> குருத்து: 2025

August 10, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) : சில சந்தேகங்களும் விளக்கங்களும்!


சமீபத்தில் ஒரு புதிய நிறுவனத்தில் நிர்வாகியை சந்தித்து பேசுகிற பொழுது, சில பணியாளர்கள் தங்களுக்கு பி.எப் திட்டத்தில் இணைய விருப்பமில்லை என தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்க முடியுமா சார்? என கேட்டதற்கு ஏற்றுக்கொண்டேன்.

 

உடனே அந்த அலுவலகத்தின் கான்பரன்ஸ் ஹாலில் 15 பேர் வரை வந்து குழுமினார்கள்.  20 வயது துவங்கி 50 வயது வரைக்குமான வயதினர் இருந்தார்கள்.  இருபது நிமிடங்கள் பி.எப், இ.எஸ்.ஐ. திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்க, நாற்பத்தைந்து நிமிடங்கள் அவர்கள்  கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அந்த விளக்க கூட்டம் முடிவுற்றது.

ஒவ்வொரு தலைப்பையும் விரிவாக எழுதுவதால், இந்த தலைப்பில் பேசியது, பெரும்பாலான பணியாளர்களுக்கு உதவும் என்பதால் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  

 

பணியாளருக்கான பி.எப் நலத்திட்டங்கள்

 


ஒரு பணியாளர் தன்னுடைய பணிக்காலத்தில் சம்பளம் அவருடைய வாழ்வாதரத்திற்கு உதவுகிறது. ஆனால் ஓய்வு பெற்ற பிறகு, அவர் வாழ்வதற்கு ஒரு நிதியை உருவாக்கி தருவது அவருக்கு மிகவும் பயன்படும்.   அவருக்கு ஓய்வூதியமும் இதன் மூலம் ஏற்பாடு செய்தால், மரியாதையுடன் வாழ்வதற்கு உதவி செய்யும் என்பதற்காகவே, 1952ல் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

 

(ஆகஸ்ட் 2023 நிலவரத்தின் படி) இத்திட்டத்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மொத்தம் கிட்டத்தட்ட 8 லட்சம்.  பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 கோடி பேர்  ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 77 லட்சம் பேர்.

 

ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் (Basic Salary), பஞ்சப்படி (Dearness Allowance) இரண்டிலும் வேலை செய்த நாட்களுக்கு சம்பளம் கணக்கிட்டு, அதில் 12% பிடித்தம் செய்யவேண்டும்.  நிறுவனமும் அதே அளவிற்கு 12% செலுத்தவேண்டும். நிறுவனம் செலுத்துகிற நிதியான 12% நிதியில் 8.33%  ஓய்வூதிய கணக்கிற்கு செல்லும். மீதி 3.67% பி.எப் கணக்கிற்கு செல்லும்.

 

சேகரிக்கப்படும் பணத்திற்கு வருட வட்டி வருடந்தோறும் கணக்கிட்டு தருகிறார்கள். 2024 – 25 கணக்காண்டிற்கு 8.25% அறிவித்திருக்கிறார்கள்.  வங்கி வட்டியை விட நல்ல வட்டி தருகிறார்கள்.

 

பணியாளருக்கான ஓய்வூதியம்


 

ஒரு பணியாளர் தன்னுடைய பணிக்காலம் 58 வயது வரை வேலை செய்த பிறகு, விண்ணப்பித்து  பெறுவது தான் ஓய்வு நிதி.  இதற்கு முதல் தகுதி ஒரு நிறுவனத்திலோ அல்லது சில நிறுவனங்களிலோ வேலை செய்த காலங்களின் கூட்டுத்தொகை பத்து ஆண்டுகளுக்கு  அவர் கணக்கில் செலுத்தியிருக்கவேண்டும்.

 

பி.எப்  ஓய்வூதியத்தை எப்படி கணக்கிடுகிறது?

 

தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை கீழ்க்கண்ட வகையில் கணக்கிடுகிறது. சிக்கலான முறை எல்லாம் கிடையாது.

கணக்கிடுவதற்கான Formula = Pensionable Salary * Employee Service

                                                            70

https://www.epfindia.gov.in/EP_Cal/pension.html  இந்தச் சுட்டியும் ஓய்வூதியத்தை கணக்கிட உதவும்.

 

குறைக்கப்பட்ட ஓய்வூதியம் அல்லது விருப்ப ஓய்வூதியம்  (Reduced Pension)

 

ஒரு பணியாளர்  வேலை செய்ய இயலாமை காரணமாகவோ, தனது நோயின் காரணமாகவோ 50 வயது முடிவடைந்ததுமே, ஓய்வூதியம் பெறுவதற்கு உரிய தகுதி அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பி.எப். பென்சன் தொகை செலுத்தியிருந்தால் தனக்கு ஓய்வூதியம் அவசியம் என கருதினால், பி.எப்பில் விண்ணப்பிக்கமுடியும்.  இதில் மேலே விளக்கியபடியே தான் பி.எப். ஓய்வு நிதியை கணக்கிடுவார்கள். 

 

பணியாளரின் குடும்பத்திற்கான ஓய்வூதியம்

 


ஒரு பணியாளர் பணியில் இருக்கும் பொழுது இறப்பு ஏற்பட்டால்,  அவருடைய குடும்பத்திற்கும் ஓய்வூதியம் கிடைப்பதற்கு பி.எப் வழி செய்கிறது.  பணியாளர் ஆணாக/பெண்ணாக இருந்தால், அவருடைய துணைவியாருக்கு/கணவருக்கு  அவருடைய இறப்பு காலம் வரைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்.

 

பணியாளருடைய இரண்டு வாரிசுகளுக்கு அவர்களுடைய இருபத்தைந்து வயது வயது வரையும் நிதி கிடைக்கும்.  அந்த இரண்டு வாரிசுகளுக்கு பிறகும், மேலும் அவருக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களும் விண்ணப்பித்தால், அவர்களும் தங்களுடைய இருபத்தைந்து வயது வரை நிதி கிடைக்கும்.

 

ஊனமுற்றோருக்கான ஊதியம்

 

ஒரு பணியாளர் வேலை செய்யும் பொழுது விபத்து ஏற்பட்டு, பகுதியளவு ஊனமானலோ, அல்லது வேலை செய்யமுடியாத அளவிற்கு முழு ஊனம் ஆனாலோ அந்த பணியாளர் ஊனமுற்ற நாளிலிருந்து மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுகிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும். 

 

பணியாளருக்கான EDLI (Employees Deposit Linked Insurance Scheme)  திட்டமும்  அதன் பலன்களும்

 


இந்தத் திட்டம் 1976ல் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான திட்டமாகும்.  பி.எப் திட்டத்தில் இணைந்த அனைத்து பணியாளர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.  கட்டவேண்டிய தொகை என்பது, ஒரு பணியாளரின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படியில் 0.50% கணக்கிட்டு பணியாளர் செலுத்தவேண்டியதில்லை. நிறுவனமே செலுத்தும். 

 

இறப்பதற்கு முன்பு பணியாளர் வேலை செய்த ஓர் ஆண்டு சம்பளத்தைக் (Basic + DA) கணக்கிட்டு, அதை 35ஆல் பெருக்குகிறார்கள்.  கூடுதல் போனசாக ரூ. 1.75 லட்சத்தையும் சேர்த்து தருகிறார்கள். அதிகப்பட்சம் ஏழு லட்சம் வரை கிடைக்கும்.

 

இதற்கு பிறகு பணியாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு, பதிலளிக்க ஆரம்பித்தேன்.

 

பணியாளருக்குரிய வருங்கால வைப்பு நிதி (PF) அடையாள எண் (UAN – Universal Account Number)

 

பணியாளருக்கென செலுத்தப்படும் நிதிக்காக. வங்கியில் கணக்கு எண் தருவது போல, பி.எப் அமைப்பும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 12 இலக்கங்களில் தனித்த ஒரு அடையாள எண்ணைத் தருகிறது.

  

பணியாளரின் அடிப்படை தரவுகளையும், ஆதார் எண்ணையும் பெற்று, நிறுவனம் பி.எப் தளத்தில் பதியும் பொழுது, பி.எப். தனித்த அடையாள எண்ணை (UAN) தருகிறது.

 

அந்த (UAN) எண்ணை பெற்றுக்கொண்டால், இனி பணியாளர் தன் வாழ்நாளுக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  அதே எண்ணைத் தான் அடுத்து புதிய வேலையில் எங்கு இணைந்தாலும், அங்கும் தெரியப்படுத்தவேண்டும்.

 

 நிறைய பணியாளர்கள் தன்னுடைய அடையாள (UAN) எண்ணை முறையாக குறித்து வைத்துக்கொள்வது இல்லை. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்கனவே பி.எப் அடையாள எண் (UAN) இருக்கும் பட்சத்தில், பி.எப் தளத்தில் பணியாளரின் ஆதாரை அடிப்படையாக வைத்து சோதிக்கும் பொழுது அவருக்குரிய தனித்த எண்ணை பி.எப் தளமே காட்டிவிடுகிறது.

 

இப்படிப் பதிந்த பிறகு நிறுவனம் பணியாளருக்கு உரிய அடையாள எண்ணை (UAN) தெரியப்படுத்தவேண்டும். பணீயாளரும் அந்த எண்ணை நிறுவனத்திடமிருந்து கேட்டுப் பெற்று, பாதுகாப்பாய் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

 

பணியாளர்களுக்காக இயங்கும் பி.எப் தளத்தின் முகவரி

 


பி.எப். பணியாளர்களுக்கென ஒரு தளத்தை இயக்கி வருகிறது.  அந்த தளத்தின் வழியாக தான் கடனுக்கு விண்ணப்பிப்பது, பி.எப். நிதியைப் பெற விண்ணப்பம் சமர்ப்பிப்பது, ஓய்வு நிதி பெறுவதற்கான விண்ணப்பத்தை  சமர்ப்பிப்பது என பல வேலைகளை செய்ய உதவுகிறது. 

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 

பணியாளரின் கணக்கு விவரங்கள் (Passbook)

 

பணியாளர்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக தனியாக ஒரு தளத்தை பி.எப். உருவாக்கி தந்திருக்கிறது.  அந்த தளத்திற்கான User ID, கடவுச்சொல் பி.எப் தளத்தில் நாம் பயன்படுத்துகிற அதே User ID, கடவுச்சொல்லையே பயன்படுத்திக்கொள்ளலாம். https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login  என்ற தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.  செல்லில் Umang என்ற ஒரு செயலி (App) இருக்கிறது.  அதிலும் பார்த்துக்கொள்ளலாம்.

 

ஒரு பணியாளர் நிறுவனத்தில் இருந்து விலகும் பொழுது, தன்னுடைய பி.எப். பணத்தைப் பெறுவதற்கு நிறுவனத்தின் அனுமதி தேவைப்படுமா?  வேலை செய்யும் பொழுது நடந்த ஏதோ ஒரு முரண்பாட்டை காரணம் சொல்லி, பணத்தை எடுக்கவிடாமல் நிறுவனம் தடுக்க முடியுமா?

 

ஒரு பணியாளரின் கணக்கில் செலுத்தப்படும் நிதி என்பது அவருக்கு சொந்தமானது.  பி.எப். விதிகளுக்கேற்ப அந்த நிதியை கையாளலாம்.  இதில் நிறுவனம் தலையிட முடியாது. 

 

பி.எப். பணியாளர்களுடைய பி.எப் நிதியை கையாள்கிறது.  ஆனால் அந்த பணியாளரை அடையாளம் காணுவதற்கு அதற்கென பிரத்யேக வழியில்லாத நிலை முன்பு இருந்தது.  அதனால், ஒரு பணியாளரை தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில்,  நிறுவனத்தின் நிர்வாகி பி.எப் பணத்தைப் பெறுவதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது தவிர்க்க முடியாத அவசியமாக இருந்தது.

 


ஆனால், ஆதார் அமுலாக்கத்திற்கு பிறகு, ஆதார்  பயோ மெட்ரிக் அடையாளத்துடன் இருப்பதால், ஆதாரை ஒரு முக்கிய அடையாளமாக பிஎப். இறுகப் பிடித்துக்கொண்டது.  அதனால் நிறுவனத்தின் நிர்வாகி கையெழுத்திட வேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை.  ஆதாரை அடிப்படையாக கொண்டு நிதியை பெற்றுவிடமுடியும்.

 

ஆனால், ஒரு பணியாளர் வேலை செய்யும் பொழுதே, தன்னுடைய பி.எப். கணக்கில்  ஆதார், வங்கிக்கணக்கு எண், பான் எண்ணை எல்லாம் இணைத்திருக்கவேண்டும் அவசியமானது.   அதை அந்த நிறுவனம் தன்னுடைய டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரித்து இருக்கவேண்டும்.   ஒருவேளை நிறுவனம் அதை அங்கீகரிக்க தவறினால், பி.எப். அலுவலகத்தில் இது தொடர்பாக முறையிட்டால், நிறுவனத்திற்கு அதை செய்ய சொல்லி சம்பந்தப்பட்ட அலுவலர் வலியுறுத்தி செய்ய சொல்வார். அதனால் கவலையில்லை.

 

ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, தொழிலாளியின் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும், தொடர்ந்து வட்டித்தருவார்களா?

 

இந்த சந்தேகம் பணியாளர்களால்  அடிக்கடி கேட்கப்படும் சந்தேகமாக இருக்கிறது.  ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்தாலோ,  மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வட்டியைக் கணக்கிட்டு தருகிறார்கள். அதற்கு பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நடைமுறை.

 

இதில் பி.எப் நிதிக்கு மட்டும் தான் வட்டி தருகிறார்கள்.   பி.எப். ஓய்வூதிய கணகிற்கு வட்டி ஏதும் தருவதில்லை.  ஆகையால், தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியம் அவசியம் தேவைப்படுவதால் அந்த நிதிக்கு திட்டச் சான்றிதழுக்கு (Scheme Certificate) விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  பி.எப் நிதியை வேண்டுமென்றால், வாங்கிக்கொள்ளலாம்.

 

வேறு நாட்டிற்கு சென்றாலும், இந்த திட்டத்தை அங்கு தொடரமுடியுமா? என்றார் ஒரு இளம் பணியாளர்.

 

இந்த திட்டம் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கானது. ஆகையால் இந்தியாவில் மட்டும் தான் செல்லுபடியாகும்.

 

ஒரு தொழிலாளி இந்த திட்டத்தில் இணையும் பொழுது, மேலே சொன்ன பலன்கள் உண்டு.  இதில் இணையாத பொழுது அவரும், அவருடைய குடும்பமும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால் இந்த திட்டத்தில் இணைவது மிகவும் அவசியம் என பேசிவந்தேன்.

 

அடுத்தநாள் பேசும்  அதன் நிர்வாகியை தொடர்பு கொண்ட பொழுது பணியாளர்கள் இந்த திட்டத்தில் இணைய ஏற்பு தெரிவித்திருந்தார்கள். மகிழ்ச்சி.

 

உங்களுக்கும் இது போல கேள்விகள் இருந்தால், என்னுடைய வாட்சப் எண்ணுக்கு தட்டச்சு செய்தோ அது சிரமம் என்றால், குரலில் பதிந்து அனுப்புங்கள். பதிலளிக்கிறேன்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721

July 29, 2025

GSTPS சொசைட்டியின் கெளரவப் பரிசு

 


கடந்த ஆண்டு (2024 – 25) நான் உறுப்பினராக இருக்கும் GSTPS சொசைட்டியில், பி.எப்., இ.எஸ்.ஐ திட்டங்கள் குறித்து ஒரு கூட்டத்தில் விரிவாக பேசினேன்.

 

சொசைட்டியின் ஆறாம் ஆண்டு  நிறைவு விழாவை ஒட்டி, கடந்த ஆண்டு பேசிய பேச்சாளர்களுக்கு கெளரவப் பரிசு வழங்கப்பட்டது.  நான் வெளியூரில் இருந்ததினால், என் சார்பாக சீனியர் Dr. வில்லியப்பன் சார் எனக்காக பெற்றுக்கொண்டார்.

 


GSTPS சொசைட்டி தனது உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி, கற்றுத்தரும் ஆசிரியராக உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறது.  சொசைட்டியில் முதல் கூட்டம் பேசிய பிறகு, கிடைத்த உற்சாகத்தில் அதற்கு பிறகு நான்கு உரைகள் வெவ்வேறு அமைப்புகளின் கூட்டங்களில் பேசிவிட்டேன் என்பது முக்கியமானது.

 

GSTPS சொசைட்டிக்கு நன்றி.

 

-    இரா. முனியசாமி

40+ : சின்ன சின்ன மறதிகள்


தெருமுனையில் உள்ள கடையில் ஒரு நோட் வாங்கிக்கொண்டு போகவேண்டும் என வாசலில் நினைப்பேன். மூன்று கிமீ சென்றபிறகு, மறந்தது பொறுப்பாக நினைவுக்கு வருகிறது.


திடீரென சில பெயர்கள் என்ன போராடினாலும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. ஒருமுறை எங்க அக்கா மகள் பெயரே மறந்துவிட்டது.

ஏதோ ஒரு வேலை. சொல்கிறார்கள். செய்யவேண்டும். ஆனால் அடுத்த ஆறு மணி நேரத்தில் சுத்தமாக மறந்துவிடுகிறது. திரும்ப சம்பந்தப்பட்டவர் நினைவுப்படுத்தும் பொழுது, எப்படி மறந்தோம் என வருத்தம் தருகிறது. இப்படி எல்லா வேலைகளும் அல்ல! சில வேலைகள் மட்டும்! அதுவும் ஆர்வமில்லா, தேவையில்லா வேலைகள் என புரிந்துகொள்ளக்கூடாது. அவை அவசியமான வேலைகள்.

மறதிகள் இருப்பதால், சின்ன சின்ன வேலைகளையும் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும் என தேவை வந்துவிடுகிறது. பயணம் செய்யும் பொழுது, பிறகு குறித்து வைத்துக்கொள்ளலாம் என நினைத்தால், காற்றில் கரைந்துவிடுகிறது.

இப்பொழுது செல்போனில் குறித்து வைத்துக்கொள்கிறேன். சில சமயம் குறித்து வைத்துக்கொள்ள செல்லை எடுத்து, எதை எதையோ பார்த்து, திசைமாறி போய் குறிக்க மறந்துவிடுகிறேன்.

செய்வதற்கு வெறுப்பேற்றும் ஒன்றிரண்டு வேலைகளை இதை இப்படியே மறந்து போனால் என்ன! என விளையாட்டாய் அவ்வப்பொழுது தோன்றும். ஆனால், அதை மறக்கவே முடிந்ததில்லை. சோகம்.

சின்ன மறதிகளுக்கும், பெரிய மறதிகளுக்கும் பல்வேறு காரணங்கள் சொல்கிறார்கள். மன அழுத்தம், மனநோய், வைட்டமின் குறைபாடு, மது, போதை மருந்துகள் பயன்பாடு, சில மருந்துகளின் பக்கவிளைவுகள் என இன்னும் சொல்கிறார்கள். சின்ன சின்ன மறதிகளை சரி செய்வதற்கு உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான தூக்கம், மன அழுத்தத்தை குறைப்பது எனவும், பெரிய மறதிக்கு மருத்துவரை அணுகுவது என பரிந்துரை செய்கிறார்கள்.

சின்ன சின்ன மறதிகளை மன அழுத்தங்களோடு ஒரு இணைத்து நீளமாய் ஒரு கட்டுரையை ஒருவர் எழுதியிருந்தார். பயந்துபோய் கட்டுரையை அப்படியே விட்டுவிட்டு தலை தெறிக்க ஓடிவந்துவிட்டேன்.

50 வயதும் 40+ல் தானே வரும்?! உங்களுக்கும் சின்ன சின்ன மறதிகள் இருந்தால், மறக்காமல் சொல்லிவிட்டு போங்கள். ஆறுதலாய் இருக்கும்.

July 15, 2025

PF, ESI குறித்து கேள்விகளும், பதில்களும்!


நேற்று மதுரவாயில் பகுதியில் இயங்கிவரும் நிறுவனம். அவர்களுக்கு பி.எப். இ.எஸ்.ஐ கன்சல்டன்ட் ஒருவர் தேவை என்ற அழைப்பிற்கு இணங்க.. போயிருந்தேன். முதலில் நிறுவனத்தின் நிர்வாகியோடு அரைமணி நேரம் உரையாடல். சந்தேகங்கள் தெளிவடைந்ததும், நீங்களே இனிமேல் எங்கள் நிறுவனத்திற்கு ஆலோசகராக தொடருங்கள் என தெரிவித்தார். மகிழ்ச்சி.


”பணியாளர்களில் சிலர் இதன் பலனை அறியாமல் வேண்டாம் அவர்களுக்கு நீங்கள் விளக்க முடியுமா?” எனக் கேட்டார். விளக்கலாமே என்றவுடன், அந்த அலுவலகத்தில் கூட்டத்திற்கான அரங்கில் உடனே 10 பேருக்கும் மேலாக வந்தார்கள்.

முதலில் 20 நிமிடங்கள், பி.எப், இ.எஸ்.ஐ குறித்து அதன் நல்ல பலன்கள் குறித்து விளக்கினேன். பிறகு அவர்கள் 20 நிமிடங்கள் கேள்விகள் கேட்கலாம் என்றேன்.

சில கேள்விகள் எல்லாம் ஹைலைட்டாக இருந்தது ஆச்சர்யம்.

அந்த பணியாளர்களிலேயே அந்த பெண் தான் இளமையானவர். ”இங்கு நான் வேலை செய்கிறேன். அமெரிக்காவில் எனக்கு வேலை கிடைத்தால், அங்கு போய் இந்த திட்டத்தில் தொடர முடியுமா?”

”நான் ஏதோ பிரச்சனையில் வேலை செய்யும் பொழுது இறந்துவிடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கு இந்த நலன்கள் எப்படித் தெரியும்?”

நேரம் போனதே தெரியாமல், 40 நிமிடங்கள் கேள்விகள் கேட்க கேட்க விளக்கிக்கொண்டிருந்தேன்.

பிறகு நிர்வாகத்தினர் கொஞ்சம் பதட்டமாகி, பிறகு இன்னொருமுறை தொடரலாம் சார் என தெரிவித்தனர். விடைபெற்று வந்தேன்.

உங்களுக்கும் ஏதேனும், இ.எஸ்.ஐ, பி.எப் குறித்த சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள். பதில் அளிக்கிறேன். நன்றி.

July 12, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) : நிறுவனங்களுக்காக இயங்கும் பி.எப். தளம்


சில மாதங்களுக்கு முன்பு, பணியாளர்களுக்கென இயங்கும் பி.எப். தளம் குறித்த அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன். கடந்த மாதம் நிறுவனங்களுக்கென இயங்கும் பி.எப். தளம் குறித்து எழுதச்சொல்லி வாசகர்களில் இருவர் தொலைபேசியில் கோரினார்கள்.

 

அதனால் பி.எப். தளம் குறித்து இப்பொழுது பார்க்கலாம். அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஒன்று விடாமல் எழுதினால், மூன்று, நான்கு மாதங்களுக்கு நீண்டுவிடும். ஆகையால், நிறுவனங்கள் அடிக்கடி பயன்படுத்துகிற அம்சங்களை மட்டும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

 


நிறுவனங்களுக்கென  இயங்கும் பி.எப். தளம்

 

நிறுவனங்களுக்காக பி.எப் இயக்க கூடிய தளத்தின் முகவரி இது. https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/.  நிறுவனத்தை பதிவு செய்த பிறகு, தரப்படும் நிறுவனத்திற்கான அடையாள எண்ணையே இதற்கு User ID யாக ஏற்படுத்தி தருகிறார்கள்.  உதாரணத்திற்கு, அந்த எண் இப்படி இருக்கும். TN/AMB /XXXXXXXXXX.  துவக்கத்தில் உள்ள இரண்டு எழுத்துக்கள் மாநிலத்தை குறிக்கும்.  அடுத்து வருவது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை கையாள்கிற பிஎப். கிளையின் அடையாளம். AMB என்றால் அம்பத்தூர்.  TAM என்றால் தாம்பரம். அடுத்து வரும் பத்து டிஜிட் எண்.  பதிவு செய்யும் பொழுது கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை கொண்டு உள்ளே நுழையவேண்டும்.    நிறுவனம் தொடர்பான, பணியாளர் தொடர்பான பல அம்சங்களை செயல்படுத்துவதற்கு இந்த தளம் உதவுகிறது.

