> குருத்து: The Invitation (2015) American Horror Movie

October 27, 2021

The Invitation (2015) American Horror Movie


நாயகன் தங்களுடைய குட்டிப்பையனின் மரணத்திற்கு பிறகு மனைவியை பிரிகிறார். இப்பொழுது வீட்டில் நண்பர்களுக்காக நடத்தும் ஒரு சிறப்பு விருந்தில் கலந்துகொள்ள முன்னாள் மனைவி நாயகனை அழைக்கிறார். அந்த அழைப்பை ஏற்று நாயகன் தன் காதலியை அழைத்துக்கொண்டு அந்த விருந்துக்கு செல்கிறார்.


மெல்ல மெல்ல பத்து பேருக்கு மேலாக நணபர்கள் ஒன்று கூடுகிறார்கள். குடிக்கிறார்கள். பழைய கதைகளை பேசுகிறார்கள். முன்னாள் மனைவி தான் பழைய மனக்காயங்களிலிருந்து வெளிவந்த விதத்தையும், தன்னுடைய புதிய கணவரைப் பற்றியும் சொல்கிறார். அந்த வீட்டில் இந்த நண்பர்கள் போக இன்னும் இருவர் புதிதாக உள்ளனர். வீட்டின் கதவுகளை பூட்டி வைத்திருக்கின்றனர். சமீபத்தில் ஒரு குழு பக்கத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துவிட்டதாகவும், ஆகையால், ஒரு பாதுகாப்புக்காக சாத்தி வைத்திருக்கிறோம் என பதில் சொல்கிறார்கள். நாயகனுக்கு எதுவோ அங்கு தப்பாக நடப்பதாக உணர்கிறார். ஆனால், என்னவென்று சரியாக சொல்ல முடியவில்லை. மற்றவர்கள் இயல்பாக இருக்கிறார்கள்.

மனிதர்களுடைய காயங்களிலிருந்து ஆறுதல்படுத்த ஒரு குழு இயங்குவதாகவும், அந்த குழுவிற்கு பெயர் Invitation எனவும் சொல்கிறார்கள். நோயால் வதைப்பட்டு செத்துக்கொண்டிருக்கும் ஒருவரை இந்த குழுவைச் சார்ந்தவர்கள் எப்படி சாந்தப்படுத்துக்கிறார்கள் என ஒரு சிறிய காணொளியை காண்பிக்கிறார்கள். நாயகன் இன்னும் அவர்களை சந்தேகப்படுகிறான்.

இப்படியே போகும் அந்த விருந்தில் இடைவேளைக்கு பிறகு என்ன நடந்தது என்பதை ரணகளமாக சொல்லியிருக்கிறார்கள்.
****

அந்த வீட்டில் கதை துவங்கி அந்த வீட்டிலேயே படம் முடிந்தும்விடுகிறது. கதை சொன்ன விதத்தில், எடுத்த விதத்தில் இறுதிவரை பார்வையாளர்களை தக்க வைத்திருக்கிறார்கள். படத்தில் முதல் பிரச்சனை என்னவென்றால், நாமெல்லாம் விவாகரத்து செய்த மனைவி இப்படி ஒரு விருந்துக்கு அழைத்தால் போவோமா? வாய்ப்பே இல்லை. (எவ்வளவு கேவலமாக சண்டை போட்டாலும் பிரியமாட்டோம். அப்படி பிரிந்தால், ஜென்ம விரோதிகளாக தான் பிரிவோம்.) ஆனால், அமெரிக்காவில் போவார்கள் போல! மனதைரியம் அதிகம் தான்.

ஒரு மனுசனுக்கு எப்பேர்பட்ட துயரம் வந்தாலும் காலமும், புதிய மனிதர்களும் காயத்தை ஆத்திவிடுவார்கள். அதற்காக படத்தில் அந்த குழு சொல்லும் தீர்வு இருக்கிறதே! பயங்கரம்.

உலகம் முழுவதும் ஆங்காங்கே இப்படிப்பட்ட சில அபத்தமான, ஆபத்தான குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி செய்திகளாக வரும் பொழுது அதிர்ச்சியடைகிறோம்.

ஒரு அமெரிக்க சாமியார் சொர்க்கத்துக்கு போவோம் என சொன்னதை நம்பி 900க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். இதில் 304 பேர் குழந்தைகள். 1978ல் நடந்த சம்பவம் இது.

அதே அமெரிக்காவில் ’சொர்க்கத்தின் நுழைவுவாயில்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 39 பேர் கூட்டாக தற்கொலை செய்துகொண்டார்கள். இது நடந்தது 1998ல்!
இந்தியாவிலும் தலைநகர் தில்லியில் 2018ல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11பேர் கூட்டாக தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்கள் வீட்டில் கிடைத்த குறிப்புகளில் “இங்கு யாருமே மரணிப்பதில்லை. ’மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்விற்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுவர்கள் மிகச் சிறந்த இடத்தை அடைகிறார்கள்.” என எழுதி வைத்திருந்தார்கள்.

மதம் - தன்னை நம்பும் மக்களை செத்ததற்கு பிறகு ’சொர்க்கம்’ இருப்பதாய் நம்ப வைக்கிறது. இதன் மறுபக்கமாய் மண்ணிலேயே சொர்க்க வாழ்வு வாழ்கிறவர்களை காப்பாற்றுகிறது.

மற்றபடி படத்தில் நடித்த அத்தனை பேரும் நன்றாக நடித்திருந்தார்கள். படம் இப்பொழுது எங்கும் இல்லை என இணையம் சொல்கிறது. நான் நண்பரிடமிருந்து வாங்கிப்பார்த்தேன். நீங்களும் மாற்று வழிகளில் முயலுங்கள்.

இந்தப் படம் குறித்த விசயங்களைத் தேடும் பொழுது, கண்ணில்பட்டது. நல்ல கட்டுரை. நேரம் இருந்தால், வாசியுங்கள்.

0 பின்னூட்டங்கள்: