> குருத்து: நலிவடையும் நகைத் தொழிலாளர்கள்!

July 26, 2010

நலிவடையும் நகைத் தொழிலாளர்கள்!


முன்குறிப்பு : "செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை" என்கிற விளம்பரத்தைப் பார்த்தால், எப்பொழுதுமே எரிச்சல் வருகிறது. செய்வதற்கு ஏன் கூலி இல்லை? இதையே காரணம் காட்டி, நகை செய்யும் தொழிலாளர்களின் கூலியை குறைத்து தருகிறார்கள் என்று முன்பு ஒருமுறை ஒரு செய்தி கண்ணில்பட்டது. அதற்கு பிறகு, செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைக்கடை தொழிலாளர்கள் சிலர் தற்கொலை செய்தி படிக்கும் பொழுது இது தொடர்பாக தரவுகள் தேடி எழுத வேண்டும் என நினைத்ததுண்டு. தினமணியில் வந்த இந்த கட்டுரை நகைக்கடை தொழிலில் உள்ள சில பிரச்சனைகளை தொட்டுக்காட்டுகிறது. படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

நகைத் தொழிலை மற்ற தொழிலைப்போல சாதாரணமாகக் கருதிவிட முடியாது.​ அதிக நுட்பமும்,​​ வேலைப்பாடும் மிகுந்த இத் தொழில்,​​ தமிழகத்தில் பாரம்பரியமிக்க தொழிலாகவும்,​​கலையின் சிகரமாகவும் கருதப்படுகிறது.​ தமிழகத்தில் நகைத் தொழிலில் சுமார் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.​ இவர்கள் நகைத் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்து வருபவர்களே.​ கலை சார்ந்தும்,​​ கலாசாரம் சார்ந்தும் இருக்கும் இத் தொழில்,​​ இப்போது அழிவை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது.

​ உலக அரங்கில் இந்திய நாட்டு நகைகளுக்கு அதிக மதிப்பும்,​​ நல்ல வரவேற்பும் இருக்கிறது.​ ஆனால்,​​ அதை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு மதிப்பும்,​​ வரவேற்பும் அண்மைக்காலமாகக் குறைந்து வருகிறது.​ நகைத் தொழிலில் பல ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தாலும்,​​ இந்தத் தொழில் ஈடுபடுகிறவர்கள் வறுமையிலேயே இருக்கின்றனர்.

​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வளம்கூட இப்போது இல்லை.​ இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.​ முக்கியமாக,​​ ஆன்-லைன் வர்த்தகமும்,​​ இயந்திரமயமாக்கலும் இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை வறுமைக்கு வேகமாக இழுத்துச் செல்கிறது.

​ பல சாகசங்களைச் செய்து ஒருவர் தொழிலை நிமிரச் செய்தாலும்,​​ ஒரு காலகட்டத்தில் அவர் பெரும் நஷ்டத்திலும்,​​ கடனிலும் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுவதாக அத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூறுகிறார்கள்.

​ கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து ​ வருவதால்,​​ சிறுதொழிலாகச் செய்த பலர், வேறு தொழிலுக்குச் செல்கின்றனர்.​ இன்னும் ​ சிலர் வேறுவழியின்றி இத் தொழிலைச் செய்து வருகின்றனர்.​ விலை உயர்வால் சாதாரண மக்களுக்குத் தங்கம் கனவாகி வருவதால்,​​ இவர்களுக்கு சாதாரணமாகக் கிடைக்கும் வேலைகள் குறைந்துள்ளன.​ இதன் காரணமாக முகூர்த்தம்,​​ பண்டிகை காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

​ 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இத் தொழிலில் ஒரு சில பெரிய நகைக் கடைகள் ​ மட்டுமே இருந்தன.​ ஆனால் இன்று அப்படியில்லை.​ தொழில் துறையில் பெரிய அளவில் கால்பதித்திருக்கும் தனியார் நிறுவனங்கள்,​​ நகை தயாரிப்புத் தொழிலிலும் போட்டிபோட்டு இறங்கி வருகின்றன.​ இந் நிறுவனங்களிடம் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் சிறிய அளவில் நகைப் பட்டறை வைத்து,​​ தொழில் செய்து வந்தவர்கள் விழிபிதுங்கிய நிலையில் உள்ளனர்.