 

நுழைவு (Home)

 

தளத்தில் உள்ளே நுழைந்ததுமே, Home பகுதியில் நிறுவனத்திற்கு உடனடியாக தெரியும்படியான சில அறிவிப்புகளை கண்ணில்படும்படி  தருகிறார்கள். இப்பொழுது ஒரு புதிய பணியாளரை இணைப்பதற்கு நிறுவன பொறுப்பாளரின் டிஜிட்டல் சாவியை பதியவேண்டும் என்பது முன்நிபந்தனையாக மாற்றியிருக்கிறோம் என்ற அறிவிப்பை இப்பொழுது தெரிவித்திருக்கிறார்கள்.  வலது பக்கம் நிறுவனம் குறித்த விவரங்கள் (Profile) இருக்கின்றன.

 

பணியாளர்கள் குறித்த பதிவு (Member)

 

இந்த பகுதியில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பணியாளரின் UAN எண்ணை பதிவிட்டு தேடினால், அவருடைய விவரங்களை பார்க்கமுடியும் (Member Profile),  புதிய பணியாளரை ஆதாரின் அடிப்படையில், அடிப்படை தகவல்களைப் பதிவு செய்வது (Register - individual), விலக்குவது (Exit), KYC (Know your customer)  பணியாளர் தொடர்பான விவரங்களான ஆதார், வங்கி கணக்கு, பான் கணக்கு போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்வது, பணியாளர் தரும் விவரங்களை கவனமாக சரிப்பார்த்து, DSC கொண்டு ஒப்புதல் தருவது (Approve KYC Pending for DS), பணியாளர்கள் தங்களுடைய அடிப்படை விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யும் பொழுது அதற்காக நிறுவனம் இணை உறுதிமொழி ஒப்பந்தத்தை (Joint Declaration) அதற்குரிய ஆவணங்களுடன் பதிவு செய்வது, பணியாளர்கள் அவர்களுக்கென கொடுக்கப்பட்ட தளத்தில் தங்களுடைய விண்ணப்பிக்கும் பொழுது, அது நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்து நிற்கும். அதற்கு ஒப்புதல் தருவது (Basic Details change Requests, Approve KYC seeded by Member) என பல அம்சங்கள் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளன.

 

ஒரு பணியாளரை பதிவு செய்ய ஆதாரை வைத்து பதிவு செய்கிறோம்.  அந்த பணியாளர் இதற்கு முன்பு பி.எப்.பில் சந்தாதாராக இருக்கும் பட்சத்தில் அவர் முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த UAN தெரியவில்லை என்றால் கூட, ஆதாரை அடிப்படையாக வைத்து, அவருக்கான அடையாள எண்ணை பி.எப். தளமே தெரிவித்துவிடுகிறது.  அதனால் பழைய எண் தெரியவில்லையே என பழைய நிறுவனத்தை தொடர்புகொள்ள தேவையில்லை.

 

நிறுவனம் குறித்த பதிவு (Establishment)

 

நிறுவனம் தொடர்பாக தகவல்கள், மின்னஞ்சல், தொடர்பு எண் மாற்றவேண்டுமென்றால், நிறுவனத்தின் பொறுப்பாளருடைய DSCயை பதிவு செய்வது, ஆதாரை கொண்டு பதிவது (E Sign), நிறுவனத்தின் அடிப்படைத் தகவல்களைப் பார்ப்பது (Form 5A),  நிறுவனத்தின் தகவல்கள் மாறும் பொழுது விண்ணப்பிப்பது,  நிறுவனத்தின் தணிக்கை குறித்த தகவல்கள் (E Inspection),  ஒப்பந்ததாரர் (Sub Contractor) குறித்த தகவல்கள் என பல அம்சங்கள் இதில் இடம் பெற்ற்றுள்ளன.

 

பங்களிப்பைச் செலுத்துவது (Payments)

 


ஒவ்வொரு மாதமும் பணியாளர்களின் வேலை செய்த நாட்கள் எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அவர்கள் கேட்கிற (Notepad) வடிவத்தில் மாற்றி,  அதை தளத்தில் அப்லோட் செய்வது, அதனடிப்படையில் நாம் செலுத்தவேண்டியது எவ்வளவு? அதை வங்கி (Net banking) மூலம் செலுத்துவது, அதற்கான ரசீதுகளை பெறுவது, தாமதமாக பணம் செலுத்தும் பொழுது, அதற்கான வட்டி, எவ்வளவு? தாமதக்கட்டணம் எவ்வளவு? என்பதையும், ஒருவேளை நிறுவனம் இயங்காமல் இருக்கும் பொழுது, குறைந்தப்பட்ச கட்டணமாக ரூ. 75 செலுத்துவது எல்லாம் இந்த பகுதியில் இடம்பெறுகின்றன.

 

பணியாளர் சம்பந்தமான விவரங்கள் (Dashboards)

 

பணியாளர் சம்பந்தமான விவரங்களை துவக்கத்தில் பதியும் பொழுது, சில அம்சங்கள் விடுபட்டு போயிருந்தால்  (Missing Details) அதை நிரப்புவது, இப்பொழுது எத்தனை பணியாளர்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள், அவர்களின் அடிப்படைத் தகவல்களை காண்கின்ற விவரம் (Active Member),  குறிப்பிட்ட பணியாளரின் UAN யை கொண்டு பணி செய்த காலத்தை அறிந்துகொள்வது (Member Service details) இன்னும் சில அம்சங்கள் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளன.

 

நிறுவனம் குறித்த விவரங்கள் (User)

 

நிறுவனம் குறித்த  (User) அடிப்படை விவரங்களான மின்னஞ்சல், மொபைல் எண் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  அடுத்து உள்ளே நுழைவதற்கான கடவுச்சொல்லை (Password) மாற்றுவதற்கான வசதி உள்ளது.

