> குருத்து: தாய் நாவல் - விலை ரூ. 150 மட்டுமே!

January 15, 2023

தாய் நாவல் - விலை ரூ. 150 மட்டுமே!

ரசிய இலக்கியங்கள் உலகப்புகழ் பெற்றவை.  அவற்றில்  ஒன்று மார்க்சிம் கார்க்கி  எழுதிய “தாய்”  நாவலும் சிறப்பான ஒன்று. ரசியாவில் கொந்தளிப்பான காலம் 1905. அந்த காலகட்டத்தில் எழுதி, இன்றைக்கும் உலகத்தின் பல மொழிகளில்  மொழிமாற்றம் செய்யப்பட்டு வாசகர்களால் படிக்கப்படுவதுதான் இதன் சிறப்பு. 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து… மூன்று நாட்களில் படித்து முடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

 

இந்த நாவல்  இரண்டு பாகங்கள் உடையது. நாவலின் 578 பக்கங்களில், முதல் பாகம் 273 பக்கங்கள் கொண்டது. மீதி இரண்டாம் பகுதிக்கானவை.

 

தொழிலாளர்களும், விவசாயிகளும் இணைந்து சமுக மாற்றத்தில் செயலாற்றவேண்டும் என்ற அடிப்படையில்… தொழிலாளர்களின் துயர வாழ்க்கை, தொழிலாளர்களை அமைப்பாக்குவது குறித்து முதல் பாகத்திலும், விவசாயிகளின் வாழ்க்கை, விவசாயிகளை அமைப்பாக்குவது குறித்து இரண்டாம் பாகத்திலும் அருமையாக எழுதியிருப்பார் கார்க்கி.

 

தாய் நாவல் தொ.மு.சி. ரகுநாதன் மொழிபெயர்ப்பு சிறப்பானது.  கலைஞர் கருணாநிதி நாவலின் உள்ளடக்கதில் ஈர்க்கப்பட்டு, அவருடைய கைவண்ணத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.

 

இப்பொழுது இந்த பதிவு குறிப்பாக எதற்கு என்றால்…. பொதுவாக இந்த நாவலை சில பதிப்பகங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். விலை ரூ. 350, ரூ. 400 என விற்கிறார்கள்.  நேற்று புத்தக திருவிழாவில் கடை எண் : 158ல்  தாய் நாவலை கெட்டி அட்டையில் தரமான வடிவத்தில் ரூ. 150க்கு பார்த்ததும் பெரிய ஆச்சர்யம்.  திருமணத்தில் புத்தகங்களை பரிசாக கொடுக்கும் வழக்கம் இருப்பதால், ஐந்து புத்தகங்கள் வாங்கிக்கொண்டேன்.

 

எப்படி உங்களால் இவ்வளவு குறைவாய் கொண்டு வரமுடிகிறது என கேட்டதற்கு… ஸ்டாலில் இருந்த தோழர் இதற்கான விளக்கம் தந்தார்.

 

”நாங்கள் பதிப்பகத்தை தொழில் முறையில் நடத்துகிறவர்கள் இல்லை.  ”சீர் வாசகர் வட்டம்” என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  புத்தகங்களை கூட்டாக படிக்கிறோம். விவாதிக்கிறோம்.  அதன் வழியாக சிறந்த புத்தகங்களை தேர்வு செய்கிறோம்.  சமூக அக்கறை கொண்டவர்களிடம் நன்கொடைகள் பெறுகிறோம்.  தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளில் இருந்தும் 119 நன்கொடையாளர்கள் இதற்காக உதவியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தின் இறுதி பக்கங்களில்  உதவியர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறோம். 

 

நாங்கள் இதை ஒரு இயக்கமாக கொண்டு செல்கிறோம். ஆகையால் இதன் பதிப்பில், விற்பனையில் ஈடுபடும் எங்கள் தோழர்கள் சம்பளம் என எதையும் பெற்றுக்கொள்வதில்லை. இப்படி குறைவான விலைக்கு கொண்டு வருவதால், சில ஆயிரம் புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே விரைவாக விற்பது நடக்கிறது. இப்படி ஒரே நேரத்தில் சில ஆயிரம் புத்தகங்கள் பதிப்பதால் புத்தகத்தின் அடக்க விலை நிறைய குறைகிறது. 

 

கடந்த காலங்களில் தந்தை பெரியாரின் ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  இதுவரை 4 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறோம். கடந்த ஆண்டு புதுமைப்பித்தன் சிறுகதைகளை தொகுப்பாக மலிவு பதிப்பாக கொண்டு வந்தோம்.  அதன் தொடர்ச்சியில் இந்த ஆண்டு மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” நாவலை கொண்டு வந்திருக்கிறோம்” என்றார்.

 

”நல்ல காரியத்தை செய்கிறீர்கள். தொடர்ந்து உற்சாகமாய் செயல்படுங்கள்” என வாழ்த்துகளை தெரிவித்து விடைபெற்றோம்.


புத்தக கண்காட்சிக்கு செல்பவர்கள் கடை எண் 158ல் வாங்குங்கள். போக 

வாய்ப்பில்லாதவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்புகொள்ளுங்கள். 

9566331195, 9600652285, 9865252105.

 

ஆசிரியர் : மாக்சிம் கார்க்கி

தமிழில் : தொ.மு.சி. ரகுநாதன்

பக்கங்கள் : 578

விலை : ரூ. 150

0 பின்னூட்டங்கள்: