங்கல் படம் பார்க்கவேண்டும் ஆவல் இருப்பவர்கள் பார்க்கலாம். என்னைப் போல Ballarina பார்த்து வருத்தப்பட்டவர்களும் பார்க்கலாம். இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வழிகளில் முயலுங்கள்.

Ballerina – from the world of John Wick (2025)


நாயகி சிறுமியாக தன் தந்தையுடன் பாதுகாப்பாக இருக்கிறார். குழுவின் விதிமுறையை மீறிவிட்டார் என  ஒரு கொலைகார குழு வந்து, நாயகியின் அப்பாவை கொன்றுவிட்டு, நாயகியை தூக்கி செல்கிறார்கள்.  அந்த கொலை அவளை மிகவும் பாதிக்கிறது.

 

இன்னொரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, பாலே நடனம், துப்பாக்கி, சண்டை என கடுமையான பயிற்சி தருகிறார்கள்.  பாதுகாக்கும் வேலையா? கொலையா? என தேர்ந்தெடுப்பதில், பாதுகாப்பது என முடிவெடுக்கிறாள்.

 

பெரிய மனிதர்களை கொலைகாரர்களிடம் இருந்து பாதுகாப்பது தான் பிரதான வேலை. அந்த வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, அப்பாவை கொன்ற குழு அடையாளத்தில் ஒருவன் சிக்குகிறான். தன் குழுவிடம் விசாரிக்கும் பொழுது, ”அது மோசமான கொலைகார குழு. ஆகையால் அதில் தலையிடாதே! உன் உயிருக்கும் உத்தரவாதமில்லை!” என எச்சரிக்கிறார்கள்.

 

மீறி அந்த கொலைகார கும்பலை தேடிச் செல்கிறாள். போகும் வழியெல்லாம் ரணகளம் தான்.  இதில் மோசமான சூழ்நிலையில்; ஜான்விக் (கெளரவ வேடத்தில்) வந்து தலையிடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

 

***

கதைக்காக எல்லாம் அவர்கள் பெரிதாக மெனக்கெடவில்லை.  அது எதுக்கு தேவையில்லாமல் என்பதாக தான் அவர்களுடைய அணுகுமுறை இருக்கிறது.



ஜான்விக் தான் செத்துப்போயிட்டாரே! எப்படி என கேள்வி கேட்டால், மூன்றாம் பாகத்திற்கும், நான்காம் பாகத்திற்கும் இடையில் இந்த கதை நடக்கிறது என்கிறார்கள்.

 

பாதுகாப்பது அல்லது கொலை என்பதற்கு பயிற்சி ஓக்கே. அதில் என்ன பாலே நடனம் எதற்கு வருகிறது. பயிற்சி தருகிறார்கள். எதில் சிறந்து விளங்குகிறார்களே அதில் தேத்திவிடுகிறார்கள் போல!

 

Ballerina என்ற பெயரில் 2023ல் ஒரு கொரியப் படம் வந்திருக்கிறது. அதில் தன் தோழியை கொன்றுவிட்டார்கள் என அந்த படத்து நாயகி பழிவாங்குகிறாள் என கதை சொல்கிறார்கள்.

 

Ana de Armas தான் நாயகி. 37 வயது. ஆனால் 25 வயது போல சண்டைப் போடுகிறார். கொஞ்சம் நெருக்கமாய் கேமரா போனால் மட்டும் வயது தெரிகிறது. (நம்மூர் ஷ்ரத்தா கபூர் சாயலோடு இருக்கிறார்.) மற்றபடி சண்டை போடும் பொழுது, அடி வாங்கி, அடி கொடுத்து, உயிர் பிழைக்கிறார்.

 

சண்டைப் பிரியர்களுக்கு பிடிக்கும்.  பாருங்கள். பிரைமில் தமிழிலும் கிடைக்கிறது.

September 8, 2025

தயவுசெய்து என்னை அவசரப்படுத்தாதீர்கள்



நானொரு நத்தை 

தயவுசெய்து 

என்னை அவசரப்படுத்தாதீர்கள்

அதோ அந்த செர்ரி மரங்களை நோக்கி 

நான் மெல்ல நகர்கிறேன்

நான் சென்றடையவேண்டிய 

இடம்  ஒன்றுமில்லை

செய்தே தீரவேண்டிய 

வேலைகளும் கிடையாது 

இந்த வேகமே எனக்கு உவப்பு.

நான் மெதுவாகப் 

போகவே விரும்புகிறேன்

இது எனக்கு 

நான் கடந்து செல்லும் 

பூக்கள் அனைத்தையும்

புல்லின் இதழ்கள் 

ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வதற்கு

வேண்டிய நேரத்தைத் தருகிறது

 

நான் ஒரு நத்தை

இது என் பாதை

தயவு காட்டுங்கள் 

என்னை அவசரப்படுத்தாதீர்கள்

எனக்கு இந்நாள் முழுவதும் 

இன்னும் மீதமிருக்கிறது.

 

-   பார்பரா வான்ஸ்,

அமெரிக்கப் பெண் கவிஞர்

 

தமிழில்.மோகனரங்கன்

Hridayapoorvam (2025) மலையாளம்


நாயகன் கொச்சியில் ஒரு புகழ்பெற்ற உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். முதல் காட்சியிலேயே அவருக்கு இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது. அது பூனேவில் இருந்த, ஒரு விபத்தில் மரணமடைந்த ஒரு இராணுவ அதிகாரியின் இதயம். மெல்ல மெல்ல தேறிவருகிறார். நாயகன் கொஞ்சம் சிடு சிடு பேர்வழி. உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் கண்டிப்புடன் நடத்துகிறார்.


இதயம் கூட உடலில் உறுப்பு தான். அது வந்ததால், எதுவும் மாறிவிடப்போவதில்லை என வாய்விட்டே சொல்கிறார். மண நாளில் மணமகள் தன் காதலனுடன் போனதால், திருமணம் தடைபடுகிறது. அதற்கு பிறகு, இதயம் தந்த தொந்தரவு திருமணத்தை தள்ளிப் போட்டு, இப்பொழுது நடுத்தர வயதில் இருக்கிறார்.

இந்த வேளையில், இதயம் தந்த இராணுவ அதிகாரியின் மகள் தன் திருமணத்திற்கு உணர்வுப்பூர்வமாக அழைக்கிறாள். முதலில் தன் இயல்பில் மறுக்கும் நாயகன், நாயகியின் அழைப்பில் செல்கிறார். அங்கு போனால், திருமணம் ஒரு பிரச்சனையில் நின்றுபோகிறது. அங்கு நடந்த களேபரத்தால், நாயகனுக்கு கொஞ்சம் முதுகு பிரச்சனையால், சில நாட்கள் அங்கு தங்க நேரிடுகிறது.

அங்கு இருக்கும் நாளில் அவன் இயல்பில் மாற்றம் நடைபெறுகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதை மெல்ல மெல்ல உணர்வுப்பூர்வமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
***


பழைய கதை. இந்த இயல்பில் சில கதைகள் நினைவுக்கு வந்து போகின்றன. அதே பழைய டெம்ளட்டிலேயே காட்சிகளும் நகர்வதால், அத்தனை ஈர்ப்பில்லை.

கதை பெரும்பாலும் பூனே என்பதால் புதிய இடங்களாக இருந்தன. மற்றபடி நாயகன் மோகன்லால், நாயகியாக மாளவிகா மோகன், பூவே உனக்காக சங்கீதா என கதையை நகர்த்துவதில் துணைநின்றிருக்கிறார்கள்.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு பழைய ஆள். அவருடைய மகன் எழுதிய கதை என்கிறார்கள். ஆனால் ஈர்ப்பில்லை.

சுமாரான படம். திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Lokah – Chapter 1 - மலையாளம் (2025)


ஸ்வீடனில் ஆக்சன் காட்சியுடன் அறிமுகமாகும் நாயகி, ஒரு தேவைக்காக முதல் காட்சியில் பெங்களூருக்கு அழைக்கப்படுகிறார். ஒரு வீடு எடுத்து தங்குகிறார். ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்கிறார். அவருக்கு தேவையானவை எல்லாம் அவரிடத்திற்கு வந்து சேர்கின்றன.


எதிர்வீட்டில் பிளாட்டில், படித்துவிட்டு, ஜாலியாக ஊரைச் சுற்றும் இளைஞர்களில் ஒருவர் நாயகன். எதிர் பிளாட்டில் தனித்து வாழும் நாயகியை தொடர்ந்து கவனிக்கிறார். அவளுக்கு பின்னால் ஒரு மர்மம் இருப்பதை அறிகிறார்.

நாயகியை தொடர்ந்து செல்லும் பொழுது, அவளைப் பற்றிய மர்மம் விலகுவதும், அதற்கு பிறகு ஏற்படும் கலாட்டாக்களும், அதிரடிகளும் தான் மீதி மொத்தப்படமே!
****


மலையாளத்தில் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், கதை எழுதும் திறனிலும் சூப்பர் மேன் கதைகளில் உள்ளெ நுழைந்திருக்கிறார்கள். ஏற்கனவே மின்னல் முரளியில் (2021) வெற்றிக்கண்டவர்கள், இப்பொழுது அடுத்தடுத்து சூப்பர் நாயகர்களின் கதையை தொட்டு வெற்றியும் கண்டு இருக்கிறார்கள்.

நாயகி கதாப்பாத்திரத்தின் வார்ப்பு ஏற்கனவே புகழ்பெற்ற ஒண்டர் வுமன், வேம்பயர் பாத்திரங்களை நினைவூட்டினாலும், இந்திய தன்மையுடன் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது.

கதையில் கொஞ்சம் இடையிடையே லேசான தொய்வு இருந்தாலும், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே அதில் இருந்து காப்பாற்றுவதில் துணை நின்றிருக்கின்றன.

கல்யாணி பிரியதர்சன் நாயகியாக பொருந்தியிருக்கிறார். நஸ்லன் பயந்து போன நாயகனாக பொருத்தமாக இருக்கிறார். அதைப் போலவே அவர்களுடைய நண்பர்களும். லியோவில் சிறிது நேரமே வந்தாலும், மாஸ்டர் சாண்டி ஈர்த்து, இந்தப் படத்தில் பொருத்தியிருக்கிறார்கள்.

இனி ஆண்டிற்கு ஒரு படம் இந்த சீரிசில் அனுப்புவார்கள் என்றே நினைக்கிறேன். படம் முடிந்துவிட்டது என கிளம்பினால், அவெஞ்சர் படம் போல படத்தின் இறுதியில் அடுத்தப் பாகத்திற்கான காட்சிகளை சிலவற்றை தருகிறார்கள்.

ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். அவெஞ்சர் சீரிஸ் படங்கள் பிடிக்காதவர்களுக்கு, லோகாவும் பிடிக்காது. ஓணம் திருவிழாவிற்கு வந்த படங்களில் முதல் இடம் என்கிறார்கள்.

தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்ருக்கிறது.

September 4, 2025

கேட்டால் கிடைக்கும். கேட்க தான் பெரும் தயக்கம்….!


பெரிய நிறுவனங்களில் ஆண்டு முழுவதும் என்னென்ன நாட்கள் விடுமுறை என்பதை ஆண்டு துவங்கும் பொழுதே தெரியப்படுத்திவிடுகிறார்கள். அரசும் அதை ஒரு விதிமுறையாக வைத்திருக்கிறது.


ஆனால், வளர்ந்து வரும் நிறுவனங்களில் அப்படி அறிவிக்கப்படுவதில்லை. ஒரு வரி ஆலோசகராக அந்த நிறுவனம் விடுமுறையா இல்லையா என தெரிந்துகொண்டு போவது வழக்கம். அப்படி ஒரு சில நிறுவனங்களில் முதல் நாள் வரைக்குமே தெரியாது என்பார்கள்.

இதெல்லாம் அடிப்படையான விசயங்கள். வெளியூரில் வேலை செய்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பே ரயிலோ, பேருந்தோ புக் செய்தால் தான் ஊருக்கு கிளம்பமுடியும். கடைசி நேரத்தில் கிளம்பினால், கூடுதலாக பணமும் செலவாகும். அலைச்சலுக்குள்ளவோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களிடம் இதை கேட்பது சரியானது. கேளுங்கள் என வலியுறுத்தினாலும், கேட்க தயங்கிக்கொண்டே பல மாதங்களை கடந்து செல்வார்கள்.