​ இது ஒருவகை நெருக்கடி என்றால்,​​ ஆன்-லைன் வர்த்தகம் மற்றொரு வகை நெருக்கடியைக் கொடுக்கிறது.​ தங்க வர்த்தகம் ஆன்-லைன் வர்த்தகத்தில் சேரும்வரை பண்டிகைக் காலங்கள்,​​ முகூர்த்தங்கள் போன்ற நாள்களில் மட்டுமே தங்கம் விலை உயர்ந்து வந்தது.​ ஆனால்,​​ இப்போது ஆன்-லைன் வர்த்தகத்தால் காலையில் ஒரு விலை,​​ மாலையில் ஒரு விலை என தங்கத்தின் விலை சூதாட்டம் போன்று நிலையில்லாமல் இருக்கிறது.​ பெரிய வியாபாரிகளுக்கு இந்த விலை உயர்வும்,​​ குறைவும் பொழுதுபோக்காக மாறியுள்ள நிலையில்,​​ நகைத் தொழில் மூலம் வாழ்க்கை நடத்திவந்த தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.

​ சொந்தமாக நகைப் பட்டறை வைத்து முதலாளியாக இருந்த பலர்,​​ இப்போது பெரிய நகைக் கடைகளில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.​ மேலும்,​​ நகைத் தொழிலாளர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தங்களது தொழிலுக்கு வேறு வழியின்றி விடை கொடுத்து,​​ இன்று கட்டடத் தொழிலாளி,​​ ஹோட்டல் ஊழியர் என வேறு தொழிலுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.

​ இத் தொழிலில் இப்போது இளைய தலைமுறையினர் குறைவான அளவே காணப்படுகின்றனர்.​ இதனால் நகைத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.​ இத் தொழிலின் பெரும் பகுதி,​​ இப்போது பெரிய வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதால்,​​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையும் அந் நிறுவனங்களை மையமாக வைத்தே சுழலத் தொடங்கியுள்ளது.

​ இதில் சில நகைத் தொழிலாளர்கள் கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தொழில் செய்து,​​ கந்து வட்டியிலேயே தங்களது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இழந்து வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.​ சிலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அண்மைக்காலமாக அதிகமாக நடைபெறுகின்றன.

​ நகைத் தொழிலில் இனிமேல் நல்ல எதிர்காலத்துக்கு வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுவதால்,​​ இத் தொழிலுக்கு முன்புபோல இளைய தலைமுறையினர் வருவது இல்லை.

இன்னும் சில ஆண்டுகளில்,​​ இளைய தலைமுறையினரே இத் தொழிலில் ஈடுபடாத சூழ்நிலை ஏற்படலாம்.

பெரிய வணிக நிறுவனங்கள் நகையைத் தயாரிப்பது,​​ விற்பது என முழுமையாக வாணிப நோக்கில் செயல்படுவதால்,​​ நகைத் தொழிலில் கலாசாரம் சார்ந்த விஷயங்கள் மறைந்து வருகின்றன.​

​ இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை காப்பாற்ற,​​ தங்க விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.​ ​ ஏற்கெனவே இருந்த தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

பொற்கொல்லர் நலவாரியத்தின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.​ சிறு நகைத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.​ இந் நடவடிக்கைகளை எடுத்தால்,​​ ஓரளவு இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களைப்​ பாது​காக்​க​லாம்.

​ அறிவியலின் வளர்ச்சியை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்தாலும்,​​ நமது கலையையும்,​​ கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.​ நகைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களோடு நின்றுவிடும் எனக் கருதிவிட முடியாது.​ அவர்கள் இன்று பாதிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ அந்தப் பாதிப்பு நாளை மற்ற தொழிலுக்கு வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


- நன்றி : கே. வாசுதேவன், தினமணி, 23/07/2010

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை

ஜோதிஜி said...

தொடர வேண்டும்..........

Anonymous said...

இந்தக் கட்டுரையை அனைவருக்கும் இமெயில் அனுப்பியுள்ளேன். இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் தமது அத்தியாவசிய தேவைக்கே நாடோடிகளாக, சொந்த நாட்டில் அகதிகளாக, உயிரைப் பணயம் வைத்து அலையும் அவலத்தை, வக்கிரத்தை சிறப்பாக எடுத்து இயம்புகிறது.

வாழ்த்துக்கள்,
அசுரன்