 

நிர்வாகம் (Admin)

 

சில நிறுவனங்களில் பணியாளர் குறித்த விவரங்களை கையாளுதலை ஒருவரும், பணம் செலுத்துவதற்கு ஒருவரும் என நிர்வாக முறையில் சில பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆகையால் ஒரு கடவுச்சொல் என்பது போதாது. நிறுவனத்தின் நடைமுறையில் கூடுதலாக கடவுச் சொற்கள் தேவைப்படுகிறது என்றால், பி.எப் அலுவலகத்தைத் தொடர்புகொண்டால், அதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவார்கள் என்ற செய்தியை காண்பிக்கிறது.

 

இணையவழி சேவைகள் (Online Services)

 

சமீப காலங்களில் ஒரு பணியாளர் முந்தைய நிறுவனத்தில் இருந்து விலகி, புதிய நிறுவனத்தில் இணையும் பொழுது, முன்பெல்லாம் சம்பந்தப்பட்ட பணியாளர் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.  ஆனால் சமீப காலமாக முந்தைய கணக்கிற்கும், புதிய கணக்கிற்கும் பணியாளர் சம்பந்தமான அடிப்படையான தகவல்கள் ஏதும் மாறுபாடு இல்லாவிட்டால், தானாகவே புதிய கணக்கிற்கு மாறிவிடும் என்பது நடைமுறையாக இருக்கிறது. இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை நிறுத்துவதற்கு ஒரு வசதியை (Stop Auto Transfer Request) ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 

தானாக மாறிவிடும் ஏற்பாடு இருந்தாலும், சில சமயங்களில் ஏதேனும் தகவல்கள் மாறுபாடு இருந்தால், மாறாது முந்தைய கணக்கு பணம் அப்படியே நின்றுவிடும். அப்படி இருக்கும் பட்சத்தில் மாற்ற கோருவதற்கான விண்ணப்பம் ஒன்றை ஏற்பாடு (Transfer Claims) செய்திருக்கிறார்கள்.

 

பி.எப். தளம் நத்தை வேகத்தில் இயங்குவது ஏன்?

 

பிஎப். தளம் கொடுக்கிற கணக்குபடி, எட்டு இலட்சம் நிறுவனங்கள், எட்டு கோடி பணியாளர்கள், ஒரு கோடி ஓய்வுநிதி பெறுகிறவர்கள் பி.எப் நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.  முன்பெல்லாம் பணியாளர்களுடைய பிஎப் நிதி, ஓய்வுநிதி விண்ணப்பங்களை நேரடியாக பெற்றுக்கொண்டிருந்தவர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக அனைத்தையும் டிஜிட்டல் வடிவத்திற்கு விரைவாக மாற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த சூழ்நிலையில் முந்தைய பத்தாண்டை விட,   நிறுவனங்களுக்கென இயங்கும் தளத்திலும், பணியாளர்களுக்கென இயங்கும் தளத்திலும்   தினந்தோறும் இலட்சக்கணக்கில் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த சூழ்நிலையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய இரண்டு தளங்களுமே நத்தை வேகத்தில் இயங்குவது பெரிய சோகம்.  பல சமயங்களில் குறிப்பாக காலை பத்து முதல் ஐந்து மணி வரைக்குமான அலுவல் நேரத்தில்  தளங்கள் ஸ்தம்பித்து எந்த வேலையையும் செய்யவிடாமல் செய்துவிடுகிறது.  இதனால் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முடிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். பல சமயங்களில் மாதம் தோறும் செலுத்தவேண்டிய பங்களிப்பை உரிய தேதிக்குள் செலுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். மெல்ல இயங்குவது குறித்த கவனம் இல்லாமல், ஒரு நாள் தாமதமானாலும், வட்டியையும், அபராதத்தையும் கணக்கிட்டு அடுத்த மாதமே தளத்தில் தெரிவித்துவிடுகிறார்கள்.   சந்தாதாரர்களான பணியாளர்களும் மிகவும் அலைச்சலுக்குள்ளாகிறார்கள். 

 

தளம் மெதுவாக இயங்குவதால், பி.எப்.  பணியாளர்களின் நேரமும் வீணாகுகிறது. இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றமுடியாமலும், கொடுக்கப்படும் தொடர் அழுத்தத்தினாலும் சிலர் மருத்துவ விடுப்பில் செல்கிறார்கள்.   சிலர் விருப்ப ஓய்வில் வேலையை விட்டே செல்கின்றனர்.

 

மெல்ல இயங்குவதற்கான காரணம் என்னவென்று தேடியபொழுது…. 2010க்கு முன்பு வரை ‘பாக்ஸ் ப்ரோ’ மென்பொருள் (சாப்ட்வேர்) பயன்படுத்தபட்டு வந்தது. 2011 முதல், ‘ஆரக்கிள் மற்றும் டெவலப்பரால்’ தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

அப்போதே, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ எனும் வன்பொருளும், அதனுடன் சேர்ந்த ‘எச்.பி.’ சர்வரும் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் பரிமாற்றத்திற்காக, அன்றைய தேதியில் புதிதாக சந்தைக்கு வந்த, 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்-5 நெட்வொர்க்’ வடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

 

தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரைப்படி வன்பொருளை (ஹார்ட்வேர்) பொருத்தவரை ‘எச்.பி., நிறுவனத்தின் திங்க் கிளைண்ட்’ வன்பொருளும், சர்வரை பொருத்தவரை ‘ஐபிஎம்’ நிறுவன சர்வரும், செயல்பாட்டில் சிறப்பாக இருக்கும் எனக்கூறப்பட்ட நிலையில் ஐபிஎம் சர்வருக்கு பதில், எச்பி சர்வர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அப்போதே ஆட்சேபனை எழுந்தது. எனினும், எச்பி சர்வர் செயல்பாட்டில் ஓரளவு சிறப்பாக இருந்த நிலையில், 2016ல் அந்த வன்பொருளின் பயன்பாட்டுகாலம் (வாரண்டி) முடிவுற்றதாக, ‘எச்.பி’ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

 

உலகளவில் வன்பொருள் ஒன்றின் வாரண்டி காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டால், அதற்கடுத்த நிலையில் உள்ள நவீன வன்பொருளை பயன்படுத்த வேண்டுமென்பதே விதியாக உள்ள நிலையில், 8 ஆண்டுகளாகியும் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியான பழைய வன்பொருள்களாலேயே, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் நாடு முழுவதும், 20 சதவீதம் வைப்பு நிதி அலுவலகங்கள் காலவதியான ‘எச்.பி. – திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ வன்பொருள்களாலேயே இயங்குகின்றன.