யாராவது, இதன் நியாயத்தை நிர்வாகத்திடம் பேசி, புரியவைத்து, அல்லது தைரியமாய் கேட்கும் அந்த பணியாளருக்காக அவர்கள் காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

***

நேற்று ஒரு நண்பரிடம் இது குறித்து பேசும் பொழுது, பள்ளியில் பெற்றோர்களுக்கான கூட்டம் நடைபெறும் பொழுது, கூட்டம் துவங்கும் வரைக்கும், பள்ளியில் அடிப்படை பிரச்சனைகள், வேறு வேறு விசயங்களை பெற்றோர்களுக்குள் விவாதிப்பார்கள். ஆனால், கூட்டம் துவங்கியதும் பெரும்பாலோர் அமைதியாய் இருப்பார்கள். ஏதாவது கேட்டால், பிள்ளைகளின் வாழ்வை பாதிக்கும் என பயந்துகொண்டு அமைதி காப்பார்கள்.

நிர்வாகத் தரப்பில் சில விசயங்களை அவர்களுடைய கண்ணோட்டத்தில் அமுல்படுத்திக்கொண்டே இருப்பார்கள். மாணவர்கள் தரப்பில், பெற்றோர்கள் தரப்பில் நாம் நடைமுறை சிக்கல்களை சொல்லும் பொழுது தான் அவர்களே புரிந்துகொள்வார்கள்.

இப்படி பெற்றோர்கள் கூட்டம் கூட்டியே பேசாதவர்கள், எப்படி தனித்தனியாய் கேட்க போகிறார்கள்? இப்படி நியாயமான அம்சங்களை கேட்டால் தான் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அறிந்தும், கேட்கும் தைரியமான பெற்றோர் கேட்கும் வரை அமைதியாய் இருப்பார்கள்.
****

ஒரு வரி ஆலோசகர்களுக்கான, கணக்காளர்களுக்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள். அனுபவ அறிவு கொண்டவர்கள். அது இலவச சேவையும் கூட அல்ல. எல்லோரும் வருடச் சந்தா செலுத்துபவர்கள்.

அந்த அமைப்பு இணைய வழியில் ஜூம் கூட்டம் நடத்துகிறார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் நடத்துகிறார்கள். சனிக்கிழமைகளில் அதன் பல உறுப்பினர்கள் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளில் இருப்பவர்கள். அதனால், கூட்டங்களில் அவர்களால் பங்கேற்கமுடியவில்லை.

அந்தக் கூட்டத்தை பதிவு செய்து அவர்கள் வைத்திருக்கும் சானலில் வலையேற்றினால், கலந்துகொள்ள இயலாத உறுப்பினர்களும் பயன்பெறுவார்கள். தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பொழுது, பேசும் பொழுது, அதன் தேவையை பேசுகிறார்கள். பரஸ்பரம் வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேட்க தயங்குகிறார்கள். அப்படி யாராவது ஒருவர் தொடர்ந்து கேட்டால், அவர் வேண்டுமென்றே கேட்கிறார் என நிர்வாகத்தினர் கோபப்படுகிறார்கள். யார் தேவை என உணர்கிறார்களோ பலரும் கேட்க துவங்கினால், அந்த வேலை இயல்பாக நடந்துவிடும். ஆனால் கேட்க தயங்குகிறார்கள். அந்த அமைப்பில் இணைவதே அந்த கூட்டங்களுக்கு தான். அதையே இழப்பது என்பது பெரிய இழப்பு. அதைக் கேட்காமல் அதில் ஏன் நாம் உறுப்பினராக இருக்கவேண்டும்? புரியவில்லை.

என் வாழ்வில் கேட்டால் தான் கிடைக்கும் என உணர்ந்தே இருக்கிறேன். நமது உரிமைகள் அப்படித்தான். வரலாறு நமக்கு கற்றுத் தந்ததும் அப்படித்தான். கேட்டால் கிடைக்கும். கேட்கவில்லை என்றால் இழப்பு நமக்கு தான்.