 

தொழில்நுட்ப வளர்ச்சியால் வன்பொருளை பொருத்தவரை, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-740’ வரையும், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் நெட்வொர்க் வடங்கள், 1000 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்- 8 மற்றும் 9’ வடங்கள் வரையும், இன்றைய சந்தைக்கு வந்துள்ளன.  இவ்வாறு வந்துள்ள வன் மற்றும் மென் பொருள்களை பயன்படுத்தி, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படாததால் தான் தளமும் மிக மிக மெதுவாக இயங்குகிறது. ஆகையால், இதற்கு பொறுப்பான பி.எப். நிர்வாகமும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வேகமாய் செயல்பட வைக்க வேண்டுமாய், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்வோம்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721

July 10, 2025

முகப்பேர் மேற்கு : அருமையான காலை உணவகம் - ராணி டிபன் சென்டர்


சென்னை மாதிரி பெருநகரங்களில், அவசரகதியில் வாழும் பொழுது, நமது வீட்டு சமையலறைகளைப் பொலவே அதன் நீட்டிப்பாய் அவசர காலங்களில், தேவையான பொழுது பகுதியில் உள்ள நல்ல உணவகங்கள் தான் நம்மை காக்கின்றன.


வீட்டு உணவு போல இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். சுவையாக இருக்கவேண்டும். விலை நமக்கு கட்டுப்படியாகவும் இருக்கவேண்டும். இப்படி பல இருக்கவேண்டும். அப்படி பல உணவகங்கள் அமையாவிட்டாலும், சில உணவகங்களாவது அமைவது மிகவும் அவசியம்.


நாங்கள் வசிக்கும் முகப்பேர் மேற்கு பகுதியில் இயங்கும் இராணி டிபன் சென்டர் அப்படி ஒரு உணவகம். ராணியம்மாள் ஒரு முருக பக்தர். ஆகையால் எப்பொழுதும் முருக கடவுளின் பக்தி பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.


அம்மா, அப்பா, இளைஞரான மகன் கண்ணன் என மூவரும் நடத்திவருகிறார்கள். காலை ஏழு மணி துவங்கி… 11 மணி வரை நீளும். இட்லி, தோசை, வடை, பொங்கல், பூரி உண்டு.  சுடச்சுட தோசையும், பூரியும் கிடைக்கும். அதற்கு துணையாக, நல்ல சுவையான சாம்பாரும், இரண்டு வகையான சட்னியும், வடை கறியும், பூரிக்கிழங்கும் உண்டு.


வீடு போல கடை என சொல்லும் பொழுது, சுவையாக இருக்கக்கூடிய சில கடைகளில் வீட்டு களேபரங்கள் அங்கும் நிகழும். கண்டுகொள்ள மாட்டார்கள். ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்கவேண்டும்.  ஆனால் இந்தக் கடையில் மூவரும் நன்றாக வரவேற்பார்கள். நன்றாகவும் கவனித்துக்கொள்வார்கள்.



ஏற்கனவே கடையில் கூட்டம் அள்ளும். பிறகும், ஏன் எழுதுகிறேன் என்றால்… அங்கு சாப்பிட்ட சாப்பாடு தான் காரணம். வேறு என்னவாக இருக்கமுடியும். நல்ல உணவகங்களை இப்படி பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்வது அவசியம். அதனால் பகிர்கிறேன்.


இப்போதைக்கு காலை உணவு மட்டும். மதிய உணவு துவங்கவேண்டும் என அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது. விரைவில் துவங்குவதற்கும், அடுத்தடுத்து முன்னேறுவதற்கும் நாம் வாழ்த்துவோம்.


நன்றி.


- இரா. முனியசாமி


முகவரி :
ராணி டிபன் சென்டர்,
369C, விஜிபி நகர்,
பாரதி சாலை,
முகப்பேர், சென்னை – 600037.
தொலைபேசி 
8056731464
9600441255

July 9, 2025

பறந்து போவும் ஒரு நினைவும்! – விமர்சனமல்ல


படத்தின் ஓரிடத்தில் சிவாவின் அப்பா ”பையனுக்கு எவ்வளவு பீஸ் கட்ற?” என கேட்கும் பொழுது… ”மூன்றே கால் லட்சம்” என்பார்.

 

***

 

தொழில்முறையில் நடுத்தர வயதில் ஒருவரைத் தெரியும். பெயரைத் தவிர்க்கலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். துவக்கத்தில் நன்றாக விற்பனை ஆனது. விற்பனை அதிகரிக்க கடன்கள் கொடுக்க ஆரம்பித்தார்.  அதில் இரு நிறுவனங்கள் சில லட்சங்களில் பாக்கி வைத்து ஓடிப்போனார்கள். இன்னும் ஒன்றிரண்டு நிறுவனங்கள் அவர்கள் பெரும் கடன் பாக்கியில் சிக்க, அவர்கள் இவரிடம் பெரிய தொகையாக நிறுத்திவைத்தார்கள். மெல்ல மெல்ல வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கினார்.

 

அவர் கொஞ்சம் பந்தா பேர்வழி. அவருடைய சொந்த அண்ணனின் முன்பு, அவருடைய நண்பர் கிண்டலோடு ஒரு சம்பவத்தைச் சொன்னார். ஒரு நாள் மழை பெய்த பொழுது…. சட்டை நனைஞ்சிருச்சுன்னு… கலர் ப்ளஸ் கடையில் நுழைந்து மூவாயிரத்துக்கு சட்டை வாங்கி, மாற்றிக்கொண்டு கிளம்பினான் என்றார்.

 

அவருக்கு இரண்டு பையன்கள். அவர்களை இண்டர்நேசனல் பள்ளி ஒன்றில் சேர்த்திருந்தார்.  வருடத்திற்கு ஒன்றரை லட்சம் கட்டணம். இரண்டு பையன்களுமே அங்கு படித்தார்கள்.  தொழில் வீழ்ச்சியடைய, அடைய பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். அதைச் சரிக்கட்ட வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு சில லட்சங்களை கடன் வாங்கினார். நிலைமையை சரி செய்யமுடியவில்லை. தொடர்ச்சியான, பிறகு அதிகமான குடிப்பழக்கம் சொந்தங்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் அவர் மீதான மதிப்பையும் குறைத்திருந்தது. அவர் மீள்வதற்கு நிறைய யோசனைகள் அவர் வைத்திருந்தாலும், அவரால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

 

வருமானம் பெரிதாக உயரவில்லை. செலவுகளை குறைக்கலாமே! பசங்களை வேறு பள்ளியில் மாற்றலாமே! என்றால்… அந்தப் பள்ளி எத்தனை சிறந்தப் பள்ளி தெரியுங்களான்னு நமக்கே பாடம் எடுப்பார். 

 

அவரிடம் பத்து, பதினைந்து நிமிடம் பேசினாலே, எத்தனை உற்சாகம் நம்மிடம் இருந்தாலும்… வற்றி பதட்டமாகிவிடுவோம். ”தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு” என்று தான் ஒவ்வொருமுறையும் முடிப்பார்.

 

இடையில் சில மாதங்கள் அவரைச் சந்திக்கவேயில்லை. அவருடைய தொழில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அந்தப் பக்கம் போகும் பொழுதெல்லாம், கடை அடைத்தே கிடக்கும்.

 

வேறு ஒருவர் அவர் நலம் குறித்து விசாரித்தப் பொழுது சொன்னார். “தீபாவளிக்கு முதல்நாள் இருவருக்கும் சண்டை வந்து… இவர் தண்ணியடித்து எழ முடியாத அளவிற்கு தூங்க…. அன்று இரவில் அவருடைய துணைவியார் தூக்கு மாட்டிக்கொண்டு, இறந்துவிட்டார். இவர் மீது சந்தேகம் கொண்டு வழக்கு நடந்தது அவருடைய மூத்தப் பையன்  நடந்ததை சொன்னதால்… அவர் வழக்கிலிருந்து மீண்டார்” என்றார்.

 

அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அவரையேச் சந்தித்தேன். நடந்த விசயங்கள் குறித்து அவரே புலம்பியபடி சொன்னார். இப்பொழுது இரண்டு பசங்களும் தன்னுடைய மாமானார் வீட்டில் வளர்கிறார்கள். அவர்களை நாங்கள் நன்றாக கவனித்துக்கொண்டது போல கவனித்துக்கொள்வதில்லை என மிகவும் விசனப்பட்டார்.  சில மனிதர்கள் அப்படித்தான் போலிருக்கிறது!

கண்ணப்பா (2025)


வேடர் குலத்தைச் சார்ந்த தலைவருக்கு மகனாக பிறக்கிறான் நாயகன் திண்ணன். அவர்களிடத்தில் காளி வழிபாட்டில் பலி கொடுக்கும் வழக்கத்தில்அதில் நாயகனின் நண்பனை பலிகொடுக்கும் பொழுது, கடவுள் வழிப்பாட்டையை எதிர்க்கிறான்.

 

அங்கு ஒரு தனிக்காட்டில் வாயு லிங்கத்தை வைத்து தான் மட்டும் சடங்குகள் செய்து வழிபாட்டு வருகிறார் வேதங்களைக் கற்றுத் ”தேர்ந்த” சாஸ்திரி.  வாயு லிங்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைக் கைப்பற்ற வருகிறான் காளா முகி என்ற பெரும் படைக்குத் தலைவன்.

 

பிரிந்துக் கிடக்கும் ஐந்து வேடர் குழுக்களும் ஒன்றாய் இணையவேண்டிய நெருக்கடி வருகிறது. நாயகனின் காதலால், ஒற்றுமையில் குழப்பம் வருகிறது. மகனைத் தள்ளி வைக்கிறார்.

 

காளா முகி வந்தானா? திண்ணன் தான் கண்ணப்பனா? என்ற கேள்விக்கு ஆக்சன், பக்தி என கலந்து கட்டி தந்திருக்கிறார்கள்.

 

***


சிவனின் திருவிளையாடல்களை 63 நாயன்மார்கள் கதையை விரிவாக சொல்கிறது பெரிய புராணம்.  அதில் ஒருவர் கண்ணப்ப நாயனார். ஆகம முறைப்படி சடங்கு சம்பிராயதங்களுடன் வழிபாடும் சிவகோசாரியார், வேடன் குலத்தைச் சேர்ந்த திண்ணன் சிவன் மீது கொண்ட பேரன்பினால், தான் சாப்பிட்டும் கறியைப் படைத்து, லிங்கத்தின் கண்ணீல் ரத்தம் வடிய, தன் கண்ணைக் கிழித்து தந்த கண்ணப்பன் கதையை கேள்விப்பட்டிருப்போம்.

 

கண்ணப்பர் பிறந்த இடம் ஆந்திராவின் காளஹஸ்தி என இருப்பதால், தெலுங்குகாரர்கள் அந்த கதையை எடுத்துக்கொண்டு…. அதைச் சுற்றியும் கற்பனையாய் கதையை அமைத்து இந்திய அளவில் அக்சய் (சிவன்)  – காஜல் (பார்வதி), சரத்குமார் (நாயகனின் அப்பா), மோகன்லால், மோகன்பாபு, பிரபாஸ் போன்ற நட்சத்திரங்களையும் நடிக்க வைத்து பான் இந்தியா படமாக இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங்.  நாயகனான விஷ்ணு மன்சு கதை, திரைக்கதையும் சேர்த்து எழுதியிருக்கிறார். திருச்சியைச் சார்ந்த ப்ரீத்தி நாயகியாக நடித்திருக்கிறார்.  எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதே போல தொழில்நுட்ப குழுவும்.

 

வில்வித்தையில் வீரனான் திண்ணனை அர்ஜூனின் அடுத்தப் பிறப்பு என்கிறார்கள். அதுவும் கற்பனை தான். 

 

தமிழ் மொழிமாற்றம் சிறப்பாக இருக்கிறது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஓடிடிக்கு வரும்.